Monday, 31 May 2021

எழுத்தாளுமைகளுடன் நான்!

                                                               1.நாஞ்சில்நாடன்

'எட்டுத்திக்கும் மதயானை' வாசித்த நாளிலிருந்தே நாஞ்சில்நாடனைச் சந்திக்க வேண்டும் என்ற என் ஆவல் பன்மடங்காகப் பெருகியதற்குக் காரணமாக அமைந்தது மற்றுமாேர் ஆனந்தப் பேரனுபவம்.ஒருமுறை ஆனந்தவிகடனில் வாசகர் கேள்விகளுக்குப்  பதிலளித்தார் நாஞ்சில்நாடன்.அதில் என் கேள்வியும் அடக்கம்.  

'எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்' என்ற என் கேள்விக்கு...

"எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது.பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக்கூடாது.ஒரு துறையை விரும்பி வாசிக்கிறவர் அதைத் தொடர்ந்து மேலே போகலாம்.தேர்ந்த வாசகனுக்கு எடுத்த புத்தகத்தின் 10 பக்கங்கள் வாசித்தாலே தனக்கு உகந்ததா இல்லையா...என்பது தெரிந்து விடும்.ஏற்கெனவே வாசித்திருக்கும் நண்பர்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்..."

- என்று ஓர் அருமையான பதிலளித்திருந்தார்.இவ்விரு காரணங்களும் அவரைச் சந்திக்கும் உந்துதலை ஏற்படுத்தினாலும் சந்திக்க நீண்ட காலமாகியது.

என் நண்பரான ஓவியர் ஜீவா, 'சிறுவாணி வாசகர் மையம் சார்பில் இந்த வருடம் எனக்கு "நாஞ்சில் நாடன் விருது" வழங்குகிறார்கள் அவசியம் வாருங்கள்' என அழைப்பு விடுத்திருந்தார்.சிறுவாணி வாசகர் மையத்தை சிறப்பாக நடத்தி  வரும் திரு.பிரகாஷ் மற்றும் திருமதி.சுபாஷிணி இருவரும் நடத்திய அந்த விழா மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.அவ்விழாவில் தான் நாஞ்சில்நாடனை முதன்முதலில் சந்தித்தேன்.விழாவின் முத்தாய்ப்பாக நாஞ்சிலாரின் பேச்சு அமைந்தது.மற்றவர் பேச்சிலிருந்து எனக்கொன்று புரிந்தது.நாம் சந்திக்க வேண்டும் என விரும்புவது ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல... ஒரு பல்கலைக்கழகம் என்று.ஆம்!... சிறுகதை, புதினம், கவிதை மட்டுமன்றி தீவிரமான சொல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் நாஞ்சில்நாடன்.ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனிமனிதராகச் செய்து கொண்டிருக்கிறார்.விழா முடிந்ததும் அவரிடம் சென்று பேசினேன்.அன்று துவங்கியது எங்கள் நட்பு.அவரை ஒருமுறையேனும் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைக்குமா என நான் எண்ணிய காலங்கள் உண்டு.தற்போது அனுதினமும் அவருடன் தொடர்பில் இருக்கக்கூடிய  வாய்ப்பினை காலம் எனக்களித்தது என் பேறு.பார்ப்பதற்கு ஒரு காவல்துறை உயரதிகாரியைப் போன்ற மிடுக்கான தோற்றமுடைய நாஞ்சிலாரிடம் நெருங்கிப்பழகிய பின்னர் தான் அவரது குழந்தை உள்ளம் புரிந்தது.தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரென்ற எந்த கர்வமும் இல்லாதவர்.'சாகித்ய அகாடமி','கலைமாமணி' போன்ற விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர்.ஞானபீட விருது பெறுவதற்கான அனைத்துத் தகுதியும் உடையவர்.என் அழைப்பினை ஏற்று நான் இயக்குனராகப் பணிபுரிந்த/பணிபுரிந்து கொண்டிருக்கும் கல்லூரிகளுக்கு வந்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.நான்கு முறை அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது என் வாழ்வின் உன்னதப் பக்கங்களில் ஒன்று.மாணவர்களிடையே பேசும் போதெல்லாம் புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.சொற்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்."உலகில் பல மொழிகள் அழிந்து கொண்டே வருவதுடன்  அம்மொழிகளுக்குள் புழங்கும் சொற்களும் குறைந்து கொண்டே வருகின்றன.பயன்படு சொற்கள் குறைந்தால் ஒரு மொழி தன் வளத்தை இழப்பதுடன் இறுதியில் அது அழிந்தும் போக ஏதுவாகும்.இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தமிழ்மொழியின் சொற்கள் எவ்வளவு இருக்கும்? அதிகபட்சம் ஆயிரம் சொல்லலாமா? சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு 1924ல் வெளிவந்த பேரகராதியில் 1,24,000 சொற்கள் அகரவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.அப்பேர்ப்பட்ட மிகப்பெரும் பொக்கிஷத்திலிருந்து சொற்களை எடுத்துச் செலவழிக்க ஏன் கஞ்சத்தனம் படுகிறோம்?" என மாணவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களுடைய சிந்தனையைத் தூண்டினார்.சகமாணவிகளிடம் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களைப் போதித்த அதே சமயத்தில் மாணவிகளும் நாகரிகம் என்னும் பெயரில் எப்படியெல்லாம் தன்னிலை மறந்து நடந்துகொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.அவரது பேச்சுக்குப் பின் ஒரு பேராசிரியை அவரிடம்,"பெண்களாகிய நாங்கள் கூட மாணவிகளிடம் எளிதில் சொல்லி விளங்க வைக்க முடியாத சில விஷயங்களை நீங்கள் அருமையாகச் சொல்லிப் புரிய வைத்திருக்கிறீர்கள் சார்... மிகுந்த நன்றி" என்று கூறியதை நான் கண்டேன்.தீவிர உணவு ரசிகரான நாஞ்சிலாருடன்  'Western valley' மற்றும் 'பாலகுமார் மெஸ்' ஆகிய பிரசித்தி பெற்ற உணவகங்களுக்குச் சென்றிருக்கிறேன்.உணவு பற்றி அவருடன் அளவளாவிய போது..."நான் உணவை ரசிப்பவன்.கஷ்டப்பட்ட காலத்திலிருந்த போதும் சரி... பம்பாய்க்குச் சென்ற போதும் சரி... நான் எல்லா உணவையும் ரசித்துத்தான் சாப்பிடுகிறேன்.மஹாராஷ்டிரத்தின் சோளரொட்டியும்,கூனிப் பொடியில் இடிக்கப்பட்ட சம்மந்தியாக இருந்தாலும்கூட ருசித்து அந்த உணவுக்கு உண்டான நியாயத்தை வழங்கித்தான் உண்கிறேன்" என்றார்.கல்லூரி விழாக்கள் தவிர இலக்கியக் கூட்டங்களிலும் அவரைச் சந்தித்து உரையாடுவதுண்டு.பலமுறை அவர் வீட்டிற்குச் சென்று அவருடைய குடும்ப நண்பராகவே ஆகி விட்டேன்.அவருடன் நான் காரில் பயணம் செய்யும் போதெல்லாம் எவ்வளவோ இலக்கிய விஷயங்களைப் பேசிக் கொண்டு வருவார்.இயற்கை தனக்கு இன்னும் பத்து வருடமாவது ஆயுள்தர வேண்டுமென்றும்,எழுத வேண்டிய படைப்புகள் இன்னும் இருக்கிறது என்றும் கூறுவார்.

