Monday, 13 February 2017

காதலாகி கசிந்துருகி

எவ்வளவோ உறவுகள் இருப்பினும் அத்தனை உறவுகளிலும் ஆகச் சிறந்த உறவுகளென்றால் அது காதலும் நட்பும் தான்...மற்ற உறவுகளெல்லாம் நமக்குத் "திணிக்கப்பட்டஉறவுகளே.நம் ரசனைக்கேற்ப, சிந்தனைக்கேற்ப நாமாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உறவுகள் இவ்விரண்டும்.தாயாகவே இருக்கட்டும் தந்தையாகவே இருக்கட்டும் இவர்களின் பிரிவில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட ஒருவரையாவது உங்களால் காண்பிக்க முடியுமா?ஆனால் பறவை இனம் தொடங்கி மனித இனம் வரை காதல் துணையைப் பிரிய நேரிடின் தம் இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர் எண்ணிலடங்கா.எங்கேயோ காட்டுக்குள் கிடக்கிற கல் திடீரென ஒரு வீட்டிற்கு முதல் கல்லாவது போல,கோடிப்பூக்கள் கொட்டிக்கிடக்கிற வனத்தில் ஒரு பூவைத் தேர்ந்தெடுக்கிற மனசு காதலுக்குத் தான் வாய்க்கும்.ஆம்...எத்தனையோ மனிதர்களை நாம் சந்தித்திருந்தாலும் கூட குறிப்பிட்ட ஒருவரை மட்டும் நம் மனம் காதலிக்க என்ன காரணம் இருக்க முடியும்?யோசித்துப் பார்க்கிறேன்... விடை கிடைக்கவில்லை.ஆக,"மனதுடன் மனம் சேர்வதென்பது ஒரு கூர்மையான புள்ளியின் ஓர் கருமையான ரகசியம்" என்றே கருதுகிறேன்.காதலைப் பற்றிப் புரியாதது பலவும் ஆதிகாலந்தொட்டு இருந்து தான் வருகின்றன.அது எப்போது வருகிறது?எவரிடம் வருகிறது?எவர் மேல் வருகிறது?அது உடல் சம்பந்தப்பட்டதா?இல்லை மனம் சம்பந்தப்பட்டதா?இந்தக் குழப்பங்களுக்கு இடையில் காதலென்பது ஒரு சாராருக்கு தெய்வீகமாகவும் மற்றுமொரு சாராருக்குப் பைத்தியக்காரத்தனமாகவும் தான் தெரிகிறது.


                              காதல்!

                       இது
                       என் மானுடத்தின்
                       சாபல்யம்!

                       எனக்குத் தெரியாமல்
                       என்னுள் நிகழ்ந்த
                       பிரளயம்!

                       மௌனத்தில் ஆழ்ந்திருந்த
                       என் யௌவனம்
                       சங்கீதம் பாடிய சரித்திரம்!

இவ்வாறெல்லாம் காதல் கவிதைகளை என்னைப் போலவே நீங்களும் கிறுக்காமலா இருந்திருப்பீர்கள்?காதலிக்காத ஜீவன் இவ்வுலகில் இருக்க வாய்ப்பிருக்கிறதா என்ன? பதின்வயதில் காதலைச் சந்திக்காதவர் வாழ்வில் வேறு எதைச் சந்தித்தால் தான் என்ன? சாதித்தால் தான் என்ன? ”காதலைச் சந்திக்காமலே இருப்பதை விட காதலைச் சந்தித்து தோல்வியடைவது மேல்என்னும் கவிஞர் டென்னிசனின் கூற்று எவ்வளவு உண்மை.பறவைகளின் சங்கீதத்துக்கும்வானத்தின் வர்ணஜாலத்துக்கும் இணையான கவித்துவமும்,அழகும் காதலுக்கு மட்டுமே உண்டு.

