Wednesday, 6 May 2020

காலத்தின் வாசனை!



என்னுடைய குடும்ப வாட்ஸப் குரூப்பில்... 32  வருடங்களுக்கு முன்பு நான் அவனுக்கு எழுதிய ஒரு கடிதத்தை போஸ்ட் செய்திருந்தான் தம்பி செந்தில்.அதைப் பார்த்த என் தங்கை வாணி, ஏண்ணே! இவ்ளோ வேகமா காலம் ஓடிப்போச்சு என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தாள்.மேலும் எவற்றையெல்லாம் காலம் எங்களிடமிருந்து பறித்துக்கொண்டு விட்டது என்பதையும் ஒரு list அனுப்பியிருந்தாள்.

                           மாமரம்
                           செம்பருத்திச் செடி 
                           நெல்லி மரம்
                           ஐஸ் பாக்டரி
                           வாசன் தியேட்டர்
                           வருஷம் 16 திரைப்படம்
                           மருதாணி
                           கடைமாடி
                           நுங்கு
                           கேணியடி
                           மாரியப்பன் கடை பஜ்ஜி...

இப்படி ஒரு நீண்ட list. அதைப் பார்த்தவுடன் என் நினைவுகளும் என் வசத்திலில்லை. நினைவுப் பறவை கடந்த காலங்களில் சிறகடிக்கத் துவங்கி விட்டது. அந்தக் காலகட்டத்தில் என்னுடைய உணர்வுகள், எண்ணவோட்டங்கள், priorities எப்படியெல்லாம் இருந்தது என சிந்திக்கத் துவங்கினேன். நான் பிறந்த போது அவ்வளவு பெரிய தாத்தா வீட்டில் என்னைத் தூக்கி வளர்த்தவர்கள் ஓரிருவரல்ல... கொள்ளுத்தாத்தா, கொள்ளுப்பாட்டி, தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மாமா, மாமி, சித்தி, சித்தப்பா, வேலைக்காரர்கள் என அநேகம் பேருக்கு அதில் பங்குண்டு.அனைவருமே மிகச்சிறந்த கதைசொல்லிகளாக இருந்தார்கள். அவர்கள் அனைவரிடத்தும் கதை கேட்டு வளர்ந்த சிறுவன் நான். குறிப்பாக மகாபாரதப்போரில் ஒவ்வொரு நாளும் போரில் நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொரு இரவும் வீட்டுமுற்றத்தில் அமர்ந்து தாத்தாவிடம் கேட்டதை என் மனமென்னும் திரையில் அடிக்கடி ஓட விட்டுப் பார்த்துக் கொள்வேன்.இன்றைய குழந்தைகள் எத்தனைப் பேருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்? தீபாவளி என்றால் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். வீட்டிலுள்ள பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் எல்லோரையும் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று ராக்கெட், பாராசூட் எல்லாம் வெடித்து வாண(வான)வேடிக்கை நிகழ்த்துவார் தாத்தா. பாராசூட் கொல்லையில் எங்கு சென்று விழுகிறது என்று பார்த்து வைத்துக் கொள்வேன்.இரவு முழுவதும் அந்த பாராசூட் எங்கு சென்று விழுந்திருக்கும் என்ற பரவச சிந்தனையிலேயே தூங்கிப்போவேன்.மறுநாள் அதிகாலைக் குளிரில் எழுந்து பாராசூட் விழுந்த இடத்தைத் தேடிச் செல்வேன்.அது கிடைத்ததா இல்லையா என்பது எங்கோ ஞாபக அடுக்கில் சிக்கிக் கிடக்கிறது.இந்தக் கட்டுரை பனுவலாகும் முன் நினைவுக்கு வந்தால் சொல்லி விடுகிறேன்.வீடென்பது வெறும் கல் கட்டடம் அல்ல.அது ஒரு அடையாளம்.அது ஒரு மையம்.மாடி வீடெனினும் உள்முத்தத்தில் தூண்களுக்கு மேல் செம்மண் குழைத்துச் செய்த ஓடுகள் வேயப்பட்டு இடையிடையே பௌர்ணமி நிலவையும்,அலையும் வெணமேகங்களையும்,வானின் நீலத்தையும் ரசிக்கக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அழகான வீட்டில் தான் பால்யமும்,பள்ளிக்காலமும் பசுமையாய்,பாசமாய் கழிந்தது.கிழக்குப் பார்த்த வாசல் கொண்ட வீட்டின் திண்ணையில் படுத்தால் ஆடிக்காற்றை ஆசுவாசமாக அனுபவித்துத் துயிலலாம்.நித்திரையில் கூட அன்பைப் பயிலலாம்.பால்யம்,பாசம் பறிபோன பின்னாலும் நினைவில் மட்டும் எஞ்சியுள்ளது பால்ய வீடு.வீட்டை விடும் போது பாரம்பரியத்தை,நிலத்தை,நெறிகளை,நினைவுகளை எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம் போலும்.

