1.டாக்டர் A.P.J
அப்துல் கலாம்
புத்தகம் வாசித்தல் ஒருவருக்கு எத்தகைய நல்வாய்ப்பை ஏற்படுத்தித்
தரும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
எனக்கு இந்தியாவின் பெருமைக்குரிய விஞ்ஞானியாகவும்,ஜனாதிபதியாகவும் விளங்கிய மாமனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களையே சந்திக்கும்
வாய்ப்பைப் பெற்றுத் தந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்! நான் 2013 ஆம் ஆண்டு துபாய்
மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு வருடமும் ஷார்ஜாவில் அரசாங்கமே (Government of Sharjah – Department of culture and Information) நடத்தும்
‘புத்தகத்திருவிழா’ நவம்பர்,டிசம்பர் மாதங்களில் வெகு விமரிசையாக நடைபெறும்.அப்போது
உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஐந்து பேரை அழைப்பார்கள்.ஜெஃப்ரி ஆர்ச்சர், அருந்ததிராய், ஷிவ்கேரா,சேதன் பகத்,கமல்ஹாசன்,மஞ்சு வாரியர் என எத்தனையோ எழுத்தாளர்களும்,நட்சத்திரங்களும்
சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். 2013 ஆம் ஆண்டு அழைக்கப்பட்டிருந்த
ஐந்து பேரில் டாக்டர் அப்துல்கலாமும் ஒருவர்.அவர் சிறப்பு விருந்தினராக
வந்து “Birth of an author in you” என்னும் தலைப்பில் கருத்தரங்கு
நடத்த ஒப்புக்கொண்டார்.உடனே UAEல் உள்ள
முக்கியமான பள்ளிகளுக்கும்,கல்லூரிகளுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்கள்.அதாவது ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலுமிருந்தும்
தலா பத்து மாணவர்களை ஒரு ஆசிரியர் அழைத்து வரலாமென.மேலாண்மைத்
துறையைச் சேர்ந்த ஒரு பேராசிரியருடன் பத்து மாணவர்களை அனுப்ப மணிப்பால் பல்கலைக்கழகம்
முடிவு செய்தது.மாணவ மாணவிகள் மட்டுமின்றி பேராசிரியர்களும் போட்டி
போட்டனர்.பொதுவாக இது போன்ற விஷயங்களுக்கு நான் போட்டி போட மாட்டேன்.ஆனால் எங்கள் HOD Dr.சாகுல் ஹமீது அவர்கள்,”எந்தப் பேராசிரியர் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவரோ அவர் புத்தகத் திருவிழாவிற்குச்
செல்வதே உசிதம்.அப்படிப்பட்டவர் நம் மேலாண்மைத் துறையில் யார்?” என்று கேட்டார்.அப்போது நான் அவ்விடத்தில் இல்லையென்றாலும் அனைத்துப் பேராசிரியர்களுமே
ஒருமித்த குரலுடன் என் பெயரைக் கூறியிருக்கின்றனர். உடனே
HOD என்னைக் கூப்பிட்டு வாய்ப்பை வழங்கினார்.அப்போது
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.நான் அவருக்கு நன்றி சொல்லி
விட்டு பத்து மாணவ,மாணவிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு குறிப்பிட்ட
நாளில் (07.11.2013) காலை பத்து மணிக்கு Sharjah book
fair சென்றடைந்தேன்.
ஒரு சிறிய அரங்கில்
200 மாணாக்கர்களும்,ஆசிரியர்களும் குழுமியிருந்தோம்.டாக்டர் அப்துல்கலாம் மேடை ஏறியவுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினோம்.அவரும் வணக்கம் தெரிவித்து விட்டு கருத்தரங்கைத் தொடங்கினார்.நம்முள் இருக்கும் எழுத்தாளனை வெளிக்கொணர எப்படிப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்ள
வேண்டுமென்று விளக்கினார்.புத்தகம் வாசித்தலால் வாழ்க்கையில்
தான் பெற்ற வெற்றியையும்,புத்தகம் வாசிக்க வேண்டிய அவசியத்தையும்
வலியுறுத்திப் பேசினார்.மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலேயே
ஒரு சிறிய நூலகம் அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.கேட்டதுடன்
நில்லாமல் செய்வார்களா என்று மாணவர்களையே கேட்டார்.மாணவர்களும்
நிச்சயமாக நூலகம் அமைப்போம் என உத்தரவாதம் தந்தனர்.கேள்வி-பதில் நேரத்தில் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.என்னுடைய சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தது என் வாழ்வின் சந்தோஷத் தருணங்களில்
ஒன்று.பிறகு அனைத்து மாணவ,மாணவிகளும் வரிசையில் நின்று அப்துல்கலாமுடன் பேசி மகிழ்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.இந்திய தேசம் எத்தனையோ குடியரசுத்தலைவர்களைப் பார்த்திருக்கிறது.கல்விமேதைகள்,விடுதலைப்போராட்ட வீரர்கள்,அரசியல் நிபுணர்கள் இப்படிப் பல சிறப்புக்குரியவர்கள் குடியரசுத்தலைவர் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள்.இருப்பினும் காலத்தின் கவுரவம் அப்துல்கலாம் அவர்களுக்கு மட்டும் நிலைக்க என்ன காரணம் என்பதை அன்று அவரை நேரில் கண்டு அறிந்து கொண்டேன்.அவருடைய திறமையை விட,ஆற்றலை விட,புகழை விட அவ்வளவு உயரத்திற்குச் சென்ற பிறகும் அவர் காட்டிய பணிவு என்னை அதிசயிக்கச் செய்தது.நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.Book fair ல் அவர் எழுதிய “Inspiring
Thoughts” புத்தகம் வாங்கினேன்.
