Friday, 15 September 2017

மது எனும் திமிங்கலம்

2012 நவம்பர் மாதம் Facebookல் நண்பர்களின் Postஐ ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருந்த போது தான் திடீரென ஞாபகம் வந்தது...ஆஹா எதிர்வரும் டிசம்பர் மாதம் நண்பர் அமீருக்குப்(பெயர் மாற்றம் செய்திருக்கிறேன்) பிறந்த நாள் அல்லவா?-என்று.என்ன தேதியென்று மறந்து போனதால்...சரி அவரது FB பக்கத்துக்குச் சென்று பார்ப்போம் என விசிட் செய்த போது வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது.அமீரின் படத்தைப் Post செய்து கீழே RIP என்று யாரோ எழுதியிருந்தார்கள்.உடனே அவர் பேராசிரியராகப் பணிபுரியும்...மன்னிக்கவும்...பணிபுரிந்த கல்லூரியின் முதல்வருக்குப் போன் செய்து,”ஸார்,நான் துபாயிலிருந்து பேசுகிறேன்.அமீரின் நண்பர்.அவருக்கு என்னவாயிற்று?” என்று கேட்டேன்.”அவர் ஆகஸ்ட் மாதமே மஞ்சள்காமாலை நோயினால் இறந்து விட்டாரே” என்றார்.பின்னர் அமீரின் நெருக்கமான நண்பர்களைத் தேடிப்பிடித்து போன் செய்த போது தான் முழு விவரமும் தெரிய வந்தது.அமீருக்கு குடிப்பழக்கம் உண்டு.வாரத்திற்கு ஒன்றிரண்டு முறை குடிப்பார்.ஒரு நாள் அவருக்கு வயிறு தொடர்ந்து வலித்துக் கொண்டிருக்கவே மருத்துவரைச் சநதிக்கலாம் எனக் கிளம்பும் போது அவரது மனைவி வந்து மகள் பூப்படைந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லியிருக்கிறார்.அவ்வளவு தான்,அமீருக்கு வயிறு வலி மறந்தே போனது.சுற்றத்தாருக்கும்...நண்பர்களுக்கும் செய்தி சொல்வதிலும்,விழாவிற்கு ஏற்பாடு செய்வதிலும் பிஸியாகிப் போனார்.செய்தியறிந்து வந்த நண்பர்கள் party வேண்டும் என்று அவரிடம் கேட்டிருக்கின்றனர்.சந்தோஷ மிகுதியில் partyக்கு ஏற்பாடு செய்த அமீர் தன்னை மஞ்சள்காமாலை நோய் தாக்கியிருப்பதை அறியாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டுச் சுருண்டு விழுந்திருக்கிறார்.எங்கெங்கோ கொண்டு போய்-என்னென்னவோ வைத்தியம் செய்து பார்த்தும் பலனில்லாமல் இறந்து போய் விட்டார்.அவரை நம்பி அவரது வயதான தாயார்,பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருக்கும் மனைவி,ஒரு மகள்,இரண்டு வயதே நிரம்பிய ஒரு மகன் உள்ளனர்.