உலகிலேயே தொன்மையான நாகரிகத்தைக் கொண்டவன் தமிழனே என நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.பண்டைத் தமிழரின் வேளாண்மைக் காலத்தை மிகக்குறிப்பாக அறுதியிட்டுக் கூற முடியாதெனினும் நாகரிகம் என்று இப்போது ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிற காலத்திற்கும் முந்தையது என்பதில் சிறிதும் ஐயமில்லை.வனாந்தரங்களில் காட்டுமிராண்டியாக
அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதனைப் பண்படுத்தியது உழவு.அதனால்தான் ‘உழந்தும் உழவே தலை’ எனக் கொண்டாடுகிறார் திருவள்ளுவர்.
வாழ்நிலைப் பகுதிகளை திணை மண்டலங்களாக பகுத்து அதை இலக்கணப்படுத்தியவர்கள் தமிழர்களே.குறிஞ்சி எனப்படும் மலையும் மலை சார்ந்த நிலமும்,முல்லை எனப்படும் காடும் காடு சார்ந்த நிலமும், மருதம் எனப்படும் வயலும் வயல் சார்ந்த நிலமும்,நெய்தல் எனப்படும் கடலும்
கடல் சார்ந்த நிலமும் நாநிலம் என்று அழைக்கப்பட்டது.இதற்கு அடுத்தாற் போல்,வறட்சிக் காலத்தில் குறிஞ்சி,முல்லை என்ற பகுதிகளை பாலை என்று பிரித்தனர்.ஆனால் இதற்கு ஏனைய நிலத்தைப் போல் நிலையான நிலம் கிடையாது.ஏனெனில் இயற்கை எந்த இடத்தையும் பாலையாக ஆக்குவதில்லை.பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நாம் இன்று விளைநில உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்.வேலை வாய்ப்பில் விவசாயத்தின் பங்களிப்பு 60 சதவீதமாக இருந்தாலும்,உற்பத்தியில் 16 சதவீதமாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இருப்பினும் அதிகப் பொருளாதாரத்தை ஈட்டும் துறையாக இருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த
சமூக,பொருளாதார
வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது.
விவசாயத்தின் இன்றைய நிலை:
இந்தியாவைப் பொறுத்தவரை விளைநிலங்களின் ஆக்கிரமிப்புதான் இன்று தலையாயப் பிரச்னையாக உள்ளது.விஞ்ஞானமும்,தொழில்நுட்பமும் விஸ்வரூபமெடுத்த காரணத்தால் வாழையடி வாழையாக விவசாயத் தொழிலையே கண்ணும் கருத்துமாக செய்து வந்த பல குடும்பங்களின் வாரிசுகள் அதனை விட்டு வெளியே வந்தது ஒரு துயரம் என்றால், அவ்விளைநிலங்கள் இன்று குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் உருமாறிக்கொண்டிருப்பது மற்றுமொரு துயரம்.விளைநிலங்களை வணிகமயமாக்கும் கொள்ளைத் திட்டங்கள் ஒருபுறம் ஜரூராக நடந்து கொண்டிருந்தால் மறுபுறம்,நகரமயமாக்கல்,கனிம வளங்களைச் சுரண்டுதல், தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவற்றிற்காகவும் விவசாய நிலங்கள் வன்முறையால் பறிக்கப்பட்டு வருவது வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.மீத்தேன்-டெல்டா,நிலக்கரி-நெய்வேலி,சுண்ணாம்பு-அரியலூர்,கிரானைட்-மதுரை,தாதுமணல்-தூத்துக்குடி,எரிஎண்ணெய்-ராமநாதபுரம்,இரும்புதாது-சேலம்,திருவண்ணாமலை என இது போன்ற இயற்கை வளங்களை சுரண்ட நினைப்பவர்கள் முதலில்
கால் பதிக்கும் இடம் நாட்டின் முதுகெலும்பான விவசாய பூமியில் தான்.இந்த நிலை நீடித்தால் பசி,பட்டினியில் நாம் மடிய வேண்டியது தான்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையைச் சேர்ந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்.-காவேரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயுவும்,நிலக்கரியுமிருப்பது தெரிந்ததால் தான் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களை அபகரிக்கத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஏற்கனவே
