Saturday, 15 October 2022

ஓவியர் ஜீவா - ஓர் பொக்கிஷம்!

பன்முகத்தன்மை கொண்ட ஓர் மகத்தான மனிதருடன் ஒரு நாள் முழுவதையும் செலவிட்டால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணிய போது - என் மனதில் தோன்றிய முதல் மனிதர் ஓவியர் ஜீவா தான்.ஓவியர் - புகைப்படக்கலைஞர் - எழுத்தாளர் – பேச்சாளர் - வழக்கறிஞர் - திரைப்படவிமர்சகர் - உணவுப் பிரியர் - தேசாந்திரி என எத்தனையெத்தனை முகங்கள் அவருக்கு.“ஓவியர் ஜீவாவுடன் ஓர் நாள்” என்னும் தலைப்பில் கட்டுரை எழுத எண்ணி அவரை அணுகி சம்மதம் வேண்டினேன்.சம்மதம் தெரிவித்தவர்…‘ஆனால் ஒரு நாள் மட்டுமென்றால் சுவாரஸ்யமாக இருக்காதே'  எனக் கூறவும்...தலைப்பை மாற்றி அவருடனான என் முக்கியச் சந்திப்புகளைத் தொகுக்கலாம் என முடிவெடுத்தேன்.கோவையில் செட்டிலாக வேண்டும் என நான் முடிவெடுத்தவுடன் எழுத்தாளரான என் நண்பன் முருகானந்தம்...இம்மாநகரில் வசிக்கும் இருவரை நீ நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.ஒருவர் 'எழுத்தாளர் நாஞ்சில் நாடன்' மற்றொருவர் 'ஓவியர் ஜீவா' என்றான்.என்னே என் பாக்கியம்! இருவருமே இப்போது என் நட்பு வட்டத்தில்.கூறியது மட்டுமல்லாமல் ஜீவாவை ஓர் தேநீர் சந்திப்பின் போது அறிமுகம் செய்தும் வைத்தான்.அவனது இரண்டு சிறுகதை நூல்களுக்கு முகப்போவியம் வரைந்து அவனுக்கு நன்கு அறிமுகமானவர் தான் ஜீவா.அறிமுகம் நட்பாக மலரத் துவங்கியவுடனேயே நாஞ்சில் நாடன் விருது விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பினார்.சமூக, கலை, இலக்கியத்திற்குத் தன் பங்கினை செவ்வனே ஆற்றுபவர்களில் ஆண்டுதோறும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சிறுவாணி வாசகர் மையம்' நாஞ்சில் நாடன் விருது வழங்குகிறது.இவ்விருது முதலில் வழங்கப்பட்டது ஓவியர் ஜீவாவிற்குத் தான்.நான் சென்ற விழாக்களிலேயே மிகச்சிறப்பான ஓர் விழா என இவ்விழாவைக் கூறலாம்.நாஞ்சில்நாடன், கண.சிற்சபேசன், வ.ஸ்ரீ எனப் பல படைப்பாளுமைகளின் பேச்சினிடையே ஜீவாவின் பேச்சு முத்தாய்ப்பாக அமைந்தது.தேசிய விருது பெற்ற அவரது திரைப்பட நூலான `திரைச்சீலை’ நூலினை நான் ஏற்கனவே வாசித்திருந்தமையால் அவர் ஓவியர் மட்டுமன்றி‌ சிறந்த எழுத்தாளரும் கூட என்பதை அறிந்திருந்தேன். இவ்விழாவில் அவர் ஆற்றிய உரையின் மூலம் அவர் ஒரு தேர்ந்த பேச்சாளர் என்பதையும் தெரிந்து கொண்டேன். 

Facebook மற்றும் Instagram ல் முனைப்புடன் இய‌ங்கிக் கொண்டிருப்பவர் ஓவியர் ஜீவா.தான் எடுக்கும் புகைப்படங்கள், சினிமா விமர்சனங்கள், அருந்தும் உணவுகள், செய்திகள், நிகழ்ச்சிகள்,அனுபவங்கள், நையாண்டிகள், நகைச்சுவைகள், கிண்டல்கள் அனைத்தையும் Post செய்வார்.அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே Social media வில் உண்டு.தினமும் அதிகாலையில் உக்கடம் ஏரி அல்லது Race course சாலையில் நடைபயிற்சி செய்வார்.பூபாள வேளையிலும்...சமயங்களில் அந்தியிலும் அவர் எடுத்து Post செய்யக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு கலாரசனையுடன் இருக்கும்.ஒரு துறையின் சிறந்த Professionals செய்யக்கூடிய வேலையை இவர் பொழுதுபோக்காகச் செய்து கொண்டிருக்கிறாரே எனத் தோன்றும்.அவருடன் நடைப்பயிற்சி செய்ய விருப்பப்பட்டு அலைபேசியில் அழைத்தேன்.நாளை காலை 5.45க்கு வாருங்கள் வாக்கிங் போகலாம் என்றார்.

5 மணிக்கே எழுந்து கிளம்பி விடுவோம் என்றெண்ணியிருந்த நான் அசந்து தூங்கி விட்டேன்.5.45க்கு அலைபேசி ஒலிக்கவே...எடுத்தால் மறுமுனையில் ஜீவா.எங்கிருக்கிறீர்கள் என்றார்? இதோ கிளம்பிவிட்டேன் எனக்கூறி அடித்துப் பிடித்து ஓடி...20 நிமிடத்தில் அவர் வீட்டில் இருந்தேன், நான், ஜீவா மற்றும் அவரது நண்பர் அப்துல் சமத் (20 வருடங்களுக்கும் மேலாக அவருடன் walking செல்பவர்)மூவரும் என் காரில் உக்கடம் ஏரிக்குச் சென்றோம்.வண்டியை நிறுத்தி விட்டு எங்கள் நடையைத் துவங்கினோம்.அதிகாலைக் குளிர்ச்சியும், தென்றல் காற்றும் தாலாட்ட உற்சாகமாக உரையாடிக் கொண்டே நடந்தோம்.ஏரியைச் சுற்றி வெறும் மணலாகக் கிடந்த இடம் தற்போது Smart-city க்காக எவ்வளவு மாறியிருக்கிறது என்று கூறிக்கொண்டே வந்தார்.கோவையின் புகழ்பெற்ற பேனர் ஓவியரான அவரது தந்தை திரு.வேலாயுதம் அவர்களின் திடீர் மறைவிற்குப் பிறகு...தான் பார்த்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு ஓவியத்துறையைத் தோந்தெடுத்ததைப் பற்றிக் கூறினார்.பள்ளிக்குச் செல்லாத நேரங்களில் புதிய படங்களின் வெளியீடுகள், அவற்றின் புகைப்படங்கள்,கட்அவுட்கள்,தியேட்டர்கள் என்ற சூழ்நிலைகளிலேயே தான் வளர்ந்ததையும் தந்தையுடன் பல்வேறு தியேட்டர்களுக்குச் சென்றதையும் அதன் விளைவாக அன்று எம்ஜி.ஆர், சிவாஜி என்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் சினிமா பார்க்கத் துவங்கி இன்று தினமும் ஒரு சினிமாவாவது(பெரும்பாலும் OTT-ல்) பார்த்து விடுவதாகக் கூறினார்.பின்னர்…உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள வாழ்வின் விளிம்புநிலை மனிதர்கள் வசிக்கும் Housing Boardல் தானும், மற்றபிற ஓவியர்களும் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பற்றிக் கூறினார். அதைக் காணவேண்டும் என என் ஆவலைத் தெரிவித்தவுடன்...உடனே அழைத்துச் சென்றார்.அங்குள்ள குடியிருப்புக் கட்டிடங்களில் ஓவியர்களின் பிரம்மாண்ட ஓவியங்களைக் கண்டு திகைத்தேன்.பல்வேறு வண்ணங்களில் வெவ்வேறு Concept களில் வரையப்பட்ட அவ்வோவியங்களிடையே ஜீவா அவர்கள் வரைந்திருந்த ஓவியத்தைக் கண்டேன்.அது ஓர் யானை ஓவியம்.மிகவும் தத்ரூபமாக இருந்தது.அந்த பிரம்மாண்டமான சுவற்றிற்கு ஏற்ற ஓவியம் தான் என எண்ணினேன்.குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு ஓவியருடன் சேர்ந்து தான் அதை வரைந்த விதத்தைச் சுவைபடக் கூறிக்கொண்டிருக்கும் போதே - அக்குடியிருப்பினுள் வசிக்கும் ஓர் பெண்மணி ஜீவாவை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்தார்.அப்பெண்ணின் ஆதுரமான பேச்சும், நலம் கேட்டலும் ஜீவா எனும் கலைஞனை அவர் எவ்வளவு தூரம் மதிக்கிறார் என்பதைப் புரிய வைத்தது.ஜீவாவையும், அப்துல் சமதையும் வீட்டில் Drop செய்வதற்கு முன்பாக ஜீவாவின் Favorite ஆன தேநீர்க் கடையில் தேநீர் அருந்தினோம்.விடைபெறும் போது Racecourse ல் எப்போது வாக்கிங் போகலாம் எனக்கேட்டேன்.சுதந்திர தினத்தன்று அதே நேரத்திற்கு வந்து விடுங்கள் எனக் கூறினார்.இந்த முறை சரியான சமயத்தில் எழுந்து உரிய நேரத்திற்கு அவர் வீட்டுக்குச் சென்று விட்டேன்.அப்துல்சமதையும் அழைத்துக் கொண்டு மூவருமாக Racecourseக்குப் பயணமானோம்.Racecourse-ல் வாக்கிங் செல்லவேண்டும் என்ற என் நீண்டநாள் ஆசை நிறைவேறியது மட்டுமல்லாமல் ஜீவா அவர்களுடன் இணைந்து செல்வதென்பது என் மகிழ்ச்சியைப் பன்மடங்காக்கியது.சுதந்திர தினமாதலால் எங்கும் தோரணங்களும், அலங்காரங்களுமாக இருந்தன.அந்த அதிகாலை நேரத்திலேயே ஓர் அரசியல் பிரமுகர் தன் கட்சி மேடையில் பேச்சைத் துவங்கியிருந்தார்.சுற்றிலும் அவரது அடிபொடிகள் சூழ்ந்திருந்தனர்.சற்று நேரத்தில் தேசியக்கொடி ஏற்றப்படப் போவதற்கான முஸ்தீபுகளும், ஒரு தட்டில் ஆரஞ்சு மிட்டாய்களும் தென்பட்டன.கண்ணிமைக்கும் நேரத்தில் ஜீவா புகைப்படங்கள் எடுக்கத துவங்கினார்.அவர் அலைபேசியைச் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போலத் தான் இருந்தது. ஆனால் மின்னல் வேகத்தில் நிறைய படங்கள் எடுத்திருந்தார்.Racecourse ஐச் சுற்றி வரச் சரியாக 3 கிலோ மீட்டர்.பேசிக் கொண்டே நடந்தோம்.Government arts college வழியாக வந்த போது அங்கு தான் P.U.C மற்றும் B.A (Political science)படித்ததாகக் கூறினார்.மேலும் அங்கு படித்த போது நடிகர் சத்யராஜ் தனக்கு ஒரு வருடம் சீனியர் என்னும் உபரித்தகவலையும் சொன்னார்.B.A முடித்து விட்டு சென்னை Presidency college ல் முதுகலைப்பட்டம் பெற்றதாகவும் அந்த 2 வருடங்கள் மட்டுமே கோவையை விட்டு விலகி இருந்ததாகவும் கூறினார்.கோவையின் மேல் உங்களுக்கு அப்படியென்ன தீராத காதல் என நான் கேட்டதற்கு 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சூழ்நிலை தான் காரணம்' என்று கூறியவர் 'முதுகலைப்பட்டத்திற்குப் பிறகு கோவை திரும்பி அதே ரேஸ் கோர்ஸ் பகுதியிலேயே 3 வருடம் சட்டம் படித்தேன்.முதல் செட்.நான் வெளியே வந்தவுடன் தான் அச்சட்டக்கல்லூரி மருதமலைக்கு இடம் மாறியது' என்றார்.

நான் ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் பன்னாட்டுத்துறைத் தலைவராகப் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஜீவா அவர்களைச் சிறப்பு விருந்தினராகப் பேச அழைத்திருந்தேன்.ஓவியம் பற்றிப் பேசினால் மாணவர்கள் பொறுமையாக அமர்ந்து கேட்பார்களா எனத் தெரியவில்லை.ஆகவே நான் சற்று நேரம் மட்டும் பேசி விட்டு அவர்களை. வரைந்து தருகிறேன் எனச் சொன்னார்.எத்தனை பேரை சார் வரைவீர்கள்? எவ்வளவு நேரம் பிடிக்கும்? எனக் கேட்டேன்.ஒருவரை வரைய 90 விநாடி போதும் எனக்கூறி என்னை ஆச்சரியப்படுத்தியவர்...சொன்னது போலவே 90 விநாடிக்கு ஒருவர் வீதம் பேராசிரியர்கள், மாணவர்கள் என 30 பேரை வரைந்து தள்ளினார்.அவரது வேகத்தையும், ஓவியத்தின் நேர்த்தியையும் கண்ட அனைவரும் அசந்து போய் அவரை வாழ்த்தினர்.ஜீவா அவர்களின் எளிமையையும், அலட்டலின்றிப் பழகக்கூடிய மனோபாவம் கொண்ட  குணத்தையும் கண்ட கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் தீனா அவர்கள்...இவ்வளவு சிம்பிளான ஒரு மனிதரை நான் கண்டதேயில்லை என வியந்தார்.அவர் அன்று வரைந்து தந்த 30 பேரில் நானும் ஓருவன். நான் என் வீட்டில் மாட்டி வைத்திருக்கக்கூடிய இரண்டு ஓவியங்களில் ஒன்று ஜீவா வரைந்த எனதோவியம் மற்றொன்று அவர் கைவண்ணத்தில் உருவான பாரதியின் எழிலோவியம்.


ஒரு முறை கோவை‌ Sugarcane Breeding Institute க்கு அருகில்‌ உள்ள Human Animal Society (HAS)க்கு ஓர் மதியப்பொழுதில் வருமாறு அழைப்பு விடுத்தார் ஜீவா.கல்லூரியில் Permission சொல்லிவிட்டு ஆர்வத்துடன் சென்றேன்.HAS என்பது தெருநாய்களைப் பிடித்து Infertile செய்து மறுபடியும் வீதியிலேயே விட்டுவிடக்கூடிய தன்னார்வத் தொண்டு நிறுவனம்.அங்கு கால்நடை மருத்துவர்களும்,செவிலியர்களும் மிகுந்த கருணை உள்ளத்துடன் நாய்களைக் கவனித்துக் கொண்ட விதம் என்னை நெகிழ்ச்சியடையச் செய்வதாய் இருந்தது.அந்நிறுவனத்தின் தலைவருடன் சற்று நேரம் உரையாடினேன்.நாய்களை Infertile செய்வது மட்டுமன்றி விபத்தில் ஊனமடைந்த நாய்களையும் எடுத்து வந்து அவை பூரணமாகக் குணமாகும் வரை சிகிச்சையளித்து பாதுகாப்பதைப் பற்றி விவரமாகக் கூறினார். அவருக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டு ஜீவா அவர்களுடனான தொடர்பு பற்றி வினவினேன்.ஜீவாவின் ஓவியத் திறமையையும், புகழையும் தான் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும்... அந்நிறுவனத்தின் நுழைவாயிலில் உள்ள சுவரில் நாய்களின் சித்திரங்களை(Bosch நிறுவன ஊழியர்களுடன் இணைந்து)வரைந்து தர அவரது உதவியை நாடியதாகவும் கூறினார்.நான் HAS-ஐ சென்றடைந்த போதே ஜீவாவுடன் Bosch ஊழியர்களும்(Volunteers) சேர்ந்து சுவர்களில் விதவிதமான‌ நாய் வடிவங்களை அற்புதமாகத் தீட்டிக் கொண்டிருந்தனர்.ஜீவா அவர்கள் என்னை அன்புடன் வரவேற்று அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.Am‍ateurish ஆன அவர்கள் ஆர்வத்தின் காரணமாகவே அங்கு வரைய வந்திருந்தனர்.இருப்பினும் Brush ஐப் பிடிப்பது முதற்கொண்டு...வண்ணங்கள் தீட்டுவது வரை அவர்களுக்கு சிறப்பாகப் பயிற்றுவித்தார் ஜீவா.முதன்முறையாக சிறந்த ஓவியர் ஒருவர் பயிற்றுவிப்பதையும், என் கண்ணெதிரே அழகழகான ஓவியங்கள் தீட்டப்படுவதையும் மிகவும் ரசித்தேன்.