ஒரு முறை பால்ய சிநேகிதன் ஜாகிர் உசேனுடன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பக்கத்து கிராமத்துக்கு சைக்கிளில் சென்று விட்டேன். பசுமையான வயல் வரப்புகளையும், தென்னஞ்சோலைங்களையும் ரசித்தபடி நாங்கள் சைக்கிளில் உலா வந்த காட்சியை யாரோ பார்த்துவிட்டார்கள்.வீடு திரும்புவதற்குள் நாங்கள் ரகசியமாக சுற்றுப்பயணம் சென்ற செய்தி  வீடு வந்து சேர்ந்திருந்தது. நல்ல டோஸும் கிடைத்தது. பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல், கண்ணாமூச்சி, பட்டம், தாயம், கேரம்போர்டு, சீட்டுக்கட்டு என ஒரு விளையாட்டையும் விட்டு வைத்ததில்லை. பதின்வயது வரை இப்படிக் கழிந்த நாட்கள். ஆனால்... காலம் எவ்வளவு கொடூரமானது! எப்படி எல்லாம் நம்மைத் துரத்தி அடிக்கிறது!! கூட்டுக்குடும்பத்தைச் சிதைத்து...எங்கெங்கோ நம்மை இழுத்துப்போய்...துளியும் இரக்கமின்றி வீசி எறிந்து விட்டு...ஓடிக் கொண்டேயிருக்கிறது காலம் என்னும் சூறைக்காற்று...!


கூட்டுக்குடும்பம் சென்ற தலைமுறைக்கு நிகழ்வு, இந்தத் தலைமுறைக்கு கடந்து போன கனவு. எங்கேனும் ஒரு கூட்டுக்குடும்பத்தைப் பார்த்தால் நமக்கு ஆச்சரியமாகத் தானே இருக்கும்! அப்படி ஒரு ஆச்சர்யம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த 72 பேர் முதல்முறையாக ஒன்று கூடி கடந்த ஆண்டு தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கிறார்கள். சென்னை அயனாவரத்தைச்  சேர்ந்த சம்பத் - புஷ்பவள்ளி அம்மாள் தம்பதியிடம் தொடங்கியது தான் இந்த உறவுச் சங்கிலி. ஆனால் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. அவர்களின் 5 மகள்கள், 4 மகன்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன்,கொள்ளுப்பேத்திகள் என அனைவரும் சென்னை, பெங்களூரு, மும்பை, உட்பட பல்வேறு நகரங்களிலும், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளிலும் வசித்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளில் எந்த நிகழ்ச்சிகளிலுமே கூடியதில்லை என்கிற வருத்தம் அவர்களில் எல்லோருக்கும் இருந்தது. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே, ஏலகிரி மலையில் தீபாவளிக்கு முந்தைய நாளிலிருந்து மூன்று நாட்கள் தங்கி அன்பையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர். "கூட்டுக் குடும்பத்தின் அருமையை இந்தத் தலைமுறைப் பேரப்பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதற்காகத்தான் 'கெட்டுகெதர்'  வந்தோம். இதற்கு முன்பு நடைபெற்ற எந்தவொரு நிகழ்விலும் எங்களின் குடும்பம் இப்படி மொத்தமாகக் கலந்து கொண்டதில்லை. சில பேரப்பிள்ளைகளின் முகத்தையே இங்கு வந்து தான் பார்த்தோம். ரத்த சொந்தம் கடைசி வரை தொடர வேண்டும். அடிக்கடி சந்திக்க வேண்டும். இந்த உலகின் எந்த மூலையில் எங்க குடும்பத்தினர் இருந்தாலும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பின்பற்றியே வாழ்கிறோம். குடும்பத்தோடு ஏலகிரியிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து தீபாவளியைக் கொண்டாடினோம்.இயற்கையிலிருந்து வேறுபட்டுச் செயற்கையாக வாழ நாமொன்றும் இயந்திரமில்லை. அன்பு பாசத்துடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கூட்டுக்குடும்பத்தில் தான் இருக்கிறது. சந்தோஷத்துக்குக் குறைவே இல்லாமல் புத்துணர்ச்சியுடன் ஜாலியாக இருந்தோம்" என்கிறார்கள். இவர்களின் சந்தோஷக்கூச்சல் ஏலகிரி மலை முழுவதும் எதிரொலித்திருக்கிறது.

