பன்முகத்தன்மை கொண்ட ஓர் மகத்தான மனிதருடன் ஒரு நாள் முழுவதையும் செலவிட்டால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணிய போது - என் மனதில் தோன்றிய முதல் மனிதர் ஓவியர் ஜீவா தான்.ஓவியர் - புகைப்படக்கலைஞர் - எழுத்தாளர் – பேச்சாளர் - வழக்கறிஞர் - திரைப்படவிமர்சகர் - உணவுப் பிரியர் - தேசாந்திரி என எத்தனையெத்தனை முகங்கள் அவருக்கு.“ஓவியர் ஜீவாவுடன் ஓர் நாள்” என்னும் தலைப்பில் கட்டுரை எழுத எண்ணி அவரை அணுகி சம்மதம் வேண்டினேன்.சம்மதம் தெரிவித்தவர்…‘ஆனால் ஒரு நாள் மட்டுமென்றால் சுவாரஸ்யமாக இருக்காதே' எனக் கூறவும்...தலைப்பை மாற்றி அவருடனான என் முக்கியச் சந்திப்புகளைத் தொகுக்கலாம் என முடிவெடுத்தேன்.கோவையில் செட்டிலாக வேண்டும் என நான் முடிவெடுத்தவுடன் எழுத்தாளரான என் நண்பன் முருகானந்தம்...இம்மாநகரில் வசிக்கும் இருவரை நீ நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.ஒருவர் 'எழுத்தாளர் நாஞ்சில் நாடன்' மற்றொருவர் 'ஓவியர் ஜீவா' என்றான்.என்னே என் பாக்கியம்! இருவருமே இப்போது என் நட்பு வட்டத்தில்.கூறியது மட்டுமல்லாமல் ஜீவாவை ஓர் தேநீர் சந்திப்பின் போது அறிமுகம் செய்தும் வைத்தான்.அவனது இரண்டு சிறுகதை நூல்களுக்கு முகப்போவியம் வரைந்து அவனுக்கு நன்கு அறிமுகமானவர் தான் ஜீவா.அறிமுகம் நட்பாக மலரத் துவங்கியவுடனேயே நாஞ்சில் நாடன் விருது விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பினார்.சமூக, கலை, இலக்கியத்திற்குத் தன் பங்கினை செவ்வனே ஆற்றுபவர்களில் ஆண்டுதோறும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சிறுவாணி வாசகர் மையம்' நாஞ்சில் நாடன் விருது வழங்குகிறது.இவ்விருது முதலில் வழங்கப்பட்டது ஓவியர் ஜீவாவிற்குத் தான்.நான் சென்ற விழாக்களிலேயே மிகச்சிறப்பான ஓர் விழா என இவ்விழாவைக் கூறலாம்.நாஞ்சில்நாடன், கண.சிற்சபேசன், வ.ஸ்ரீ எனப் பல படைப்பாளுமைகளின் பேச்சினிடையே ஜீவாவின் பேச்சு முத்தாய்ப்பாக அமைந்தது.தேசிய விருது பெற்ற அவரது திரைப்பட நூலான `திரைச்சீலை’ நூலினை நான் ஏற்கனவே வாசித்திருந்தமையால் அவர் ஓவியர் மட்டுமன்றி சிறந்த எழுத்தாளரும் கூட என்பதை அறிந்திருந்தேன். இவ்விழாவில் அவர் ஆற்றிய உரையின் மூலம் அவர் ஒரு தேர்ந்த பேச்சாளர் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
Facebook மற்றும் Instagram ல் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருப்பவர் ஓவியர் ஜீவா.தான் எடுக்கும் புகைப்படங்கள், சினிமா விமர்சனங்கள், அருந்தும் உணவுகள், செய்திகள், நிகழ்ச்சிகள்,அனுபவங்கள், நையாண்டிகள், நகைச்சுவைகள், கிண்டல்கள் அனைத்தையும் Post செய்வார்.அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே Social media வில் உண்டு.தினமும் அதிகாலையில் உக்கடம் ஏரி அல்லது Race course சாலையில் நடைபயிற்சி செய்வார்.பூபாள வேளையிலும்...சமயங்களில் அந்தியிலும் அவர் எடுத்து Post செய்யக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு கலாரசனையுடன் இருக்கும்.ஒரு துறையின் சிறந்த Professionals செய்யக்கூடிய வேலையை இவர் பொழுதுபோக்காகச் செய்து கொண்டிருக்கிறாரே எனத் தோன்றும்.அவருடன் நடைப்பயிற்சி செய்ய விருப்பப்பட்டு அலைபேசியில் அழைத்தேன்.நாளை காலை 5.45க்கு வாருங்கள் வாக்கிங் போகலாம் என்றார்.