மற்றொரு முறை அவினாசி ரோட்டில் உள்ள ஓர் அரங்கில் நிகழ்ந்த ஓவியக் கண்காட்சிக்கு அழைத்தார் ஜீவா.நான் என் குடும்பத்துடன் சென்று கண்டுகளித்தேன்.ஏராளமான ஓவியர்கள் தாங்கள் திறம்பட வரைந்திருந்த ஓவியங்களை அங்கு Display செய்திருந்தனர்.அவற்றுள் ஜீவா அவர்களின் சிறந்த ஓவியமும் ஒன்று.எல்லாவற்றையும் கண்ணுறும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது.இவ்வாறு ஜீவா அவர்களுடன் நெருங்கிப் பழகக்கூடிய தருணங்கள் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது என் பேறு.குறிப்பாக உணவுப் பிரியர்களின் Facebook குழு (தலை வாழை இலை) ஒன்றுண்டு(நான்,ஜீவாஉட்பட).நாங்கள் அவ்வப்போது பல்வேறு புகழ்பெற்ற,சிறப்புமிக்க,ருசிக்குப் பேர் போன உணவகங்களில் சந்தித்து அளவளாவுவோம்.

சமீபத்தில் ஜீவா அவர்களது இரண்டாவது திரைப்பட நூலான 'ஒரு பீடியுண்டோ சகாவே'வை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டது.இந்நூல் உலகத்திரைப்படங்கள் முதல் உள்ளுர் திரைப்படங்கள் வரை ஒரு புதிய வெளிச்சத்தை என்னுள் படர விட்டது.ஒரு தேர்ந்த ரசனையாளராகத் தான் ரசித்ததை...படிப்பவர்களும் உணர வேண்டும், குறிப்பிட்ட திரைப்படங்களைத் தேடிப்பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் வாசிக்கக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள நூல்.28 கட்டுரைகளும் தெளிவான, வசீகரமான நடையில் அமைந்தவை.படித்தவுடனேயே நூலில் குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்களை OTT-ல் பார்க்கத் துவங்கி விட்டேன்.அணிந்துரையில் எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் குறிப்பிட்டிருப்பது போல்…"இந்தக் கட்டுரைகளில் குறிக்கப்பட்டுள்ள திரைப்படங்கள், இயக்குநர், கலை இயக்குநர், இசையமைப்பாளர்,பாடகர்,ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர்,நடிகர், நடிகையர்,கதாசிரியர்,திரைக்கதை உரையாடல் எழுதியவர் எனப்பட்டோரின் அகவரிசைப் பட்டியலும்,அவர்கள் சார்ந்த சிறுகுறிப்புகளும் கோர்த்துத் தொகுத்தால் அதுவோர் ஆவணமாக அமையும்”.

முறைப்படி ஓவியக்கலையை கற்காதவர் ஜீவா.தானாகவே வரையத் தொடங்கி இதுவரை ஆயிரக்கணக்கான திரைப்படத்தட்டி ஓவியங்களும், புத்தகமுகப்பு ஓவியங்களும் வரைந்துள்ளார்.தன் தந்தை தொடங்கிய 'சினிஆர்ட்ஸ்' நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.ஜீவாவின் ஓவியங்கள் சித்திரகலா அகாதமியின் ஓவியக் கண்காட்சிகளில்...சென்னை, கோவை, பெங்களூர் போன்ற ஊர்களில் இடம் பெற்றுள்ளன. மாணவப் பத்திரிகையாளராகக் 'கல்கி' இதழிலும், மாலனின் 'திசைகள்' சிற்றிதழிலும் பணியாற்றியுள்ளார்.கனடாவிலிருந்து வரும் 'தாய்வீடு' பத்திரிகையில் தொடர்ந்து பல வருடங்கள் வரைந்ததால் அந்நாட்டுக்கே அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.தற்போது 'ஆவநாழி' இணைய இதழில்  இணை ஆசிரியர் ஆகப் பணியாற்றி வருகிறார்.

ஜீவா அவர்கள் பன்முகத்திறமை கொண்ட ஒரு நபராக விளங்கினாலும்... எல்லாவற்றையும்‌ விட என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமையும், அன்புள்ளமும் தான்.தான் இந்திய அளவில் மிகச்சிறந்த ஓவியர்களில் ஒருவர் என்ற எந்த கர்வமும் இல்லாதவர்.கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் இவருடைய தந்தையின் மாமா.அவரைப் போலவே நற்குணம் கொண்ட மாமனிதர்.அவர் மேலும் கொண்டாடப்பட வேண்டுமென்பதும், இன்னும் பல சாதனைச் சிகரங்களை அவர் தொட வேண்டுமென்பதுமே என் அவா. 

Thursday, 30 December 2021

நேர்காணல் : நாஞ்சில்நாடன்





நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் அவர்கள்.அவருடைய எழுத்துகள் மகத்தான மானுட விழுமியங்களும்,வாழ்வியல் பற்றும் மிக்கவை.சித்தரிப்பு நேர்த்தியும்,மொழியைக் கையாளும் உத்தியும்,சரளமாகக் கைவரக்கூடிய பகடியுமே அவரது எழுத்துக்களை ஜீவனுடன் வைத்திருக்கின்றன.விஜயா பதிப்பகம் வெளியிட்ட நாஞ்சில்நாடனின் நேர்காணல் தொகுப்பை வாசிக்க(என் கேள்வி உட்பட)நேர்ந்த போது...இத்தனை நேர்காணல்களில் கேட்கப்பட்ட கேள்விகளைத் தாண்டிப் புதிதாக என்ன கேட்பது என மிரட்சியாக இருந்தது.எனினும் நேர்காணலின் பெறுமதி என்பது கேள்விகளைப் பொறுத்ததல்ல...செறிவான பதில்களைப் பொறுத்தது என்பதை உணர வைத்தார் நாஞ்சிலார்.ஓர் கார்த்திகை மாதத்து அந்திப்பொழுதில் என் வீட்டிற்கு அவர் வருகை புரிந்திருந்த போது நிகழ்த்திய பதிவே இந்த நேர்காணல்...

1.எந்த இலக்கியப்பின்னணியும் இல்லாத குடும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று படைப்பாளிகளிடையே சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.இது எங்ஙனம் சாத்தியமாயிற்று?

சின்ன வயதிலிருந்தே வாசிக்கின்ற ஆர்வத்தை என் ஆசிரியர்களிடமிருந்து பெற்றேன்.7வது,8வது படிக்கும் போதே செய்யுள்களை மனப்பாடமாகச் சொல்வேன்.இப்போதிருக்கும் ஆசிரியர்கள் மனப்பாடப் பாடல்களை உரைநடையாகச் சொல்கிறார்கள்.ஆனால் அப்போதைய எனது ஆசிரியர்கள் பாடல்களை சந்தநயத்துடன்...ஒரு musicality உடன் பாடுவார்கள்.இருமுறை அவர்கள் பாடினாலே அப்பாடல் எனக்கு மனப்பாடமாகி விடும்.நான் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவனாக இருந்ததால் என்னைப் பேச்சுப்போட்டி,கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்வார்கள்.என் தந்தை ஐந்தாம் வகுப்பு ஃபெயில்.அவரிடம் என்னத்தைக் கேட்பது?ஆகவே நான் ஆசிரியர்களிடமே,நீங்க எழுதிக்கொடுங்க சார்,நான் மனப்பாடமாகச் சொல்லிவிடுகிறேன் என்பேன்.அவர்கள் பேச்சுப்போட்டிக்கு எழுதித் தருகிறபோது இரண்டு வரி பாரதி சொல்வார்கள்,பாரதிதாசன் சொல்வார்கள்,கவிமணி சொல்வார்கள்,நாமக்கல் கவிஞர் சொல்வார்கள்.இவற்றைப் படித்து மனப்பாடமாகச் சொல்வேன்.பின்னர் நானே இளம் வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டுரை எழுதித்தர ஆரம்பித்தேன்.13,14 வயதிலேயே நான் அரசியல் கூட்டங்கள் கேட்க ஆரம்பித்து விட்டேன்.பா.ஜீவானந்தம்,நாவலர் நெடுஞ்செழியன்,அன்பழகன்,ஈ.வே.ரா,காமராஜர்,கருணாநிதி,அண்ணாதுரை,பி.ராமமூர்த்தி,கல்யாணசுந்தரம் ஆகியோரது பேச்சுக்களை விரும்பிக் கேட்பேன்.எங்கள் ஊரில் இருந்த நூலகத்திற்குச் சென்று வாசிப்பேன்.பெண்கள் நூலகத்திற்கு வரமாட்டார்கள்.என்னை புத்தகம் எடுத்து வரச் சொல்வார்கள்.அப்படி எடுத்துக் கொடுக்கும்போது நானும் படித்து விடுவேன்.இங்ஙனம் ஆசிரியர்களும் எனக்கு வாய்த்த சூழ்நிலைகளுமே என்னை வளர்த்தெடுத்தது.'திசை நோக்கி தொழுகின்றேன்' என்று தினமணிக்கு என் ஆசிரியர்களைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதி இருக்கின்றேன்.

2)சிறுகதை,நாவல்,கவிதை என அனைத்துத் தளங்களிலும் சிறப்பாக இயங்குபவர் நீங்கள்...இருப்பினும் கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது போல் தெரிகிறதே?

என் முதல் கட்டுரையை 2000 ஆவது ஆண்டில் எழுதினேன்.எழுத்தாளராக என் முதல் சிறுகதை 'தீபம்' இதழில் வெளிவந்தது.என்னுடைய முதல் நாவல் 'தலைகீழ் விகிதங்கள்' 1977-ம் ஆண்டு வெளியானது.தொடர்ந்து 6 நாவல்களும்,5 தொகுப்புகள் சிறுகதைகளும் எழுதினேன்.2000 ஆவது ஆண்டில் சுந்தரராமசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு இலக்கிய முகாமில் 'நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை' எனும் கட்டுரையை எழுதினேன்.தலைப்பே சுந்தரராமசாமி கொடுத்தது தான்.நான் அந்த community ஐச் சேர்ந்தவன் என்பதால் அதைப் பற்றிய நல்லவைகள்,தீயவைகள் அனைத்தும் அறிவேன்.26 பக்கங்கள் கொண்ட அந்த கட்டுரை காலச்சுவடில் வெளியானது."இதை ஏன் ஒரு நூலாக develop செய்து எழுதக்கூடாது?...அதற்கான space இதில் இருக்கிறது" என்று சுந்தரராமசாமி என்னிடம் கேட்டார்.ஆக 120 பக்கங்களாக நான் எழுதிய அந்தக் கட்டுரை நூலை காலச்சுவடே வெளியிட்டது.பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Anthropology துறையைச் சேர்ந்த திரு.பக்தவத்சலபாரதி அவர்கள் தமிழ்மொழியில் community பற்றிய ஒரு study முதல்முறையாக,நுட்பமாக,கூர்மையாக இப்போது தான் வெளிவந்திருக்கிறது என்று கூறினார்.பின்னர் சுந்தரராமசாமி என்னிடம்...நீங்கள் சிறுகதையாகவோ,நாவலாகவோ எழுத முடியாததை ஏன் கட்டுரையாக எழுதக்கூடாது என்று கேட்டார்.அதை ஏற்று எழுதிய கட்டுரைகள் 'நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று' என்ற என் இரண்டாவது தொகுப்பாக வந்தது.தமிழினி அதை வெளியிட்டது.சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள்,உங்கள் observation ஐ மிகத் தெளிவாக எழுதுகிறீர்கள் என்றும் கட்டுரை இலக்கியத்திற்கு நீங்கள் ஒரு திருப்புமுனை என்றும் கூறினார்.கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள்,'நாஞ்சில்நாடன் கட்டுரை இலக்கியத்திற்கும் தன் பங்கை அருமையாகச் செய்திருக்கிறார்' எனக்கூறி விருது வழங்கிக் கௌரவித்தார்.மேலும் கட்டுரையை கதை போலவும்,கதையை கட்டுரை போலவும் வாசிப்புத் தரத்துடன் எழுதுபவன் நான்.எதை எழுதும் போது ஒரு எழுத்தாளராக என் திறமை முழுமையாக வெளிப்படும்படி எழுத முடிகிறதோ அதையே எழுதுகிறேன்.கட்டுரை எழுதுவது எனக்கு மிக comfortable ஆக உள்ளது.அது மட்டுமன்றி கட்டுரைகள் சிலவற்றை நான் எழுதாவிடில் தமிழில் அவை எழுதப்படாமலே போய் விடும்.





3)உங்கள் நூல்களைப் போலவே அவற்றிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளும் பிரசித்தி பெற்றவை.நூலின் தலைப்பிற்கான உங்கள் மெனக்கெடல்  என்ன?

சில நூல்கள் எழுதுகிற போது முதலில் தலைப்பைச் சூட்டி விடுவேன்.சில நூல்களுக்கு எழுதிய பிறகு தலைப்பைத் தேடுவேன்.தலைப்பென்பது நேரடியாக Pointblank ஆக நீங்கள் சொல்ல விரும்புவதை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை.தலைப்புக்கும் ஒரு கவர்ச்சி இருக்கு,ஒரு தேடல் இருக்கு.தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி அவர்கள் என்னிடம் பேசிய போது,'நாஞ்சில்நாடன்,என் மாணவன் ஒருவனை உங்கள் தலைப்புகளை மட்டுமே வைத்து MPhil செய்யச் சொன்னேன்' என்று கூறினார்.ஆக,தலைப்பு என்பது catchy ஆக இருக்க வேண்டும்.நூலுக்குள் உங்களை இழுக்க வேண்டும்.சமீபத்தில்...கனடாவிலிருந்து ஈழத்தமிழர்கள் நடத்தி வரும் "தாய் வீடு" என்னும் மாதாந்தரிக்கு நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு : நீலம் - நீலன் - நீலி.இந்த பூமியை எட்டு யானைகள் தாங்குது.அந்த எட்டு யானைக்கும் பெயர் உண்டு.மனைவியரும் உண்டு.இந்த எட்டு யானைக்கும் மதம் பிடித்தால் என்னவாகும் என்று நான் யோசித்ததன் விளைவே 'எட்டுத்திக்கும் மதயானை'.

4)வாழும் காலத்திலேயே உங்கள் பெயரில் 'சிறுவாணி வாசகர் மையம்' வழங்கும் 'நாஞ்சில் நாடன் விருது' பற்றிச் சொல்லுங்கள்?

'சிறுவாணி வாசகர் மையம்' என் பெயரில் விருது கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் நான் அதன் நிர்வாகிகளிடம் சொன்னேன்...'நான் இறந்த பிறகு கொடுங்கள்' என்று.அவர்களோ சிற்பி அவர் பெயரில் கொடுக்கத்தானே செய்கிறார் என்று சொல்லி நான் ஏற்கும்படி வேண்டவே ஒப்புக்கொண்டேன்.Sponsor வாங்கித்தான் விருது கொடுக்கிறார்கள்.ஒரு குழு அமைத்து இலக்கியம் என்றில்லாமல் கலை உலகத்துக்குத் தன் அர்ப்பணிப்பை செய்தவர்களுக்கு வருடாவருடம் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

5)நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான படைப்புகள் என்பதை உங்களின் பிரத்யேக அடையாளமாகக் கொள்ளலாமா?

