Sunday, 26 April 2020

வாழ்வெனும் வானவில்

"STOP EXISTING START LIVING"

வாழ்வின் சுவையை - அதன் அர்த்தத்தை - அதன் அருமையை இதை விட அழகாகச்  சொல்லி விட முடியுமா என்ன?
         உயிரோடு இருப்பதனாலேயே ஒருவர் வாழ்கிறார் என்று கூற முடியாது.பிழைத்திருத்தல் வேறு; வாழ்ந்திருத்தல் வேறு.  பிழைத்திருத்தல் என்பது அன்றைய பொழுதை எப்பாடு பட்டேனும் நகர்த்தி விட வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள்.இந்நிலையில் இருப்பவர்களிடம் வாழ்வியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க முடியாது. அன்றாடம் காய்ச்சிகளான  இவர்கள் "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" என்பதற்கேற்ப எதையும் கேட்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்.இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி விட்டு வேண்டுமானால் வாழ்வதைப் பற்றிப் பேச முடியும்.இதற்கடுத்து இருப்பவர்கள் இருத்தல் (Exist)  நிலையில்  உள்ளவர்கள்.பார்ப்பதற்கு கடும் உழைப்பாளிகளைப் போல தெரியும் இவர்கள் உட்கார நேரமின்றி ஓடிக்கொண்டே இருப்பார்கள்.வாழ்வதென்றால் என்னவென்பதன் அடிப்படையே அறியாத இவர்கள் தமது தேவையைச் சரியாக வகுத்துக் கொள்ளாமல் அமைதியின்றித் தத்தளிப்பவர்கள்.
    பிழைப்பு  நிலையிலிருந்தும் (Survival) இருத்தல் (Exist) நிலையிலிருந்தும் முன்னேறி வாழும் நிலைக்குச் செல்ல வேண்டுமெனில்  நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று : வாழ்க்கை என்பது புறப்பொருட்கள் சார்ந்து உருவாக்கப்படும் சித்தாந்தங்களிலும் இல்லை; அகத்தைச் சார்ந்து உருவாக்கப்படும் வேதாந்தங்களிலும் இல்லை. ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு  நிகழ்விலும், ஒவ்வொரு சம்பவத்திலும் பரிபூரணமாக வாழ்வது தான் வாழ்க்கை.
     வாழ்வென்பது ஒரே முறை. இப்பூவுலகில் நேசத்துடனும் - நேர்த்தியுடனும் நாம் வாழ இயற்கை வழங்கியுள்ள அருட்கொடை. அப்பேர்ப்பட்ட வாழ்வினை அழகான வானவில்லாகும் - வண்ணமயமாக்கும் - ஏழு  வாழ்வியல் வண்ணங்களைக் காண்போம்.