           
              
1975ல் நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் எழுதத் துவங்கிய அவர் எங்குமே நின்று இளைப்பாறியதில்லை.அவருடன் எழுத வந்தவர்கள் இன்று பெரும்பாலும் ஓய்ந்து விட்டனர்.தேடல்,விழைவு, உழைப்பு ஆகியவை தான் அவரை மிக விரும்பிப் படிக்கப்படும், மிக அதிகம் எழுதும் எழுத்தாளராகவும் வைத்திருக்கிறது.நாஞ்சில்நாடனின் கதைகளின் வழியாக நாம் கண்டடைய முடிகிற விடைகள் யாவுமே நேரடியானவை, யதார்த்தமானவை.உள்ளதை உள்ளபடி சொல்லுபவை.இளம் தலைமுறை எழுத்தாளர்களைத் தொடர்ந்து கூர்மையாகக் கவனித்துப் பாராட்டுகிற பெருந்தன்மையும், தன்னலமற்ற குணமும் அவருக்கிருக்கிறது.சகமனிதரின்பால் அவர் கொண்ட நேசமும், சமூகத்தின் பேரில் கொண்ட அக்கறையும், எவருக்கும் அஞ்சாமல் தன் கருத்தை முன்வைக்கக்கூடிய மாண்பும், எந்தப் பாகுபாடுமின்றி அனைவரிடமும் கலந்து பழகும் பண்பும் மிகுந்த அந்த மாமனிதர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு இன்னும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் என்பதே என் அவா.