"இறந்த பிறகும் என் விழிகள் திறந்தே இருக்கின்றன...உனக்காகக் காத்திருந்த பழக்கம்" என்று பல்வேறு கவிதைகளின் முலம் நம் தமிழினம் காதலைக் கொண்டாடும் ஓர் இனம்.காதலைப் பற்றியும் வீரத்தைப் பற்றியுமே நம் இலக்கியங்களில் மிகுதியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.எவ்வளவு கதைகள்,கவிதைகள்,காப்பியங்கள், இலக்கியங்கள்,இதிகாசங்கள்,திரைப்படங்கள் காதலைப் பற்றி வந்து கொண்டேயிருக்கின்றன.எவ்வளவு பார்த்தாலும்,படித்தாலும் நமக்குக் காதலின் மேலுள்ள மோகம் மட்டும் தீர்வதேயில்லை-மணிமேகலையின் அட்சயப்பாத்திரம் போல்.நம் இந்தியக் காதல் கதையான "தேவதாஸ்" ஆக இருக்கட்டும் Jane Austen எழுதிய ‘Pride and Prejudice’ என்ற உலகக் காதல் கதையாக இருக்கட்டும்...எத்தனை முறை இவை திரைப்படங்களாக வந்திருக்கின்றன.அத்தனை முறையும் வெற்றியே பெற்றிருக்கின்றன்.காதல் நமக்குச் சலிப்பதேயில்லை. “காதல் என்று ஒன்றில்லை எல்லாம் ஹார்மோன் செய்யும் கோளாறு தான்என்று கூறுவோரும் உண்டு.பாவம்! அவர்கள் நிலவிற்கே சென்றாலும் அதன் அழகை ரசிக்காமல் அதனுடைய தட்ப வெட்பத்தை ஆராய்ச்சி செய்பவர்களாகவே இருப்பர்.



கண்மணியே காதல் என்பது கற்பனையோ,காவியமோ,கண் வரைந்த ஓவியமோ,எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா…’ போன்ற ஆயிரக்கணக்கான,அட்டகாசமான காதல் பாடல்களின் மூலம் தமிழர்களின் காதல் உணர்வுகளை சிறகடித்துப் பறக்கச் செய்தவர் இசைஞானி இளையராஜா.தமிழ் நூல்களில் காதலைச் சிறப்பித்த நூல்களாக நான் கருதுபவை: தி.ஜானகிராமனின்மோகமுள்”, கல்கியின்சிவகாமியின் சபதம்வைரமுத்துவின்தண்ணீர் தேசம்”, சுஜாதாவின் “பிரிவோம் சந்திப்போம்மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகரின்தொட்டால் தொடரும்”. திரைப்படங்களைப் பொறுத்தவரை காதலுக்குக் கண்ணில்லை என்று காட்டியராஜபார்வைகாதலிப்பதற்கு எந்த நியதியும் கிடையாது என்றுணர்த்தியமூன்றாம் பிறைகாதல் தோல்வியுடன் காதல் முடிவதில்லை என்று தெரியப்படுத்தியமௌனராகம்”, காதலுக்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாது என்றியம்பியமுதல் மரியாதை” மற்றும் காதல் தியாகம் செய்யத் தயங்காது என்று சொன்னகாதலுக்கு மரியாதை”.



நான் வானத்தையும், மேகத்தையும் பார்த்து அழுததை வேண்டுமானால் கண்ணீர் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆனால்...
நான் காதலுக்காக அழுததை மட்டும் கண்ணீர் என்று சொல்ல வேண்டாம்,அது என் ஆன்மாவின் ரத்தம்” 
- என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து,அப்பேர்ப்பட்ட மகா கவிஞனுடன் காலைச் சிற்றுண்டி உண்ணும் வாய்ப்பு துபாயில் எனக்குக் கிடைத்தது.ஆயிரமாயிரம் பாடல்களையும்,கவிதைகளையும்  அவர் எழுதியிருந்தாலும் அன்று அவரின் கவனம் ஈர்க்க நான் சொன்னது அவருடைய ஓர் காதல் கவிதையைத் தான்.

காவியச் சிலம்பாய் நானிருந்தால்-உன்
   கால்களிலாவது தவழ்ந்திருப்பேன்
தென்றல் காற்றாய்ப் பிறந்திருந்தால்-உன்
    சேலையிலாவது ஒளிந்திருப்பேன்
மலர்க்கொடி அதனை இழந்து விட்டேன்-நான்
     மனிதனாய் அல்லவா பிறந்து விட்டேன்

என்று முப்பதாண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய - என் மனதில் பசுமரத்தாணியாய்ப் பதிந்து போய் விட்ட இக்காதல் கவிதையைப் பாராட்டிக் கூறிய போது அவருடைய கண்கள் மகிழ்ச்சியில் மின்னியதைக் கண்டேன்.