வண்ணம்  1 : எண்ணம்      




     மனிதன் தன் இதயத்தின் ஆழத்தில் எந்த எண்ணத்தைக் கொண்டிருக்கிறானோ அதே போல் ஆவான் என்பது முதுமொழி. ஆக, எண்ணங்களாலேயே அமைகிறது வாழ்க்கை. அது முழு  மனித வாழ்வையும் தழுவி நிற்கிறது. அதை விட வாழ்வின் எல்லா அம்சங்களையும் தொட்டு - வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிலைமைக்கும் - ஒவ்வொரு சூழ்நிலைக்கும் காரணமாகிறது. நல் எண்ணங்களால் உயர்ந்த எத்தனையோ மாமனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களில் ஒருவராக என் மாணவரும், தற்போது புதுவை பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறைத்தலைவராகவும் இருக்கக்கூடிய முனைவர் செந்தில்குமார் அவர்களைச் சொல்வேன். எந்தச் சூழ்நிலையிலும் தீய எண்ணங்களுக்கு இடம் கொடாமல் தூய எண்ணங்களுக்கு மட்டுமே இடங்கொடுப்பவராக இருப்பதைக் கண்டிருக்கிறேன். எந்த இடத்திற்கு அவர் சென்றாலும் அவருக்கு  கிடைக்கக்கூடிய  மதிப்பையும்  மரியாதையையும் நானறிவேன். அவருடைய தூய எண்ணங்களே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்பது நிதர்சனம்.
         15-ம் நூற்றாண்டில் ஓவியக்கலைக்காகவும் சிற்பக்கலைக்காகவும் புகழ் பெற்று விளங்கியவர் இத்தாலியைச் சேர்ந்த லியனார்டோ டாவின்சி.  அவர்   தன் தூரிகையால் தீட்டிய மர்மப் புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவியமும், இயேசுவின் கடைசி விருந்தும் உலகப்புகழ்பெற்றவை. சாந்தமும் அமைதியும் தவழும் இயேசுவின் அழகிய முகத்தை ஓவியமாக்குவதற்கு ஒரு மாடலைத் தேடினார் டாவின்சி. அழகும் கருணையும் ததும்பும் இளைஞன் ஒருவனை பிரம்மப்பிரயத்தனம் செய்து கண்டுபிடித்தார்.  அவனையே மாதிரியாக வைத்து இயேசுவை வரைந்தார் அந்த மாபெரும் கலைஞர். ஆனால் துரோகத்தின் வடிவமான யூதாஸை வரைவதற்கு வன்மம் தாங்கி நிற்கும் முகத்தை டாவின்சி வருடக்கணக்கில் தேடியும் பலனில்லை. எதேச்சையாக ஒரு நாள் சாலையில் ஒருவனை சந்தித்தார் லியனார்டோ. அவர் தேடியது போல் வன்மமும் துரோகமும் வார்த்தெடுத்த யூதாஸின் முகம் எதிரில் தெரிவதைக் கண்டார். அவனைக் கையோடு அழைத்து வந்து ஓவியம் வரைய முற்பட்டவருக்குத் திடீரென சந்தேகமொன்று முளைத்தது. 'உன்னை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்தது போல் உள்ளதே'  என்றார் டாவின்சி. 'நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை வரைவதற்கு மாடலாக வந்தவன் நான் தான்' என்றான்  அந்த  யூதாஸ். இதயம் நல் எண்ணங்களால் மலர்ந்திருந்த போது அவன் முகத்தில் இயேசுவின் சாயலும், சீர்கெட்டுப்போன எண்ணங்களால் வெளிறியிருந்த போது அவன் முகத்தில் யூதாஸின் துரோகமும் தானாகவே வந்து விடுகிறது. ஒருவனை இயேசுவாக்குவதும்,  யூதாஸாக்குவதும் அவரவர் எண்ணங்களே. 
தருமனின் பார்வையில் அனைவரும் நல்லவர்களாகவும் துரியோதனனின் பார்வையில் அனைவரும் கெட்டவர்களாகவும் காட்சி தந்தனர். இதையே வள்ளுவர்...

               "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
                உள்ளத் தனையது உயர்வு"
          

                                                  - என்கிறார்  

வண்ணம்  2 : உடல்




     சுவர் இருந்தால் தானே சித்திரம். அது போல் ஆரோக்கியமான உடலே  நல் வாழ்விற்கு  வழி வகுக்கின்றது. நீங்கள் சொன்ன படி உடம்பு கேட்கிறதா? அல்லது உடம்பு சொன்னபடி நீங்கள் கேட்கிறீர்களா? சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் உறுதியாக  உங்கள் உடல் உங்களுக்கு ஒத்துழைத்தால் அதை விட வசந்தம் வாழ்வில் வேறில்லை.

              விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் 
              வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்