எல்லா மொழிக்குள்ளேயும் வட்டாரம் சார்ந்த மொழி இருக்கு.மலையாளத்தில் தெக்கன் மலையாளம்னு சொல்வாங்க.அதெல்லாம் கொல்லத்துக்குத் தெக்க...நெய்யாற்றங்கரை வரை இருக்கக்கூடியது.வடக்கன் மலையாளம் என்றும் உள்ளது - கோழிக்கோடு பகுதியைச் சுற்றி.மாப்ளா Christians அவர்களுக்கும் ஒரு மலையாளம் உள்ளது.பிரதேசம் சார்ந்த மொழி வேறுபாடு எல்லா மொழிக்குள்ளேயும் இருக்கு.நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,வடஆற்காடு,தென்னாற்காடு,சென்னை மற்றும் கொங்கு மொழி,தொண்டை மண்டல மொழி,நடுநாட்டு மொழி ஒவ்வொன்றும் வெவ்வேறு.இதே போல் மகாராஷ்டிராவிலும் உள்ளது.ஒரு காலத்தில் சுத்தத்தமிழில் எழுதிக் கொண்டிருந்தார்கள்...மறைமலையடிகள், மு.வரதராசன், அகிலன், நா.பார்த்தசாரதி போன்றோர்.அது பொதுத்தமிழ்...அதே தமிழை வீட்டில் பேசமாட்டோம்.பின்னர் சண்முகசுந்தரம் போன்றவர்கள் கொங்கு nativity உடன் மொழியைக் கையாள ஆரம்பித்தார்கள்.மக்கள் பயன்படுத்தும் மொழியிலும் original ஆன சொற்கள் இருக்கு.நாஞ்சில் நாட்டிலேயே நான்கு வகையான மொழிகள் இருக்கு.ஐசக் அருமைராஜன்,சுந்தரராமசாமி,நாஞ்சில்நாடன்,கிருஷ்ணன் நம்பி,பொன்னீலன்,நீல.பத்மநாபன்,ஆ.மாதவன் இவர்கள் ஒவ்வொருவர் மொழியும் வெவ்வேறு.ஊருக்கு ஊர் மொழியில் வேறுபாடு உள்ளது.ஆக,எதற்கு என் மொழியை compromise செய்து கொள்ள வேண்டும்?வட்டார வழக்கின் மூலமாக எங்களை classify செய்வதற்கு எதிராக நானே நாலைந்து கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.


6)'எட்டுத்திக்கும் மதயானை'க்குப் பிறகு நீங்கள் ஏன் நாவல் எழுதவில்லை?

1975ல் இருந்து என்னுடைய பங்களிப்பு : 6 நாவல்கள் - 156 சிறுகதைகள் - 170 கவிதைகள் மற்றும் 400 கட்டுரைகள்.1998ல் 'எட்டுத்திக்கும் மதயானை' நாவலை எழுதினேன்.24 வருடமாகி விட்டது.என் காலம் முடிவதற்குள் கண்டிப்பாக ஒரு நாவல் எழுதுவேன்.என் தாத்தா - அப்பா - நான் என மூன்று பாகமாக எழுதும் எண்ணம் உள்ளது.எங்கள் மூவர் வாழ்விலும் மூன்று வெவ்வேறு தலைமுறைகளில் நிகழ்ந்த சம்பவங்களைக் கோர்த்து நாவலாக வடிவம் கொடுக்க உள்ளேன்.நம்மிடம் 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன.அவை பற்றிய ஒரு அறிமுக நூல் எழுதினேன்.நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை பற்றி எழுதினேன்.கம்பனின் சொல் ஆளுமை பற்றித் தனி நூல் எழுதினேன்.இவ்வாறு பல கட்டுரை நூல்களை எழுதியதாலேயே நாவல் எழுதுவதில் ஓர் பின்னடைவு ஏற்பட்டு விட்டது.

7)'எனது நோக்கம் மேம்பட்ட வாசக நிலை' என்று முன்னர் ஓர் நேர்காணலில் கூறியிருந்தீர்கள்.அத்தகைய மேம்பட்ட நிலையை வாசகர்கள் அடைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?

First and foremost i am a reader.ஒரு வாசிப்பாளராக இருந்து தான் நான் எழுத்தாளரானேன்.என்னுடைய எழுத்துக்களை - உலகளாவிய மொழிபெயர்ப்புகள் மூலமாகவும்,ஆங்கிலத்தின் மூலமாகவும்,தமிழில் நேரடியாக வாசிக்கின்ற எழுத்துக்கள் மூலமாகவும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது ஒரு உன்னதமான எழுத்தை நோக்கித்தான் நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன் - வாசகன் என்னும் முறையில்.அப்படிப் பார்க்கின்ற போது பழந்தமிழ் இலக்கியங்கள் என்ற எல்லைக்கெல்லாம் வந்து சேரமுடியுமான்னு சொல்ல முடியவில்லை.அதை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு தான் என் எழுத்தையே கட்டமைக்க நான் முயற்சி செய்கிறேன்...atleast an attempt towards them.இதை எல்லா மொழியிலேயும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.எப்பவுமே நுட்பமான வாசகர் என்பவர் எல்லா மொழியிலேயும் minority தான்.மொழியில் நுட்பமாக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் ஒரு புத்தகம் 500 காப்பி விற்பதற்கு 5 வருடம் ஆகின்றது.ஆனால் ஒரு சினிமாக்காரர் புத்தகம் எழுதினால் ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் காப்பி விற்றுத் தீர்கிறது.இது ரசிகனுடைய மேம்பாடுன்னு நான் கொள்ள மாட்டேன்.இது வந்து running after popular personalities.ஆனால் மொழியினுடைய நுட்பங்கள் அவர்களுடைய படைப்பில் இல்லை.அது வேறு எங்கேயோ இருக்கு.அவர்களை நான் தப்பு சொல்லவில்லை;குறை சொல்லவில்லை.நான் கேட்கிறேன் - சினிமா சம்பந்தப்பட்ட ஒரு எழுத்தாளருடைய புத்தகம் லட்சக்கணக்கில் காப்பி விற்கிற போது மற்ற எழுத்தாளர்களுடைய புத்தகம் பத்தாயிரமாவது விக்கணும்ல...பத்தாயிரத்தை விடுங்க...மூவாயிரமாவது விக்கணும்ல - முன்னூறு தானே விக்குது.அப்போ...இது ஒரு வாசக மேம்பாட்டு நிலைன்னு கொள்ள மாட்டேன்.நான் தனிப்பட்ட முறையில் பேசவில்லை.கண்மணி குணசேகரனோ,அழகிய பெரியவனோ,தேவிபாரதியோ,கீரனூர் ஜாகிர்ராஜாவோ,எஸ்.செந்தில்குமாரோ,எம்.கோபாலகிருஷ்ணனோ,குமாரசெல்வாவோ...அந்தத் தரத்துக்கு ஏன் வாசகநிலை வரமாட்டேங்குது?அதனால் மொழியில் நல்ல வாசகரென்பவர் nucleus minority தான்.ஏழரை கோடி பேர் தமிழ்நாட்டில் வாழ்கிறோமென்றால் 60 வருடத்திற்கு முன்னால் கையினால் அச்சுக்கோர்க்கப்பட்ட காலத்தில் ஒரு புத்தகத்துக்கு 1200 காப்பி அடிச்சாங்க.இப்போது 250 காப்பி தான் அடிக்கிறாங்க.Population has doubled and tripled.அதற்குத் தகுந்தாற் போல் அதிகரிக்கத்தானே செய்துருக்கணும்?ஆனாலும் நுட்பமான வாசகர்கள் எல்லா காலகட்டத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்கள் தான் எங்களை உயிரோடு காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்...not that out of their income we live...out of their moral support and strength we survive.

8)இப்போதைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தருபவர் யார்?

நான் மூன்று விதமாகப் பார்க்கிறேன்.என் வயதொத்தவர்கள்...ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,சாருநிவேதிதா,ஷோபா சக்தி,கோணங்கி போன்றோர்.அடுத்த காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என எம்.கோபாலகிருஷ்ணன்,கண்மணி குணசேகரன்,கீரனூர் ஜாகிர்ராஜா,அ.வெண்ணிலா,குமார செல்வா,உமா மகேஸ்வரி,அழகிய பெரியவன்,தமிழ்நதி போன்றவர்களைப் குறிப்பிடுவேன்.இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நிறைய பேரர் இருக்கிறார்கள்.சுரேஷ் பிரதீப்,சுரேஷ் மான்யா,வேல்முருகன் இளங்கோ,சுனில் கிருஷ்ணன்,கே.என்.செந்தில்,இசை,ராம்தங்கம்,காளி பிரசாத் மற்றும் ஈழத்துப் படைப்பாளிகளான அகரமுதல்வன், டி.கே.தமிழன்,                    குணா கவியழகன்,வாசு முருகவேல், சயந்தன் ஆகியோரையும் குறிப்பிடுவேன்.இப்போது ஈழத்துப் படைப்புகள் மிகுந்த திராணியோடு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.நான் அனைவருடைய படைப்புகளையும் up-to-date ஆக படித்துவிட்டுத் தான் தீர்மானிக்கிறேன்.தற்சமயம் நினைவுக்கு வரும் படைப்பாளிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.இன்னும் பல எழுத்தாளர் பெயர்களை சேர்க்க இயலும்.


9)உங்கள் நாவல்களில் வரும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் உங்களின் சொந்த அனுபவம் தானா?

பெரும்பாலும் என்னுடைய அனுபவங்கள் தாம்.ஒன்று என்னுடைய அனுபவமாக இருக்கணும் அல்லது அந்த சம்பவத்துக்கு நான் சாட்சியாக நின்றிருக்கணும்.அனுபவத்தை அப்படியே மறுபதிவு செய்வதல்ல இலக்கியம்.அனுபவத்தின் மீது நாம் ஏற்றக்கூடிய கற்பனை மட்டுமல்ல.சில காலம் எடுத்துக்கொண்டு அந்த அனுபவத்தை திரும்பிப் பார்க்கும் போது அது எந்த rangeல் மனதில் தோன்றுகிறது என்பதையும் பொறுத்தது.இப்ப எனக்கு ஒரு தரப்பு இருக்கு.அதற்கு எதிரிடையான இன்னொரு தரப்பும் இருக்கும்.இந்த இரண்டையும் பொதுவாகப் பார்க்கக்கூடிய பொறுப்பு ஒரு எழுத்தாளனுக்கு இருக்கு.ஒரு முறை office tourல் பேருந்தில் நாமக்கல் அருகே வரும் போது நடுரோட்டில் ஒரு குதிரை வண்டி நிக்கிது.குதிரை நகர மாட்டேங்குது.சாட்டை எடுத்து அடிக்கிறான் அந்த பையன்.அப்பன் நோய்வாய்ப்பட்டிருக்கலாம்.அதனால் மகன் வண்டி ஓட்ட வந்திருக்கலாம்.பின்னாலிருந்து பேருந்து ஓட்டுனர் ஹாரன் கொடுக்கிறார். Traffic jam ஆகி விட்டது.போலீஸ்காரர் சென்று பார்க்கிறார்.'குதிரை போக மாட்டேங்குது சார்,நான் என்ன செய்வது?' என்கிறான் பையன்.எனக்கு நாமக்கல்லில் வேலை இருக்கு.நான் அங்கு போய் தான் சாப்பிடணும்.நேரம் போய்க்கொண்டிருக்கிறது.இது என்னுடைய கோணம்.இன்னொரு கோணமும் இருக்கிறது.அது குதிரையின் கோணம்.காலில் வலி இருக்கலாம்,நோய்வாய்ப்பட்டிருக்கலாம் அல்லது 'என்ன மண்ணாங்கட்டிக்கு இவனுக்குக் காலம் பூரா நான் வண்டி இழுக்கணும்.வனத்தில் இருந்த என்னை வண்டியில் பூட்டி தீவனம் மட்டும் தான போடுற' என்ற எண்ணம் தோன்றியிருக்கலாம்.ஆக அனுபவத்தின் மீது நமது பார்வையே இலக்கியம்.

10)கும்பமுனி கதாபாத்திரத்தை நீங்கள் படைக்கக் காரணம் என்ன?

கும்பமுனியினுடைய வயது,உருவம் ,தோற்றம் எல்லாமே  நான் என்னுடைய மூத்த எழுத்தாளரான நகுலன் மாதிரியான ஒருவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்.அவரை சேர்ந்து அவருக்கு மேல் என்னை நான்  super impose செய்கிறேன்.தற்சமயம் கும்பமுனியினுடைய வயது,உருவத்துடன் நான் பொருந்திப் போகவில்லை.இன்னொரு பத்து வருடம் கழித்து நானே கும்பமுனியாகலாம்.இப்படி என்னை நான் project பண்ணிப் பார்க்கிறேன்...அப்போது என்னுடைய குணாம்சம் எப்படி இருக்குமென்று?நான் எப்படி react பண்ணுவேன் என்று?இரண்டாவது i always have a criticism on social aspects ...அரசியல்,இலக்கியம்,சமூகம் மற்றும் இன்ன பிறவும்.இதை எப்படி சிறுகதையாக எழுதுவது?கும்பமுனி மற்றும் தவசிப்பிள்ளை(சமையற்காரர்) இவர்கள் இரண்டு பேருடைய உரையாடல்கள் மூலம் என்னுடைய ஆங்காரம் முழுவதையும் நான் பேச முடியும்.முன்பின் யோசியாமல் சமூக அவலங்களை வலுவாகச் சாட முடியும்.இதுவரை நான் 32 கும்பமுனி கதைகள் எழுதி இருக்கிறேன்.பெங்காலி எழுத்தாளர் Sharadindu Bandyopadhyay துப்பறிகின்ற கதாபாத்திரம் ஒன்றை வைத்துக் கொண்டு 32 கதைகள் எழுதியிருக்கிறார்.அவர் இறந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.அவருடைய கதைகள் சிலவற்றை சத்யஜித்ரே கூட திரைப்படமாக எடுத்திருக்கிறார்.So i am at par with his record.இன்னும் ஒன்றிரண்டு கும்பமுனி கதைகள் எழுதினேன் என்றால் இந்திய அளவில் இரண்டு கதாபாத்திரங்களை வைத்து கதைகள் எழுதியதில் முதன்மை இடத்தில் இருப்பேன்.

11)நீங்கள் மிகச்சிறந்த உணவு ரசிகரென்பது தெரியும்.நாஞ்சில் நாட்டு உணவுப்பழக்கம் தான் உங்களின் உணவு ஈடுபாட்டிற்கான காரணமா?

ஒரு நேர்காணலில் என்னை ஒரு கேள்வி கேட்டார்கள்...எது சிறந்த உணவு என்று?நான் சொன்னேன்...'உங்கள் பசி தான் அதைத் தீர்மானிக்கும்' என்று.சிறு வயதில் 20 மைல் தூரத்தில் கடல் இருக்கக்கூடிய இடத்தில் வாழ்ந்தேன்.அதனால் மீன் எங்களுக்கு முதன்மையான அசைவம்.வீட்டிலேயே கோழி வளர்ப்போம்.கோழி தலையைத் தொங்கப் போட்டதென்றால் அன்றைக்கு அது குழம்பு.ஆடு என்பது எங்களுக்கு வருடத்திற்கே ஒன்றிரண்டு முறை தான்.கோயில்கொடைக்கு ஆடு வெட்டினாலோ அல்லது தீபாவளிக்கு பங்கு எடுத்தாலோ தான் உண்டு.நான் மலேஷியா போயிருந்தபோது அங்கிருந்த தமிழ்சங்கத் தலைவர் எங்களுக்கு மான்கறி வாங்கிக் கொடுத்தார்.மிக ருசியாக இருந்தது.அங்கு மான்கறி தடை செய்யப்பட்டதல்ல.அது போல டொரோண்டோவில் நான் இருந்த போது மாட்டுக்கறியை சிறிதுசிறிதாக வெட்டி தீயில் சுட்டு bread ல் வைத்தத் தந்தார்கள்;தின்றேன்.அமெரிக்கா சென்றிருந்த போது  என் மகன் சூசி(Sushi  - Uncooked meat but marinated) சாப்பிடுறியாப்பான்னு கேட்டான்.எதுக்கு தெரிஞ்சிக்கிட்டு பச்சை மாமிசத்தை போய் சாப்பிடணும்னு நான் வேண்டாம்பான்னு சொல்லி விட்டேன்.பின்னர் கனடா போயிருந்த போது உஷா மதிவாணன் வீட்டில் தங்கினேன்.அவருடைய பெண்ணும்,மாப்பிள்ளையும் என்னை ஒரு ஜப்பானிய உணவு விடுதிக்கு அழைத்துப் போனார்கள்.நன்றாக ஆர்டர் செய்தார்கள்.சாப்பிட்டு முடித்தவுடன் உணவு எப்படின்னு கேட்டாங்க?    பிரமாதம்னு  சொன்னேன்.இதான் அங்கிள் சூசின்னா ங்க.So,detail தெரிகிற போது we object,தெரியாத போது we enjoy.அப்புறம் ஜப்பான் போன போது சூசி சாப்பிடலாம்யான்னு டோக்கியோ இரா.செந்திலிடம் வாங்கிக் கொடுக்கச் சொல்லிச் சாப்பிட்டேன்.ஆக,நமக்கு மனதளவில் உணவு பற்றிய blocks  இருக்கக்கூடாது.எங்கள் நாஞ்சில் நாட்டு பயிர்...நெல்,தென்னை மற்றும் வாழை.குழந்தைகள் உணவாகத்தான் நாங்கள் ராகி கூல் கொடுத்தோம்.கேழ்வரகை அங்கு 'கூரவு' என்று சொல்வாங்க.சோளமெல்லாம் நாங்கள் சாப்பிட்டதேயில்லை.பனங்கிழங்கு, நுங்கு, பனம்பழம், பதநீர், கருப்பட்டி ஆகியவை சாப்பிட்டோம்.எங்க அம்மா வாழும் நாள் வரை கடலை எண்ணெய் தொட்டதில்லை.அவங்க பிறந்த ஊர் நெடுமங்காடுக்கு அருகில் உள்ள காட்டாக்கடை.அங்கேயும்,நாகர்கோவில்லேயேயும் தேங்காய் மலிவு.ஆக எங்களுக்கு கடலை எண்ணெய்க்கான தேவை இல்லை.தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் மட்டும் தான்.வடநாட்டில் கடுகெண்ணெய்யில் தான் சமைக்கிறார்கள்.அது எனக்குப் பிடிக்கவில்லை,வாந்தி வருகிறதென்று நான் சொன்னால் அவன் தேங்காய் எண்ணெய் பற்றிச் சொல்வான்ல.சோளரொட்டி - அதை 'பாக்ரி' ன்னு மஹாராஷ்டிராவில் சொல்வாங்க.கல்லில் போட்டு சுட்டெடுப்பார்கள்.வெங்காயம்,வத்தல் மிளகாய்,புளி சேர்த்த காரசட்னியுடன் சாப்பிட்டால் அமிர்தம்ங்க அது.எனக்கு என்னுடைய புளிசேரி,அவியல் மீது பிரேமை உண்டு.ஆனால் எதையும் தாரதம்மியப்படுத்திப் பார்க்கக்கூடாது.