அமீரை அடக்கம் செய்யத் தூக்கிய போது,”அப்பா,தூங்கிக்கிட்டிருக்காங்க,கீழே வைங்க”,எனத் தனது தந்தை இறந்து போனது கூடத் தெரியாமல் அவர் மகன் சொன்னதாகக் கேள்விப்பட்டதும்,என் கண்கள் குளமாகியது.மிகவும் கட்டுப்பாடு நிறைந்த அமீரின் இஸ்லாமியக் குடும்பம் இப்போது எங்கிருக்கிறது என அவருடன் கடைசியாகச் சேர்ந்து குடித்த ஒருவருக்கும் தெரியவில்லை.பிறகு யாராரிடமோ விசாரித்த போது எங்கோ நாகூர் பக்கம் செட்டிலாகி விட்டனர் என்பது மட்டும் தெரிந்தது.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம்,”திரையுலகில் உங்களின் நெருங்கிய நண்பர்கள் யார்?” என நிருபர் கேட்ட போது,”உயிரைக் கொடுக்கக்கூடிய அல்லது உயிரை எடுக்கக்கூடிய நண்பர்கள் எவரும் எனக்குத் திரையுலகில் கிடையாது.ஏனெனில் எனக்குக் குடிப்பழக்கம் கிடையாது.” என்று கூறினார்.
எப்படிப்பட்ட ஒரு பதில் பாருங்கள்! குடிநோயாளிகள் தங்களின் உயிர் நண்பர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அனைவரும் – குடிக்காக மட்டுமே – தானாகச் சேர்ந்த கூட்டம் என அறிவார்களா?தங்களின் மரணத்துக்குப் பிறகு அந்தக் கூட்டம் தங்கள் குடும்பம் எந்த நிலையில் உள்ளது எனத் தெரிந்து கொள்ளக்கூட விருப்பமில்லாமல் ஓடிப்போகும் எனப் புரிந்து கொள்வார்களா?அமீர் மட்டுமல்ல,என்னுடைய அற்புதமான நண்பர்களும்,நல்லெண்ணம் கொண்ட உறவினர்களும் கூட குடிப்பழக்கத்துக்கு இரையாகியிருக்கின்றனர்.குறிப்பாக என் உயிர்தோழன் கதிரவன் (இவன் பெயரும் வேறு) குடிநோயினால் மரணமடைந்ததை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.இனியும் முடியாது.பள்ளிப்பருவத்திலிருந்தே என்னுடன் போட்டி போட்டுப் படிப்பான்.பல திறமைகளை உள்ளடக்கியவன்.நன்றாகப் பேசுவான்.மிக இனிமையாகப் பாடுவான்.நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாகக் குடிக்க ஆரம்பித்து நாளடைவில் முழுநேரக் குடிநோயாளியானான்.நான் எவ்வளவோ அன்பாகவும்,கனிவாகவும்,கண்டிப்பாகவும் எடுத்துச் சொல்லியும் அவன் செவி சாய்க்கவில்லை. Deaddiction centre க்கு அழைத்துச் சென்றும் பயனில்லை.ஊரில் தெரிந்தவர் ஒருவர் விடாமல் கடன் வாங்கிக் குடித்து-சாலையோரங்களில் மயங்கிக் கிடந்து-மானமிழந்து-ஓர் நாள் தன் இளம் மனைவியையும்,பெண் குழந்தையையும் தவிக்க விட்டுப் போன கொடுமையை என்னவென்று சொல்வது?