‘மீத்தேன்’ என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட அதே திட்டம் தான் இப்போது
‘ஹைட்ரோகார்பன்’ என்ற பெயரில் கொண்டு வரப்படுகிறது.பூமிக்கும் கீழே சுமார் இரண்டு
கிலோமீட்டர் தூரத்துக்குச் செங்குத்தாகத் துளைகள் இட்டு குழாய் செலுத்தி,அடியாழப்
பாறைகளில் படிந்துள்ள வாயுக்களை இழுத்து வெளியே எடுக்க வேண்டும்.’சில ஏக்கர்
நிலத்தில் மட்டும் தான் செயல்படுத்தப்போகிறோம்’ என சொல்லப்பட்டாலும்,பூமியின் கீழே
சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நிலத்திலிருநதும் தான் உறிஞ்சுவார்கள்.எனவே மொத்த
விவசாயமும் ஒழித்துக் கட்டப்படும் என்ற விவசாயிகளின் அச்சத்தில் நியாயம்
இருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் வளத்தைக் கெடுத்து விடாதீர்கள் என்று சொல்லிப்
போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் விவசாயிகள்.அவர்களுக்குத் துணையாக
சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,பொதுமக்களும்,ஊடகங்களும் குரல் எழுப்புகின்றன.இது போன்ற திட்டங்கள் எதுவாக இருப்பினும் நாம் நமக்குள் ஒற்றுமையை கடைப்பிடித்து இப்போது போலவே கடுமையாக எதிர்க்க வேண்டும்.ஜப்பானில் பூகம்பம் காரணமாக ஓர் அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டதால் பல சதுர கிலோமீட்டருக்கு மண்ணில் வாழ்ந்த அனைத்து உயிர்களும் புல் பூண்டு உட்பட அழிந்துவிட்டது.மீண்டும் அங்கு சென்று வாழலாம் என்றால் முடியாது.இப்படி பல உதாரணங்கள் இருந்தும் 55000 கோடி செலவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எப்படி அனுமதித்தார்கள் என்பது ஆள்பவர்களுக்கே வெளிச்சம்.இன்று உலகெங்கிலும் பட்டினி கிடக்கும் 2.6 கோடிப் பேரில் கால் பகுதியினர் அதாவது 65 லட்சம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற பாரம்பரியச் சிந்தனை அழிக்கப்பட்டு விட்டது.இந்தியா தன்னை ஒரு வல்லரசாகவும்,பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளரும் நாடாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு வரும் அதே வேளையில் 40 சதவீத குழந்தைகள் உணவு இல்லாமல்
தவிக்கின்றன.நகர விரிவாக்கத்தில் வயல்களும், நீர்நிலைகளும்,வீடுகளாக மாறிகொண்டேயிருந்தால்,எதிர்காலத்தில் விவசாய பூமிகள் மொஹஞ்சதாரோ,ஹரப்பா போன்ற வரலாற்று சின்னங்களாகக் கூடும் என்றால் மிகையில்லை.
இயற்கை விவசாயத்தின் அவசியமும்,செயற்கை விவசாயத்தின் அபாயமும்.
எந்தப்
பூச்சிக்கொல்லியும் பூச்சிகளைக் கொல்வதில்லை.மாறாக,பூச்சிகளை உட்கொல்லும்
பறவைகளைக் கொன்று,அதன் தொடர்ச்சியாக மண்ணை,மனிதர்களை,இயற்கையைத் தான் அது
சீரழிக்கிறது.அமெரிக்கப் பெண் விஞ்ஞானி ரேச்சல் கார்சன் எழுதிய ‘மெளன வசந்தம்’(Silent spring) என்ற புத்தகம் தான் இதை முதன்முதலில் அம்பலப்படுத்தியது.அமெரிக்காவின்
வசந்தத்தை வரவேற்கும் ராபின் பறவைகள் இன்று இல்லை.ராபின்கள் எல்ம் மரங்களோடு
உறவாடுபவை.அம்மரங்களுக்கு ஏற்பட்ட நோய் தீர தூவப்பட்ட பூச்சிக்கொல்லி ரசாயனம்
இலைகளை நஞ்சாக்கியது.மக்கி உதிர்ந்த இலைகளை உண்டு மண்புழுக்கள்
மடிந்தன.மண்புழுக்களை உட்கொண்டு ராபின்கள் இறந்தன.இதை எழுதியதற்காக ரேச்சல்
கார்சன் மிரட்டப்பட்டார்.பைத்தியம் என்றார்கள்.ஆனால் அவரது புத்தகம் பூமியைப்
புரட்டிப் போட்டது.