புதுமைப்பித்தன் முதல் என் நண்பன் எழுத்தாளர் பா.முருகானந்தம் வரை எத்தனையோ அற்புதமான எழுத்தாளர்களின் நூல்களை நான் வாசித்துப் பரவசப்பட்டிருந்தாலும் காதல் கதைகளைப் பொறுத்தவரை என் மனதுக்குப் பிடித்தமான எழுத்தாளர் என்றால்  அது பட்டுக்கோட்டை பிரபாகர் தான்,தமிழில் காதலை எழுத அவரைப் போல் வேறு எவருமில்லை என்பதே என் முடிவு.அவருடைய காதல் வாக்கியங்களை என் இதயத்தின் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறேன்.அவற்றுள் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

என்னிடம் இரண்டு உயிர்கள் இருந்தால் ஒன்றை உனக்குத் தருவேன்.இன்னொன்றை உனக்காகத் தருவேன்

உறங்காதிருந்தேன்-சுகம்-நினைவுகள்
உறங்கிப்போனேன்-சுகம்-கனவுகள்

என்னை நேரில் சந்திக்கும் உன்னை விட என்
மனதில் சந்திக்கும் உனக்குத் தான் சக்தி அதிகம்
என்பது உனக்குத் தெரியுமா?”


காதலின் சக்தி மகத்தானது.'கவிதையும், கானமும், சிற்பமுதற்கலைகளும் காதலர்க்கு மட்டும் கைவரப் பெற்றவை' என்று உரத்த குரலில் உணர்த்துகிறான் பாரதி. மேலும் மதம், இனம், மொழி, தேசம் போன்ற பேதப்படுத்தும் எல்லா எல்லைகளையும் கடந்து உலக மக்கள் அனைவரையும் காதலிக்க அழைக்கிறான். இரண்டு இதயங்களும் அன்பிலே தோய்ந்து, அன்பிலே நனைந்து, அன்பிலே தவழ்ந்து, அன்பிலேயே ஐக்கியமாவது தான் காதலின் இலக்கணம். காதலென்பது ஒரு மகாயக்ஞம். அது முனிவர்களின் தவத்தை விடவும் புனிதமானது. இந்த உலகத்திலேயே நம்மை விட சிறந்த காதலர்கள் யாருமே இல்லை என்ற எண்ணத்தில் தான் அத்தனை பேரும் மெய் மறந்து காதலிக்கிறார்கள். இருப்பினும்... முதல் மழை, முதல் காதல், முதல் முத்தம் என்பது எல்லாமே கவிதை நயத்துக்காக சொல்லப்படுவதுதானே தவிர உண்மை இல்லை. வயிற்றில் உணவு இல்லாத நேரத்தில் எல்லாம் பசி எடுப்பது போலவே மனதுக்கு உற்சாகமும், நம்பிக்கையும் தரும் ஒருவர் வந்து சேரும் போதெல்லாம் காதல் துளிர்த்துக் கொண்டே தான் இருக்கும். பதின்வயதில் தொடங்கி மரணம் வரையிலுமான எல்லா கட்டங்களிலும் பல்வேறு நபர்களிடம் காதல் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் குற்றஉணர்வு காரணமாகப் பலரும் மனதில் தோன்றிய காதலை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. குறிப்பாக, ஒரு முறை காதலில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் மனதுக்குள் காதல் மலரும் போது தங்களைத் தாங்களே அற்பமாக எண்ணிக் கொள்கிறார்கள். தங்கள் முதல் காதலுக்குத் துரோகம் செய்து விட்டதாக எண்ணிக் கலங்குகிறார்கள். புதிய காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மூலம் எதிர்காலத்தைத் தொலைத்து விடுகிறார்கள். காதல் மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும் என்ற உண்மை தெரிந்து விட்டால் இவர்கள் குற்ற உணர்வின்றிப் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடியும். புறத்தோற்றத்தைக் கண்டு வரும் காதல்... தோல்வியில் தான் முடியும். அழகு, நடை, உடை மற்றும் பேச்சு போன்றவற்றைக் கண்டு மனதைப் படிக்க முடிவது இல்லை. காதல்... மனசு சம்பந்தப்பட்டதே தவிர உடல் சார்ந்தது இல்லை. திருமணம் போன்ற விழாக்களில் இது போன்று நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகம். ஏனென்றால் பெண்கள் சிரத்தையுடன் அலங்காரம் செய்து கொண்டு பட்டாம்பூச்சியாய் வலம் வர... அந்தச் சூழலில் பெண்ணைப் பார்க்கும் எந்த இளைஞனுக்கும் மனம் படபடவென அடிக்கத்தான் செய்யும். இது ஈர்ப்பின்றி வேறில்லை. முதல் பார்வையிலேயே ஈர்த்தவரைக் காதலித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் வந்தால் முன்யோசனை தேவை... காரணம் எதைக் கண்டாலுமே கன்றுக்குட்டியாய்த் துள்ளிக் குதிக்கிற இளமையின் அவசரமாகவும் அது இருக்கக்கூடும்.