இந்த விழா முடிந்து சில காலங்களிலேயே டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இம்மண்ணை
விட்டு மறைந்தார்.ஆனால் அந்த உன்னத மனிதரைச் சந்தித்த நாள் மட்டும்
என் நினைவை விட்டு என்றும் மறையாது.
2.கவிப்பேரரசு வைரமுத்து
தமிழ்மொழி மீது நான் கொண்டுள்ள மோகம் அளப்பரியது என்றாலும் அது
தீவிரமடைந்தது கல்கி மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரின் நூல்களை வாசிக்கத் துவங்கிய
பிறகு தான்.இது வரை நான்,இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல,இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
நூல்களை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வாசிக்கத் துவங்கிய பொழுதுகளில் எப்படியாவது கவிஞரைச் சந்தித்துப்
பேச வேண்டுமென்ற விருப்பம் என்னுள் எழுந்தது.காலம் ஓடிக்கொண்டேயிருந்தது
கவிஞரைச் சந்திக்க ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.எப்போதுமே வாழ்க்கை நம் மிகு விருப்பங்களை
ஒத்தி வைப்பதை,தள்ளிப்போட்டுத் தவிக்க விடுவதை அதன் விளையாட்டுகளில்
ஒன்றாக வைத்திருக்கிறது.2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தஞ்சை முரசு
புத்தக நிலையத்திற்கு கவிஞர் வருகை தந்த போது அவருடைய “கவிராஜன்
கதை” நூலில் ஆட்டோகிராஃப் வாங்கினேன்.பேச
வாய்ப்புக் கிட்டவில்லை அதன் பின் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் ஒரு முறையும்,
குடியாத்தத்தில் ஒரு முறையும் அவரது மேடைப் பேச்சைக் கேட்டேன்.அவ்வளவு
தான்.நெருங்க முடியவில்லை.பிறகு காலவெள்ளம் என்னை துபாய் அடித்துச்
சென்றது.2013 ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி
வைரமுத்து,நடிகர் விவேக்,பாடகர் ஸ்ரீநிவாஸ்
மற்றும் பலர் பங்கேற்ற கவியரங்கம் மற்றும் இசைநிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு
செய்திருந்தது.எப்படியும் இந்தமுறை சந்தித்து விட வேண்டும் எனக்
கங்கணம் கட்டிக் கொண்டேன்.தஞ்சையைச் சேர்ந்த என் நண்பர் டாக்டர்
பாஸ்கரன் வைரமுத்து அவர்களின் இனிய நண்பர்.அவரைத் தொடர்பு கொண்டு
கவிஞரைச் சந்திக்க வழி கேட்டேன்.அவர் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி
இறுதியாக கவிஞருடன் துபாய் வந்திருந்த அவருடைய உதவியாளரின் அலைபேசி எண்ணைத் தெரிந்து
கொண்டு பேசினேன்.அவரும்,உடனே
Continental hotel வாருங்கள் சந்திக்கலாம் என்றார்.அது நிகழ்ச்சி (நான் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்)
முடிந்த மறுநாள்.அன்று இந்தியா கிளம்ப தயாராகிக்
கொண்டிருப்பார்.ஆகவே என் காரை எடுத்துக் கொண்டு
Dubai- Deira வில் உள்ள Continental hotel க்கு
விரைந்தேன்.கிளம்புவதற்கு முன் கவிஞருக்குப் பரிசளிப்பதற்காக
“ஈ.வே.ராமசாமி என்கின்ற நான்”
என்னும் நூலையும்,ஆட்டோகிஃராப் வாங்குவதற்காக “Think and
grow rich” என்கிற ஆங்கில நூலையும் எடுத்துக் கொண்டேன்.வெளிநாடு வந்திருப்பதால் தனியாக அவருடன் உரையாடலாம் என்னும் கனவில் ஹோட்டலுக்குள்