     என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி சொல்லால் தவம் செய்கிறார் மகாகவி பாரதியார். ஒளி படைத்த பாரதத்தை உருவாக்க எண்ணி தனது புதிய ஆத்திச்சூடியில் "உடலினை உறுதி செய்"  என்று முழங்கவும் செய்கிறார். புதிய ஆத்திச்சூடியில் உள்ள 110 அறிவுரைகளில் அதிகமாகக் காணப்படுவது உடல் பலத்திற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம்தான். "இளைத்தல் இகழ்ச்சி" என்று பலவீனத்திற்கு எதிராக கருத்தை முன்வைக்கும் பாரதி "நொந்து சாகும்" என்று மற்றோரு வரியில் எச்சரிக்கிறார். இதையே தான் சுவாமி விவேகானந்தரும் "பலமே வாழ்வு,  பலவீனமே மரணம்" என்று அறைகூவுகிறார்.
     உடலினை எதற்காக உறுதி செய்ய வேண்டும்? உடல் நன்றாக இருந்தால் தானே எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்ய முடியும். உடல் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா? உடலோடு ஒட்டியிருக்கின்ற மனமும் நன்றாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகள். ஒன்று நன்றாக இருந்தால் தான் இன்னொன்று நன்றாக இருக்கும். மனம் ஒரு கண்ணாடியைப் போன்றது. கண்ணாடி முன்னாடி இருப்பதை அப்படியே காட்டும். கண்ணாடி உடைந்தால் உருவமும்  உடையும். அது போல் தான் உடல் அழிந்தால் மனம் அழியும். ஆரோக்கியமான உடலில் தான் தெளிவான மனத்தைக் காணலாம்.  மனமும் உடலும் கலந்து செயல்படும்போது  தான் மனிதன் சிறப்பாக இயங்க முடியும்.
     மகாத்மா காந்தி சிறையில் இருந்த காலத்தில்  அவரது தேவைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை வல்லபாய் படேல் மேற்கொண்டிருந்தார்.காந்திஜியின் காலை உணவு  10 பேரிட்சை பழங்கள்  மட்டுமே. இந்த மனிதர்  செய்யும் அசாத்திய  வேலைகளுக்கு இவை பத்தாதே என்றெண்ணிய படேல் காந்திஜி கவனிக்க மாட்டார் ஐந்து பழங்கள் சேர்த்து கொடுக்கலாம் என்று பழங்களைக் கொடுத்தார். அனால் பழங்களை  எண்ணிய காந்திஜி, ஐந்து பழங்களை கூடுதலாக வைத்திருக்கிறாயே.....கவனக்குறைவா? என்று கடிந்து கொண்டார். உடனே படேல் ஐந்து பழங்கள் தானே கூடுதல் பெரிய வித்தியாசமில்லையே என்றார் உரிமையுடன். "வல்லப..  இனி ஐந்து பழங்கள் மட்டுமே சாப்பிடப்போகிறேன்.  எப்போது பத்துக்கும் பதினைந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று ஆகிவிட்டதோ, அப்போதே ஐந்துக்கும் பத்துக்கும் வித்தியாசம் இல்லை தானே" என்று தன் காலை உணவை குறைத்துக்கொண்டார் மகாத்மா. குறைவாகச் சாப்பிடுவதன் மூலம் நீண்ட நாள் வாழ முடியும் என்னும் பேருண்மையை நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். உறுதியான உடலில் மட்டுமே கட்டுப்பாடான தெளிவான மனம் அமையும்.
      " உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்கிறார் திருமூலர்.