                                 

80, 90 களில் ஸ்டுடியோ என்றால் கடைக்கு வெளியே பெரிய பெரிய சைஸில் போட்டோக்களை மாட்டி வைப்பார்கள். 'எங்கள் ஊரிலும் மெர்க்குரி ஸ்டுடியோ' என்னும் பெயரில் புகழ்பெற்ற ஸ்டுடியோ ஒன்றிருந்தது.  அங்கு  மரச்சட்டத்தை அடித்து கண்ணாடிப்போட்டு பிரேம் பண்ணித்தரும் ஆட்கள் ஸ்டுடியோவுக்கு வெளியிலேயே காத்திருப்பார்கள். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சில ஸ்டுடியோக்களில் அந்த மாதிரி ஆசாரிகளை வேலைக்கு அமர்த்திக்கொள்வதும் உண்டு. ஒவ்வொரு ஸ்டுடியோக்களின் முன்பும் அண்ணாதுரை, காமராஜர், எ‌ம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்று பழைய அரசியல், சினிமா ஸ்டார்களின் படங்களாகக் கடை முழுக்க நிறைந்திருக்கும். அதைத் தாண்டி அழகழகான குழந்தைகளின் படங்களும் நிறையவே இருக்கும். 90களின் பிற்பகுதி வரை ஒரு போட்டோவை கண்ணில் பார்ப்பதென்றால் அரிதினும் அரிதான விஷயம். ஸ்டுடியோவில் உட்கார வைத்து வெப்பத்தை உமிழும் சோடியம் லைட்டுகளை போட்டு, நம் தலையை அப்படி இப்படியுமாக அசைத்து, அவர்கள் நம்மை ஒரு போட்டோ எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். இவ்வளவுக்கும் 'ப்ளாக் அண்ட் ஒயிட்' படம் தான். கலர் படமாக இருந்தால் பூந்தொட்டி பக்கத்திலோ, திரைச்சீலைகளில் வரையப்பட்ட பங்களாக்கள் பக்கத்திலோ அல்லது புலி, சிங்கம் பக்கத்திலோ நின்று சரியான வெளிச்சத்தில் ஒரு படம் எடுப்பதற்க்குள் நம்மை ஒருவழிப்படுத்தி விடுவார்கள். நாம் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக டம்மி பீஸில் புல்லட், டாக்ஸி எல்லாம் கூட ஸ்டுடியோவிற்குள் நிற்கும்.அன்றைய ஒரு போட்டோ என்பது இவ்வளவு அனுபவங்களை உள்ளடக்கியது. தேர்வெழுதி மதிப்பெண் வரும் வரை  இனம் புரியாத ஒரு கலக்கத்தில் இருப்போம் இல்லையா? அதே போல் போட்டோ நம் கைக்கு வரும் வரை நமது ஆவல் உள்ளே கிடந்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கும். அன்றைக்கு இத்தனை சங்கடங்களுக்குப் பிறகு கிடைக்கும் பொருளில் ஒரு சந்தோஷம் மறைந்து கொண்டிருந்தது. இன்று எல்லாமே வெளிப்படையாகி விட்டன. அதனால் தானோ என்னவோ எல்லாப் பொருட்களின் மேலுள்ள கவர்ச்சியும் அதன் தன்மையை வெகு விரைவில் இழந்து விடுகின்றன. வாழ்வின் மகத்துவமே அன்றைய பொழுதுகளின் ஆர்ப்பாட்டத்தில் தான் ஒளிந்திருந்து.
                                         