நுழைந்த எனக்குப் பகீரென்றது.ஒரு பெருங்கூட்டமே அவரைச் சந்திப்பதற்காகக்
காத்துக் கொண்டிருந்தது.நான் உதவியாளரைத் தேடிக் கண்டுபிடித்தேன்.உதவியாளரோ எல்லோருடனும் சேர்ந்து நீங்களும் சந்திக்கலாம் என்றார்.எனக்குக் கோபம் வந்துவிட்டது.’இந்தியப் பிரதமரே என்னைச்
சந்திக்க விரும்பினாலும் நான் மறுத்து விடுவேன்.நான் கவிஞரின்
தீவிர ரசிகன்.முடிந்தால் நான் தனியாகச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்.இல்லையென்றால்
கிளம்புகிறேன்’ என்றேன்.அவர் என்ன நினைத்தாரோ தெரியாது.என்னை அழைத்துச் சென்று ஹோட்டலிலேயே உள்ள உணவகத்தில் அமரச் செய்து,’கவிஞர் இப்போது வருவார்.நீங்கள் அவருடன் பேசிக்கொண்டே
சாப்பிடலாம்’ என்றார். My happiness knew no bounds.
சற்று நேரத்திற்கெல்லாம் – இந்தியாவிலேயே ஏழு முறை தேசிய விருது வென்ற ஒரே
கவிஞர் - தனக்கே உரித்தான வெள்ளை நிற குர்தாவில் கம்பீரத்துடன் வந்தார்.என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு
நானும் கவிஞரும் மட்டுமே உரையாடினோம்,எப்படியும் அவரை ஈர்த்து
விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது நூல்களில் மிகவும் பிடித்தமான வரிகளைக் கூறிக்கொண்டே
வந்தேன்.அவரும் உடனுக்குடன் நூலின் பெயரையும்,வரிகளுக்கான சூழல் அமைந்ததைப் பற்றியோ அல்லது விளக்கத்தையோ சொன்னார்.உதாரணமாக,மதுரகவி பாஸ்கரதாஸ்,பாபநாசம் சிவன் தொடங்கி
வாலி வரை ஒவ்வொரு பாடலாசிரியரின் தனித்துவத்தை அவர் எழுதியிருந்ததைப் பாராட்டிக் கூறினேன்.
அது “ஆயிரம் பாடல்கள்” நூலின்
முன்னுரையில் ஒவ்வொரு பாடலாசிரியரைப் பற்றியும் தான் கணித்ததை எழுதியதாகச் சொன்னார்.
இறுதியாக ”இதுவரை நான்” நூலில்
அவரெழுதிய காதல் கவிதையைச் சொன்ன போது என்னை நிமிர்ந்து பார்த்தார்.அப்போது அருகில் வந்த உதவியாளரிடம் “பாருங்கள் எனக்கு,
இப்படியும் ஒரு ரசிகர்” என வியந்து கூறினார்.”Contemporary பாடலாசிரியர்களில் நீங்கள் தான் சார் நம்பர் 1” என்றவுடன்
சிரித்துக் கொண்டே என்னைத் தோளோடு சேர்த்து அணைத்தார். ”எப்போது
நீங்கள் விரும்பினாலும் என் இலக்கிய மன்றத்தில் சேர்ந்து மேடையில் பேசலாம்” என்றார்.சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்தேன்.நான் கொண்டு சென்றிருந்த
புத்தகத்தில் ஒன்றை அவருக்குப் பரிசளித்து விட்டு மற்றொன்றில் ஆட்டோகிராஃப் வாங்கிப்
புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றேன்.இது நடந்து மூன்றாண்டுகளுக்குப்
பிறகு தஞ்சையில் டாகடர்.பாஸ்கரனின் மருத்துவமனைத் திறப்பு விழாவிற்கு
வருகை தந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் என்னைப் பார்த்தவுடன், எப்படி இருக்கிறீர்கள்
என வாஞ்சையுடன் கை குலுக்கினார்.அவர் என்னை மறக்கவில்லை,அவர் நினைவில் நான் இருக்கிறேன் என்கிற என் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?