காதல் என்பது பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் மற்றும் தான் விரும்புபவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற புரிந்துணர்வும் உள்ளவரே.அத்தகைய  ஒரு ஆணோ பெண்ணோ தான்... தன் காதலரின் கரம் பிடித்து நடக்கத் தகுதியுள்ளவர். இந்த உலகில் நூற்றுக்கு எண்பது  சதவிகித காதல் திருமணம் வரை வருவதே இல்லை. சுமார் இருபது சதவிகித காதல் மட்டுமே திருமணத்தில் முடிகிறது. அப்படி நடந்த திருமணங்களிலும் சுமார் பத்து சதவிகிதம் வரை தோல்வி அடைகிறது. திருமணத்துக்குப் பிறகு தான் விரும்பியவரைக் காதலியாக அல்லது காதலனாகப் பார்ப்பது தான் தோல்விக்கு முக்கிய காரணமாகிறது. ஏனென்றால் காதலில் பொறுப்புகள் கிடையாது. பொருளாதார நிர்பந்தங்கள் என்பது இல்லை. நேரம், காலம் என்ற கட்டுப்பாட்டுக்குள் சிக்காதது. ஆனால் கணவன் மனைவி உறவுக்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அதனால் திருமணத்துக்குப் பிறகு இருவரும் கணவன் மனைவி என்ற வேடத்துக்குப் பொருத்தமாக மாற வேண்டும். பணம் சம்பாதிப்பது, சேமிப்பது, வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, குழந்தை வளர்ப்பது, பதவியில் உயர்வது என்ற சமூகக் காரணங்களுக்காக வாழ வேண்டும். இந்தத் தம்பதி வேடத்துக்குப் பொருத்தமாக தங்களை மாற்றிக்கொள்ளும் காதலர்களே  வாழ்வில் வெற்றி பெற முடியு‌ம். இல்லையெனில் ஏமாற்றமும், வேதனையும் வலியுமே மிஞ்சும். 
.


காதல் என்றால் என்ன?
எது இதயத்திற்கும் அறிவுக்கும் புதுசக்தியைக் கொடுக்கிறதோ, எது எல்லாவற்றையும், புதிதாகப் படைக்கிறதோ,எது ஒருவருக்குள் இசையையும்….கவிதையையும்உதிக்கச் செய்கிறதோ,எது ஒருவரின் குரலைக் கேட்டவுடன் உள்ளத்தைத் துள்ள வைக்கிறதோ,எது தன்னவர் சம்பந்தப்பட்ட எந்த மிக அற்பமான விஷயத்தையும் நினைவில் ஆழமாகப் போற்றிப் பாதுகாக்கச் செய்கிறதோ அது காதல்.
.


எப்போது ஒருவர் காதலுக்கு இலக்காகிறார்?
எப்போது ஒருவர் உடன் இருக்கும் போது உடம்பெல்லாம் கண்ணாகி அவர் அந்த இடத்தை விட்டுப் போனதும் ஞாபகசக்தியெல்லாம் மழுங்கி விடுகிறதோ,எப்போது இளமை என்பது ஜன்னல்களையே கவனித்துக் கொண்டு சங்கீதம்…….வண்டியின் சத்தம் இவற்றில் மூழ்கி விடுகிறதோ,பழைய நண்பர்களால் கொடுக்க முடியாத தோழமையை அவரது புதிய எண்ணங்கள் எப்போது தருமோ,எவ்வளவு தனிமையான இடமும் கூட்டம் நிறைந்ததாகவும்….எவ்வளவு சந்தடியற்ற இடமும் சத்தம் நிறைந்ததாகவும் தோன்றுமோ,இரவில் தலையணை மீது வைத்த தலை எப்போது கொதிக்குமோ,எப்போது நட்சத்திரங்கள் எழுத்துக்களாகவும்...மலர்கள் ரகசிய வார்த்தைகளாகவும்...தென்றல் பாட்டாகவும் தோன்றுமோ,எப்போது உலக காரியங்கள் எல்லாம் அர்த்தமற்றவையாகவும்...தெருவில் போகும் மனிதர்கள் எல்லாம் வெறும் படங்களாகத் தெரியுமோ,எப்போது கோழைக்கும் துணிவு பிறக்கிறதோ,தன்னை ஒருவருக்குக் கொடுப்பதன் மூலம் எப்போது புதிய உணர்வுகளும்...புதிய லட்சியங்களும் கொண்ட புதுமனிதராக உருவாகிறாரோ அப்போது அவர் காதலுக்கு இலக்காகிறார்.
Love is the basic criteria for all activities of mankind.