 

12)இன்றைய இளைஞர்களின் வாசிப்புப் பழக்கம் திருப்திகரமாக இருக்கிறதா?

ஒரு வகையில் சினிமாவும்,Whatsapp  சமாச்சாரங்களும் negative ஆன வேலை தான் பண்ணிக்கிட்டிருக்கு.Whatsapp செய்திகளைப் படித்தால் போதும்  என்ற எண்ணம் தான் இருக்கிறது.ஆனால் எல்லாக் காலத்திலேயும் வாசிக்கக்கூடிய இளைஞர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.நான் படிச்ச காலத்திலேயும் சரி,இப்ப இருக்குற காலத்திலேயும் சரி.பெற்றோர்களுடைய வழிகாட்டுதலும் இதில் முக்கியபங்கு வகிக்கிறது.பாடப்புத்தகங்களுக்கு வெளியே தங்கள் பிள்ளைகள் படிப்பதை அவர்கள் விரும்ப மாட்டேங்குறாங்க.Reading என்பது பாடப்புத்தகம் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.நிறைய வீடுகளில் செய்தித்தாள் கூட வாங்குவதில்லை.மலையாளிகளின் ஜனத்தொகை மூணே முக்கால் கோடி.மலையாள மனோரமா,மாத்ருபூமி,தேசாபிமானி,கேரள கௌமுதி என அவர்களுடைய செய்தித்தாள்களின் circulation 75 இலட்சம்.ஆனால் ஏழரை கோடி தமிழன் 25 இலட்சம் செய்தித்தாள் தான் வாங்குகிறான்...தினமணி,தினமலர்,இந்து தமிழ்திசை,தினத்தந்தி,மாலை முரசு எல்லாம் சேர்த்து.இது நாம் யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா?என் பெண்ணும்,மாப்பிள்ளையும் வேலைக்குப் போயிருக்கிற போது என் பேரன்களை walking அழைத்துச் செல்வேன்.அப்போது அவர்களுக்குத் தாவரங்களையும்,பறவைகளையும் காண்பித்துப் பெயர்களை சொல்லித் தருவேன்.நெருஞ்சி, நாயுருவி, குருக்கு, எருக்கு என இருபதுக்கும் மேற்பட்ட தாவரங்களின் பெயர்களும்...மைனா, கருங்குருவி,தேன்சிட்டு, சிட்டுக்குருவி,காகம்,செம்போத்து, கிளி, புறா, மயில் என பறவைகளின் பெயர்களும் அவர்களுக்குத் தெரியும்.நான் என்னுடைய மேதமையைச் சொல்ல வரவில்லை...இதெல்லாம் குடும்பத்தில் மூத்தவர்கள் சொல்லித் தர வேண்டியது.கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி தான் நாம் குழந்தைகளை வளர்க்கிறோம்.புத்தகங்களை அவர்கள் தொட்டுப் பார்த்தால் தொடாதே,கிழிஞ்சிடும்னு சொல்றாங்க.நான் சொல்வேன்...கிழித்தால் கிழிக்கட்டும் வேறொன்று வாங்கிக்  கொள்கிறேன் என்று.National Book Trust ல்  16 ரூபாய்க்கும்,18 ரூபாய்க்கும் சிறுவருக்குப் புத்தகங்கள் கிடைக்கிறது.வாங்கிக் கொடுங்கள்.திரைப்படங்களும்,கைபேசியும் பெரிய அளவில் வாசிப்புப் பழக்கத்தைச் சீரழிக்கின்றன.

13)உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைத்து விட்டதாக நம்புகிறீர்களா?

ஒரே ஒரு வாக்கியம் தான் : 'கடமையைச்  செய்,பலனை எதிர்பாராதே'.அங்கீகாரம் என்ற சொல்லிற்குப் பின்னால் அதிகாரம்,அரசியல்,இனம்,மதம்,ஜாதி எல்லாம் இருக்கு.அங்கீகாரம் எல்லாம் எதிர்பார்த்து எந்த எழுத்தாளனும் எழுத வரவில்லை.என்னைப் பொருத்தவரைக்கும் தாமதமாகக் கிடைத்தாலும் ஓரளவுக்குக் கெளரவம் கிடைச்சிருக்கு.எவருடைய பரிந்துரையும் இல்லாமல் 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்தது.எனக்கு 5 MP க்களை தெரியும்.ஆனால் எவரிடமும் சென்று  ஒரு 'டீ' கூட வாங்கிக் குடித்ததில்லை.எனக்குக் கிடைக்கக்கூடிய மரியாதைகள் என் தகுதி காரணமாகக் கிடைத்தால் சந்தோஷம்.கிடைக்காமல் போனால் கூட வருத்தப்பட்டுச் சோர்வடைய மாட்டேன்.என் தகுதி மற்றும் தரத்தைத் தீர்மானிப்பதற்கு வாசகர்கள் இருக்கிறார்கள்.அவர்களை நான் சந்திக்காமலே கூட இருப்பேன்.12 நாடுகளுக்கு என்னைப் பேச அழைத்திருக்கிறார்கள்.இது எனக்குக்  கிடைத்த அங்கீகாரம் தானே.இதுவரை 100 பேருக்காவது முன்னுரை எழுதி இருக்கிறேன்.ஆக,என்னை மதித்துத் தானே வந்து கேட்கிறார்கள்.கோரி,நயந்து, அணுகி பெறக்கூடிய அங்கீகாரங்கள் இருக்கு.எல்லா மொழியிலேயும்,எல்லா காலத்திலேயும் இருக்கு.எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல.ஆனால் நான் கேட்கிறேன்...வருடந்தோறும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு பத்மஸ்ரீ விருதுகள் கொடுக்கப்படுகின்றன?இலக்கியத்துக்காக தமிழில் எத்தனை பேருக்குக் கொடுத்திருக்கிறார்கள்?சினிமாக்காரர்களுக்குக் கொடுத்ததை இலக்கியமென்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்.பத்மஸ்ரீ என்கிற விருது பெறுவதற்குத்  தி.ஜானகிராமனோ, சுந்தரராமசாமியோ, மௌனியோ, லா.ச.ராமாமிருதமோ,புதுமைப்பித்தனோ,கி.ராஜநாராயணனோ,அசோகமித்திரனோ தகுதி இல்லாதவர்களா? ஆக இது அரசியல்.பத்து வருடத்துக்கு முன்பு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது.கோவையில் வாழும் எனக்கு ஒரு அழைப்பிதழ் கூட வரவில்லை.நான் கேட்கிறேன்...தகவலறியும் சட்டத்தின் கீழ் - இதுவரை தமிழ்நாடு அரசாங்கம் நடத்திய உலகத்தமிழ் மாநாடுகளுக்கு(எந்தக்  கட்சியாகவும் இருக்கட்டும்)எந்தெந்த எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பட்டியல் கேட்டுப் பாருங்கள்...பெரும்பாலும் கல்லூரிப் பேராசிரியர்களாகத்தான்  இருப்பார்கள்.அவர்கள் தான் அறிஞர் எனும் தகுதி பெற்றவர்கள் அரசாங்கத்துக்கு! எழுத்தாளர்களைத் தெரிவதில்லை.வாசித்தால் தானே தெரியும்.

"கனியேனும் வறிய செங்காயேனும்                                                                  உதிர்சருகு கந்தமூலங்களேனும்                                                                    கனல்வாதை வந்தெய்தின்                                                                            அள்ளிப்புசித்து நான்                                                                                                     கண்மூடிமௌனியாகித்                                                                                                  தனியே இருப்பதற்கு ண்ணினேன்                                                                     எண்ணமிது சாமி நீயறியாததோ?"

என்று தாயுமானவர் பாடியது போல் மனநிலை வாய்க்கப்பெற்றால் தான் இங்கு தீவிர எழுத்தாளனாக இயங்க முடியும்.






Saturday, 31 July 2021

நட்பெனப்படுவது...

இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி. அது போல் நண்பர்களே மனித வாழ்வின் பிரதிபலிப்புகள்.
                 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
                 அகநக நட்பது நட்பு
- என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.
நட்பு - தோழமை - சிநேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் இனிய உறவு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றிப் புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. காதல் என்னும் உறவு எவ்வாறு நம் மனதிற்குள் பூ பூக்கச் செய்கிறதோ அவ்வாறே நட்பெனப்படுவது நம் மனதுள் புத்துணர்ச்சியைப் பொங்கச் செய்கிறது. ஏனெனில் இவ்விரு உறவுகளும் நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது... மற்றவையனைத்தும் நமக்கு இயற்கையாய் அமைந்த உறவுகளே. நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரம்பற்ற வீணைக்குச் சமம். ஆழமான அன்பே அழுத்தமான நட்புக்கு அணிகலன்.ஒரு நண்பன் ஒரு நூலகத்திற்குச் சமம். அவன் தந்தையைப்போல் இடித்துரைப்பவன்; தாயைப்போல் ஈடில்லா அன்பு கொண்டவன்.

புராணக் கதாபாத்திரத்தில் நட்பிற்குப் பெயர் பெற்றவன் கர்ணன். பெற்ற தாயால் குழந்தையிலேயே புறக்கணிக்கப்பட்டு தேரோட்டி மகனாக வளர்ந்தவன். பிறப்பறியாப் பாவத்துக்காகப் பழி சுமந்து நின்றவன். வில்வித்தையில் அர்ஜுனனுக்கு நிகரானவன். விஜயனுக்கு எதிராக வில் எடுத்த போது, கீழ்குலத்தில் பிறந்தவனுக்கு ஆயுதம் ஏந்தும் அருகதை இல்லை என்று கிருபாச்சாரியாரால் அவமானமுற்றவன். 'வேள்வித்தீயில் இடப்படும் பொருளை எடுத்து உண்ணும் உரிமை நாய்க்கு இல்லை' என்று பீமனால் ஏளனம் செய்யப்பட்டவன். அவனது இழிநிலை துடைத்து அங்கதேசத்தின் அரசனாக அவனுக்குப் பட்டம் சூட்டினான் துரியோதனன். இருவரும் நட்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்கள்.ஆயிரம் குறைகளை உடையவனாகத் துரியோதனன் விளங்கினாலும் கர்ணனிடம் அவன் காட்டிய அன்பும், நட்பும் என்றும் வியப்புக்குரியது.குருஷேத்திரத்தில் போர் மூளும் சூழல் உருவானது. 'பாண்டவர்கள். வெற்றி பெற வேண்டுமெனில், கர்ணனை எப்படியாவது அழைத்து வா' எனக் குந்திக்கு ஆலோசனை வழங்கினான் கண்ணன். பதின்வயதில் கர்ணனைப் பெற்றெடுத்து ஊர் உலகத்துக்கு அஞ்சி ஆற்றில் கைவிட்ட அந்தத் தாய், அவனைச் சந்தித்துப் பாசமழை பொழிந்தாள். 'நீ தேரோட்டி மகன் இல்லை. நீதான் என் முதல் மகன். பாண்டவர்களுக்கு மூத்தவன். கௌரவர்களைக் கைவிட்டுப் பாண்டவர் படைக்குத் தலைமை ஏற்க வா!' என்று அழைத்தாள். அப்போது கர்ணன் குந்திக்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா?  "தாயே நீ சொல்லும் பாதையில் நான் செல்லத் துணிந்தால், நட்புத்துரோகம் இழைத்த பாவியாவேன். என்னைப் பெற்றவள் நீ. ஆனால் ஒரு தாய்க்குரிய எந்தக் கடமையையும் எனக்கு நீ செய்யவில்லை. இன்று உன் சுயநலத்திற்காகவே என்னிடம் சொந்தம் கொண்டாடுகிறாய். என் நண்பன் துரியோதனனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நெருங்கி விட்டது. மனிதர்கள் தங்கள் தேவைகள் நிறைவேறும் வரை நட்பு செய்து, கைம்மாறு செலுத்த வேண்டிய சமயத்தில் நட்பை மறந்து திசை மாறி நடந்தால், அந்தப் பாவிகளுக்கு மண்ணிலும், விண்ணிலும் நற்கதி கிடைக்காது என்று சாத்திரம் சொல்கிறது. எதன் பொருட்டும், எவர் பொருட்டும் என் நண்பனுக்குத் துரோகம் செய்ய என்னாலாகாது!" என்றான். தாயும், தம்பிகள் அனைவரும், அஸ்தினாபுரத்து அரசும் தன்னைத் தேடி வந்த போது நண்பனுக்காக மறுத்து, பதினாறாம் நாள் மகாபாரதப் போரில் நண்பனுக்காகத் தன் உயிரேயே கொடுத்தான் கர்ணன்!


நண்பர்களைத் தேர்வு செய்வதில் அதிக விழிப்புணர்வு அவசியம். ஆயிரம் பேர்களிடம் அறிமுகம் நிகழ்ந்தாலும் ஆழமான நட்புக்கு உரியவர்கள் மிகச் சிலராகத் தான் இருப்பார்கள். சரியானப் புரிந்து கொள்ளல் இல்லாமல் ஏற்படும் காதலும், நட்பும் முழுமையானவை அல்ல. சோதனை வரும் போது இந்தக் காதலும் நட்பும் சொல்லிக்கொள்ளாமலே  கழன்று விடும். சோதனைகளின் வலி தாளாமல், பிரச்சனைகளின் பாரம் நெஞ்சை அழுத்தும் போது நானிருக்கிறேன் என நம்பிக்கை அளித்து வாழ்வின் மீது பிடிப்பை ஏற்படுத்துவது நட்பு. வறுமையிலும், துயரத்திலும் இளைப்பாறுதல் தருவது இனிய நண்பர்களே!