1980 ன் பொழுதுகளை நாவல்களின் பொற்காலம் என்றே கூறலாம். வாசிப்பதின் என் ஆர்வம் இரும்புக்கை மாயாவி, ரிப்கிர்பி, ஜேம்ஸ் பாண்ட் போன்ற காமிக்ஸ் புத்தகங்களில் தொடங்கி சிறுவர்களுக்கான அம்புலிமாமா, கோகுலம், ரத்னபாலா என்ற புத்தகங்களின் வழியே தொடர்ந்தது. புத்தகங்கள் மனதைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்த காலமது. ஊருக்கு வரும்போதெல்லாம் மாத நாவல்களை கைநிறைய வாங்கி வருவார் தாத்தா.அவற்றையெல்லாம் பொக்கிஷமென இப்போதும் சேமித்து வைத்திருக்கிறேன்.மனம் சோர்வடையும் போதெல்லாம், இலக்கின்றிப் பயணிக்கத் துடிக்கும் போதெல்லாம், தேடல் கொண்டு தஞ்சமடையும் போதெல்லாம் நம்மை ஏளனம் செய்து பரிகசிக்காமல்,தன்னிடமிருக்கும் அனைத்தையும் பருகக் கொடுக்கும் பெருந்தன்மை புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. அப்போதைய கால கட்டங்களில் குமுதம் குழுமத்தின் மாலைமதி என்கிற மாதமிருமுறை நாவல், தினத்தந்தியின் ராணி குழுமத்தின் ராணிமுத்து மற்றும் குங்குமம் குழுமத்தின் குங்குமச் சிமிழ் என்ற மாதாந்திர நாவல்களும் கோலோச்சின. பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், சுபா, தேவிபாலா, புஷ்பாதங்கதுரை, ராஜேந்திரகுமார், லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, அனுராதா ரமணன் போன்ற பல்வேறு நாவலாசிரியர்களின் காதல் கதைகள், க்ரைம் கதைகள், குடும்பக் கதைகள், நகைச்சுவை கதைகள், சரித்திரக் கதைகள் என்று ஒரு நாவல் விடாமல் தேடித்தேடி வாசித்து... நாவல் மோகம் கொண்டு திரிந்த நேரமது. அசோகன் என்ற நாவல் பதிப்பாளர் "பாக்கெட் நாவல்" என்ற பெயரில் கையடக்க சைஸில் ஒரு மாத இதழைக் கொண்டு வந்தார்.பின்னர் ஒவ்வொரு பிரபல நாவலாசிரியருக்கும் தனித்தனி இதழொன்று தொடங்கி அந்த வரிசையில் பட்டுக்கோட்டை பிரபாகருக்கென 'எ நாவல் டைம்' என்றும், ராஜேஷ்குமாருக்கென்று க்ரைம் நாவல் என்றும் நடத்தினார். அதன்பின் உல்லாச ஊஞ்சலென்று ஒரு மாத நாவல் வெளிவந்தது. ஒரு மாதம் பட்டுக்கோட்டை பிரபாகரும் ஒரு மாதம் சுபா வும் மாறி மாறி எழுதிக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் எண்ணிலடங்கா மாத‌ நாவல்கள் வரத்துவங்கின. ஒவ்வொரு மாத‌ நாவலும் ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளிவரும். அந்தந்த நாட்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதே ஒரு சுகானுபவம். அடுத்த இதழில் நாவல் பெய‌ர் யா‌ர் எழுதுகிறார்கள் என்ற அறிவிப்பும் இருக்கும். இன்றைய firstlook ன் முன்னோடி. மேற்கண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் முன்னோடியாக ஒரு எழுத்து சூப்பர்ஸ்டாராக நமக்கு அறிமுகமானவர் தான் சுஜாதா. அவருடைய 'கரையெல்லாம் செண்பகப்பூ' நாவலை சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் வாசித்த கணம், பட்டுக்கோட்டை பிரபாகரின் 'பாதையெல்லாம் பூக்களிட்டு' நாவலை வாசித்துக் காதலின் மேன்மையை உணர்ந்த தருணம், ராஜேஷ்குமாரின் 'ஓடும் வரை ஓடு' நாவலை வாசித்து விட்டு இரண்டு நாட்கள் பயத்திலேயே திரிந்த சமயம்... இன்றும் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.சுஜாதாவின் கணேஷ்-வசந்த், பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத்-சுசீலா, ராஜேஷ்குமாரின் விவேக்-ரூபலா, சுபாவின் நரேன்-வைஜெயந்தி போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் நம்முடனேயே வாழ்கிறார்கள் என்னும் உணர்வை ஏற்படுத்தின அவ‌ர்த‌ம் எழுத்துக்கள்.தற்கால இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் திளைத்தாலும் அவர்களுக்குக் கிடைக்காத பொழுதுகள் நமக்கு வாய்த்தது. ஏன் தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டனவோ என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