வண்ணம்  3 : சொல்



            ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சக்தி உண்டு  நாம் தேவனாவதும், சாத்தானாவதும் நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளால் தான் என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.
     "சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை" என்னும் கண்ணதாசனின் பாடல் வரிகளை கேட்டிருக்கிறீர்களா? சொல்லின் விளைவை அறியாமல் விரயமாக்கினால் அவை நமது வாழ்வின் முதுகில் ஏறி அமர்ந்து அவற்றின் போக்கில் போய் வழி நடத்தும். சொல் நம்மை பள்ளத்தில் தள்ளும். பார்த்துப் பயன்படுத்தினால் இமயத்தில் ஏற்றும்.வாழ்வின் உயர்வும் தாழ்வும் மனிதர்களின் உறவும் பிரிவும் சொற்களால் தான் வரையறுக்கப்படுகின்றன. துரோணரும் துருபதனும் ஒரே குருகுலத்தில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டனர். இருவரும் ஆழமான நட்பில் இணைந்தனர். நான் அரசனானதும் பாதி அரசை உனக்குத்தருவேன் என்று சற்றும் யோசிக்காமல் வாக்குறுதி வழங்கினான் துருபதன். காலங்கள் ஓடின.துருபதன் பாஞ்சாலத்தின் அரசனானான். துரோணரோ பெற்ற பிள்ளை அசுவத்தாமனுக்கு பால் வாங்கவே  வழி இன்றி வறுமையில் வாடினார். நண்பன் சொன்னது நினைவுக்கு வரவும் பாஞ்சாலத்திற்கு வந்தார். பழைய நட்பின் பாசத்தோடு அரசவையில் வந்து நின்ற துரோணரை துச்சமாகப் பார்த்தான் துருபதன். "என்னை நண்பனாக எப்படி நினைக்கலாம் நீ? பெரும் செல்வத்துக்கு அதிபதியான மன்னனுக்கு ஏழையுடன்  நட்பு ஏற்பட முடியாது , பால்ய நட்பு வயதானதும் மறைந்துவிடும். எந்த நட்பும் அழியாமல் எல்லாக்காலமும் நீடிப்பதில்லை. பெண்ணால் நட்பு கெடும், கோபத்தால் நட்பு  முறியும்.  இது தான் உலக நடப்பு.  ஏழை பணக்காரனுக்கு நண்பனாக முடியாது. கோழை வீரனுடன் நட்பு கொள்ள வாய்ப்பில்லை. கல்வி, வலிமை, திறமை, பதவி, இவற்றில் சமமானவர்களே நட்பு கொள்ள முடியும். எனவே இளம் பருவ நட்பை நீ இப்போது கொண்டாடுவது முட்டாள்தனம்" என்று சொற்களை கடுமையாகக் கூறி துரோணரை வெளியேற்றினான் துருபதன்.  பின்னர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசிரியரானார் துரோணர். பயிற்சி முடிந்ததும் அர்ஜுனனை அழைத்து "குருதட்சணையாக துருபதனை கைது செய்து என் காலடியில் வீழ்த்த வேண்டும்" என்று கட்டளையிட்டார். அதன்படி போரில் துருபதனை வென்று நாடு கவர்ந்து கைது செய்து துரோணர் முன் கொண்டு வந்து நிறுத்தினான் அர்ஜுனன். "துருபதா , இப்போது உனது நாடு என் கையில். நீ எல்லாவற்றையும் இழந்து என் முன்னே நிற்கிறாய். என் வசமாகிவிட்ட உனது தேசத்தில் ஒரு பாதியை நான் உனக்கு தானமாகத் தருகிறேன். ஆளுக்குப் பாதி அரசு இருப்பதால் இப்போது நாம்  இருவரும்  சமமாகி விட்டோம் என்றார் துரோணர். தான் முன்பு விதைத்த சொற்களின் வினையை அவமானத்துடன் துருபதன் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
                  நாவினாற் சுட்ட வடு"
என்னும் குறளை எப்போதும் நினைவில் கொள்ளவும்.

வண்ணம்  4 : செயல்



     வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை , நம்மோடு  உடன் வரப்போவதும் இல்லை. அதனால் எதன் மீதும் அதீத ஆசையோ, ஆழ்ந்த பற்றோ வைப்பதில் அர்த்தமில்லை. ஆசையும் பற்றும் கூடாது என்பதால் அனைவரும் செயலற்றுக் கல்லாகக் கிடக்க வேண்டும் என்று பொருளில்லை. வாழ்வின் ஒவ்வொரு கணமும் உயிர்ப்போடு செயல்பட வேண்டும். நமது ஒவ்வொரு செயலும் உலக நன்மைக்காகவே இருக்க வேண்டும்.
     "பற்றற்றிரு"  என்று போதிக்கும் பகவத்கீதை எந்த இடத்திலும் செயலற்றிரு என்று சொல்லவே இல்லை. செயலற்று இருத்தல் சாவுக்கு சமம். கடலில் அலைகள் கரையுடன் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கின்றன, நதிகளில் நீர் தேங்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மரங்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதே இல்லை.பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறந்து கொண்டேயிருக்கின்றன.விலங்குகள் ஓரிடத்தில் நில்லாமல் இரைதேடிப் பாய்கின்றன. எங்கும் எதிலும் இயக்கமே இயற்கையின் இயல்பான விதியாக இருக்கிறது.