நான் பால்யத்தில் பல்வேறு பள்ளிகளில் படித்திருந்தாலும் 80களில் தஞ்சை KHS-ல் படித்த காலம் ஓர் பொற்காலம்!.தோழர்களுடனும் தோழிகளுடனும் படித்த அந்தக் Co-Education பள்ளித் தருணங்களில் ஒவ்வொரு நாளும் நினைவு கூறத்தக்கவை.இருப்பினும் இப்போது போல் Whatsapp,Internet,Email எதுவும் இல்லாத காலகட்டமாதலால் நண்பர்கள் அனைவரும் கல்லூரி- குடும்பம்-  எனச் செட்டிலான பிறகு தொடர்பே இல்லாமல் போய் விட்டது.மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு பின்மதிய நேரத்தில் திருவண்ணாமலைக்குப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது புதிய எண்ணிலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.பேசியது என் பள்ளித்தோழன் அசோக்.கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவனுடைய குரலைக் கேட்டதும் வியப்பிலும், சந்தோஷத்திலும் எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.என் அலைபேசி எண்ணை எனது தம்பியை யதேச்சையாக சந்தித்த போது வாங்கியதாகக் கூறினான்.மேலும் KHS பள்ளிதோழர்கள் அனைவரும் ஒரு Whatsapp Groupல் இருப்பதாகக் கூறியதோடல்லாமல் என்னையும் அந்த Groupல் சேர்த்தான். சாம்பி என்கிற வெங்கி,முருகானந்தம்,செல்வம்,ஜெயந்தி,லதா,காயத்ரி,வெங்கடேசன் எனப் பால்ய நண்பர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிக்க('96 திரைப்படத்தில் வரும் காட்சியைப் போலவே!) சூழ்நிலை மறந்து பயணத்தையும் மறந்து பேசினேன்-பேசினேன்-பேசிக்கொண்டேயிருந்தேன்.முப்பதாண்டு கால இடைவெளியில் நண்பர்களுடன் பேசுவதற்கு விஷயங்கள் இருந்துகொண்டே இருந்தது.பிறகு 24x7 நண்பர்கள் அனைவரும்  தொடர்பில் இருந்தோம்.ஒரு நாள் வேலைப்பளுவினால் Group-க்கு வராமல் விட்டு விட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும்.எங்கள் நட்பு மீண்டும் மலரத் தொடங்கியது.முப்பது வருட இடைவெளி விழுந்த மாதிரியே தெரியவில்லை.நான் எழுதும் கட்டுரைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.அதற்கு நண்பர்கள் அளித்த ஊக்கம் என்னை மென்மேலும் எழுதத் தூண்டியது.கெட்-டு-கெதர்(Reunion) வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.ஒவ்வொருவரும் வெவ்வேறு நாடுகளில்,மாநிலத்தில்,நகரங்களில் இருந்தபடியால் அனைவரும் வர ஏதுவாக August 5,2016 தேதியை முடிவு செய்தோம்.அன்று நாங்கள் படித்த பள்ளிக்குச் சென்று முதல்வரையும்,ஆசிரியர்களையும்,மாணவர்களையும் சந்தி்த்து உரையாடுவது எனவும் அதற்கடுத்த நாள் August 6 அன்று ஹோட்டலில் party கொண்டாடுவது எனவும் முடிவானது.Reunion-க்கான ஏற்பாடுகளில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு எனினும் அனைத்தையும் முன்னின்று செவ்வனே நடத்திக் காட்டினான் பிரகாஷ்.எங்கள் குரூப்பின் அட்மின் ஆன அவன் Bahrain-ல் மிகப்பெரிய தொழிலதிபராகச் செட்டிலாகி இருந்தான்.அவனின் பெற்றோர் எங்கள் பள்ளியில் நாங்கள் படித்த காலத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்கள்.Reunion தேதி எப்போது வரும் என்ற ஆவல் எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருந்தது.August 5 அன்று காலை 9 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்து விட வேண்டும் என்று தான் ஏற்பாடு.சரியான நேரத்திற்கு சென்று விட்டேன்.மிகவும் இளமையாக உணர்ந்தேன்,சிட்டுக்குருவியாய்ச் சிறகடித்தேன்.பள்ளியின் முன் இறங்கியதும் படபடவென மனது அடித்துக் கொண்டது. எல்லோரையும் புகைப்படத்தில் பார்த்திருந்தாலும்,வாட்ஸப்பில் பேசிக் கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்தது.+2 வகுப்பறையில் எல்லோரும் குழுமி இருக்கின்றார்கள் என்ற செய்தி தெரிய வந்ததும் நேராக அங்கு சென்றேன்.வகுப்பில் நுழைந்து நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு நண்பர்களைப் பார்த்த அந்த வினாடி...பெருவாழ்வின் நீண்ட கணங்களில் எப்போதாவது தான் இப்படியான தருணங்கள் வாய்க்கும்.வாவ்...எத்தனை முகங்கள்...என்னால் நம்பவே முடியவில்லை...முகமெல்லாம் மலர...யாரை முதலில் பார்ப்பது,பேசுவது என்றே தெரியவில்லை.ஒரு நிமிடத்தில் எல்லோர் முகத்தையும் கண்கள் படம் பிடித்து மூளைக்கு அனுப்பியது.அதை கிரகிக்கும் வேகம் தான் மூளைக்கு இருக்கவில்லை.நாங்கள் படித்த போது இருந்த அத்தனை ஆசிரியர்களும் ஓய்வு பெற்றுவிட்டனர்.இருப்பினும் தற்போது பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் எங்களை அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.அனைவருக்கும் நாங்கள் விருதுகள் வழங்கி கௌரவித்தோம்.நான் ஒன்பதாம் வகுப்பு படித்த வகுப்பறைக்குச் சென்று அப்போது அமரும் அதே பெஞ்சில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.அற்புதமாக தமிழ் வகுப்பெடுக்கும் ராஜப்பா சாரின் தமிழ் வகுப்பில் அமர்ந்திருப்பது போன்றதொரு பிரமை.நினைவென்னும் ஆழ்மன அடுக்கில் விழுந்து எங்கோ தூரமாய்ப் பயணித்துக் கொண்டேயிருந்தேன்.ராஜேஷ் தோள் தொட்டதும் தான் சுய நினைவுக்கு வந்தேன்.பிறகு நாங்கள் பல்வேறு குழுக்களாய்ப் பிரிந்து பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 'சுயமுன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு' பற்றி வகுப்பெடுத்தோம்.எத்தனையோ உலகப்பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும்,பன்னாட்டு நிறுவனங்களில் பெருநிறுவனப் பயிற்சியாளராகவும் உரையாற்றி இருந்தாலும் கூட நான் படித்த பள்ளியில்...அமர்ந்திருந்த அதே வகுப்பறையில் மாணவர்களிடம் உரையாற்றிய போது கிடைத்த நிறைவுக்கு ஈடில்லை.தஞ்சையில் பல தனியார் பள்ளிகள் வந்து விட்ட நிலையில் நாங்கள் படித்த போது இருந்த பொருளாதார நிலையில் பள்ளி இல்லை என்பதை உணர்ந்து நண்பர்கள் அனைவரும் எங்களால் இயன்ற அளவு பணம் சேர்த்து பள்ளிக்குக் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்தோம்(தற்போது கட்டி முடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது). பின்னர் நேரம் போவது தெரியாமல் அரட்டையடித்து விட்டுப் பிரிய மனமில்லாமல் விடைபெற்றோம்.மறுநாள் August 6  அன்று தஞ்சை சங்கம் ஹோட்டலுக்கு குறித்த நேரத்திற்குச் சற்று முன்னரே சென்று விட்டேன்.பாதி பேர் வந்து விட்டிருந்தனர்.வட்டமாக நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து கொண்டோம்.எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜசுந்தர்,ஸ்ரீதர்,கார்த்தி(மூவரும்),சுதா,கேகே,சூரி,உஷாநந்தினி,ஹசீம்,கோபால்,சங்கர் என ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைத் துணையுடனும்,குழந்தைகளுடனும் வரத்துவங்க கச்சேரி களைகட்டியது.ஒவ்வொருவராக மைக் பிடித்து 30 வருட காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்று பேசியது அருமையான மலரும் நினைவுகள்.பின்னர் குழந்தைகள் பாட்டு, நடனம் என அசத்தினர்.இறுதியாக அட்டகாசமான விருந்துடன் அன்றைய தினமும் இனிதே நிறைவடைந்தது.சிறுவயதில் பள்ளிதோழர்களிடம் நாம் கொண்டுள்ள உரிமையும் அவர்கள் பால் வைக்கும் எதிர்பார்ப்பற்ற அன்பும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாது என்பதை இந்த ரீயூனியன் புரியவைத்தது.யார் பெரியவர்? யார் சிறியவர்? வென்றவர் யார்? தோற்றவர் யார்? பணக்காரர் யார்? வசதி குறைந்தவர் யார்? என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் இருக்கும் இந்தக் கள்ளம் கபடம் இல்லா நட்பு என்னை நெகிழ வைத்தது.மாறிக்கொண்டே வரும் வாழ்க்கைச்சூழலில் நட்பின் வெளிப்பாடு எவ்வளவு அவசியம்...அது நம்மை எப்படிப் பல வழிகளில் ஆசுவாசப்படுத்துகிறது என்பதை இந்த 2 நாட்களும் எனக்கு உணர்த்தியது. பால்யத்தை வசந்தகாலமாக்கிய பள்ளியையும்,வகுப்பறைகளையும்,விளையாட்டு மைதானத்தையும் கண்டு களித்து தோழமைகளுடன் உரிமையுடன் உரையாடிய கணங்கள் வாழ்வின் உன்னதப் பக்கங்களில் நீங்காத நினைவுகளுடன் என்றென்றும் நிலைபெற்றிருக்கும்.



புதுமைப்பித்தனுக்குப் பின் வலுவாக எழுந்த நம் கிராமியக்கதை மரபின் இரு பெரும்போக்குகளை தொடங்கி வைத்த முன்னோடிகள் என கி. ராஜநாராயணனையும், கு.அழகிரிசாமியையும் சொல்லலாம். இடைசெவல் கிராமம் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய இருபெரும் ஆளுமைகள். ஒரே ஊரில் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து சாகித்ய அகாடமி விருது வென்ற நண்பர்கள் இவர்கள் இருவராகத்தான் இருப்பார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க் கட்டிப் புரண்டு விளையாடியவர்கள். அவர்களுக்குள்ளிருந்த நட்பு மிகவும் அலாதியானது. கு.அழகிரிசாமி உயிரோடிருந்த போது அவர் தனக்கெழுதிய கடிதங்களை எல்லாம் தொகுத்து உயிர்மை பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளியிட்டிருக்கிறார்  கி.ராஜநாராயணன். "75 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இக்கடிதங்களை இப்போது வாசித்துப் பார்க்கும் போது... என்னவெல்லாமோ எண்ணங்கள் மனசில் தோன்றுகிறது. இக்கடிதங்கள் வெளி உலகத்துக்கு வேடிக்கையாகத்தான் தோன்றும். எங்கள் இருவர் பெயர்களையும் நீக்கி விட்டு இதில் சில பகுதிகளை யாருக்கும் படிக்கக் கொடுத்தால் காதல் கடிதங்களா என்று கேட்பார்கள். தூங்கி எழுந்ததும் குளித்து விட்டு பூஜைக்கு உட்காருவது போல கடிதம் எழுத உட்காரும் பழக்கம் எங்களிடமிருந்தது. அந்தப் பிராயத்தில் குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒரு கடிதமாவது எழுதுவது என்றிருந்தது. இத்தனை வருடங்களாக இக்கடிதங்களை எப்படிப் பாதுகாத்து வைத்திருந்தேன் என்பதே அதிசயமானது தான். இவைகளைப் படிக்கும் போது மனசுக்கு ஒரு 'இது' வாக இருக்கும். கடிதம் வந்தால் அந்த நண்பனே வந்து விட்ட சந்தோஷம் இருக்கும். திரும்பத் திரும்ப படிக்கத் தோன்றும். என் வாழ்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் என்று இக்கடிதங்களைக் குறிப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது" என்கிறார் கி.ரா.

கு. அழகிரிசாமி தன் கடிதங்களில்...

"உன் கடிதம் காணாததால் நான் இந்தக் கடிதம் எழுதுவதாக நீ நினைக்கலாம். இல்லை. நீ இதற்குள் பத்துக் கடிதங்கள் எழுதியிருந்தாலும் இந்தக் கடிதம் உனக்கு எழுதாமல் தீராது. ஏதோ ஒரு அன்பின் சக்தி உள்ளே இருந்து தூண்டுகிறது"
                                          ...
"உண்ணும் போதும் உறங்கும் போதும் உன் ஞாபகமாகவே இருக்கிறது. உன்னோடு பேசிக் கொண்டிருப்பதாக எத்தனை தடவைகள் கனவு கண்டு விட்டேன் தெரியுமா? நான் சாப்பிடும் போது என்னோடு உட்கார்ந்து ஒரே பாத்திரத்தில் சாப்பிடுகிறாய். நான் உறங்கும் போது என்னோடு ஒரே தலையணையில் தலை வைத்து உறங்குகிறாய். நான் கதை எழுதும் போது என் பேனாவை உன் கையால் தான் பிடித்து எழுதுகிறாய். இந்தப் பிரமை தட்டும் நினைவிலிருந்து உள்ளத்தைப் பிரிக்கவே முடியவில்லை. ஆபீஸ் முடிந்ததும் வேறெங்கும் போகாமல் ஒரு தனியிடத்துக்கு வந்து விடுவேன். ராஜநாராயணனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி சொல்லி முடியாது. ஒரு சங்கீதம் கேட்கிற மாதிரி இருக்கிறது"
                                         ...
"ஒரு மகிழ்ச்சிவெறி பொங்கும் சந்திப்பு ஒன்று பின்னால் இருக்கிறது என்ற நினைப்புக்கு இந்தப் பிரிவு தான் எவ்வளவு துணை செய்கிறது"
                                                         ...
கு. அழகிரிசாமி 1970-ம் ஆண்டு இறந்து விட அரை நூற்றாண்டு காலமாக நட்பின் நினைவுகளோடு வாழ்ந்து மறைந்த கி.ரா...தனது சுயசரிதையில்,'எனது மெய்யான நண்பர்கள் மட்டும் எனக்கு வாய்த்திருக்காவிட்டால் இந்த உலகில் வசிப்பதே வீண் என்று எப்பவோ தோன்றியிருக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

                                    

நட்பின் வெற்றி ரகசியம் என்னவெனில்...நண்பர்கள் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்வது. உங்கள் கோணத்திலிருந்து மட்டுமல்லாமல் அவர்கள் கோணத்திலிருந்தும் விஷயங்களைப் புரிந்து கொள்வதாகும். தன் நண்பர்கள் பற்றி எப்போதும் குறை கூறிய சிறுவனிடம் அப்பா சொன்னார், "இந்த மாமரத்தை உன் நண்பனாக்கிக் கொள். ஒரு வருடத்திற்கு மரத்துடன் பழகு". ஒரு வருடம் சென்றது. மரத்தின் வெவ்வேறு பருவங்கள் பற்றி மகனிடம் கேட்டார். இலையுதிர் காலத்தில் உதிர்கிறது. வசந்த காலத்தில் அதன் தோற்றமே மாறுகிறது. பனியில் வாடுகிறது என்றெல்லாம் சொன்னான். அப்பா சொன்னார், மரங்கள் போல் தான் நண்பர்களும். ஒவ்வொரு நேரத்திலும் இயல்புகள் மாறும். மாற்றங்களோடு நண்பர்களை ஏற்றுக்கொண்டு பழகு, பின்பு அவர்களிடம் எந்தக் குறையும் காணமாட்டாய் என்று. மரங்களையும் நண்பர்களையும் புதிதாய்ப் பார்க்கத் தொடங்கினான் சிறுவன். ஆக நண்பர்களை அவரவர் இயல்புகளோடு ஏற்கப் பழகினால் நம் நண்பர்கள் கூட்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட நண்பர் நமக்கு அமைய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோமோ அப்படிப்பட்ட நண்பராக முதலில் நாம் இருந்து காட்ட வேண்டும்.