கேரட்,பீட்ருட்,முட்டைகோஸ், காலிஃப்ளவர்,திராட்சை,தக்காளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை என நாம் அன்றாடம் விரும்பி உண்கிற காய்களின், பழங்களின் புத்துணர்ச்சி குறையாமல் இருப்பதற்காக என்ன செய்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா? பாலிடால்,என்ட்ரின்,டெமக்ரான்,நுவோக்ரான், எண்டோசல்ஃபான்..இப்படி பலவிதமான நச்சுத்தன்மையுடைய ரசாயனங்களைத் தெளிக்கிறோம். நன் மரபான இயற்கை விவசாயத்தை மறந்து இவ்வாறு நஞ்சு தெளிப்பதால் எடைக்குறைவாக பிறக்கின்ற குழந்தைகள்,குழந்தைகள் ஈனும் ஆற்றலில்லாத சிசேரியன் தாய்கள்,சின்ன வயதிலேயே மூக்குக் கண்ணாடி அணியும் பிள்ளைகள்,நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் வைட்டமின் மாத்திரைகளை நம்பி வாழும் மனிதர்கள், மருந்து மாத்திரைகளை உணவாகக் கொள்ளும் முதியவர்கள் என ஒரு ஆரோக்கியமற்ற சமூதாயத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
“கன்றுக்குப் பாலைத் தராமல் இயந்திரம் வைத்து எப்படி கறக்கிறார்களோ,அப்படியே இயற்கையையும் ரசயானம் வைத்து கறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஒரு மடங்கு விதைத்தால் ஐந்து மடங்கு விளைச்சல் தர வெளிநாட்டு விதைகளை வாங்கினோம்.இப்போது ஐந்து மடங்கு வறட்சி தான் மிச்சம். குறைந்த உழைப்பில் சத்துக் குறைவான விளைச்சலைப் பெறச் சொல்லி ஆசைத் தூண்டில் போடுகிறது செயற்கை விவசாயம்.எங்கும்,எதையும் விதைக்கலாம் என்பதே விஷப்பரீட்சையின் தொடக்கம்” என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
இந்தியாவில் 22,292 நெல் ரகங்கள் இருந்திருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? கருத்தரித்த போது
ஒரு சம்பா,பாலூட்டுகையில் ஒரு சம்பா,உடல் மெலிவுக்கு ஒன்று,உடல் சோர்வுக்கு
மற்றொன்று,பஞ்சத்துக்கு ஒன்று,புயலுக்கு இன்னொன்று என தமிழ்நாட்டிலேயே
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் இருந்தன.வீரிய ஒட்டு ரகங்களின் வரவால்
அத்தனையும் வழக்கொழிந்து போய் விட்டன.இன்று 30-40 புதிய ரகங்கள் மட்டுமே
நம்மிடமிருக்கிறது.பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகத்தான பணியைச் செய்து
வருகிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த “வேளாண் போராளி” ‘நெல்’
ஜெயராமன்.ஆண்டுதோறும் ‘நெல்திருவிழா’ நடத்தி பாரம்பர்ய நெல் விதைகளைக் காப்பதன்
அவசியத்தை உணர்த்தி வருகிறார்.