உலகம் முழுவதும் சுற்றி விதவிதமான உணவு சாப்பிட்டாலும் அம்மாவின் கையால் சாப்பிடுவதென்பது தனி உணர்வு தான்.அது போலவே பிறரது இசையை எவ்வளவு கேட்டாலும் நம் உதடுகள் முணுமுணுப்பது என்னவோ 80 களின் இளையராஜா பாடல்களை மட்டுமே. எந்த ஒரு பாடலாக இருந்தாலும் அது நம் நினைவுகளை மீட்டுக் கொடுத்து விட்டே தான் செல்லும். ஆயிரம் படங்களுக்கு மேலாகவும் - ஐயாயிரம் பாடல்களுக்கு மேலாகவும் இசையமைத்திருந்தாலும் கூட ஒரு இசை சாயல் போல மற்றொன்று இருக்காதென்பது எவ்வளவு பெ‌ரிய விஷயம். தமிழகத்தில் பெரும்பாலோர் இளையராஜாவின் பாடல்களுடன் தான் உறங்கச் செல்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.சோகம், காதல், பரவசம், பரிவு, இரக்கம் என்று பல மெல்லிய உணர்வுகளை தன் இசையால் எழுப்பக் கூடியவர்.அவரது இசையைக் கேட்கும் போதெல்லாம் மனதின் ஆறுதலாய் காற்று தலையை வருடிச் செல்லும்.நீண்ட அமைதி ஒன்று நம் மனதில் சிம்மாசனமிட்டு அமரும்.எத்தனை எத்தனை பாடல்கள் கால வனத்தின் அழியாத கானமாக ஆயிரமாயிரம் பூக்களை அள்ளித் தெளித்து மனசெங்கும் மணக்கச் செய்கிறது.தூரப்பயணம் என்றால் ராஜாவின் பாடல் அந்தப் பயணத்தையே அதியற்புதமாக்கி விடுகிறது.குளிருக்கு இதமாய் சுருண்டு கிடக்கும் அதிகாலைப் போர்வை நொடிகளில்,மேகங்கள் விலக்கி நிலா மெதுவாய்த் தலைதூக்கும் ரம்மியமான அந்திமாலை நேரங்களில்,காதலின் ஆழம் தேடும் இரவுப்பொழுதுகளில் என ங்கும்,எதிலும் வியாபித்திருக்கிறார் அவர்.அது தான் இளையராஜா என்ற ஆளுமை இசையால் செய்திடும் மந்திரஜாலம்.அதுவும் சமீபத்தில் மறைந்த - 'பாடும் நிலா பாலு' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவர் வழங்கிய பாடல்களெல்லாம் நம் காதுகளையும், இதயத்தையும் ஒரு சேர ஈர்த்து மெய்மறக்கச் செய்யும் அற்புதமான அனுபவம்.இதோ ஒரு ராஜாவின் பாடலைக் கேட்கத் துவங்குகிறேன். உலகம் பேரழகாகிறது.