குடிநோயாளிகளின் குடும்பம் எனும் நரகம்
’கள்ளுண்பவர் நஞ்சுண்பவரே’’ என்கிறார் திருவள்ளுவர்.இதற்காகக் ‘கள்ளுண்ணாமை’ என்ற தனி அதிகாரமே எழுதியிருக்கிறார்.மதுவின் கொடுமையை விளக்காத இலக்கியம் இல்லை.ஆனால் பழம்பெருமை பேசிக் கொண்டு முச்சந்தியில் கிடக்கும் குடிமகன்களைக் கடந்து போகிறோம்.எல்லா குடிகாரர்களுக்குமே ஒரு அசட்டு எண்ணம் இருக்கிறது.குடியும் போதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.தான் ஒருவன் குடிப்பதால் குடும்பம் சிதைந்து போய் விடாது என எண்ணுபவர்களை போதையானது மயக்கி வீழ்த்துகிறது.

அது குடும்பத்தின் –
·         மகிழ்ச்சியைச் சூறையாடுகிறது
·         நிம்மதிக்கு உலை வைக்கிறது
·         மனைவியைத் தனிமரமாக்குகிறது
·         குழந்தைகளை அநாதையாக்குகிறது

   குடிநோயாளிகளின் குடும்பத்தினர் படும் துன்பங்கள் சொல்லி மாளாதது.அவர்கள் வீட்டுப் பெண்கள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் நரகவாழ்க்கை மரணத்தை விடவும் கொடூரமானது.அதனால் தான் சாராயக்கடைகளை மூடச்சொல்லும் போராட்டங்களில் பெண்களே அதிகளவில் பங்கேற்கின்றனர்.பெரும்பான்மையான அன்றாடக் கூலித் தொழிலாளிகள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் சாராயக்கடையில் கொடுத்து விட்டு வெறுங்கையோடு வீடு வந்து மனைவியைக் கேவலமான வார்த்தைகளால் ஏசியும்,அடித்து நொறுக்கவும் செய்கிறார்கள்.குடியால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிக அதிகம்.விதவையான அவர்கள் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் பரிதாபத்திற்குரிய நிலைக்கு ஆளாகின்றனர்.எப்படியாவது என் புள்ளையைக் குடிக்காதவனாக வளர்த்து விட வேண்டும் என்பது தான் இக்குடும்பப் பெண்களுக்கு மிகப்பெரிய லட்சியமாக இருக்கிறது.என் பால்ய சிநேகிதன் ஒருவனின் மனைவி அவனுடைய குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார்.ஒன்றும் முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப் போய் அவரும் குடிக்கத் தொடங்கினார்.ஆக,குடி குடும்பப் பழக்கமாகிப் போனது.இருவருமே குடிக்கு அடிமையானதால் அவர்களது மாத பட்ஜெட்டில் சாராயமும் இடம் பிடிக்கத் தொடங்கி விட்டது.
 “குடி குடியைக் கெடுக்கும்” என்னும் தன்னுடைய புத்தகத்தில் குடியினால் – சமூக,குடும்ப,தனிப்பட்ட வாழ்வில் ஏற்படக்கூடிய சிக்கல்களை,பிரச்னைகளை,கொடுமைகளை விரிவாக அலசியிருக்கிறார் எழுத்தாளர் பாரதி தம்பி.குடிகாரக் கணவர்களின் வன்முறைகள் எல்லை மீறும் போது மனைவிகளின் மனங்களில் குறுவாள் ஒன்று எட்டிப் பார்க்கிறது.செயல்படுத்தப்படும் இடங்களில் அதற்குக் “கொலை” எனப் பெயர்.செயல்படுத்தப்படாத இடங்களில் அதற்குக் குடும்பம் எனப் பெயர்” என்கிறார்.