3.வித்தகக்கவிஞர் பா.விஜய்
துபாய் வந்த புதிதில் –
என்னுடைய போராட்டமான அந்தக் காலகட்டத்தில்-ஆட்டோகிராஃப் திரைப்படம்
வெளியாகியது.அந்தப் படப் பாடலான “ஒவ்வொரு
பூக்களுமே” என்னும் தன்னம்பிக்கைப்
பாடலை இரவு தூங்கும் முன் Walkman ல் கேட்டு விட்டுத் தான் தூங்குவேன்.அப்பாடலை எழுதி தேசிய விருதினை வென்ற “வித்தகக்கவிஞர்”
பா.விஜய் அவர்களே என் விருந்தினராகத் துபாய் வருவார் என நான்
அப்போது நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன்.ஒரு பொது நண்பர்
மூலம் என்னைத் தொடர்பு கொண்ட பா.விஜய் அவர்கள் தான் குடும்பத்தினருடன்
துபாய் வருவதாகவும்,தானும்,தன் குடும்பத்தினரும்
தங்குவதற்கும்,சுற்றிப் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்ய முடியுமா?
எனக் கேட்டார்.கண்டிப்பாக செய்வதாக வாக்களித்ததுடன்,ஒரு நாள் என் வீட்டிற்கும் வர வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.துபாயின் புகழ்பெற்ற ஹோட்டலான அட்லாண்டிஸில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச்
செய்தேன்.23.09.12 அன்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் துபாய் வந்த பா.விஜய் மற்றும் குடும்பத்தினரை வரவேற்க விமானநிலையத்திற்குச்(Terminal-3)சென்றேன்.பா.விஜய்,அவரது அம்மா,மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கும் பூங்கொத்து
கொடுத்து வரவேற்றேன்.பா.விஜய் தன் குடும்பத்தினரிடம்
“என்னை நேரில் ஒரு தடவை கூடச் சந்திக்காமல் ஒரு பெருந்தொகையைக் கொடுத்து
தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டுப் பணத்தைப் பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன
கார்த்திக் இவர் தான்” என அறிமுகப்படுத்தினார்.”உங்க அப்பா வரலையா
சார்” என்று கேட்டேன்.”வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை” என்றார்.அனைவரையும் காரில் ஏற்றிக்கொண்டு, “முதலில் எங்க போகலாம்” என்றேன்.”சரவணபவன் போங்கள், சாப்பிடலாம்” என்றார்.”துபாய் வந்தும்
சரவணபவன் தானா?” என்றவுடன்,”ஆமாம் என்னுடைய “favourite உணவகம்” என்றார்
சிரித்தபடியே.அன்று ஓய்வெடுத்து விட்டு மறுநாள் முதல் சுற்றிப்
பார்க்கத் துவங்கலாம் எனத் திட்டம்.ஆகவே உணவருந்தியவுடன் ஹோட்டலில்
drop செய்தேன்.
மறுநாள் சீக்கிரமே ஹோட்டலுக்குச்
சென்றேன்.பா.விஜய்யை impress செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில்
அவர் பாடல்களாக MP3ல்
download செய்திருந்தேன்.காரில் ஏறியவுடன்
MP3 ஐ ஆன் செய்வதற்குப் பதிலாகத் தவறுதலாக FM ஐ
ஆன் செய்து விட்டேன்.அப்போது “தெனாலி”
படப் பாடல் “சுவாசமே” ஒலிபரப்பாகிக்
கொண்டிருந்தது. உடனே MP3க்கு மாற்றினேன்.”அதுவும் நம்ம பாட்டு தான்” என்றார்.என்ன ஒரு
Coincidence என வியந்தோம்.
உலகப் புகழ் பெற்ற துபாய் மால்,உலகின் உயரமான கட்டிடமான
புர்ஜ் கலிஃபா,பாலைவன சவாரி என அடுத்த மூன்று நாட்களுக்கும் துபாயில்
தவறவிடக் கூடாத அனைத்து சைட் சீயிங் ஸ்பாட்டுகளுக்கும் அழைத்துச் சென்றேன்.கலர் ஃபுல் ஸ்கை ஸ்க்ராப்பர்களுடன்,மாடர்னிட்டியையும்-அரேபிய மணத்தையும் காக்டெயிலாகத் தந்து மயக்கிப் பார்க்கும் ஹைடெக் சிட்டியான
துபாய் பா.விஜய் அவர்களையும் மயக்கியதில் வியப்பேதுமில்லை.