காதல் மிகப் புனிதமானது-இயல்பானது-இயற்கையானது.உலகை வெல்லும் மேன்மையை காதலே சாத்தியமாக்குகிறது.கௌரவக் கொலைகள் நடப்பதற்குக் காரணமான சில அரசியல்வாதிகள் "சாதி வளர்ச்சிக்காக, சாதியப்பகைகளுக்காக காதலி்க்கிறார்கள்" என மேடைகளில் முழங்குகிறார்கள்.ஆனால் உண்மையில் காதலர்களுக்கு அப்படிப்பட்ட எந்த உள்நோக்கமும் கிடையாது.மாறாக சாதித்தீயையும் வரதட்சணைக் கொடுமையையும் பெருமளவில் குறைத்ததில் காதலுக்கே பெரும்பங்கு.

காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்பவர்கள் காதலைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களே.ஏனெனில் உண்மையான காதலென்பது ஒருவருக்கு அசாத்தியமான மனஉறுதியையும் தன்னம்பிக்கையையுமே தோற்றுவிக்கும்.

காதலின் வெற்றி என்பது திருமணத்தில் போய் முடிவதிலா உள்ளது?உண்மையில் திருமணத்திற்குப் பிறகு எதிர்கொள்கிற ஏகப்பட்ட சவால்களில் அல்லவா இருக்கிறது.

சபரிவாசனின்,"நமக்குப் பிடிச்சவங்க கூட இருக்கறது மட்டும் அன்பு இல்ல. அவங்க நல்லதுக்காக அவங்கள விட்டு விலகியிருக்கறதும் அன்பு தான்" என்னும் வசனம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.விடைபெறுகிறேன் எனச் சொல்லும்  ஒருத்தியைக் கண்ணீருடன் முத்தமிட்டுக் கனிவுடன் கைகுலுக்கிப் பிரியும் ஓர் ஆணின் காதலே எல்லாவற்றையும் விட மகத்தானது.இது பெண்ணுக்கும் பொருந்தும்.

சுருங்கச் சொன்னால்-என்வரையில்-காதலென்பது- எந்த அகராதியுமே சரியாய் விவரிக்க முடியாத ஒரு மாய உணர்வு

25 comments:

  1. Omg awesome LK.
    How did you develop such a wonderful writing talent...
    Hats off LK.. Keep writing more...
    I guess your vorocious reading which you have developed religiously has helped you to write elegantly...��������

    ReplyDelete
    Replies
    1. Your feedback is always a great source of inspiration for me to write more.Thanks da Champi.

      Delete
  2. Really awesome Karthi. Kadhalai patriya purithal miga iyalbaga irukkirathu. Hema R

    ReplyDelete
    Replies
    1. Thanks for your time and comment Hema.So kind of you.

      Delete
  3. பசித்து ருசி – ருசியை ரசிப்பாய்
    வாசித்து ருசி – வாசிப்பை ரசிப்பாய்

    தோழன் லெ.கார்த்தி வாசிப்பின் ருசிப்பையும், ரசிப்பையும் குறித்து எழுதியதை ஏற்கனவே படித்து மெய் சிலிர்த்திருந்தேன்.
    இப்பொழுது காதலாகிக் கசிந்துருகிச் சொட்டியிருக்கும் தேனமுதைச் சுவைத்து மெய் மறந்துவிட்டேன்.