மரணத்தூதுவன் மதுவின் கேடுகளும்,கொடுமைகளும்
பண்டைத் தமிழர் வாழ்ந்த நிலங்கள் ஐந்திணைகளாக அவர் தம் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பகுக்கப்பட்டன.இன்றோ அவை ஐந்தையும் ஒன்றிணைத்து மதுவும்,மது சார்ந்த இடமும் தமிழகம் எனலாம்.இந்தியாவில் 75% ஆண்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் மது அருந்துகின்றனர்.குடிப்பவர்களில் வகைகள் உண்டு என்கிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.”எப்போதாவது அல்லது அவ்வப்போது பருகுவதை ஒரு ரசானுபவமாகச் செய்கிறவர்கள்.இரண்டாவது,தினமும் குடிக்கும் குடிகாரர்கள்.மூன்றாவது,குடிவெறியர்கள் அல்லது குடிநோயாளிகள்.பொதுமக்கள் பார்வையில் பட்டு அவர்களைக் கவலையும்,கோபமும்,வெறுப்பும்,அருவருப்பும்அடையச் செய்பவர்கள் இவர்கள்.குடிவெறிக்கும்,குடிநோய்க்கும் ஆளானவர்களை வைத்தியம் செய்து சீராக்கும் முயற்சியில் சமூகம் ஈடுபட வேண்டும்.தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடுபவர்களின் சிந்தனையை ஆட்கொண்டிருப்பவர்கள் இந்த மூன்றாவது வகையினர் தான்” என்பது அவரது கருத்தாகும்.என்னைப் பொறுத்தவரை மது குடிப்பது முதலில் சாதாரண பழக்கமாகத் தான் ஆரம்பிக்கும்.சில மாதங்களில் மூளையில் மது ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள் காரணமாக சாதாரண போதையைத் தருவதற்குக் கூட அதிக அளவில் குடிக்க நேரிடுகிறது.இதன் விளைவாகவே கொஞ்சமாகவே மது அருந்தும் குடிநோயாளிகள் சில வருடங்களில் மிதமிஞ்சிக் குடித்து மனநோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள்.
குடியின் கேடுகளுக்கு உதாரணங்களைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.தமிழ்நாட்டின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் குடிநோயாளிகள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.மேலும் மதுவின் கொடுமைகள் இவை தான் என விவரிக்க முடியாதபடி வரம்பைக் கடந்து விட்டன.குறிப்பாக சிறுவர்கள் பள்ளிச்சீருடையுடன் டாஸ்மாக் கடை வாசல்களில் பாட்டிலும் கையுமாக நிற்கின்றனர்.போதை தலைக்கேறி மயங்கி விழுந்து அவர்கள் புலம்பும் காட்சிகள் சகித்துக் கொள்ள முடியாதவை.ஒரு கல்வியாளராக நான் மிகவும் வருந்துவது இவ்வாறு மாணவர்கள் குடிப்பதைப் பற்றித்தான்.’வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி’ மாணவர்கள் மது குடிப்பதற்காக பள்ளி முடிந்ததும் தாங்கள் அமர்ந்து படித்த பெஞ்சை பல துண்டுகளாக உடைத்து எடுத்துச் சென்று மரக்கடையில் எடைக்குப் போட்டு மது வாங்கிக் குடித்தனர் என்பதைப் படித்து மிக்க வேதனையடைந்தேன்.இப்படிக் குடித்து விட்டு வரும் மாணவர்கள் மாணவிகளைச் சீண்டுகின்றனர்.ஆபாசமான சொற்களால் கமெண்ட் அடிக்கின்றனர்.ஆசிரியைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.தன் தலைமுறையையே அடுத்த படிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஓர் இளைஞன் போதையின் பள்ளத்தாக்கில் வீழ்ந்து மடிகிறான்.
பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கப்படும் மிகக் கொடிய விஷம் தான் மது.அகால மரணம்,கொலை,திருடு,விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன.ஞாபக சக்தியும்...சிந்தனை ஆற்றலும் சிதைந்து,புத்தியும்...நிதானமும் குலைந்து,மன ஒழுங்கையும்...அடக்கத்தையும் சீரழித்து விடுகிறது மதுபானம்.மதுவால் கல்லீரல்,கணையம்,இரைப்பை,இரத்தக்குழாய்கள்,சிறுநீரகம்,நரம்பு மண்டலம் இவற்றிற்கு பெரும்கேடு விளைவதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து போகிறது.மூளை,நுரையீரல்,எலும்பில் காசநோய் வரலாம்.உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும்.தசைகள் தளர்ச்சியடையும்.உடல்உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படும்.புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.மதுவுடன் சேர்த்துச் சாப்பிடும் உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.வயிறு தொடர்பான பிரச்னைகள் அதிகம் வரும்.வயிறு வீக்கம்,வலி, வயிற்றுப்புண் வரும்.மூளை வளர்ச்சி பாதிப்பதுடன் ரத்தக்கசிவும் ஏற்படும்.மனச்சிதைவு நோய் வரும்.குழப்பமான மனநிலை இருக்கும்.வார்த்தைகள் தெளிவின்றி பிறழும்.அனைத்துக்கும் மேலாக குடிவெறி குடிப்பவர்களின் உயிர்களை மட்டுமின்றி அவர்களின் நல்லியல்புகளையும் தூக்கித் தூர வீசுகிறது.குடிப்பதற்காக எதையும் செய்யலாம் என்னும் மனநிலையை குடிகாரர்களிடம் உருவாக்குகிறது.ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்:நீங்கள் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும்,குடிநோயாளியாக இருந்தால் அவ்வளவும் விழலுக்கு இறைத்த நீரே!