5 மணிக்கே எழுந்து கிளம்பி விடுவோம் என்றெண்ணியிருந்த நான் அசந்து தூங்கி விட்டேன்.5.45க்கு அலைபேசி ஒலிக்கவே...எடுத்தால் மறுமுனையில் ஜீவா.எங்கிருக்கிறீர்கள் என்றார்? இதோ கிளம்பிவிட்டேன் எனக்கூறி அடித்துப் பிடித்து ஓடி...20 நிமிடத்தில் அவர் வீட்டில் இருந்தேன், நான், ஜீவா மற்றும் அவரது நண்பர் அப்துல் சமத் (20 வருடங்களுக்கும் மேலாக அவருடன் walking செல்பவர்)மூவரும் என் காரில் உக்கடம் ஏரிக்குச் சென்றோம்.வண்டியை நிறுத்தி விட்டு எங்கள் நடையைத் துவங்கினோம்.அதிகாலைக் குளிர்ச்சியும், தென்றல் காற்றும் தாலாட்ட உற்சாகமாக உரையாடிக் கொண்டே நடந்தோம்.ஏரியைச் சுற்றி வெறும் மணலாகக் கிடந்த இடம் தற்போது Smart-city க்காக எவ்வளவு மாறியிருக்கிறது என்று கூறிக்கொண்டே வந்தார்.கோவையின் புகழ்பெற்ற பேனர் ஓவியரான அவரது தந்தை திரு.வேலாயுதம் அவர்களின் திடீர் மறைவிற்குப் பிறகு...தான் பார்த்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு ஓவியத்துறையைத் தோந்தெடுத்ததைப் பற்றிக் கூறினார்.பள்ளிக்குச் செல்லாத நேரங்களில் புதிய படங்களின் வெளியீடுகள், அவற்றின் புகைப்படங்கள்,கட்அவுட்கள்,தியேட்டர்கள் என்ற சூழ்நிலைகளிலேயே தான் வளர்ந்ததையும் தந்தையுடன் பல்வேறு தியேட்டர்களுக்குச் சென்றதையும் அதன் விளைவாக அன்று எம்ஜி.ஆர், சிவாஜி என்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் சினிமா பார்க்கத் துவங்கி இன்று தினமும் ஒரு சினிமாவாவது(பெரும்பாலும் OTT-ல்) பார்த்து விடுவதாகக் கூறினார்.பின்னர்…உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள வாழ்வின் விளிம்புநிலை மனிதர்கள் வசிக்கும் Housing Boardல் தானும், மற்றபிற ஓவியர்களும் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பற்றிக் கூறினார். அதைக் காணவேண்டும் என என் ஆவலைத் தெரிவித்தவுடன்...உடனே அழைத்துச் சென்றார்.அங்குள்ள குடியிருப்புக் கட்டிடங்களில் ஓவியர்களின் பிரம்மாண்ட ஓவியங்களைக் கண்டு திகைத்தேன்.பல்வேறு வண்ணங்களில் வெவ்வேறு Concept களில் வரையப்பட்ட அவ்வோவியங்களிடையே ஜீவா அவர்கள் வரைந்திருந்த ஓவியத்தைக் கண்டேன்.அது ஓர் யானை ஓவியம்.மிகவும் தத்ரூபமாக இருந்தது.அந்த பிரம்மாண்டமான சுவற்றிற்கு ஏற்ற ஓவியம் தான் என எண்ணினேன்.குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு ஓவியருடன் சேர்ந்து தான் அதை வரைந்த விதத்தைச் சுவைபடக் கூறிக்கொண்டிருக்கும் போதே - அக்குடியிருப்பினுள் வசிக்கும் ஓர் பெண்மணி ஜீவாவை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்தார்.