ஐரோப்பிய நாடுகளே ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் தீமையை கண்டு அலறியபடி இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெகுகாலமாகி விட்டது.ஆனால் சகித்துக் கொள்ளக்கூட முடியாத விஷயம் என்னவென்றால்அங்கு விற்பனையாகாத ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை நாம் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்திய வேளாண்மையில் டிராக்டரை
அறிமுகப்படுத்தலாமா என 1930 களில் விவாதிக்கப்பட்டது.”டிராக்டர் நல்லாத்தான்
உழும்.ஆழமாகக் கூட உழும்.ஆனால் சாணி போடாதே” என்றார் காந்தியின் பொருளாதார
ஆலோசகரான ஜே.சி.குமரப்பா.இயற்கை
விவசாயத்தை நம்பிக்கையுடன் சரியான முறையில் கையாண்டால் விளைச்சல் பாதிக்காது.ரசாயன உரம்,பூச்சிக்கொல்லி மருந்து
வாங்கத் தேவையும் இல்லை.அதற்கான செலவும் இல்லை.ரசாயன உரத்தில் இருந்து விடுபட நினைத்தால் விவசாயிகள் கருத்தில் கொண்டு செய்யக் கூடியது அவர்கள் மாடு வளர்ப்பது தான்.நிலத்தை ஆறு முறைக்கு குறையாமல் நன்கு உழவேண்டும்.இயற்கை குப்பைகள் கலந்த புதிய மண்ணை உழுத பின்
15 நாட்களுக்கு
ஆறவிட வேண்டும்.இதனால் படிப்படியாக ரசாயன உரத்தின் வீரியம் குறைந்து மீண்டும் பழைய மகசூல் கிடைக்கும்.பயிர்ச்சூழற்சி ( Crop rotation),பயறு வகைத் தாவரங்களைப் பயன்படுத்துதல்(Legume crops),வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்துவது,மட்கிய தொழுவுரப் பயன்பாடு என்று மரபு முறைகளை கடைப்பிடிப்பதுடன்,நுண்ணுயிர்
உரங்கள் பயன்பாடும் நல்ல விளைவுகளைத் தரும்.அதே சமயம் இயற்கை விவசாயம் என்பது வெறும் பாரம்பரிய வேளாண்மை தான் என்ற பார்வையில் இருந்து மாறி இன்றைய அறிவியல் கண்டுப்பிடிப்புகளுடனும்,இன்றைய அறிவியல் அணுகுமுறைகளுடனும், கூடியதாகவே உள்ளது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாயியுடன் ஒரு உரையாடல்:
இளைஞர்கள் விவசாயத்தைக் கைவிட்டு வேலைக்காகவும்,தொழிலுக்காகவும், நகரங்களுக்கோ,வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய இன்றைய கால கட்டத்தில் என்னுடைய பள்ளித் தோழர் திரு.N.R.கார்த்திகேயன் அவர்கள் விவசாயத்தைக் கைவிடாமல் செய்து வருகிறார்.ஏதோ நானும் விவசாயம் செய்கிறேன் என்றில்லாமல் முழு அர்ப்பணிப்புடனும்,வெற்றிகரமாகவும் செய்து கொண்டிருக்கிறார்.அவரிடம் நான் கண்ட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,பெரும்பான்மையான விவசாயிகளிடம் காணப்படும் சலிப்பு கொஞ்சமுமின்றி உற்சாகத்துடன் இத்தொழிலை செய்து வருவதே. கருமேகங்கள் திரண்டு,லேசாய் மழைத்தூற ஆரம்பித்த ஓர் அற்புதமான அந்தி நேரத்தில் N.R.கார்த்திகேயனுடைய வயல்களினூடே வரப்புகளில் நடந்தவாறு நானும், நண்பர் வெங்கியும் அவருடன் நடத்திய உரையாடல்:-
நான்:நம்முடன்
படித்த அனைவரும் வேலையோ,தொழிலோ செய்து வருகின்றனர்.நீங்கள் மட்டும் விவசாயத்தைக் கைவிடாமல் செய்து வருவது எப்படி?
N.R.K:நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்.என் தந்தை ஒரு விவசாயி.ஆகவே விவசாயத்தின் பால் நான் கொண்டுள்ள ஈடுபாடு இயற்கையானதே.எனது இரண்டு அண்ணன்களும் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று விட்டனர்.அதனால் மட்டுமே நான் விவசாயம் செய்ய முடிவெடுத்தேன் என்று சொல்ல முடியாது.நானும் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் விவசாயத்தைக் கைவிடாமல் செய்து வருவது அதன் மேலுள்ள ஆர்வமே.
வெங்கி:விவசாயத்தைப் பொறுத்தவரை பெரும்பாலோர் சொல்வது அதில் அடையக்கூடிய நஷ்டத்தைப் பற்றித் தான்.ஆனால் நீங்கள் ஒரு வெற்றிகரமான விவசாயி.இது எங்ஙனம் சாத்தியமாயிற்று?