டாஸ்மாக்கும்,அரசியலும்
சமீபத்தில் என் WhatsApp க்கு வந்த ஒரு குட்டிக்கதை என்னைக் கலங்க வைத்தது.டாஸ்மாக்கில் ஒரு சிறுவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது ஒரு குடிகாரன் அவனை அழைத்து,’நீயெல்லாம் இங்க வராத,நீயும் என்னைப் போல பெரிய குடிகாரன் ஆயிடுவ’ என்று சொன்னான்.அதற்கு அச்சிறுவன்,’நீயும் இனிமே இங்க குடிக்க வராத,நாளைக்கு உன் பையனும் என்னைப் போல் அப்பாவ இழந்து இங்க வேலைக்கு வந்தாலும் வருவான்’ என்றான்
இன்றைய ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் மதுபோதை தாராளமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எனும் நிறுவனத்தைத் துவங்கி சேவை(!) செய்து வருகிறது.டாஸ்மாக் வருகையினால் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் “பெருமைகள்” ஏராளம்.எல்லா வயதினரும் குடிக்கக் கற்றுக் கொண்டனர்.குடிப்பவர் எண்ணிக்கையிலும்,குடிக்கும் அளவிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழகம்.குடித்துச் சாகிறவர்களின் எண்ணிக்கையும் இங்கு தான் அதிகம்.இந்தியாவிலேயே தற்கொலைகளில் இரண்டாம் இடம்.இளவயது மரணங்களில் முதல் இடம்.கணவனை இழந்த 30 வயதுக்குட்பட்ட பெண்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு.எந்த வீடும் எந்தத் தருணத்திலும் இழவு வீடாக மாறக்கூடிய அவலமான சூழல் நிலவுகிறது.சாலை விபத்துகளில் முதலிடம் வகிப்பதோடு அப்பாவிகளும் உயிர்சேதம் அடைகின்றனர்.இதனால் தேசிய-மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுபானக்கடைகளை இழுத்து மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவை மூடப்பட்டன.இந்தத் தீர்ப்பினால் சாலையோரங்களிலிருந்த கடைகள் அகற்றப்பட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு செல்லத் துவங்கின.இதனால் குடிப்பழக்கமுள்ள கணவன் மேலும் சபலம் அடைவானே,இருட்டிய பிறகு வெளியே போய் வருவதே சவாலாகி விடுமே எனப் பெண்கள் வெகுண்டெழுந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்துத் தெருவில் இறங்கிப் போராடத் துவங்கினர்.’எங்கள் ஊருக்கு மதுக்கடை வேண்டாம்’ என்று கிராம சபைகளின் மூலம் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.தங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் திறக்கப்படும் மதுக்கடைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது,மது பாட்டில்களைத் தெருவில் போட்டு உடைத்துப் போராட்டம் நடத்துவது என மதுவுக்கு எதிரான போர்க்களமாக தமிழகத்தை மாற்றினார்கள் பெண்கள்.இதைக் கண்ட நமது அரசு செய்த காரியம் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.தேசிய-மாநில நெடுஞ்சாலையை மாநகராட்சி/பேரூராட்சி/நகராட்சி சாலைகளாக அவசரமாக மாற்றி விட்டது.இதனால் எங்கெல்லாம் மதுக்கடைகளை மூடினார்களோ அங்கேயே கடைகளைத் திறப்பதற்குரிய தடைகள் நீங்கவே உடனடியாகக் கடைகள் திறக்கப்பட்டன.ஏதோ மக்களால் மது குடிக்காமல் வாழவே முடியாது என்பது போல் இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர்.சென்னையை மழை,வெள்ளம் மூழ்கடித்த போது நம் அரசு காட்டிய முனைப்பு நாம் அறியாததா?ஆக,மக்கள் நலனுக்காகவா இவர்கள் இவ்வளவையும் செய்கிறார்கள்?இல்லை தங்கள் நலனுக்காகத் தான் என்பதை பாமரனும் அறிவான்.ஆம்! டாஸ்மாக்கிற்கு சரக்கு சப்ளை செய்யும் தொழிற்சாலைகளில் முக்கியமானவை-தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டு கட்சிகளைப் பின்புலமாகக் கொண்டவை.காந்தி ‘மது ஒழிப்பு’ அறிவிப்பை வெளியிட்ட போது பெரியார் தன் தோட்டத்திலிருந்த 1000 தென்னை மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தினார்.பெரியாரைப் பின்பற்றி அண்ணா தன் ஆட்சியில் மதுவிலக்கை அமல்படுத்தினார்.ஆனால் பெரியார்,அண்ணாவைப் பின்பற்றும் திராவிடக் கட்சிகள் மது விற்பனை செய்வதோடு அதை தயாரிக்கும் ஆலைகளையும் நடத்துகின்றன.இது தான் பெரியாரையும்,அண்ணாவையும் இவர்கள் மதிக்கும் லட்சணம்.நாட்டிலேயே தமிழகத்தில் தான்  மாநில அரசே மது விற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது.கல்வியையும்,மருத்துவத்தையும் தனியார் மயமாக்கி விட்டு சாராயத்தை விற்க டாஸ்மாக் என்ற அரசு நிறுவனம் இயங்குவது வெட்கக்கேடு.மதுவிலக்குத் துறையால் டாஸ்மாக் நிறுவனம் நிர்வகிக்கப்படுவதை எண்ணி அழுவதா,சிரிப்பதா எனத் தெரியவில்லை.மேலும் மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது.தமிழ்நாட்டில் 6000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 11 மதுபான ஆலைகள் சாராயம் சப்ளை செய்கின்றன.இங்கு உற்பத்தி செய்யப்படும் சாராயத்தின் தரம் அறிய முறையான அமைப்பு இல்லை.முன்னெப்போதும் இல்லாத வகையில் டாஸ்மாக்கை அடித்துத் துரத்துவதில் வெடித்தது நம் பெண்களின் வீரம்.அவர்களைப் பாதுகாக்க வேண்டிய நம் அரசோ டாஸ்மாக்கை அகற்றுவதை விடுத்து எதிர்த்துப் போராடும் பெண்களைத் துரத்துகிறது.தமிழக மக்களின் நலனை விட டாஸ்மாக்கே முக்கியம் என்று ஓர் அரசு கருதுமானால் அது மக்களுக்கான அரசா?