அப்பெண்ணின் ஆதுரமான பேச்சும், நலம் கேட்டலும் ஜீவா எனும் கலைஞனை அவர் எவ்வளவு தூரம் மதிக்கிறார் என்பதைப் புரிய வைத்தது.ஜீவாவையும், அப்துல் சமதையும் வீட்டில் Drop செய்வதற்கு முன்பாக ஜீவாவின் Favorite ஆன தேநீர்க் கடையில் தேநீர் அருந்தினோம்.விடைபெறும் போது Racecourse ல் எப்போது வாக்கிங் போகலாம் எனக்கேட்டேன்.சுதந்திர தினத்தன்று அதே நேரத்திற்கு வந்து விடுங்கள் எனக் கூறினார்.இந்த முறை சரியான சமயத்தில் எழுந்து உரிய நேரத்திற்கு அவர் வீட்டுக்குச் சென்று விட்டேன்.அப்துல்சமதையும் அழைத்துக் கொண்டு மூவருமாக Racecourseக்குப் பயணமானோம்.Racecourse-ல் வாக்கிங் செல்லவேண்டும் என்ற என் நீண்டநாள் ஆசை நிறைவேறியது மட்டுமல்லாமல் ஜீவா அவர்களுடன் இணைந்து செல்வதென்பது என் மகிழ்ச்சியைப் பன்மடங்காக்கியது.சுதந்திர தினமாதலால் எங்கும் தோரணங்களும், அலங்காரங்களுமாக இருந்தன.அந்த அதிகாலை நேரத்திலேயே ஓர் அரசியல் பிரமுகர் தன் கட்சி மேடையில் பேச்சைத் துவங்கியிருந்தார்.சுற்றிலும் அவரது அடிபொடிகள் சூழ்ந்திருந்தனர்.சற்று நேரத்தில் தேசியக்கொடி ஏற்றப்படப் போவதற்கான முஸ்தீபுகளும், ஒரு தட்டில் ஆரஞ்சு மிட்டாய்களும் தென்பட்டன.கண்ணிமைக்கும் நேரத்தில் ஜீவா புகைப்படங்கள் எடுக்கத துவங்கினார்.அவர் அலைபேசியைச் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போலத் தான் இருந்தது. ஆனால் மின்னல் வேகத்தில் நிறைய படங்கள் எடுத்திருந்தார்.Racecourse ஐச் சுற்றி வரச் சரியாக 3 கிலோ மீட்டர்.பேசிக் கொண்டே நடந்தோம்.Government arts college வழியாக வந்த போது அங்கு தான் P.U.C மற்றும் B.A (Political science)படித்ததாகக் கூறினார்.மேலும் அங்கு படித்த போது நடிகர் சத்யராஜ் தனக்கு ஒரு வருடம் சீனியர் என்னும் உபரித்தகவலையும் சொன்னார்.B.A முடித்து விட்டு சென்னை Presidency college ல் முதுகலைப்பட்டம் பெற்றதாகவும் அந்த 2 வருடங்கள் மட்டுமே கோவையை விட்டு விலகி இருந்ததாகவும் கூறினார்.கோவையின் மேல் உங்களுக்கு அப்படியென்ன தீராத காதல் என நான் கேட்டதற்கு 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சூழ்நிலை தான் காரணம்' என்று கூறியவர் 'முதுகலைப்பட்டத்திற்குப் பிறகு கோவை திரும்பி அதே ரேஸ் கோர்ஸ் பகுதியிலேயே 3 வருடம் சட்டம் படித்தேன்.முதல் செட்.நான் வெளியே வந்தவுடன் தான் அச்சட்டக்கல்லூரி மருதமலைக்கு இடம் மாறியது' என்றார்.