அது ஒரு காலம்...
கிராமமிருந்தது
வயலிருந்தது
மழையிருந்தது
குளம் கேணி கிணறு இருந்தது
கிணறு கேணியில் தண்ணி இருந்தது
மழை பெய்து வெள்ளம் நிரம்பியிருந்தது
தண்ணியில குதிச்சு விளையாடின காலம் இருந்தது
தாத்தா வீடிருந்தது
அன்பு செலுத்த நல்மனிதர்கள் இருந்தனர்
செல்போன் இல்லை
லாண்ட்லைன் இல்லை
இன்டர்நெட் இல்லை
டாஸ்மாக் இல்லை
கச்சடா கண்ராவி இல்லை
ஆனால்...
சொந்தபந்தம் சூழ, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர நண்பர்களிருந்த வசந்த காலம்...இப்போது ஆளுக்கொரு திக்கில்.சிலபேர் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை.இருக்கிறவர்கள் மட்டும் சொல்லிக் கொள்ள வே‌ண்டியது தான்...

நான் இருக்கிறேன்...

நானும் இருக்கிறேன்...








12 comments:

  1. TTP poitu vantha mathiri irruku...arumai

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாணி.எழுதும் போதே எனக்கும் டைம் மிஷினில் ஏறி எண்பதுகளுக்குப் பயணித்த அனுபவம் கிடைத்தது.

      Delete
  2. Nostalgic moments.
    தொலைந்த,தொலைத்த இளமைக்கால நினைவுகளை கண் முன்னே நிறுத்துகிறது உன் கட்டுரை. நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த நன்றி ஜெயந்தி

      Delete
  3. Prof. Karthi. I have rewinded to most precious and golden moments of my invaluable life in 80s.thanks for bring me those unforgettable nostalgic memories.Wells drafted wordings. Congrats yet again.

    ReplyDelete
  4. Awesome write up..
    Thanks for taking a walk to your childhood days..

    ReplyDelete
  5. When we Comparing 80s and 90s Memories won't erase by anyone memories are still living in the bottom of the each 80s and 90s kids heart.Sir,Your Life Story is Very beautiful.Now a days no joint family are there if it is there everyone looking as miracle.That much the life period has changed.

    Very beautiful and Nice to Read Sir.Write More and Share More sir.
    THANK YOU.

    ReplyDelete
    Replies
    1. Nice feedback Nivetha.Surema i will keep writing.Thank you.

      Delete
  6. மலரும் நினைவுகள்.. சட்டென்று விழும் கண்ணீர்... நினைவுகளை தேட தொடங்கும் மனம்...

    இரவில் ஹெட்செட் போட்டு பாடல் கேட்க்கும் பொழுது திடீரென வரும் தூக்கம், ஹெட்செட் எடுத்தவுடன் தொலைந்து போகும்..

    காலமும் அதே போலதான்...

    அன்புடன்
    மூர்த்தி நி

    ReplyDelete
    Replies
    1. கவித்துவமான விமர்சனம்.நன்றி மூர்த்தி.

      Delete