குடியின் பிடியிலிருந்து மீள...
”மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்” என்றார் வள்ளலார்.ஆனால் இப்போதோ “மதுவான பேய் பிடியாது இருக்க வேண்டும்” என்று திருத்தி எழுத வேண்டியிருக்கிறது.உடல்வலியைப் போக்க, நண்பர்களின் வற்புறுத்ததுலுக்காக,கவலையை மறக்க எனக் குடிப்பதற்குப் பல்வேறு சாக்குப்போக்கு சொல்பவர்கள் நாளடைவில் குடியின் பிடியிலிருந்து மீள மடியாமல் திண்டாடுகிறார்கள்.
எப்படி மீள்வது?
  • குடியை நிறுத்தப் போவதை உங்கள் குடும்பத்தினரிடமும்,நண்பர்களிடமும் தெரிவியுங்கள்.இதன் மூலம் உங்கள் வெற்றியை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
  •  குடிப்பதைத் தூண்டும் சூழ்நிலைகளிலும்,மனநிலைகளிலும் கவனமாக இருத்தல்.
  •  குடிப்பழக்கம் உள்ள நண்பர்களை அறவே தவிர்த்து குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.
  • சீரான உடற்பயிற்சி,ஆரோக்கியமான உணவு,நல்ல தூக்கம் அவசியம்
  •  இன்றைக்கு ஒரு நாள் மட்டும் தானே என்று சலனப்பட்டால் இறுதியில் பழைய நிலைமைக்குச் செல்ல நேரிடும.
  • மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நலம்.

“வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான சந்தோஷங்களை இழந்துள்ளோம் என்பதை இப்போது தான் உணர்கிறோம்” என்பது தான் குடிபோதையிலிருந்து மீண்டவர்களில் பெரும்பாலோர் சொல்லும் கருத்து.காலம் கடந்த பின் வருந்துவதை விட,விழிப்புடன் போதையை எதிர்த்துச் செயல்பட்டால் தனிநபருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும்,வீட்டுக்கும் நல்வாழ்வு தான். 

தற்போது ‘நீலத்திமிங்கல சவால்’ என்ற ஆபத்தான இணையத்தள விளையாட்டில் இருந்து நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.அவ்வாறே போர்க்கால நடவடிக்கையின் மூலம் மது எனும் ‘செந்நிறத் திமிங்கலத்தின்’ பிடியிலிருந்து நம் சந்ததியினரைக் காப்பாற்றுவோம்.

10 comments:

  1. Excellent article. Please send this to all weekly magazines. I am sure they will publish this.

    ReplyDelete
  2. Thank you Senthil.Will surely get it published in a tamil magazine.

    ReplyDelete
  3. As usual superb piece of writing against alcoholism.hats off to u Karthi Sir

    ReplyDelete
  4. Good job sir, Best wishes for more articles💐

    ReplyDelete
  5. இந்தக் கட்டுரை தன்னம்பிக்கைத் தருவது மட்டுமல்லாமல் தலைமுறையையே... காப்பாற்றும் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.
    தஞ்சை ரவிராஜ்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனத்தைப் படிக்கும் போது இக்கட்டுரை அதன் கடமையைச் செய்யும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.மிக்க நன்றி.

      Delete