N.R.K:தற்போதைய காலக்கட்டத்தில் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தை, ஈடு செய்ய முடியாத இழப்பை சந்திக்கின்றனர் என்பதே உண்மை. வானிலை நிலவரம் சீராக இல்லை.பருவமழையும் பொய்த்துப் போய் விடுகிறது.இன்னும் கூட எவ்வளவோ பிரச்னைகளைக் கூறிக் கொண்டே போக முடியும்,இருப்பினும் திட்டமிட்டுச் செயல்பட்டு ஆரோக்கியமான பயிரை வளர்த்தல்,பூச்சிகளின் இயற்கை எதிரிகளை காத்தல்,பயிர்களைத் தொடர்ந்து கண்காணித்தல், விவசாயத்தில் உள்ள தொழில்நுட்பங்களைப் பற்றி அறிதல்,நீர்,மண்,பயிர் வேளாண்மை பற்றிய தெளிவு ஆகியவற்றின் மூலம் வெற்றி பெற முடியும் என்று நான் நம்புகிறேன்.
நான்: விவசாயம்
செழிப்புற முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்னென்ன?
N.R.K:பூச்சிக்கொல்லி என்றைக்கு வந்ததோ அன்றிலிருந்து வியாதிகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன.மனிதர்களை விட ரசாயன உரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்களும், அணில்களும் தான். ஆகையால் விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளையும், ரசாயனத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டு இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்.பெரும்பாலும் நான் மாட்டு எரு,ஆட்டு எரு போன்றவற்றையே வயலுக்குப் பயன்படுத்துவேன்.இறால் பண்ணைகள் மூடப்பட வேண்டும்,அவைகள் மூலம் ஆயிரக்கணக்கான நல்ல விளைச்சல் நிலங்களை இழந்துவிட்டோம். வெளிநாட்டவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக நம் தாய்மடி போன்ற விவசாய நிலங்களை கடல்நீருக்கு இரையாக்கி வருகிறோம்.நம்மிடம் இறால் வாங்கி சாப்பிடுபவர்கள் அவர்கள் நாட்டில் ஏன் இறால் பண்ணை அமைக்கவில்லை?சிந்திக்க வேண்டும்.ஆக்கிரமிப்புகளால் காணாமல் போகும் நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும்.நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் நீர்தேக்கி வைக்கும் பரப்பளவு குறைவதுடன்,தேவையான நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.நீர் மாசுபடாமல் இருக்க விவசாயிகள் கைகோர்த்து செயல்படவேண்டும்.
வெங்கி:அரசாங்கம் விவசாயிகளுக்கு எந்த மாதிரியான உதவிகளைச் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
N.R.K:ரசாயன உரங்கள்,வெளிநாட்டு விதைகள்,இயந்திரமயமாக்கல் போன்றவற்றை அரசு ஊக்கப்படுத்தக் கூடாது.இதனால் நோய்,உணவு நஞ்சாக மாறுதல்,அதிக செலவு,நிலத்தின் உயிரோட்டம் இழப்பு,நிலம்,நீர் மாசு போன்ற கேடுகள் நிகழும்.83 ஆண்டுகளாக மேட்டூர் அணை தூர்வாரப்படாததனால் வண்டல் மண் சேர்ந்து அதன் கொள்ளளவு குறைந்து விட்டது.இப்போது துவங்கப்பட்டிருக்கும் பணி தொய்வின்றி நடந்தேற வேண்டும்.கடுமையாய் உழைத்து பார்த்துப் பார்த்து வளர்த்த தானியத்தை உழவன் பதினைந்து ரூபாய்க்கு விற்றால் வணிகர்கள் ஒரே நாளில் முப்பது ரூபாய் விலை வைத்து லாபம் பார்க்கிறார்கள்.விளைவிக்கும் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் குறித்து மத்திய மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்.வட்டார அளவில் சந்தைகளை உருவாக்க வேண்டும்.அதே போல் விவசாயிகள் விளைவித்த தானியங்களுக்கான விலையை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும்.அரசு அதிகாரிகள் விலையை நிர்ணயிக்கக் கூடிய சூழல் மாற வேண்டும்.