     20 வருடங்களுக்கு முன்பு ஈரோடு SSM கல்லூரியில் மேலாண்மைத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போதைய துறைத்தலைவர் முனைவர் சாரதி அவர்கள் திறமையானவர் மட்டுமின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கும் கொண்டவர். சிறிது காலம் ஒன்றாகப் பணிபுரிந்த நாங்கள் பின்னர் காலத்தின் நீள்வெளியில் எங்கெங்கோ பிரிந்து சென்று விட்டோம். நாங்கள் ஒன்றாகப்  பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் எங்கள் மாணவனாயிருந்த பங்களாதேஷைச்  சேர்ந்த சையத் என்னும் மாணவன் MBA முடித்து விட்டு Degree Certificate வாங்காமலேயே சென்றுவிட்டான். இருப்பினும் தற்போது ஓர் பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில்  உள்ளான். அவன் குடும்பத்துடன் Canada நாட்டிற்கு குடியுரிமை பெற விரும்பிய போது Certificate பிரச்சனை வந்தது.  கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் என்னையும் சாரதியையும் தொடர்பு கொண்டு Certificate பெறுவதற்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். கையில் வேறு எந்த சான்றிதழும் இல்லாத நிலையில் அவன் இந்தியா வந்த நாளில் சாரதி தற்போது பணிபுரியும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஓர் நாள் விடுப்பு எடுத்துக்  கொண்டு என்னையும் அழைத்துக் கொண்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். ஒரு நாள் முழுவதும் அலைந்து திரிந்து பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்து Notary Certificate வாங்கி இறுதியில் அவனுக்கு Degree Certificate கிடைக்க வழிவகை செய்தார். அப்போது அந்த மாணவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. எனக்குத் தெரிந்து 20 ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் படித்த ஒரு மாணவனுக்கு ஒரு பேராசிரியர் இத்தகைய உதவியைச் செய்திருப்பாரா எனத் தெரியவில்லை.
                     "Actions speak louder than words"

வண்ணம்  5 : ஒப்பீடு



     இன்று என் நண்பர் குணா  ஒரு forward message அனுப்பியிருந்தார். அதில் : "ஒரு பிளேடு கூர்மையானது ஆனால் அது  மரங்களை வெட்டாது. ஒரு கோடாரி வலுவானது, ஆனால் முடியை வெட்டாது.ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமை மற்றும் திறன்கள் இருக்கும்" என்றிருந்தது. எவ்வளவு யதார்த்தமான  உண்மை !
     உலகத்தின் 800 கோடி மக்களும் ஒரே மாதிரியான முகத்தோற்றத்தை கொண்டவர்களாகவா இருக்கிறார்கள்? எல்லாப் பெண்களும் ஒரே தோற்றத்தில் இருந்தால் அழகுக்கு ஏது ஆராதனை? நந்தவனத்தில் பூக்கும் ஆயிரக்கணக்கான பூக்களும் ஒரே நிறத்தில் இருந்தால் ரொம்பவும் ரசிக்க முடியாதல்லவா?
     வண்ணக்கலவைகளால் தானே வானவில்லுக்கு என்றும் வனப்பு! வானத்தில் ஒரே வண்ணத்திலான பறவைகளா பறக்கின்றன? கானகத்தில் ஒரே இன விலங்குகளா வாழ்கின்றன?  இயற்கையின் படைப்புகள் பல விதம் அவை ஒவ்வொன்றும்  ஒரு விதம். மயிலைப் போல் நாம் இல்லையே என்று குயில் கலங்க வேண்டியதில்லை. மயிலுக்கு ஆடத் தெரிந்தால் குயிலுக்கு பாடத் தெரியும். பாடமுடியவில்லையே என்று மயிலும் ஆட முடியவில்லையே என்று குயிலும் வருந்த வேண்டியதில்லை, ஒவ்வொரு உயிருக்கும் ஏதோ ஒரு தனித்திறன் உண்டு. இல்லாததை எண்ணி ஏங்குவதை விட இருப்பதை நினைத்து மகிழ வேண்டும்.
           12- ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர்கள்  அனைவரும் "எப்பாடு பட்டாவது  Professional Course சேர்ந்து விடுங்கள். அது ஒன்றே உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்" எனக் கூறினர்.அதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு நண்பர்கள் எல்லோரும் நன்கு படித்து professional course சேர்ந்தோம்....ஒரே ஒருவனைத் தவிர. அவன் ஒருவன் தான் அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்தான். அவனைப்பார்த்து நாங்கள் அனைவரும் பரிதாபப்பட்டோம். ஆஹா! இவன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று. ஆனால் நிஜத்தில் நடந்ததோ வேறு. யாரைக்கண்டு நாங்கள் பரிதாபப்பட்டோமோ அவன் தான் முதன் முதலில் வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் சென்றான். காரணம் அவன் யாரோடும் தன்னை ஒப்பீடு செய்து கொள்ளவில்லை. தனது தனித்திறமையையும், ஆற்றலையும் உணர்ந்து கொண்டு முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் வெற்றியை எட்டிப் பிடித்தான். ஆகவே மேலானவர் என்றும் கீழானவர் என்றும் யாரோடும் யாரையும் ஒப்பிடுதல் தகாது. அனைவரும் அவரவராக இருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