நான்காம் நாள் குடும்பத்தினருடன் என் வீட்டிற்கு வருகை தந்தார் பா.விஜய்.அவருடைய இளைய மகன் “விஷ்ணா”வுக்கு என் வீடு மிகவும் பிடித்துப் போய் விட்டது “நாம்
இங்கேயே இருக்கலாம்,ஹோட்டலுக்கெல்லாம் போக வேண்டாம்” என்று சொன்னானே பார்க்கலாம்.தலைமகன் விஷ்வா தந்தையின் வழியில் புகழ் பெறுவான் என அவன் ஒரு நீண்ட கவிதையைச்
சொன்ன போது தெரிந்தது.பா.விஜய்யிடம் ஆட்டோகிராஃப்
வாங்குவதற்காக இந்தியாவிலிருந்து தருவித்திருந்த அவருடைய புத்தகங்கள் “நண்பன் நண்பி” மற்றும் “செய்”
ஆகிய இரண்டையும் நீட்டினேன்.”நண்பன் நண்பி”யில்
”உங்கள் நட்பு என்னுடைய பாக்கியம்” என்றும்
“செய்’யில் “செய்வோம் புது
வாழ்வை புது கனவால்” என்றும் எழுதி ஆட்டோகிராஃப் போட்டு
27.9.12 என்று தேதியையும் குறிப்பிட்டார்.இறுதி
நாளன்று Shopping செய்ய வேண்டுமென்று அவர் விரும்பியதால்
“Dragon Mart” அழைத்துச் சென்றேன்.அவரும்,அவர் குடும்பத்தினரும் வாங்கிக் குவித்த பொருட்களைக் கார் கொள்ளா அளவுக்குப்
போட்டு அடைத்துக் கொண்டு புறப்பட்டோம்.போலீஸிடம் மாட்டிக் கொண்டு
விடுவோமோ என் அஞ்சுமளவுக்கு சில பொருட்கள் காரின் வெளியே கூட நீட்டிக் கொண்டிருந்தது.எப்படியோ ஒரு வழியாகச் சமாளித்து ஹோட்டலுக்குக் கொண்டு வந்து சேர்த்தேன்.பா.விஜய் அவர்களுக்கு Hello 89.5 FMல் இருந்து அழைப்பு வரவே நாங்கள் இருவரும் சென்றோம்.அங்கு
RJ ஹாரி கேட்ட கேள்விகளுக்கும்,நேயர்களின் கேள்விகளுக்கும் கவித்துவமான தமிழில் அட்டகாசமாக பதிலளித்தார்.துபாய் பயணம் இனிதே அமைய நான் உதவி செய்ததாகவும் குறிப்பிட்டார்.
பயணப்பட வேண்டிய நேரம் வந்ததும்,அனைவரையும் விமான நிலையத்தில்
drop செய்தேன்.இந்த ஐந்து நாட்களில் அனைவரும் நன்கு
பழகிவிட்டதால் பிரிவு எனக்கு மட்டுமின்றி அவர்களுக்கும் கஷ்டமாக இருந்தது.பிரியா விடை பெற்றுக் கிளம்பினர்.
விடுமுறையில் நான் இந்தியா வந்த போது, வீட்டிற்குக் கூப்பிட்டு
விருந்தளித்து,புத்தாடைகள் வழங்கி,அவருடைய
நூல்களான “உடைந்த நிலாக்கள்”,”நம்பிக்கையுடன்”,”மஞ்சள் பறவை”, எனப் பத்து நூல்களைப் பரிசளித்தார்.உடைந்த நிலாக்களில் “என் இல்ல நணபர் கார்த்திக் அவர்களுக்கு”
என எழுதி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்.நான்
சந்தித்த பிரபலங்களிலேயே என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர் பா.விஜய் தான்.அன்பே உருவான பெற்றோர்,அருமையான மனைவி,மணியான குழந்தைகள் என அற்புதமான குடும்பம்
அவருக்கு.கவிஞர் வாலி தன் “கலை உலக வாரிசு”
என பா.விஜய் அவர்களைத் தான் அறிவித்தார்.அன்பான,பண்பான,கனிவான உள்ளம் படைத்த
பா.விஜய் ஒரு பாடலாசிரியராகத் தன் முத்திரையைப் பதித்தது மட்டுமின்றி
தற்போது ஒரு திறமையுள்ள நடிகராகவும் தடம் பதிக்கத் துவங்கியுள்ளார்.அவர் மேலும் பல உயரங்களைத் தொடவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
4.P.B.ஸ்ரீநிவாஸ்
“காலங்களில் அவள் வசந்தம்”
“கண்ணாலே பேசி பேசி கொல்லாதே”
“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்”