நான்:விவசாயத்திற்கு சமூகத்தின் பங்களிப்பு எவ்வகையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
விவசாயத்தின் முன்னேற்றத்தில் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அத்தியாவசியம்.Plastic பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும், நான் எங்கு சென்றாலும் துணிப்பைகளையோ,மஞ்சள் பைகளையோ(சிலர் கிண்டல் கூட செய்யலாம்) தான் கொண்டு செல்கிறேன்.நம் நிலத்தடி நீரை அபகரித்துத் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பானங்களான Pepsi,Coke போன்றவற்றைப் புறக்கணிக்க வேண்டும்.அவை சமூகத்திற்கும் கெடுதல்,நம் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.விவசாய அறிவை நம் அடுத்த தலைமுறைக்குச் சொல்லித்தர வேண்டும்.டெல்டா பகுதியைச் சேர்ந்த நான் வேலைக்கு ஆட்களை அழைத்து வருவதற்குப் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.நம் பிள்ளைகளை கிராமத்தில் வேலை இல்லையென்று கணிப்பொறி நிறுவனங்களுக்கு முன் காத்துக் கிடக்க அனுப்புகிறோம்.நான் என் மகனை நன்கு படிக்க வைத்தாலும் நாற்பது வயதிற்கு மேல் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று இப்போதே சொல்லி வைத்திருக்கிறேன்.விவசாயத்திற்கு நல்வழி பிறக்கும் என உறுதியாக நம்புகிறேன்.முதல் விதையாக ஆளுக்கொரு மரம் நடுவோம்.உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
வேளாண்மையின் எதிர்காலம்:
கொத்தனார்கள்,வெள்ளையடிப்பவர்கள்,திருப்பூரில்
பனியன் தைப்பவர்கள்,சாயப்பட்டறைக்காரர்கள், ஜவுளிக்கடைகளின் விற்பனையாளர்கள்
பெருபாலானோர் விவசாயத் தொழிலில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களாகவே இருக்கிறார்கள்.மேற்கத்திய
நாடுகளுக்குத் தேவையான சர்க்கரை,காபி,தேனீர்,புகையிலை,பருத்தி,மலர்கள் இவற்றின்
விளைநிலமாக நமது நிலம் நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டது.விவசாய நிலங்களின் அளவு அபாயகரமாக
குறைந்து கொண்டே வருகிறது.முன்பு மாதக்கணக்கில் தொடர்மழை பெய்யும் காலமொன்றும் இருந்திருக்கிறது.ஆனால் தற்போது நாள் கணக்கில் தான் பெய்கிறது.கூடவே அதிகமாய் வெள்ளப் பாதிப்புகளும் ஏற்படுகிறது.இன்னொரு பக்கம் கடன் தொல்லைகள் காரணமாக விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.மாடுகளை விற்று
கலப்பைகளை வாங்கினார்கள்.கலப்பைகளை விற்று விதைநெல்லை வாங்கினார்கள்.இப்போது விதைநெல்லை
விற்று விஷத்தை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.தொழில்நுட்பப் புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை எல்லாம் “விலை” நிலங்களாக மாற்றும் அவலம் நடந்தேறுகிறது.நிறுவனங்களாகவும்,அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும், சாலைகளாகவும் விளைநிலங்களை மாற்றினால் எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலை உயருவதோடு,தட்டுப்பாடும் ஏற்படும்.உழவுத் தொழிலின் தரம் உயர்த்தப்படாவிட்டால் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் நாடு பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும்.விவசாயத்தைப் புறக்கணித்து விட்டு மேற்கொள்ளும் எந்தவித முன்னேற்றமும் எதிர்பார்க்கும் பலனை தராது.சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் நம்மால் விளைப்பொருட்களைப் பாதுகாக்கும் சேமிப்பு,பதனக்கிடங்குகளை மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவிலும் கூட அமைக்க முடியவில்லை. கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயி அடைய வேண்டிய பலனை பதுக்கல்காரர்களும்,பெருவர்த்தக நிறுவனங்களுமே அடைகின்றனர். இவற்றையெல்லாம் நல்ல செயல் திட்டங்கள் மூலமே மாற்றியமைக்க முடியும்.விவசாயிகளை ஒருங்கிணைத்தல்,நிலத்தை வரைமுறைப்படுத்துதல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தல்,தகவல் மையங்கள்,அரசு விவசாய மையம்,பயிர்க்கடன் வழங்குவது ஆகியவற்றின் மூலம் சாத்தியப்படுத்தலாம்.