அது ஒரு திருமண வரவேற்பு. மணமகன் ராஜேஷ் சில வருடங்களுக்கு முன் என்னுடன் மேலாண்மைத் துறையில் பணிபுரிந்தவர். இப்பொழுது நாங்கள் இருவருமே வெவ்வேறு நிறுவனங்களில் பணி செய்கிறோம். இந்த இடைக்காலத்தில் எங்களிடையே தொடர்பில்லை. திடீரென்று ஒரு நாள் அலைபேசியில் அழைத்து "எனக்கு திருமணம் உங்களை நேரில் வந்து அழைக்க வேண்டும்" என்று சொல்லி வரவேண்டிய நேரத்தினை முடிவு செய்து கொண்டார். பின்பு சொன்ன நாள், நேரத்திற்கு அவருடைய பெற்றோருடன் வந்தார். அழைப்பிதழை பூ, பழங்களுடன் கொடுத்து விட்டு, "அவசியம் வரவேண்டும். நிச்சயம் எதிர்பார்ப்பேன்" என்று அன்புடன் கட்டளையாகவே சொல்லிவிட்டுப் போனார். திருமணம் மிகவும் அதிகாலையில் இருந்ததால் மாலையில் வரவேற்புக்குச் சென்றேன். உள்ளே சாதாரணமாக போய் விட முடியவில்லை. கூட்டநெரிசல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. மெதுவாக உள்ளே போனதும் வியப்பும், பிரமிப்பும் மேலும் அதிகமானது. ஏகப்பட்ட பேர் அங்கும் இங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ராஜேஷின் கல்யாண ரிசப்ஷனுக்கு இவ்வளவு பேர் வந்திருக்கிறார்களா? வரிசையில் நிற்பவர்களைக் கவனித்தேன். தங்கள் தருணங்களுக்காகக் காத்திருந்து, வந்ததும் மேடை ஏறி, கைகுலுக்கி, வாழ்த்தி, பரிசு கொடுத்து, புகைப்படம் எடுப்பதற்காக சில வினாடிகள் அசையாமல் நின்று விட்டு இறங்கினார்கள். வரிசை நகர்ந்து கொண்டேயிருந்தது. நானும் நெருங்கி விட்டேன். மெல்ல பின்பக்கம் திரும்பிப் பார்த்தேன். அட! அதற்குள் வரிசையின் வால் வளர்ந்து விட்டதே! எங்களுக்குப் பின் இன்னும் நூறு பேர்! என்ன இது மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்களே! மேடை ஏறி நெருங்கி வந்த ஒவ்வொருவரையும் முன் சென்று மகிழ்ச்சி பொங்க வரவேற்றார் ராஜேஷ். தன் மனைவியிடம்  ஏதேதோ சொல்லி அறிமுகப்படுத்தினார். சிலர் அவரை நெருங்கி தோளோடு தோள் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார்கள். வெடிச்சிரிப்புகள், கேலிகள் என்று மேடையே அவ்வப்போது மகிழ்ச்சியில் குலுங்கிக் கொண்டிருந்தது. எப்படி இவ்வளவு நபர்களை ஒருவரால் தெரிந்து வைத்திருக்க முடியும்? எப்படி இவ்வளவு எண்ணிக்கையிலான மனிதர்களுடன் பழக்கமும் நெருக்கமும் சாத்தியம்? அதுவும் இவ்வளவு சின்ன வயதில்? ஆத்மார்த்தமான அன்பு, ப்ரியம், மரியாதை, முக்கியத்துவம் ஆகிய நற்குணங்களினால் தனது நட்பு வட்டத்தை விஸ்தாரப்படுத்த முடிந்திருக்கிறது அவருக்கு. அறிமுகமாகும் எவருடனும் நல்ல விதத்தில் பழகி பின்பு நட்பாக்கிக் கொண்டு விட முடிகிறது ராஜேஷ் போன்ற நட்பாளர்களால். இப்படி பலருடனும் சிறந்த நட்பு உறவுமுறை உண்டாக்கி வாழ்வில் உன்னத நிலையை அடைந்தவர்கள் அநேகம்.

என் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த சம்பவங்களில் இதுவும் ஒன்று. நானும் என் ஆருயிர் நண்பன் கரிகாலனும் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். தீவிர கமல்ஹாசன் ரசிகர்களான நாங்கள் ஒரு நாள் மதிய வகுப்பை 'கட்' அடித்து விட்டு தஞ்சாவூர் பர்வீன் தியேட்டரில் "புன்னகை மன்னன்" திரைப்படத்திற்குச் சென்று விட்டோம். அம்மாவிடம் மாட்டிக் கொள்வோமோ என்கிற ஒரு பயம் இருந்து கொண்டேயிருந்தது.பயந்தது போலவே அம்மாவிற்கு எப்படியோ இந்த விஷயம் தெரிந்து போய் விட்டது.படம் பார்த்து முடித்து விட்டு கரிகாலனுடன் என் வீட்டிற்குச் சென்றேன்.வீட்டிற்குள் நாங்கள் இருவரும் நுழைந்தவுடனே என்னைத் தவிர்த்து விட்டு கரிகாலனிடம் அம்மா கேட்டார்கள்... "இருவரும் எங்கே போனீர்கள்? என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று. கரிகாலனுக்கு உள்ளூர பயமிருந்தாலும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு நாங்கள் இருவரும் அவன் வீட்டில் அறிவியல் பாடம் படித்துக் கொண்டிருந்ததாகக் கூறினான். பின்னர் அவன் விடைபெற்றுச் சென்றவுடன், எனக்கு எல்லாம் தெரியும். உண்மையைச் சொல் என்று கேட்டார் அம்மா. நான் உண்மையை ஒப்புக்கொண்டேன். மேலும் பொய் சொன்னதற்காக கரிகாலனின் நட்பையே தவிர்க்க வேண்டுமென்று அம்மா கூறி விடுவாரோ எனக் கலக்கமடைந்தேன். ஆனால் எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், "கரிகாலன் செய்தது தவறு தான். அவன் பொய் சொல்லியிருக்கக் கூடாது. இருப்பினும் தன் நண்பனைக் காட்டிக் கொடுக்காமல் பொய் சொன்னானே அவன் தான் உன் உண்மையான நண்பன்" எனக் கூறினார். இதனைப் பிறகு கரிகாலனிடம் சொன்ன போது பெருமகிழ்ச்சி அடைந்தான். இன்று என் நண்பன் கரிகாலன் இயற்கை எய்தி ஆண்டுகள் பல ஆகி விட்ட போதிலும்... அவன் உயிரோடிருக்கும் வரை என் ஆகச் சிறந்த நண்பனாக விளங்கினான்.


கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. கோப்பெருஞ்சோழன் சோழ நாட்டின் கவிப்புலமை வாய்ந்த மாமன்னன். ஆனால் அவர் பாண்டியநாட்டுப் புலவர். பிசிராந்தையார் மீது மானசீகமான நட்பு கொண்டார். அதே போன்று பிசிராந்தையாரும் சோழப் பேரரசர் கோப்பெருஞ்சோழன் மீது நட்பு கொண்டார். இருநாட்டுக்குமிடையே தூரம் அதிகமிருந்தும் அவர்களுக்குள் நட்பு மனம் இணைந்திருந்தது. காலச்சூழ்நிலையால் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்கத் துணிந்தார். அப்போது நகருக்கு வெளியே அவருக்கென்று ஓர் இருக்கையிடப்பட்டது. தனது இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கையை தனது நண்பர் பிசிராந்தையாருக்காக இடச்செய்தார்.மன்னா! பிசிராந்தையார் உனது பெயரையும் புகழையும் அறிந்தவரேயன்றி இதுவரை உங்களை நேரில் கண்டவரில்லை, பழகியவருமில்லை. மேலும் அவர் தங்கள் நிலையறிந்து பாண்டியநாட்டிலிருந்து இங்கு வருவது சாத்தியமாகாது என்றார் அமைச்சர். அதற்கு மன்னர்பிரான், "எனது நண்பர் பிசிராந்தையார் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் நான் ஆட்சி புரிந்த போது வராவிட்டாலும் நான் உயிர்துறக்கும் இந்நேரத்திலாவது உறுதியாக வருவார்" என்றார். தனது ஆருயிர் நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கியிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும் தனது சேயைக் காணவரும் தாயைப்போல் ஓடோடி வந்தார் பிசிராந்தையார். ஆனால் அவர் வருவதற்குள் கோப்பெருஞ்சோழன் உயிர் துறந்திருந்தார். அதனைக் கண்டு வருந்தி கண்ணீர் மல்கினார். தனது நண்பனை மண்ணுலகத்தில் தான் காணமுடியவில்லை. விண்ணுலகிலாவது காணலாம் என்றெண்ணி, தானும் மன்னர் தனக்கென இட்டிருந்த இருக்கையில் அமர்ந்து... வடக்கிருந்து உயிர் நீத்தார் பிசிராந்தையார்.ஒருவரையொருவர் நேரில் சந்தி்த்துப் பழகிக் கொள்வது மட்டும் நட்பல்ல, உள்ளத்தால் உறவாடிக் கொள்வதும் நட்பு தான் என்பதை உலகத்துக்கு அறிவித்தது அவர்களின் நட்பு.

நண்பர்களில்லா வாழ்க்கை பாலைவனத்தில் நடக்கின்ற ஒற்றைப் பயணம். அதனால் தான் ஹெலன் கெல்லர் என்னும் அமெரிக்க நாட்டு எழுத்தாளர், "தனியாக வெளிச்சத்தில் நடந்து செல்வதை விட இருளில் நண்பனோடு நடப்பதே சிறந்தது" என்றார்.தாய், தந்தை, உடன்பிறந்தோர், மனைவி, மக்கள் என்ற குடும்ப உறவுகள் தாண்டிய ஓர் உன்னத உறவு நட்பு.உண்மையான நட்பு அன்பின் அற்புதம், பழகுவதின் உன்னதம்; வாழ்வில் கிடைத்தற்கரிய பரிசு!







Monday, 31 May 2021

எழுத்தாளுமைகளுடன் நான்!

                                                               1.நாஞ்சில்நாடன்

'எட்டுத்திக்கும் மதயானை' வாசித்த நாளிலிருந்தே நாஞ்சில்நாடனைச் சந்திக்க வேண்டும் என்ற என் ஆவல் பன்மடங்காகப் பெருகியதற்குக் காரணமாக அமைந்தது மற்றுமாேர் ஆனந்தப் பேரனுபவம்.ஒருமுறை ஆனந்தவிகடனில் வாசகர் கேள்விகளுக்குப்  பதிலளித்தார் நாஞ்சில்நாடன்.அதில் என் கேள்வியும் அடக்கம்.  

'எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்' என்ற என் கேள்விக்கு...

"எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது.பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக்கூடாது.ஒரு துறையை விரும்பி வாசிக்கிறவர் அதைத் தொடர்ந்து மேலே போகலாம்.தேர்ந்த வாசகனுக்கு எடுத்த புத்தகத்தின் 10 பக்கங்கள் வாசித்தாலே தனக்கு உகந்ததா இல்லையா...என்பது தெரிந்து விடும்.ஏற்கெனவே வாசித்திருக்கும் நண்பர்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்..."

- என்று ஓர் அருமையான பதிலளித்திருந்தார்.இவ்விரு காரணங்களும் அவரைச் சந்திக்கும் உந்துதலை ஏற்படுத்தினாலும் சந்திக்க நீண்ட காலமாகியது.

என் நண்பரான ஓவியர் ஜீவா, 'சிறுவாணி வாசகர் மையம் சார்பில் இந்த வருடம் எனக்கு "நாஞ்சில் நாடன் விருது" வழங்குகிறார்கள் அவசியம் வாருங்கள்' என அழைப்பு விடுத்திருந்தார்.சிறுவாணி வாசகர் மையத்தை சிறப்பாக நடத்தி  வரும் திரு.பிரகாஷ் மற்றும் திருமதி.சுபாஷிணி இருவரும் நடத்திய அந்த விழா மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.அவ்விழாவில் தான் நாஞ்சில்நாடனை முதன்முதலில் சந்தித்தேன்.விழாவின் முத்தாய்ப்பாக நாஞ்சிலாரின் பேச்சு அமைந்தது.மற்றவர் பேச்சிலிருந்து எனக்கொன்று புரிந்தது.நாம் சந்திக்க வேண்டும் என விரும்புவது ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல... ஒரு பல்கலைக்கழகம் என்று.ஆம்!... சிறுகதை, புதினம், கவிதை மட்டுமன்றி தீவிரமான சொல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் நாஞ்சில்நாடன்.ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனிமனிதராகச் செய்து கொண்டிருக்கிறார்.விழா முடிந்ததும் அவரிடம் சென்று பேசினேன்.அன்று துவங்கியது எங்கள் நட்பு.அவரை ஒருமுறையேனும் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைக்குமா என நான் எண்ணிய காலங்கள் உண்டு.தற்போது அனுதினமும் அவருடன் தொடர்பில் இருக்கக்கூடிய  வாய்ப்பினை காலம் எனக்களித்தது என் பேறு.பார்ப்பதற்கு ஒரு காவல்துறை உயரதிகாரியைப் போன்ற மிடுக்கான தோற்றமுடைய நாஞ்சிலாரிடம் நெருங்கிப்பழகிய பின்னர் தான் அவரது குழந்தை உள்ளம் புரிந்தது.தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரென்ற எந்த கர்வமும் இல்லாதவர்.'சாகித்ய அகாடமி','கலைமாமணி' போன்ற விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர்.ஞானபீட விருது பெறுவதற்கான அனைத்துத் தகுதியும் உடையவர்.என் அழைப்பினை ஏற்று நான் இயக்குனராகப் பணிபுரிந்த/பணிபுரிந்து கொண்டிருக்கும் கல்லூரிகளுக்கு வந்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.நான்கு முறை அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது என் வாழ்வின் உன்னதப் பக்கங்களில் ஒன்று.மாணவர்களிடையே பேசும் போதெல்லாம் புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.சொற்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்."உலகில் பல மொழிகள் அழிந்து கொண்டே வருவதுடன்  அம்மொழிகளுக்குள் புழங்கும் சொற்களும் குறைந்து கொண்டே வருகின்றன.பயன்படு சொற்கள் குறைந்தால் ஒரு மொழி தன் வளத்தை இழப்பதுடன் இறுதியில் அது அழிந்தும் போக ஏதுவாகும்.இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தமிழ்மொழியின் சொற்கள் எவ்வளவு இருக்கும்? அதிகபட்சம் ஆயிரம் சொல்லலாமா? சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு 1924ல் வெளிவந்த பேரகராதியில் 1,24,000 சொற்கள் அகரவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.அப்பேர்ப்பட்ட மிகப்பெரும் பொக்கிஷத்திலிருந்து சொற்களை எடுத்துச் செலவழிக்க ஏன் கஞ்சத்தனம் படுகிறோம்?" என மாணவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களுடைய சிந்தனையைத் தூண்டினார்.சகமாணவிகளிடம் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களைப் போதித்த அதே சமயத்தில் மாணவிகளும் நாகரிகம் என்னும் பெயரில் எப்படியெல்லாம் தன்னிலை மறந்து நடந்துகொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.அவரது பேச்சுக்குப் பின் ஒரு பேராசிரியை அவரிடம்,"பெண்களாகிய நாங்கள் கூட மாணவிகளிடம் எளிதில் சொல்லி விளங்க வைக்க முடியாத சில விஷயங்களை நீங்கள் அருமையாகச் சொல்லிப் புரிய வைத்திருக்கிறீர்கள் சார்... மிகுந்த நன்றி" என்று கூறியதை நான் கண்டேன்.தீவிர உணவு ரசிகரான நாஞ்சிலாருடன்  'Western valley' மற்றும் 'பாலகுமார் மெஸ்' ஆகிய பிரசித்தி பெற்ற உணவகங்களுக்குச் சென்றிருக்கிறேன்.உணவு பற்றி அவருடன் அளவளாவிய போது..."நான் உணவை ரசிப்பவன்.கஷ்டப்பட்ட காலத்திலிருந்த போதும் சரி... பம்பாய்க்குச் சென்ற போதும் சரி... நான் எல்லா உணவையும் ரசித்துத்தான் சாப்பிடுகிறேன்.மஹாராஷ்டிரத்தின் சோளரொட்டியும்,கூனிப் பொடியில் இடிக்கப்பட்ட சம்மந்தியாக இருந்தாலும்கூட ருசித்து அந்த உணவுக்கு உண்டான நியாயத்தை வழங்கித்தான் உண்கிறேன்" என்றார்.கல்லூரி விழாக்கள் தவிர இலக்கியக் கூட்டங்களிலும் அவரைச் சந்தித்து உரையாடுவதுண்டு.பலமுறை அவர் வீட்டிற்குச் சென்று அவருடைய குடும்ப நண்பராகவே ஆகி விட்டேன்.அவருடன் நான் காரில் பயணம் செய்யும் போதெல்லாம் எவ்வளவோ இலக்கிய விஷயங்களைப் பேசிக் கொண்டு வருவார்.இயற்கை தனக்கு இன்னும் பத்து வருடமாவது ஆயுள்தர வேண்டுமென்றும்,எழுத வேண்டிய படைப்புகள் இன்னும் இருக்கிறது என்றும் கூறுவார்.