     ஒரே தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும் சகோதரர்களுக்குள் எத்தனை ரசனை வேறுபாடுகள்? ஒரே விதையில் வளர்ந்த மரத்தில் காய்க்கும் பழங்களில் எத்தனை மாறுபாடு?  ஒரு மரத்தோடு இன்னொரு மரத்தையல்ல....ஒரே மரத்தில்  காய்க்கும் பழங்களைக்கூட ஒன்றோடு ஒன்று ஒப்பீடு செய்வது தவறு. எனவே அடுத்தவர்களுடன் நம்மை ஒப்பிட்டு அமைதி இழக்காமல் நம் இயல்புகளுடன் நாம் மகிழ்ச்சியாக வாழக்கற்ப்போம்.

" If you compare yourself with others, you are insulting yourself"

வண்ணம்  6 : அன்பு



   இயந்திரகதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது உலகம்.ஒவ்வொருவரும் தனக்கு நேரமில்லை என்று கூறிக்கொண்டு ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். சகமனிதர்களைப் பற்றிச் சிந்திக்க மனமில்லாத ஒருவனை எப்படி முழுமனிதனாய் ஏற்றுக்கொள்வது? மனிதநேயம் சுத்தமாக வடிந்து விட்டதா? அதன் அடிப்படை தான் என்ன ?
     அன்பு தான் மனிதநேயத்தின் ஆதார சுருதி. அன்புக்குச் சாதி , மத, நிற வேற்றுமை, பால்பேதம் ஏதுமில்லை. மேலும் அன்பு...இனம், மொழி, நாடு என்ற எல்லா எல்லைக்கோடுகளையும் கடந்து உலக மக்களிடையே பரஸ்பர ஒற்றுமையை உருவாக்கும் ஆற்றல் படைத்தது.
    ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு ஆப்பிள் வச்சுருக்கீல்ல.... எனக்கு ஒன்று கொடு என்று கேட்டாள். தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்தச் சிறுமி ஒரு ஆப்பிளை கடித்துவிட்டாள். உடனே இரண்டாவது ஆப்பிளையும்  கடித்துவிட்டாள். தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த  முடியாமல் தவித்தாள். சிறுமியோ தாயைப் பார்த்துச் சொன்னாள்...." அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு எடுத்துக்க".. அந்தச் சிறுமியிடம் இருந்தல்லவா நாம் தூய அன்பினைக் கற்க வேண்டும்".
      "கார்காலம் வரும்போது தவறாமல்  வருவேன்" எனப் பிரிந்து சென்ற தலைவன், செய்து கொடுத்த சத்தியத்தைக் காக்க தலைவியின் இடம் நோக்கித் தேரில் காற்றாய்ப் பறந்தான்.  மரங்களும் கொடிகளும் மலர்களும் சூழ்ந்த சோலை வழியே தேரைச் செலுத்தியவன் மலரொன்றின் மடியைப் பஞ்சணையாக்கி இரண்டு வண்டுகள் இன்புறுவதைக் கண்டான். அழகிய தேரை அலங்கரிக்கும் மணியின் நாவசைந்து எழும் ஒலியில் வண்டுகள்  பதறுமே என்று வருந்தியவன் , ஓடும் தேரில் ஓசை எழுப்பிய மணியின் நாவைக் கயிற்றால் கட்டினான் என்பது அகநானூறு தீட்டும்  அன்பு ஓவியம். வண்டுக்கு இரங்கித் தவித்த சங்கத் தமிழரின் வாரிசுகள் இன்று சகமனிதருக்கு இரங்காமல் சாதி மதங்களின் பேரால் பேதம் வளர்த்துப் பிரிந்து நிற்றல் சரியா? நம் நிகழ்காலச் சமூகம் நுகர்வோர் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. நம் மண்ணிற்கேயுரிய அன்பு பொய்யாய், பழங்கதையாய் மாறிவிடுமோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. வாழ்வை  இனிமையாக்குவது  அன்பு. அன்பிருக்கும் இடந்தான் உண்மையான சொர்க்கம். அன்பற்ற உலகம் பாழும் நரகம். இதயத்தில் அன்பிருந்தால் தான் எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணத்தோன்றும். இவ்வுலகில் நாம் பிறவி எடுத்திருப்பதன் நோக்கம் அன்புள்ளவர்களாக  இருப்பதற்கே. நம் சுகதுக்கத்தைக்  காட்டிலும் நாம் அன்பு வைத்திருப்பவரின் சுகதுக்கமே பெரிது என்றெண்ணி  வாழ்பவரின் வாழ்வே அர்த்தமுள்ள வாழ்வு.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"
வண்ணம்  7 : ஞானம்