“இந்த மன்றத்தில் ஓடி வரும்”
"மயக்கமா கலக்கமா"
"மயக்கமா கலக்கமா"
எனக் காலத்தை வென்ற அற்புதமான பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? அப்பாடல்களைப் பாடிய மயக்கும்
குரலுக்குச் சொந்தக்காரரான திரு.P.B ஸ்ரீநிவாஸ் அவர்களும் நான்
சந்தித்த பிரபலங்களில் ஒருவர்.என்னை மிகவும் கவர்ந்த ஆண் பாடகர்கள்
இருவர்.ஒருவர் S.P.B மற்றொருவர்
P.B.S. எழுத்துக்கள் கூட ஒரே மாதிரி இருக்கிறதே என வியப்பதுண்டு.1999 ஆம் ஆண்டு நான்,எனது ஆருயிர் நண்பன் கரிகாலன்,இன்னொரு நண்பன் தில்லை நடேசன் மூவரும் சென்னை உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்
ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தோம். அதன்படி நாங்கள் மூவரும்
சரியாக ஆறு மணிக்குச் சந்தித்தோம்.இருவருமே என்னுடன் தஞ்சாவூர்
தூய பேதுரு மேல்நிலைப்
பள்ளியில் பயின்றவர்கள்.கரிகாலன் ஒரு இடத்தில் இருந்தால் அந்த
இடமே களை கட்டும்.பாட்டும்,பேச்சும்,கூத்தும்,கும்மாளமுமாக இருக்கும், நாங்கள் இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தில்லைநடேசனைச் சந்தித்ததால் பேசுவதற்கு
நிறைய விஷயங்கள் இருந்தது.சுவாரஸ்யமாக நேரம் போவது தெரியாமல்
பேசிக் கொண்டிருந்தோம்.அப்போது நாங்கள் அமர்ந்திருக்கும் டேபிளுக்குப்
பக்கத்து டேபிளில் ஒரு மனிதர் வந்து அமர்ந்தார்.அவரை எங்கேயோ
பார்த்தது போலிருக்கவே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.குல்லா
அணிந்திருந்தார்.தன் சட்டைப் பாக்கெட்டில் ஏழெட்டு பேனாக்களை
வைத்திருந்தார்.கையில் வைத்திருந்த வெள்ளைத் தாள்களில் ஒன்றினை
எடுத்து ஏதோ எழுத ஆரம்பித்தார்.டக்கென்று அடையாளம் தெரிந்தது.ஆஹா! இவர் நம் அபிமானத்திற்குரிய பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் அல்லவா? என வியந்து-உடனே என் நண்பர்களிடம் தெரிவித்தேன்.அவர்களும் பார்த்து
விட்டு,ஆமாம் P.B ஸ்ரீநிவாஸே தான் என்றனர்.அவருடன் எப்படியாவது பேச வேண்டும் என்கிற என் விருப்பத்தைச் சொன்னேன் அவர்களுக்கும்
ஆசை தான்.இருப்பினும் மூவருக்கும் சற்றுத் தயக்கம். ”உனக்கு வேண்டுமானால் P.B.ஸ்ரீநிவாஸைப் பிடிக்கலாம்.ஆனால் பழைய பாடகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் டி.எம்.எஸ் தான் என்றான் தில்லை நடேசன்.”டேய்! நம்ம விவாதத்தை அப்புறம் வைத்துக் கொள்ளலாம்.முதலில் அவரிடம் பேச வழி சொல்”என்றேன்.வழி தெரியாமல் அவர்களும் கையை பிசைந்து கொண்டிருந்தனர்.சர்வரிடம் பேசிய போது,”அவர் தினமும் சாய்ந்தரம் வருவார்.நிதானமாக காபி சாப்பிட்டு விட்டு ஏதோ எழுதிக் கொண்டிருப்பார்.கிட்டத்தட்ட இரண்டு
மணி நேரம் இங்கு தான் இருப்பார்” என்று கூறினார்.நேரம் போய்க்
கொண்டேயிருந்தது.சரி,இனியும் தாமதித்தால்
அவரிடம் பேசும் வாய்ப்பை இழந்து விடுவோம் என ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
அவர் எதிரே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தேன்.