           
              
1975ல் நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் எழுதத் துவங்கிய அவர் எங்குமே நின்று இளைப்பாறியதில்லை.அவருடன் எழுத வந்தவர்கள் இன்று பெரும்பாலும் ஓய்ந்து விட்டனர்.தேடல்,விழைவு, உழைப்பு ஆகியவை தான் அவரை மிக விரும்பிப் படிக்கப்படும், மிக அதிகம் எழுதும் எழுத்தாளராகவும் வைத்திருக்கிறது.நாஞ்சில்நாடனின் கதைகளின் வழியாக நாம் கண்டடைய முடிகிற விடைகள் யாவுமே நேரடியானவை, யதார்த்தமானவை.உள்ளதை உள்ளபடி சொல்லுபவை.இளம் தலைமுறை எழுத்தாளர்களைத் தொடர்ந்து கூர்மையாகக் கவனித்துப் பாராட்டுகிற பெருந்தன்மையும், தன்னலமற்ற குணமும் அவருக்கிருக்கிறது.சகமனிதரின்பால் அவர் கொண்ட நேசமும், சமூகத்தின் பேரில் கொண்ட அக்கறையும், எவருக்கும் அஞ்சாமல் தன் கருத்தை முன்வைக்கக்கூடிய மாண்பும், எந்தப் பாகுபாடுமின்றி அனைவரிடமும் கலந்து பழகும் பண்பும் மிகுந்த அந்த மாமனிதர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு இன்னும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் என்பதே என் அவா.

                                                           2. எஸ்.ராமகிருஷ்ணன்


“என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம்.தோற்பதும்,ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து விட முயன்றதன் விளைவு தான் எனது எழுத்துக்கள்” என்கிறார் எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்.Non-fiction ஐப் பொருத்தவரை அவருடைய ஒவ்வொரு பனுவலும் ஓர் மைல்கல்.அதுவும் குறிப்பாக  எப்போது “துணையெழுத்து” படித்தேனோ அப்போதே அவரை அவசியம் சந்திக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.சந்திப்பதற்கான வாய்ப்பை எப்படி ஏற்படுத்திக் கொள்வது எனத் தெரியவில்லை.அவருக்கு இ-மெயில் அனுப்பி சந்திக்க விருப்பமிருப்பதைத் தெரிவித்தாலென்னஎன ஓர் எண்ணம் தோன்றியது.அவருடைய website www.sramakrishnan.com ல் இருந்த அவருடைய Email id writerramki@gmail.com க்கு மெயில் அனுப்பினேன்.
மதிப்பிற்குரிய திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, வணக்கம்என் பெயர் கார்த்திகேயன்.துபாயில் பெருநிறுவனப் பயிற்சியாளராகவும்பேராசிரியராகவும் பணிபுரிகிறேன்.உங்களின் மிகப்பெரிய ரசிகன்.உங்களுடன் சில மணித்துளிகள் உரையாட விரும்புகிறேன்.ஆகஸ்ட் மாத விடுமுறையில் இந்தியா வருவேன்.தங்களுக்கு சந்திக்க விருப்பமும்,நேரமும் இருந்தால் உங்களுக்கு வசதியான தேதியைக் குறிப்பிடவும்.
அன்புடன்,
கார்த்திகேயன்.
மறுநாளே அவரிடமிருந்து பதில் வந்தது.அன்பு கார்த்திகேயன்,தங்களின் மின்னஞ்சலுக்கு நன்றி.சென்னைக்கு வரும் போது அவசியம் சந்திக்கலாம்.எனது தொலை பேசி எண் 94………………47. சென்னை வந்தவுடன் அழைக்கவும்.அன்புடன்,எஸ்.ராமகிருஷ்ணன்.படித்தவுடன் எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்த மறுநாளே அவருக்கு போன் செய்தேன்.”சாய்ந்தரம் 4 மணிக்கு வீட்டிற்கு வாருங்கள்,சந்திப்போம்” என்றார்.சொன்ன நேரத்திற்கு சாலிகிராமத்தில் உள்ள அவரது கங்கை அபார்ட்மெண்டில் இருந்தேன்.காலிங் பெல் அடித்தவுடன் அவரே திறந்தார்.”நான் தான் கார்த்திகேயன்” என்றவுடன் என்னை வரவேற்று அவரது மனைவியிடமும்,பெரியவன் ஹரியிடமும் அறிமுகப்படுத்தினார்.இளையவன் ஆகாஷ் பள்ளியிலிருந்து இன்னும் திரும்பியிருக்கவில்லை.நான் அவருக்காக வாங்கிச் சென்றிருந்த அழகான “மயில் சிற்பம்” ஒன்றைப் பரிசளித்தேன்.நன்றி தெரிவித்துவிட்டு என்னை அவரது புத்தக அறைக்கு அழைத்துச் சென்றார்பல்வேறு விதமான நூல்களும்,கணினியும் இருந்த அந்த அறையில் அமர்ந்து பேசத் துவங்கினோம்.கிட்டத்தட்ட அவரது நூல்கள் அனைத்தையுமே நான் படித்திருந்ததால்...அவற்றிலிருந்து என் சந்தேகங்களையும்,கேள்விகளையும் நான் கேட்பதும்,அவர் விளக்குவதுமாக மிக சுவராஸ்யமாக எங்கள் உரையாடல் நீண்டு கொண்டே போனது.இடையே வந்து டிபனும்,தேநீரும் கொடுத்து உபசரித்த அவரது மனைவி, வந்திருப்பது தனது கணவருடைய தீவிர ரசிகர் என்பதை உணர்ந்து கொண்டு தானும் உரையாடலில் இணைந்து கொண்டார்.இந்தியா முழுவதும் சுற்றி அலையும் ஒரு தேசாந்திரியாகவும்...சினிமா,நாடகம்,பத்திரிகை,இணையம் எனப் பல தளங்களிலும் வெற்றிகரமாக அவர் இயங்குவதற்கும் காரணம்-அவரைப் புரிந்து கொண்டு-சுதந்திரமும்,ஆதரவும் அளித்து வரும் அவரது மனைவி திருமதி.சந்திரபிரபா தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.எங்களுடன் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென்று உள்ளே சென்று தன் கணவர் வருடந்தோறும் இலக்கியக் கூட்டத்தில் பேசும் பேச்சுக்கள் அடங்கிய ஏழு குறுந்தகடுகளைக்(CD) கொண்டு வந்து எனக்குப்  பரிசளித்தார்.ஹெமிங் வேயின் “கிழவனும் கடலும்,டால்ஸ்டாயின் “அன்னா கரீனினா”,ஹோமரின் “இலியட்,”ஷேக்ஸ்பியரின் “மெக்பெத்”,தஸ்தாயெவ்ஸ்கியின் 
குற்றமும்  தண்டனையும்”,”ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்” மற்றும் பாஷோவின் ஜென் கவிதைகள் ஆகியவற்றைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் பேசியவையே அவை.நான் நெகிழ்ந்து போய் என் நன்றியினைத் தெரிவித்தேன்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் அவருக்குப் பிடித்தமான மிகச் சிறந்த பத்து நூல்களை - நான் வாசிப்பதற்காகப் பரிந்துரைக்குமாறு கேட்டேன்.அவரோ தன் கைப்பட எழுதியே கொடுத்து விட்டார்.அவற்றுள் பாதி நூல்களுக்கு மேல் அவர் எழுதி கொடுத்திருக்காவிட்டால் நான் வாசித்திருப்பேனா என்பது சந்தேகமே.இதிலிருந்து பல்வேறு வகையான நூல்களையும் வாசிக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.

ரஜினிக்கும் அவருக்குமான நட்பினைப் பற்றிக் கேட்ட போது,ரஜினியுடைய மிகச்சிறந்த ஐந்து நண்பர்களில் தானும் ஒருவர் என்பதைத் தெரிவித்தார்.ஒரு நாள் ரஜினியிடமிருந்து போன்:”உங்கள் அபார்ட்மெண்ட்டுக்குக் கீழே தான் இருக்கிறேன்,வாருங்கள் ஒரு ride போகலாம்” என்றாராம்.சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் இருப்பதாலேயே ரஜினியின் நட்பைப் பெற்றிருக்கிறார் என்பது தெரிந்தது.
அப்போது பள்ளி முடிந்து அவரது இளைய மகன் ஆகாஷ் வந்தான்.துறுதுறுவென்று  சூட்டிகையான பையனாக இருந்தான்.அவனையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.பின்னர் நான் கையோடு கொண்டு சென்றிருந்த அவரது நூலான “எனது இந்தியாவை ஆட்டோகிராஃப் க்காகக் கொடுத்தேன்.ஒரு குழந்தையை வாங்குவது போல் வாங்கினார்.தன் படைப்பின் மேல் ஒரு படைப்பாளி வைத்திருக்கும் ப்ரியத்தைக் கண்டு கொண்டேன்.ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டவுடன்,என் வீட்டிற்குக் கண்டிப்பாகக் குடும்பத்துடன்  வர வேண்டும் எனக் கூறி விடைபெற்றேன்.நிச்சயம் வருகிறேன் என சம்மதித்திருக்கிறார்.என்றாவது ஒரு நாள் வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். 

3.ஜெயமோகன்


ஒரே சந்திப்பில் ஒருவரை உங்களுக்கு எந்த அளவுக்குப் பிடித்துப் போகும்ஜெயமோகனுடனான என் முதல் சந்திப்பிலேயே எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது.ஜெயமோகனின் நூல்களை வாசிக்கும் வரை அவரைப் பற்றிய எனது “பிம்பம்” வேறாகத் தான் இருந்த்து.இணையத்தில் சிலர் எழுதிய விமர்சனங்களையும்,சில பத்திரிகைகளில் வந்த செய்திகளையும் வைத்து அவரை ஒரு முரண்பாட்டாளாராகவே எண்ணியிருந்தேன்.என் எழுத்தாள நண்பன் பா.முருகாந்தம்,ஜெயமோகனின் தீவிர விசிறி.அவன் கொடுத்த ஊக்கத்தால் ஜெயமோகனின் நூல்களை வாசிக்கத் துவங்கினேன். இதுவரை இரண்டு நூல்களை வாசித்துள்ளேன்.அவை : பேரழகுடன் விளங்கும் அடர்ந்த காட்டின் பின்னணியில்மெல்லிய கனவின் மொழியில்...முதல் காதலைச் சொன்ன “காடு” மற்றும் தென்தமிழகக் காடுகளின் இயற்கை வளம்,ரப்பர் என்ற பணப்பயிரால் சீரழிந்ததை விளக்கிய “ரப்பர்.கவித்துவமான விவரணைகளும்,துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடும்,நுட்பமான கதை சொல்லும் முறையுமே அவரது ஒவ்வொரு நூலையும் மிகச்சிறந்த இலக்கியப் படைப்பாக மாற்றுகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். www.jeyamohan.in இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்து வந்ததில் மகாபாரதத்தை “வெண்முரசு” என்னும் காவியமாக அனுதினமும் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதை அறிந்து கொண்டேன்.மொத்தம் 25000 பக்கங்கள் எழுத உத்தேசித்துள்ள ஜெயமோகன் இதுவரை 12000 பக்கங்கள் எழுதியுள்ளார்.அவை 12 புத்தகங்களாக வெளிவந்துள்ளன.தமிழ் நூல்களில் இது ஒரு  ‘மைல்கல்” என்றே சொல்லலாம்.இவ்வளவு ஞானமா என்று அதிசயிக்கும் அதே சமயத்தில் இவருக்கு நேரம் எப்படிக் கிடைக்கிறது என்பதும் ஆச்சரியமாயிருக்கிறது.
இந்த வருடம்(2017) கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் இலக்கியக் கூட்டத்தில் ஜெயமோகனும்,ஜோ டி குருஸும் பேசுகிறார்கள் என்றறிந்ததும் குறிப்பிட்ட தேதியில் அவர்கள் பேச்சைக் கேட்கவும் சந்திக்கவும் ஆவலுடன் சென்றேன்.ஜெயமோகனின் பிரத்யேக 
வழிகாட்டுதலின் பேரில் 233 ஆவது ஸ்டால் அவரது நூல்களுக்காகவே அமைத்திருந்தார்கள்.நான் சென்றபோது ஜெயமோகன்  ஒரு நாற்காலியில் அமர்ந்து அவரது வாசகர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்சரிஎல்லோரும் பேசிவிட்டுச் சென்றவுடன் நாம் பொறுமையாகப் பேசலாம் என்று காத்திருந்தேன்.அனைவரும் பேசிவிட்டுச் சென்றவுடன் ஜெயமோகனிடம் சென்று கைகுலுக்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் இருபது நிமிடங்களுக்கும் மேல் நீடித்த அந்த உரையாடலில் அவர் எப்பேர்ப்பட்ட genius என்பதை அறிந்து கொண்டேன்.விஷ்ணுபுரம் புத்தகம் வாங்கி அவர் Autograph பெற்றுக் கொண்டேன் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்தப் புத்தகம் கனவுலகத்தைப் பற்றியது எனக் கூறினார்ஜோ டி குருஸ் வரவில்லையா எனக் கேட்டதற்கு அவர் ஏதோ அவசர வேலை காரணமாக அதிராம்பட்டினம் சென்று விட்டதாகச் சொன்னார்பேச்சு அவருடைய website,பயணங்கள்எழுத்து என நீண்டது,பின்பு “The Hindu”ஸ்டாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றோம்.சாருமதி பாடிய பாடல்கள் செவிக்கு இனிமையாக அமைந்தது.

சரியாக 7 மணிக்கு இலக்கியக்கூட்டம் துவங்கியது.ஜோ டி குருஸூக்குப் பதிலாக  அழைக்கப்பட்டிருந்த கவிஞர் புவியரசு முதலில் பேசினார்ஜெயமோகனின் எழுத்துக்களைப் படிக்கும் போது அவர் தான் எழுதுகிறாராஅல்லது அவருக்குள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி எழுதுகிறதாஎனத் தான் வியப்பதாகக் கூறினார்.பின்னர் பேச வந்த ஜெயமோகன் ஒரு இலக்கியக்கூட்டம் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகப் பேசினார்“ஒரு எழுத்தாளரிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கக் கூடாது. ஒன்று,நீங்கள் எழுதியுள்ள நாவலின் மையக் கருத்தென்னவென்றுக் கேட்பதுஎழுத்தாளரின் நோக்கம் கருத்து சொல்வதல்ல.வாசித்தல் என்பது ஒரு பேரனுபவம்.ஒரு 200 பக்க நோட்டில் நான் அனைத்து இலக்கியங்களின் மையக்கருத்துக்களையும் எழுதி வெளியிட்டால் அதைப் படித்து விட்டு எல்லா இலக்கியங்களையும் வாசித்து விட்டதாக யாரேனும் கூறிக்கொள்ள முடியுமா?.இரண்டாவதாக,எப்படி நீங்க அப்படியே படம் பிடிச்சுக் காட்டுறீங்கஎனவும் ஒரு எழுத்தாளரிடம் கேட்கக்கூடாது.ஒரு புகைப்படக்காரர்  ஒரு காட்சியைப் படமெடுப்பதும்,வாசிப்பனுபவமும் ஒன்றா?இலக்கியமென்பது-“A ride into the unconscious” என்றார்விஷய ஞானம் செறிந்த அந்த இலக்கியப் பேச்சு முடிந்தவுடன் அவரைச் சந்தித்து என் சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன்.விஷ்ணுபுரம் படித்து விட்டு என் கருத்தைச் சொல்வதாகக் கூறினேன்.மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.
எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது.பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது நமக்கு ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக்கூடாது.....”
எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார் நாஞ்சில்நாடன்.இனி ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