     திருவொற்றியூர் நெல்லிக்காய் பண்டாரத் தெருவில் வசித்த சித்தர் ஒருவர் வீட்டுத்திண்ணை ஒன்றில் அமர்ந்திருந்தார். வீதியில் செல்லும் மனிதர்களைப் பார்த்து 'பாம்பு போகிறது, தேள் போகிறது, புலி போகிறது, நரி போகிறது' என்று சத்தமாகச் சொல்லிய வண்ணம் இருந்தார். அப்போது அந்த வழியில் வள்ளலார் வந்தார். அவரைப்பார்த்து சித்தர் 'இதோ ஒரு மனிதர் போகிறார்' என்றார். சித்தருக்கு அருகில் இருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர் விளக்கம் கேட்டார். அதற்கு அந்த சித்தர் புறத்தோற்றத்தை வைத்து மனிதர்களை நான் எடைபோடுவதில்லை. அவரவர் இயல்பைக் கொண்டே  அளக்கிறேன். இந்த உலகினில் மாந்தரைத் தவிர வேறு எந்த உயிரினமும் தனது இயல்பை அடிக்கடி மாற்றிக்கொள்வதில்லை. தேளிடம் பாம்பின் தன்மையை பார்க்க முடியாது, புலியிடம் நரியின் தந்திரத்தைக் காண முடியாது. மனிதர்கள் மட்டுமே அடிக்கடி தங்களது இயல்பில் இருந்து  மாறுகின்றனர்.  மனிதன் ஒரு கணம் பாம்பாகச்  சீறுகிறான் ,மறுகணம் புலியாகப் பாய்கிறான், அடுத்தகணம் தேளாகக் கொட்டுகிறான். தேவைப்பட்டால் நாயாகவும், நரியாகவும் கூடத் தன்னை மாற்றிக் கொள்ளத் தயங்குவதில்லை.மனிதனை மனிதனாகக் காண்பது     தான் அரிதாகிவிட்டது  என்றார். தான் யார்  என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டால் ஒரு துன்பமில்லை ஒரு துயருமில்லை வாழும் காலம் முழுவதும் பேரானந்தம் தான்.இன்பம் துன்பம் என இரண்டு நிலையிலிருந்து  மாறி நிலையான ஓரிடத்தில் மனத்தை இருத்த முடியும் எனில் அது எத்தகைய சுகம்.  அந்தச் சுகம் எப்படி கிடைக்கும் ? அந்த ஞான நிலையை அடைவது எப்படி? அறியாமை கலப்பற்ற அறிவு தான் ஞானம். எல்லா இழிவுகளிலும் பெரிய இழிவு அறியாமை தான். அறியாமையில் மூழ்கிக் கிடப்பவனுக்கு இன்பத்தின் பாதை துன்பமாகத்தான் தெரியும்.. துன்பத்தின் இருப்பிடம் இன்பமாகப் புரியும். அரைகுறை அறிவு முழுமையான முட்டாள் தனத்தை விட ஆபத்தானது. பாதி உண்மை முழு பொய்யை விட மோசமானது என்பது போல் பாதி அறிவு அறியாமையை விட மோசமானது. கேள்வி  ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும் அறிவின் திறவுகோல். உற்றுநோக்குவதன் மூலமோ, யூகிப்பதன் மூலமோ ஒரு நிகழ்வை நாம் அறிந்து கொண்டதாகச் சொல்லலாம் ஆனால் அது சரியாகத்தான் இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது அல்லவா? கேள்வி ஞானம் ஒன்றே முழுமையான கற்றலை நமக்குக் கொடுக்கும். ஆயிரம் நூல்களைப் படிப்பதை  விட முதலில் நம்மை நாம் படிக்க வேண்டும். "உன்னை அறிந்து கொள்" என்பதே உபநிஷதங்களின் அடிப்படை உபதேசம். வாழ்வின் அர்த்தம் புலப்பட தேடல் ஒவ்வொரு நாளும் உள்ளே நடக்க வேண்டும். வெளியே தேடிப் பெறுவது சாதாரண அறிவு. நமக்குள் தேடி அடைவது தான் நம் வாழ்வை உயர்த்தும் ஞானம். "தன்னை அறிய தனக்கொரு கேடில்லை"  என்பதே திருமூலர் நமக்குத் தரும் திருமந்திரம்.