அவர் என்னை
ஏறிட்டுப் பார்த்தார்.”சார்,நான் உங்கள்
பரம ரசிகன்” என்றேன்,”அப்படியா,ரொம்ப சந்தோஷம்.நீங்க யார்? என்ன பண்றீங்க?” என்று கேட்டார்.நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.உடனே என் நண்பர்களும்
ஓடி வந்து அருகிலிருந்த இருக்கைகளில் அமர்ந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.”உங்கள் பாடல்கள் அனைத்துமே அருமை. கேட்க ஏகாந்தமாக இருக்கும்” என்றேன்.”எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள் ஆனால்
வாய்ப்பு தான் தர மறுக்கிறார்கள்” என்றார்.எனக்குத் “திக்”கென்றது.எத்தனை காலமானாலும் ஒரு கலைஞனுக்குள்ள தாகம் தீர்வதேயில்லை என்பதைப் புரிந்து
கொண்டேன்.அவரிடம் பெற்ற உந்துதலின் விளைவாகவே, என் மாணவர்களிடம்
பேசுகையில் வாழ்க்கையில் ஓய்வென்பதே கிடையாது - “Death is the retirement” என்பேன்.வருத்தப்பட்டுப் பேசிய அந்தக் கலைஞனைத் திசைத்
திருப்ப,”சமீபத்தில் நான் பார்த்த ‘காலமெல்லாம் காதல் வாழ்க’
என்னும் திரைப்படத்தில் நீங்கள் நடித்திருந்தீர்களே” எனக் கேட்டேன்.ஆமாமாம்,டைரக்டர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு காட்சியில் மட்டும் நடித்தேன்
எனக் கூறினார்.”என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என நான் வினவியதற்கு,
“பாடுவதைத் தவிர கவிதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால்
தினமும் மாலை வேளையில் கவிதை எழுத இங்கு வந்து விடுவேன்”என்று
தெரிவித்தார்.நாங்கள் வணக்கம் தெரிவித்து,ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு விடை கொடுத்தோம்.அந்நாளில்
அலைபேசி பிரபலமாகியிருக்கவில்லை என்பதால் அவருடன் செல்ஃபி எடுக்க முடியாமல் போய்விட்டதே
என்ற வருத்தம் இப்போது மேலோங்குகிறது.தான் எழுதிய கவிதைகளைத்
தொகுத்து நூலாக P.B.ஸ்ரீநிவாஸ் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.
வாழ்க்கையில் என்ன பிரச்னை வாட்டி வதைத்தாலும், P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய “மயக்கமா,கலக்கமா” பாடலைக் கேட்டுப் பாருங்கள்.நம்பிக்கை
ஊற்றுப் பெருக்கெடுக்கும்.அவர் மறைந்து காலங்கள் பல கடந்தாலும் அவருடைய பாடல்களின்
மூலம் என்றென்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.
5.நடிகர் பார்த்திபன்
கமல்ஹாசனுக்குப் பிறகு சிறந்த நடிப்பாற்றலும்,அறிவாற்றலும் ஒருங்கே பெற்றவர்
நடிகர் பார்த்திபன்.தேசிய விருதுகளை வென்ற ‘புதிய பாதை’,’ஹவுஸ்புல்’ போன்ற திரைப்படங்களின் மூலம் ஒப்பற்ற இயக்குனராகவும்,’பாரதி கண்ணம்மா’,’அழகி’ போன்ற திரைப்படங்களின் மூலம்
தன்னிகரற்ற நடிகராகவும்,”கிறுக்கல்கள்” என்ற நூலின் மூலம் ஆற்றல்மிக்க எழுத்தாளராகவும் விளங்கும் பார்த்திபன் இன்னும்
தன் திறமைக்கேற்ற உயரத்தை அடையவில்லையோ என சந்தேகிக்கிறேன்.என்
வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்குமோர் நாளில் தான் எனக்கும் பார்த்திபனுக்குமான சந்திப்பு
நிகழந்தது.
பாரதியார் பல்கலைகழகத்தில்
முனைவர்(Phd) நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக ஷார்ஜாவிலிருந்து “ஏர்
அரேபியா” விமானத்தின் மூலம் கோயம்புத்தூர் வந்தேன்,வழக்கம் போல் கல்லூரி நண்பன் மணி வீட்டில் தங்கினேன்.அப்போது அங்கு வந்த எங்களுடைய மற்றொரு நண்பன் இளங்கோ தான் ஒரு flat
புக் செய்திருப்பதாகவும்,”உனக்கு விருப்பமிருந்தால்
வந்து பார்த்துவிட்டு நீயும் ஒன்று புக் செய்” எனக் கூறினான்.கோயம்புத்தூர் எனக்குப் பிடித்த ஊர் என்பதாலும்,செட்டில்
ஆவதற்கு சிறந்த நகரம் என்பதாலும் சம்மதித்தேன்.Buildersஐ சென்று
பார்த்த போது அப்போதுதான் பணியை ஆரம்பித்திருப்பதாகவும்,சரியாக
1½ வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டு சாவி கொடுக்கப்படும் என்றும் சொன்னார்கள்.அவர்கள் கூறிய Housing Plan என்னை மிகவும் கவர்ந்து விட்டது
காரணம் மூன்று படுக்கையறை+நீச்சல் குளம்+உடற்பயிற்சிக் கூடம்+சினிமா தியேட்டர் என அனைத்து வசதிகளையும்