நான் ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் பன்னாட்டுத்துறைத் தலைவராகப் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஜீவா அவர்களைச் சிறப்பு விருந்தினராகப் பேச அழைத்திருந்தேன்.ஓவியம் பற்றிப் பேசினால் மாணவர்கள் பொறுமையாக அமர்ந்து கேட்பார்களா எனத் தெரியவில்லை.ஆகவே நான் சற்று நேரம் மட்டும் பேசி விட்டு அவர்களை. வரைந்து தருகிறேன் எனச் சொன்னார்.எத்தனை பேரை சார் வரைவீர்கள்? எவ்வளவு நேரம் பிடிக்கும்? எனக் கேட்டேன்.ஒருவரை வரைய 90 விநாடி போதும் எனக்கூறி என்னை ஆச்சரியப்படுத்தியவர்...சொன்னது போலவே 90 விநாடிக்கு ஒருவர் வீதம் பேராசிரியர்கள், மாணவர்கள் என 30 பேரை வரைந்து தள்ளினார்.அவரது வேகத்தையும், ஓவியத்தின் நேர்த்தியையும் கண்ட அனைவரும் அசந்து போய் அவரை வாழ்த்தினர்.ஜீவா அவர்களின் எளிமையையும், அலட்டலின்றிப் பழகக்கூடிய மனோபாவம் கொண்ட குணத்தையும் கண்ட கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் தீனா அவர்கள்...இவ்வளவு சிம்பிளான ஒரு மனிதரை நான் கண்டதேயில்லை என வியந்தார்.அவர் அன்று வரைந்து தந்த 30 பேரில் நானும் ஓருவன். நான் என் வீட்டில் மாட்டி வைத்திருக்கக்கூடிய இரண்டு ஓவியங்களில் ஒன்று ஜீவா வரைந்த எனதோவியம் மற்றொன்று அவர் கைவண்ணத்தில் உருவான பாரதியின் எழிலோவியம்.
ஒரு முறை கோவை Sugarcane Breeding Institute க்கு அருகில் உள்ள Human Animal Society (HAS)க்கு ஓர் மதியப்பொழுதில் வருமாறு அழைப்பு விடுத்தார் ஜீவா.கல்லூரியில் Permission சொல்லிவிட்டு ஆர்வத்துடன் சென்றேன்.HAS என்பது தெருநாய்களைப் பிடித்து Infertile செய்து மறுபடியும் வீதியிலேயே விட்டுவிடக்கூடிய தன்னார்வத் தொண்டு நிறுவனம்.அங்கு கால்நடை மருத்துவர்களும்,செவிலியர்களும் மிகுந்த கருணை உள்ளத்துடன் நாய்களைக் கவனித்துக் கொண்ட விதம் என்னை நெகிழ்ச்சியடையச் செய்வதாய் இருந்தது.அந்நிறுவனத்தின் தலைவருடன் சற்று நேரம் உரையாடினேன்.நாய்களை Infertile செய்வது மட்டுமன்றி விபத்தில் ஊனமடைந்த நாய்களையும் எடுத்து வந்து அவை பூரணமாகக் குணமாகும் வரை சிகிச்சையளித்து பாதுகாப்பதைப் பற்றி விவரமாகக் கூறினார். அவருக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டு ஜீவா அவர்களுடனான தொடர்பு பற்றி வினவினேன்.ஜீவாவின் ஓவியத் திறமையையும், புகழையும் தான் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும்... அந்நிறுவனத்தின் நுழைவாயிலில் உள்ள சுவரில் நாய்களின் சித்திரங்களை(Bosch நிறுவன ஊழியர்களுடன் இணைந்து)வரைந்து தர அவரது உதவியை நாடியதாகவும் கூறினார்.நான் HAS-ஐ சென்றடைந்த போதே ஜீவாவுடன் Bosch ஊழியர்களும்(Volunteers) சேர்ந்து சுவர்களில் விதவிதமான நாய் வடிவங்களை அற்புதமாகத் தீட்டிக் கொண்டிருந்தனர்.ஜீவா அவர்கள் என்னை அன்புடன் வரவேற்று அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.Amateurish ஆன அவர்கள் ஆர்வத்தின் காரணமாகவே அங்கு வரைய வந்திருந்தனர்.இருப்பினும் Brush ஐப் பிடிப்பது முதற்கொண்டு...வண்ணங்கள் தீட்டுவது வரை அவர்களுக்கு சிறப்பாகப் பயிற்றுவித்தார் ஜீவா.முதன்முறையாக சிறந்த ஓவியர் ஒருவர் பயிற்றுவிப்பதையும், என் கண்ணெதிரே அழகழகான ஓவியங்கள் தீட்டப்படுவதையும் மிகவும் ரசித்தேன்.