                                                         4.பட்டுக்கோட்டை பிரபாகர்


என்னுடைய ‘Gene’ லயே வாசிக்கும் பழக்கம் உண்டு.பால்ய வயதில் அம்புலி மாமா,கோகுலம்,முத்து காமிக்ஸ் எனப் படிக்கத் துவங்கிய நான் வாசிப்பதற்கு இடைவெளி விட்டதேயில்லை.Fiction, Non-fiction எனத் தமிழிலும்ஆங்கிலத்திலுமாக என்னுடைய வாசிப்புத்தளம் பரந்து பட்டது.எத்தனையோ கதைகளையும், கவிதைகளையும், இலக்கியங்களையும், இதிகாசங்களையும், வரலாற்றுப் புனைவுகளையும்தன்னம்பிக்கை நூல்களையும்பயணக் கட்டுரைகளையும் வாசித்திருந்தாலும் கூட என்னைக் கனவுலகில் மிதக்க விட்டு உல்லாச வானில் சிறகடிக்க வைத்த எழுத்துக்குச் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை பிரபாகர்.காதலின் ஆழத்தையும்புனிதத்தையும்,இனிமையையும் வலியையும் அவர் எழுதும் விதமே அலாதியானதுஎண்பதுகளிலேயே-“தொட்டால் தொடரும்”,”நான் உன்னை சுவாசிக்கிறேன்”, “மிஸ் மஞ்சுளாவின் முடிவுரை”, “பாதையெல்லாம் பூக்களிட்டு”,”கனவுகள் இலவசம்”,கொலுசுச் சத்தம்” என அவரது பல்வேறு நாவல்களால் கவரப்பட்டு அப்போதே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்அவர் எழுதிய பதில் கடிதத்தை இன்று வரை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.எப்படியாவது என் அபிமான எழுத்தாளரைச் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய முப்பத்தைந்தாண்டுக் கனவு.
பட்டுக்கோட்டை பிரபாகரின் முகநூல் நண்பர்களில் நானும் ஒருவன்.அவர் எழுத்தைப் போலவே முகநூலில் அவரது பதிவுகளும் மிகவும் ரசனைக்குரியதாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கும்.சமீபத்தில் குமுதத்தில் உதவி ஆசிரியராக பணிபுரியும் என் நண்பர் கவிஞர் ரவிராஜ் அவருக்கு அனுப்பிய வீடியோ ஒன்றினை ஷேர் செய்து கமெண்ட் பண்ணியிருந்தார்.அப்போது தான் ரவிராஜுக்குப் பட்டுக்கோட்டை பிரபாகரிடம்  நல்ல பரிச்சயம் உண்டு என்பதை அறிந்து கொண்டு- தஞ்சை சென்ற போது- எனது நண்பரைச் சந்தித்தேன்.என் விருப்பத்தைப் புரிந்து கொண்ட ரவிராஜ் உடனே பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் போன் செய்து “உங்களின் ரசிகர் என்னுடைய நெருங்கிய நண்பர்.அவருடன் பேச முடியுமா?” என்று அவரிடம் அனுமதி பெற்று போனை என்னிடம் கொடுத்தார்.சந்தோஷ மிகுதியில் சற்றே தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டு,1983 ஆம் ஆண்டு முதல் நான் அவருடைய கதைகளைத் தொடர்ந்து படிப்பதையும்,அவரது எழுத்துக்குத் தீவிர விசிறி என்பதையும் தெரிவித்தேன்.மிக்க ஆனந்தம் அடைந்தவராய்,’உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்றார்.நான் என்னைப் பற்றிச் சொல்லி விட்டு அவரைச் சந்திக்க விரும்புவதாய்க் கூறினேன்.அவசியம் நீங்கள் சென்னை வரும் போது சந்திக்கலாம் என்றார்.வரும் போது ஒரு நாள் முன்பே போன் செய்து விட்டு வாருங்கள் என்றார்.”கண்டிப்பாக சார்” என்று என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்.பின்னர் வீடு வந்த நான்,14.5.1988 அன்று அவர் எனக்கு எழுதிய கடிதத்தை மொபைல் கேமராவில் photo எடுத்து whatsapp செய்தேன்.”Very nice happy” என்று ‘ஸ்மைலி’,’தம்ஸ் அப்’ உட்பட நான்கு எமோஜிகளுடன் பதில் அனுப்பினார்.

ஒரு மாதத்துக்குப் பிறகு சென்னை செல்லும் வேலை வரவே உடனே பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் போன் செய்தேன்.வெல்கம் எனக்கூறி விலாசம் கொடுத்தார்.குறிப்பிட்ட நாளில் சென்னை சென்று விட்டாலும்,குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் அலுவலகம் செல்வதற்குச் சற்றுத் தாமதமாகி விட்டது.அவரைச் சந்திக்க முடியாமல் போய் விடுமோ என்கிற பதட்டம் என்னைத் தொற்றிக் கொண்டது.இருப்பினும் எனக்காகப் பொறுமையாகக் காத்திருந்தார்.நான் அவரது அலுவலக அறையைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தவுடன் சிரித்த முகத்துடன் கைகுலுக்கி வரவேற்றார்.அநேகமாக நீண்ட நெடுங்காலமாக வாசகனாக-ரசிகனாக இருந்து பட்டுக்கோட்டை பிரபாகரை சந்தித்தவன் நானாக மட்டுமே இருக்க வாய்ப்புண்டு.ஒரு மணி நேரம் நீடித்த எங்களின் அளவளாவல்கள்-என்னால் என்றுமே மறக்க முடியாத அற்புதக்கணங்கள்.என்னுடன் அவர் பேசியதெல்லாம் நெருக்கமான நண்பரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்கள்.எந்தப் பத்திரிக்கைப் பேட்டியிலும்,தொலைக்காட்சிப் பேட்டியிலும் கூட இவ்வளவு வெளிப்படையாக அவர் பேசி படித்திருக்கவோ,கேட்டிருக்கவோ மாட்டீர்கள்.அவராலும் முடிந்திருக்குமா என்பதும் சந்தேகமே.அரசியல், சினிமா, மதம் உட்பட பல்வேறு விஷயங்களிலும் தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பின்பு பேச்சு அவரது புத்தகங்கள் பற்றித் திரும்பியது.தான் எழுதிய நான்கு புத்தகங்களையும்,அவர் மாமனார் வழக்கறிஞர் திரு.ஆர்.முத்துநாராயணன் எழுதிய புத்தகமொன்றையும் எனக்குப் பரிசளித்தார்.உங்கள் Masterpiece நாவல்  ‘தொட்டால் தொடரும்’ என நான் கூறியதற்கு அப்படி என்றால் என் சிறந்த படைப்பினை நான் எழுதி முடித்து விட்டேன் என்றல்லவா ஆகி விடும் என்றார்.நேர்த்தி என்னும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் பட்டுக்கோட்டை பிரபாகர் என்னை மிகவும் மதித்து அன்புடனும்,பண்புடனும் நடத்தியதன் மூலம் தன் ரசிகரை எவ்வளவு தூரம் மதிக்கக்கூடியவர் என்பதை அறிந்து கொண்டேன்.அவர் மேல் நான் வைத்திருந்த மதிப்பு பன்மடங்காகியது.அவருக்குப் பொன்னாடைப் போர்த்தி பிரியாவிடை பெற்றுக் கிளம்பினேன்.திரும்பும் வழியில்-‘இதுவரை நிழலுக்காக(எழுத்துக்கு) மட்டுமே உங்களின் ரசிகனாக இருந்த நான் இன்று முதல் நிஜத்திற்கும் ரசிகனாகி விட்டேன்’ என்று செய்தி அனுப்பினேன்.’மிகவும் நன்றி’ என்று மறுமொழி செய்தார் நல்மனம் கொண்ட அந்த மகத்தான மனிதர்.

                                                                      5.ராஜேஷ்குமார்


நான் முதன்முதலில் வாசித்த நாவல் ராஜேஷ்குமார் எழுதிய "ஓடும் வரை ஓடு".அதை நான் வாசித்த அனுபவமே அலாதியானது.அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அம்மாவும், தம்பியும் 'ஷாப்பிங்' சென்றிருந்தார்கள்.இரவு 8 மணி அளவில் நான் மட்டும் வீட்டில் தனிமையில் அமர்ந்து "ஓடும் வரை ஓடு" நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன்.மர்மங்கள் நிறைந்த திகிலான நாவலது.பாதி நாவல் வாசித்துக் கொண்டிருக்கும் போதே பயம் பிடித்துக் கொண்டது.நாவலை மூடி வைத்து விட்டு அம்மாவும், தம்பியும் வந்திறங்கக்கூடிய பேருந்து நிறுத்தத்திற்கு ஓடும் வரை ஓடு என ஓட்டம் பிடித்தேன்.அவர்கள் வந்திறங்கியதும் அவர்களுடன் சேர்ந்து வீடு வந்தேன்.ஆக, என் முதல் நாவல் வாசிப்பு ராஜேஷ்குமாருடன் இங்ஙனம் துவங்கியது.இருப்பினும் அந்த வயதிற்கே உரிய க்ரைம் நாவல் படிக்கும் பித்து தலைக்கேறியது.க்ரைம் நாவல் எழுதுவதில் 'கிங்' ஆக விளங்கும் அவருடைய நாவல்களைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.அப்போது பாக்கெட் நாவல்களின் பொற்காலம்.க்ரைம் நாவல், பாக்கெட் நாவல், சத்யா, சுஜாதா எனப் பல பாக்கெட் நாவல்களில் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதினார்.நானும் ஒன்றைத் கூடத் தவற விடுவதில்லை.ராஜேஷ்குமார் தனது தனித்துவமான கதை சொல்லும் முறைக்காகப் பெரும் வாசகப்பரப்பைக் கொண்டவர்.அவரது எழுத்து நடை எவரையும் ஒரு காந்தம் போல தனக்குள் இழுத்துக் கொள்ளும் வலிமை கொண்டது.க்ரைம் நாவலில் 'கோயம்புத்தூரிலிருந்து ட்ரங்க்கால்' என் ஒவ்வொரு மாதமும் வாசகர்களுக்குக் கடிதமெழுதுவார்.மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.அப்போது அவர் வீடு, அறை, எழுதும் முறை இவையெல்லாம் காட்சிகளாக என் மனதில் விரியும்.'எங்கோ கோவை எனும் மாநகரில் வசிக்கிறார்;அவரையெல்லாம் பார்க்க முடியுமா?' என எண்ணுவேன்.ஆனால் நானும் கோவைவாசியாவேன் என்றும், அதுவும் அவர் வீடருகிலேயே என் வீடும் அமையும் என நான் கனவிலேனும் நினைத்ததில்லை.நம் அருகில் தான் ராஜேஷ்குமார் வசிக்கிறார் என அறிய வந்த போது அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என முடிவு செய்தேன்.ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை.அவர் வீடு வழியாகச் செல்லும் போது வாசலில் நின்று கொண்டிருந்தால் பேசுவோம் என்றெண்ணினேன்.ஆனால் ஒருமுறை கூடக் காணமுடியவில்லை.யதேச்சையாக ஒருமுறை வடவள்ளி 'ஆனந்தாஸ்' உணவகத்தில் பார்த்தேன்.குடும்பத்துடன் வந்திருந்தார்.அவருடைய குடும்ப நேரத்தில் கல்லெறிய வேண்டாம் என்று என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

 பின்பொரு நாள்... இனியும் தாமதிக்க வேண்டாம் என முடிவெடுத்து நேராக அவர் வீட்டிற்குச் சென்று விட்டேன்.என் துரதிர்ஷ்டம் அவர் வீட்டிலில்லை.அவருடைய மைத்துனர் தான் இருந்தார்.சென்னையில் தன் மகன் வீட்டிற்குச் சென்றிருப்பதாகவும் வருவதற்குச் சில நாளாகும் என்றும் கூறினார்.அவரிடம் நயமாகப் பேசி ராஜேஷ்குமாரின் அலைபேசி எண்ணை வாங்கினேன்.வீட்டிற்குச் சென்றவுடனேயே ராஜேஷ்குமாரை அலைபேசி எண்ணில் அழைத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.எப்படி என் அலைபேசி எண் கிடைத்தது எனக் கேட்டார்.அவருடைய மைத்துனரிடம் வாங்கியதாகக் கூறியதும், அவரிடம் என் எண்ணை வாங்குவது சுலபமில்லையே... எப்படி வாங்கினீர்கள் எனக் கேட்டார்.எனக்கு ஏதோ பெரிய சாதனை செய்த சந்தோஷம்.சற்று சிரமப்பட்டுத்தான் சார் வாங்கினேன் எனக் கூறி அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தேன்.சிறுவயதிலிருந்தே அவர் நாவல்களை நான் வாசிப்பதைத் தெரிந்து கொண்டவர்... கண்டிப்பாகத் தான் கோவை வந்ததும் சந்திப்போம் எனக் கூறினார்.கொரோனா காலமாக இருந்ததால் சந்திப்புத் தேதியை இரண்டு முறை மாற்றினார்.கடைசியாக March 31,2021 அன்று தொடர்பு கொண்ட போது நாளை சாய்ந்தரம் 6 மணிக்கு வாருங்கள் என்றார்.மறுநாள் சரியான நேரத்திற்குச் சென்ற என்னை அன்புடன் வரவேற்று அமரச் செய்தார்.அவருடைய மனைவி தேநீர் கொடுத்து உபசரித்தார்கள்.சார் இன்று April 1.ஆகையால் நேற்று நீங்கள் என்னை நாளை வாருங்கள் என்றழைத்ததும் சந்தேகப்பட்டேன் என்று நான் சிரித்தவாறு கூறியதும் அவரும் அச்சிரிப்பில் கலந்து கொண்டார்.நீண்டநாள் என்னைக் காக்க வைத்ததற்கு மன்னிப்புக் கோரினார்.அவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் அவருடைய தன்னடக்கத்தால் கவரப்பட்டேன்.கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் நீடித்த எங்கள் கலந்துரையாடலில் எத்தனையோ விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.1968ல் சிறுகதைகள் எழுதத் துவங்கியதில் இருந்து...1980ல் மாலைமதியில்   முதல் நாவல் எழுதியதையும்...அதே ஆண்டு கல்கண்டு வார இதழில் 'ஏழாவது டெஸ்ட் ட்யூப்' தொடர் எழுதியதையும்...அவரது சில படைப்புகள் 'ப்ளாப்ட்' பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது வரை பேசினார்.குற்றம், அறிவியல்,துப்பறிவு,புனைவு பாணியிலான 1500க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி உலகிலேயே அதிக நாவல்கள் எழுதியவர் என்ற பெருமைக்குரியவர் ராஜேஷ்குமார்.அதற்கான என் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொண்டது மட்டுமின்றி இந்த சாதனை ஏன் கின்னஸில் இடம்பெறவில்லை என வினவினேன்."தமிழ் உலகளாவிய மொழியல்ல.ஒரு மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான மொழி.ஆகவே கின்னஸில் உங்கள் பெயர் இடம்பெற வழியில்லை" என கின்னஸ் அங்கத்தினர்கள் தெரிவித்ததாகச் சொன்னார்.இருப்பினும் தனது இந்த சாதனையைத் தெரிந்து கொண்ட அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் தனக்குக் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்ததைச் சிலாகித்துக் கூறினார்.35 வருடங்களுக்கும் மேலாக நான் சேமித்து வைத்திருக்கும் அவருடைய சில நாவல்களைக் காட்டினேன்.ஒரு படைப்பாளியாக அவர் கண்களில் மின்னிய மகிழ்ச்சியைக் கண்டேன்.

க்ரைம் த்ரில்லர்களையே ஏன் அதிகம் எழுதுகிறீர்கள் என்ற என் கேள்விக்கு,"நமது புராண, இலக்கியங்களில் மண்ணாசைக்கு மகாபாரதம், பெண்ணாசைக்கு இராமாயணம் இருக்கிறது.இவ்வளவு ஏன்? சிலப்பதிகாரம் கூட 50% க்ரைம் சப்ஜெக்ட் தான்.இவைகளில் இல்லாத க்ரைமா?சாகாவரம் பெற்றிருக்கும் காவியங்களே க்ரைமை அடிப்படையாய் வைத்து புனையப்பட்டிருக்கும் போது நான் மட்டும் எழுதினால் அது தவறா?" என்றார்.சமீபத்தில் இயக்குனர் பாக்யராஜ் தன்னைச் சந்திக்க வந்ததைப் பற்றிச் சொன்னார்.'திரைக்கதை மன்னனும் - க்ரைம் கதை மன்னனும் சந்திப்பு' எனப் பத்திரிகைகளில் செய்தி வந்ததைக் குறிப்பிட்டார்.பின்னர் அவர் உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்களான விவேக்-ரூபலா பற்றிப் பேச்சு வந்தது.தற்போது நகைச்சுவைக்காகப் புதிதாக விஷ்ணு என்னும் கதாபாத்திரத்தையும் சேர்த்திருப்பதாகக் கூறினார்.எம் கல்லூரிக்கு வந்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிட வேண்டினேன்.'மாணவர்களுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.அவசியம் வருகிறேன்' என்றார்.நேரம் அதிகமாகிவிட்டபடியால் அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன்.சிறிதும் சலிப்பின்றி ஒரு நீண்டகால உற்ற நண்பரைச் சந்தித்தது போல் மிக உற்சாகமான மனநிலையுடன் ராஜேஷ்குமார் அவர்கள் உரையாடியது மிகுந்த மனநிறைவைத் தந்தது.