தன்னுடைய “மூன்றாம் உலகப் போர்” நூலில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் “புவி வெப்பமயமாதல்” என்ற பூதம் தலைவழியாகவும், “உலகமயமாதல்” என்ற பூதம் கால்வழியாகவும் ஒரே நேரத்தில் விழுங்கிக் கொண்டே வருகின்றன விவசாயியை. என்கிறார்.மேலும் அவர், “இயற்கையாலும்,செயற்கையாலும் கூடிவரும் புவிவெப்பம் உலக விவசாயத்தின் மீது நிகழ்த்தியிருக்கும் தாக்குதல் அளப்பரியது.மத்திய ஆசியாவின் கிர்கிஸ்தான் நதிகள் குறைந்து வருவது,தென்னப்பிரிக்காவின் செனகலில் பிடிக்கும் தீ விளைநிலங்களை நாசமாக்குவது,ரஷ்யாவின் அனுமானிக்க முடியாத வானிலையால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்கள்,அமெரிக்காவின் கொலம்பியாவில் மலையேறிய வெப்பம் காப்பித் தோட்டத்தை கருக்கியது.ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி காரணமாக பார்லியும், கோதுமையும் காய்ந்து போனது என எல்லாக் கண்டங்களிலுமே விவசாயம் பிரச்னைக்குள்ளாகி இருக்கிறது” என வருந்துகிறார்.விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் சில கருத்துகளை முன் வைக்கிறார்.
அவை:
vவிவசாயத்தின்
வீழ்ச்சி குறித்தும்,மீட்சி குறித்தும் ஐ.நாவில் உலகநாடுகள் விவாதிக்க வேண்டும்.
vஅரசு
ஊழியர்களுக்கிணையான
ஊதியப் பாதுகாப்பை விவசாயிகள் பெறவேண்டும்.
v விற்கப்படக்கூடாது விளைநிலங்கள்.விற்கப்படால் அரசாங்கம் அவற்றை விலைக்கு வாங்கி வேளாண்மை தொடர வேண்டும்.
v
தண்ணீரும்,மின்சாரமும் உபரியாய் உண்டாக்கப்பட வேண்டும்.
v
நவீனத்
தொழில்நுட்பத்துக்கு
விவசாயம் தாவ வேண்டும்.
“பாரம்பர்யப் பெருமை என்ற பெயரில் லாபமோ,உத்தரவாதமோ,சமூகக்
கௌரவமோ இல்லாத இந்த விவசாயத்தை எதற்கு நாங்கள் கட்டிக் கொண்டு அழ வேண்டும்” என ஓர்
விவசாயி குமுறியதை ஆனந்த விகடனில் படித்தேன்.அவர் விவசாயத்தை
வெறுக்கவில்லை.’எல்லோரும் வெறும் அறிவுரை மட்டுமே செய்து கொண்டிருக்க அந்த வலியைச்
சுமக்க வேண்டியது நாங்கள் தான்’ என்ற யதார்த்தத்தில் பேசுகிறார்.இவரது
மனக்காயத்துக்கு மருந்திட்டு விவசாயம் நீடித்திருப்பதற்கான காரியங்களைச் செய்ய
வேண்டும்.
நாம்
மண்ணின் வளத்தைக் காப்பாற்றியாக வேண்டிய தருணத்தில் உள்ளோம்.குறைந்தபட்சம் வளமாக்குவதைக் காட்டிலும் நலமாக மாற்றினாலே விவசாயம் செழிக்கும்.விவசாயிகளின்
வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
வேண்டும்.விவசாயிகளும்
தொலைநோக்கில் சிந்திக்க வேண்டும்.நவீன உத்திகளைக் கையாள வேண்டும்.இயற்கை விவசாய முறைகளுக்குத் திரும்ப வேண்டும்.மாற்று விவசாய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.விவசாயம் சார்ந்த அரசு நிர்வாகமுறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.அப்போதுதான் நிலையான வேளாண்மை தொடரமுடியும்.BSc.,(Agri) படித்துவிட்டு விவசாயம் சம்பந்தமான வேலைக்குச் செல்ல முடியவில்லையே என்று கால் நூற்றாண்டு காலமாக எனக்குள்ளிருந்த ஆதங்கத்தை இக்கட்டுரையை எழுதியதன் மூலம் தீர்த்துக்கொண்டேன்.
Superb information,Karthi.congrats Prof
ReplyDeleteThank you Dr.Sarathy
Delete