மற்றொரு முறை அவினாசி ரோட்டில் உள்ள ஓர் அரங்கில் நிகழ்ந்த ஓவியக் கண்காட்சிக்கு அழைத்தார் ஜீவா.நான் என் குடும்பத்துடன் சென்று கண்டுகளித்தேன்.ஏராளமான ஓவியர்கள் தாங்கள் திறம்பட வரைந்திருந்த ஓவியங்களை அங்கு Display செய்திருந்தனர்.அவற்றுள் ஜீவா அவர்களின் சிறந்த ஓவியமும் ஒன்று.எல்லாவற்றையும் கண்ணுறும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது.இவ்வாறு ஜீவா அவர்களுடன் நெருங்கிப் பழகக்கூடிய தருணங்கள் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது என் பேறு.குறிப்பாக உணவுப் பிரியர்களின் Facebook குழு (தலை வாழை இலை) ஒன்றுண்டு(நான்,ஜீவாஉட்பட).நாங்கள் அவ்வப்போது பல்வேறு புகழ்பெற்ற,சிறப்புமிக்க,ருசிக்குப் பேர் போன உணவகங்களில் சந்தித்து அளவளாவுவோம்.
சமீபத்தில் ஜீவா அவர்களது இரண்டாவது திரைப்பட நூலான 'ஒரு பீடியுண்டோ சகாவே'வை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டது.இந்நூல் உலகத்திரைப்படங்கள் முதல் உள்ளுர் திரைப்படங்கள் வரை ஒரு புதிய வெளிச்சத்தை என்னுள் படர விட்டது.ஒரு தேர்ந்த ரசனையாளராகத் தான் ரசித்ததை...படிப்பவர்களும் உணர வேண்டும், குறிப்பிட்ட திரைப்படங்களைத் தேடிப்பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் வாசிக்கக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள நூல்.28 கட்டுரைகளும் தெளிவான, வசீகரமான நடையில் அமைந்தவை.படித்தவுடனேயே நூலில் குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்களை OTT-ல் பார்க்கத் துவங்கி விட்டேன்.அணிந்துரையில் எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் குறிப்பிட்டிருப்பது போல்…"இந்தக் கட்டுரைகளில் குறிக்கப்பட்டுள்ள திரைப்படங்கள், இயக்குநர், கலை இயக்குநர், இசையமைப்பாளர்,பாடகர்,ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர்,நடிகர், நடிகையர்,கதாசிரியர்,திரைக்கதை உரையாடல் எழுதியவர் எனப்பட்டோரின் அகவரிசைப் பட்டியலும்,அவர்கள் சார்ந்த சிறுகுறிப்புகளும் கோர்த்துத் தொகுத்தால் அதுவோர் ஆவணமாக அமையும்”.
முறைப்படி ஓவியக்கலையை கற்காதவர் ஜீவா.தானாகவே வரையத் தொடங்கி இதுவரை ஆயிரக்கணக்கான திரைப்படத்தட்டி ஓவியங்களும், புத்தகமுகப்பு ஓவியங்களும் வரைந்துள்ளார்.தன் தந்தை தொடங்கிய 'சினிஆர்ட்ஸ்' நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.ஜீவாவின் ஓவியங்கள் சித்திரகலா அகாதமியின் ஓவியக் கண்காட்சிகளில்...சென்னை, கோவை, பெங்களூர் போன்ற ஊர்களில் இடம் பெற்றுள்ளன. மாணவப் பத்திரிகையாளராகக் 'கல்கி' இதழிலும், மாலனின் 'திசைகள்' சிற்றிதழிலும் பணியாற்றியுள்ளார்.கனடாவிலிருந்து வரும் 'தாய்வீடு' பத்திரிகையில் தொடர்ந்து பல வருடங்கள் வரைந்ததால் அந்நாட்டுக்கே அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.தற்போது 'ஆவநாழி' இணைய இதழில் இணை ஆசிரியர் ஆகப் பணியாற்றி வருகிறார்.
ஜீவா அவர்கள் பன்முகத்திறமை கொண்ட ஒரு நபராக விளங்கினாலும்... எல்லாவற்றையும் விட என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமையும், அன்புள்ளமும் தான்.தான் இந்திய அளவில் மிகச்சிறந்த ஓவியர்களில் ஒருவர் என்ற எந்த கர்வமும் இல்லாதவர்.கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் இவருடைய தந்தையின் மாமா.அவரைப் போலவே நற்குணம் கொண்ட மாமனிதர்.அவர் மேலும் கொண்டாடப்பட வேண்டுமென்பதும், இன்னும் பல சாதனைச் சிகரங்களை அவர் தொட வேண்டுமென்பதுமே என் அவா.