நாம் விரிவாகக்கண்ட ஏழு வானவில் வண்ணங்களையும் ஓஷோ ரத்தினச்சுருக்கமாக அழகாகக் கூறுகிறார்...
"LIFE SHOULD NOT BE LIVED 
    IT SHOULD BE CELEBRATED"

16 comments:

  1. வானில் தெரியும் வானவில் கண்ணுக்கு விருந்து இந்த வாழ்வெனும் வானவில் கருத்துக்கு விருந்து

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம்.நன்றி மாமா.

      Delete
  2. மனதில் இருள் நீங்கி ஒளி தரும் வாழ்வெனும் வானவில்.அருமை.

    ReplyDelete
    Replies
    1. அன்புத்தங்கையின் நேர்த்தியான விமர்சனத்திற்கு நன்றி!

      Delete
  3. இயற்கையின் பரிசு வானவில்🌈
    வாழ்கைக்கு பரிசு தங்களின் வாழ்வெனும் வானவில்✍️

    ReplyDelete
    Replies
    1. கவித்துவமான வாழ்த்து.ப்ரியத்திற்குரிய தங்கைக்கு அநேக நன்றிகள்!

      Delete
    2. Amazing writing. Congrats prof Karthi. Only persons having strong passion can create such mmasterpiece. But this is just the tip of the iceberg. The best is yet to come from you for the reading community. You are a great inspiration to many. I am one .Thanks for ur amazing contribution.

      Delete
    3. Dear Dr.Sarathy,
      I always value and respect your opinion and i do appreciate the time and effort you took for reading my article.Your kind words warmed my heart and I assure you that i will live up to your expectations.Thanking you so much for being there for me always.🙏🙏🙏

      Delete
  4. Romba arumai annan..keep going

    ReplyDelete
    Replies
    1. பாசத்திற்குரிய தங்கைக்கு இதயப்பூர்வமான நன்றி!

      Delete
  5. வானவில் அழகு!
    உன் எழுத்தோ கருத்துச் செறிவு!!
    வானவில் கண்ணுக்கு விருந்து!
    உன் எழுத்தோ சிந்தனைக்கு விருந்து!!
    வானவில் அபூர்வம்!
    உந்தன் எழுத்தோ ஆ! பூர்வம்!!

    தொடரட்டும் உன் எழுத்துப் பணி!!!

    ReplyDelete
  6. கவிதாயினி ஜெயந்தியின் மனமார்ந்த வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி!

    ReplyDelete
  7. Dear Dr.L K no surprisingly another awsome creation, number 7 is all ways magical. Your writing adds more color and power to the number. Felt complete feel of video lecture. All your words were lively and virtual. I feel this content will help people to switch from Exist to celebration. Thankyou so much and wishing my best 7 letter relation.

    ReplyDelete
  8. Dear Dr.Padmanabhan,
    Certainly a 'wow' feedback'! Your thoughtfulness is a gift i always treasure.I am touched beyond words.All i can say is just Thank you🙏

    ReplyDelete
  9. Admire the creativity and utilization of knowledge at right space.The connectivity between paragraphs throws your power of knowledge. The script and the title is mesmerizing and shows that you are simply Superb. Congrats Sir.

    ReplyDelete
    Replies
    1. Your comment is a wonderful recognition for my article.It is inspiring,motivating and inducing me to write more.Thank you so much Devi...for your love and care...as always!

      Delete