உள்ளடக்கியது.நான் சிறு வயதில் வளர்ந்த தாத்தா வீடும் சரி,தந்தை வீடும் சரி மிகப் பெரியவை.நாம் வீடு கட்டும் போதும் வசதிகள் நிறைந்த
வீட்டைத் தான் கட்ட வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்றாகிப் போனது.ஆகவே apartment ஆக இருந்தாலும் பரவாயில்லை என ஒரு flat ஐ புக் செய்து
விட்டு ஷார்ஜா பறந்தேன்.சரியாக ஒன்றரை வருடம் கழித்து
Builders இடம் இருந்து மெயில் வந்தது–உறுதியளித்தபடி
அபார்ட்மெண்ட் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாக.மேலும் “Key handing ceremony"
க்கு நடிகர் பார்த்திபன் வருவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
பார்த்திபனின் படைப்புகள் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தபடியால்,அவர் கையால் சாவி வாங்கப்
போகும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கினேன்.அதிர்ஷ்டவசமாக என் விடுமுறையிலேயே
விழா நாள் முடிவு செய்யப்பட்டிருந்தது.விழா நாளன்று நானும்,இளங்கோவும் சரியான நேரத்தில் ஆஜரானோம்.அபார்ட்மெண்ட்
வளாகத்திலேயே சாமியானா பந்தல் போட்டு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.ஹீரோ என்ற பந்தா துளியுமின்றி மிகவும் சிம்பிளாக வந்திறங்கினார் பார்த்திபன்.மைக்கைப் பிடித்தவர் வழக்கம் போல் தன் வித்தியாசமான,சுவாரஸ்யமான
நகைச்சுவைப் பேச்சினால் அசத்தினார்.வீடு என்பது ஒரு மனிதனின்
வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என உருக்கமாகப் பேசினார்.கஷ்டப்பட்டு
வாழ்க்கையில் முன்னேறித் தான் கட்டிய வீட்டை மறக்க முடியாதென்று கூறினார்.தனிப்பட்ட வாழ்விலும்,சில படைப்புகளிலும் ஏற்பட்ட தோல்வியினால்
தான் பாடுபட்டு கட்டிய வீட்டை விற்க நேரிட்ட போது ஏற்பட்ட வலியைப் பற்றிப் பேசிய போது
வருத்தமாக இருந்தது.”ஆக வீட்டின் அருமை எனக்குத் தெரியும்.128 Flats+7 Villas ஐச் சேர்ந்த உங்கள்
அனைவருக்கும் என் கையால் சாவி கொடுப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.பின்னர் ஒவ்வொருவராகச் சென்று வீட்டுச்சாவியைப் பெற்றுக் கொண்டோம்.நான் சாவி
பெற்றுக் கொண்டபோது என்னைப் பற்றி விசாரித்தார்.நான் கல்வித்துறையில்
இருப்பதாகச் சொன்னவுடன் சந்தோஷமாக என்னுடன் பேசினார்.அவரது சினிமாக்களும்,வித்தியாசமான சிந்தனையும்,மேடைப் பேச்சுக்களும் எனக்கு
மிகவும் பிடிக்கும் என்றதும் மிக்க நன்றி என்று மகிழ்ச்சியுடன் என் கைபிடித்துக் குலுக்கினார்.இனிவரும் அவரது படைப்புகள் அனைத்தும் வெற்றிபெற என் மனப்பூர்வமான வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொண்டேன்.Yes…he deserves much more.
Simply superb,karthi Sir.all r impressive and inspirational personalities.I see these qualities in you.congrats from Sarathy
ReplyDeleteDr.Sarathy,Thanks for your great feedback and giving me reasons to cheer.
Deleteஆளுமைகளைச் சந்திக்கும் ஆனந்தப் பயணம் மேலும் தொடர அன்பும்... வாழ்த்துகளும்!_
ReplyDeleteதஞ்சை ரவிராஜ்.
நன்றி-தங்களின் அன்புக்கும்,வாழ்த்துகளுக்கும்!
DeleteGreat karthi sir, soon you will be the one of the inspiring personality among students. I Salute your reading spirit in both- tamil and English books.
ReplyDeleteThank you!
DeleteSuper sir👍
ReplyDeleteThanks...
DeleteGreat work sir....choosen topic was interesting....
ReplyDeleteThis was helpful for many students... like me to improve their skills....
Inspired on your articles sir....
Congrats sir for your ஆளுமைகளுடன் நான்!!!!
Thank you so much Bharathi...
Deleteஅருமையான தலைப்பு. . சிறந்த நடை. . தங்களுக்கு எற்பட்ட
ReplyDeleteசிறந்த அனுபவம் ஆளுமைகளுடன். .
நன்றி ஐயா. .
மணிகண்டபிரபு.பெ.
நணபர் முனைவர் மணிகண்டபிரபு அவர்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும்!
Delete