    என்ன ஒரு எழுத்து நடை ! அப்படியே ஆற்றொழுக்கு போல் சலனமற்ற நதியாய்ப் பாந்தாலும், ஆழ்மனதில் பல வினவலைகளை எழுப்பிவிடுகிறது. கட்டுரையில் எடுத்தாண்டிருக்கும் பல மேற்கோள்கள், கார்த்தியின் வாசிப்புத்தளம் எவ்வளவு விசாலமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு காதல் நதி (அட்லீஸ்ட் ஒரே ஒரு நதியாவது) எப்பொழுதும் ஓடிக்கொண்டேதானிருக்கும். என்ன ஒன்று, அது காதல் நதிதான் என்பதைப் பலரும் புரிந்து கொள்ள மறக்கிறோம் அல்லது மறுக்கிறோம். மறந்தாலும், மறுத்தாலும் அந்தக் காதல் நதி ஓடாமல் நின்றுவிடுமா என்ன ?

    காதலில் பல பரிமாணங்கள் இருந்தாலும், ஆத்மார்த்தமான காதலின் சுவாரஸ்யத்தை, இன்பத்தை, அனுபவத்தை, நம் எண்ணங்களில் உருவாக்கிடும் மாற்றங்களை – இப்படி பல நல்ல விஷயங்களை அற்புதமான மொழி நேர்த்தியுடன் சொல்லியிருக்கும் கார்த்திக்கு ஒரு ராயல் சல்யூட் !

    கட்டுரையில் எடுத்தாண்டிருக்கும் பல மேற்கோள்கள், கார்த்தியின் வாசிப்புத்தளம் எவ்வளவு விசாலமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

    லவ் யூ டா..!!!


    (பிகு: புதுமைப்பித்தன் போன்ற மாபெரும் எழுத்தாளரின் படைப்போடு என்னையும் ஓப்பிட்ட து கொஞ்சம் ஓவர்தான் பாஸ்  எனிவேஸ், என்னையும் ஞாபகம் வைத்திருந்தற்கு நெம்ப தேங்க்ஸ்பா..)

    ReplyDelete
    Replies
    1. நண்பா,உன் விமர்சனம் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.கோடானு கோடி நன்றிகள்.

      Delete
    2. Your wish is very special as you are a versatile writer and my happiness knew no bounds.I reiterate my thanks.

      Delete
  4. Such diversified factual understand about love. Need of the hour, wishing you a happy valentine's day Karthik Sir. Feeling blessed and happy to be in corner page of your good book.

    ReplyDelete
    Replies
    1. Dear Dr.Padmanaban,
      Your thoughtfulness is a gift i will always treasure.Thanks a lot as i'm touched beyond words.

      Delete
  5. காதலும் இவ்வளவு அழகா????
    காதலித்து பார்த்திருந்தாள் தெரிந்திருக்குமோ என்னவோ.....!!!
    சரி பரவாயில்லை உங்களின் வரிகளின் மூலம் புரிந்துகொண்டேன் காதலின் அழகை மற்றும் உன்னதத்தை....!!!

    நன்றிகள் கோடி....வாழ்த்துக்களுடன்.

    முனைவர் ல பிரகாஷ்

    ReplyDelete
  6. மிக்க நன்றி முனைவர் பிரகாஷ்

    ReplyDelete
  7. Wonderful writing and description on love Prof. Karthi. Amazing writing. God bless you

    ReplyDelete
    Replies
    1. Really delighted to see your comment Moses Sir.My happiness knew no bounds.Thank you so much.🙏

      Delete
  8. இனிமையான காதலை மிக அழகான உரைநடையாக அளித்தமைக்கு நன்றி..sir

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த நன்றி தென்னரசி மேடம்😊

      Delete
  9. Really Awesome writing sir.superrb sir.God bless you sir 💕

    ReplyDelete
  10. Excellent Narration about ❤️ Love. Keep writing.

    ReplyDelete
  11. எப்போது நட்சத்திரங்கள் எழுத்துக்களாகவும்----அருமையான கற்பனை -- வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த நன்றி மாமா😍

      Delete
  12. Awesome words about love and committed relationship your way of conveying is excellent sir. I understand that each line comes from your heart... Proud to be your student... 😇

    ReplyDelete
    Replies
    1. Thanks for your wonderful comment dear Flexia❤️

      Delete
  13. It's created a feeling while reading this poem on the valentine's day sir🥹
    The words you used as a real life in it.
    Happy to Read this sir

    ReplyDelete
    Replies
    1. I'm incredibly grateful for your thoughtfulness and appreciation.Thanks a lot dear Devu.😍

      Delete