                                                           2. எஸ்.ராமகிருஷ்ணன்


“என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம்.தோற்பதும்,ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து விட முயன்றதன் விளைவு தான் எனது எழுத்துக்கள்” என்கிறார் எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்.Non-fiction ஐப் பொருத்தவரை அவருடைய ஒவ்வொரு பனுவலும் ஓர் மைல்கல்.அதுவும் குறிப்பாக  எப்போது “துணையெழுத்து” படித்தேனோ அப்போதே அவரை அவசியம் சந்திக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.சந்திப்பதற்கான வாய்ப்பை எப்படி ஏற்படுத்திக் கொள்வது எனத் தெரியவில்லை.அவருக்கு இ-மெயில் அனுப்பி சந்திக்க விருப்பமிருப்பதைத் தெரிவித்தாலென்னஎன ஓர் எண்ணம் தோன்றியது.அவருடைய website www.sramakrishnan.com ல் இருந்த அவருடைய Email id writerramki@gmail.com க்கு மெயில் அனுப்பினேன்.
மதிப்பிற்குரிய திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, வணக்கம்என் பெயர் கார்த்திகேயன்.துபாயில் பெருநிறுவனப் பயிற்சியாளராகவும்பேராசிரியராகவும் பணிபுரிகிறேன்.உங்களின் மிகப்பெரிய ரசிகன்.உங்களுடன் சில மணித்துளிகள் உரையாட விரும்புகிறேன்.ஆகஸ்ட் மாத விடுமுறையில் இந்தியா வருவேன்.தங்களுக்கு சந்திக்க விருப்பமும்,நேரமும் இருந்தால் உங்களுக்கு வசதியான தேதியைக் குறிப்பிடவும்.
அன்புடன்,
கார்த்திகேயன்.
மறுநாளே அவரிடமிருந்து பதில் வந்தது.அன்பு கார்த்திகேயன்,தங்களின் மின்னஞ்சலுக்கு நன்றி.சென்னைக்கு வரும் போது அவசியம் சந்திக்கலாம்.எனது தொலை பேசி எண் 94………………47. சென்னை வந்தவுடன் அழைக்கவும்.அன்புடன்,எஸ்.ராமகிருஷ்ணன்.படித்தவுடன் எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்த மறுநாளே அவருக்கு போன் செய்தேன்.”சாய்ந்தரம் 4 மணிக்கு வீட்டிற்கு வாருங்கள்,சந்திப்போம்” என்றார்.சொன்ன நேரத்திற்கு சாலிகிராமத்தில் உள்ள அவரது கங்கை அபார்ட்மெண்டில் இருந்தேன்.காலிங் பெல் அடித்தவுடன் அவரே திறந்தார்.”நான் தான் கார்த்திகேயன்” என்றவுடன் என்னை வரவேற்று அவரது மனைவியிடமும்,பெரியவன் ஹரியிடமும் அறிமுகப்படுத்தினார்.இளையவன் ஆகாஷ் பள்ளியிலிருந்து இன்னும் திரும்பியிருக்கவில்லை.நான் அவருக்காக வாங்கிச் சென்றிருந்த அழகான “மயில் சிற்பம்” ஒன்றைப் பரிசளித்தேன்.நன்றி தெரிவித்துவிட்டு என்னை அவரது புத்தக அறைக்கு அழைத்துச் சென்றார்பல்வேறு விதமான நூல்களும்,கணினியும் இருந்த அந்த அறையில் அமர்ந்து பேசத் துவங்கினோம்.கிட்டத்தட்ட அவரது நூல்கள் அனைத்தையுமே நான் படித்திருந்ததால்...அவற்றிலிருந்து என் சந்தேகங்களையும்,கேள்விகளையும் நான் கேட்பதும்,அவர் விளக்குவதுமாக மிக சுவராஸ்யமாக எங்கள் உரையாடல் நீண்டு கொண்டே போனது.இடையே வந்து டிபனும்,தேநீரும் கொடுத்து உபசரித்த அவரது மனைவி, வந்திருப்பது தனது கணவருடைய தீவிர ரசிகர் என்பதை உணர்ந்து கொண்டு தானும் உரையாடலில் இணைந்து கொண்டார்.இந்தியா முழுவதும் சுற்றி அலையும் ஒரு தேசாந்திரியாகவும்...சினிமா,நாடகம்,பத்திரிகை,இணையம் எனப் பல தளங்களிலும் வெற்றிகரமாக அவர் இயங்குவதற்கும் காரணம்-அவரைப் புரிந்து கொண்டு-சுதந்திரமும்,ஆதரவும் அளித்து வரும் அவரது மனைவி திருமதி.சந்திரபிரபா தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.எங்களுடன் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென்று உள்ளே சென்று தன் கணவர் வருடந்தோறும் இலக்கியக் கூட்டத்தில் பேசும் பேச்சுக்கள் அடங்கிய ஏழு குறுந்தகடுகளைக்(CD) கொண்டு வந்து எனக்குப்  பரிசளித்தார்.ஹெமிங் வேயின் “கிழவனும் கடலும்,டால்ஸ்டாயின் “அன்னா கரீனினா”,ஹோமரின் “இலியட்,”ஷேக்ஸ்பியரின் “மெக்பெத்”,தஸ்தாயெவ்ஸ்கியின் 
குற்றமும்  தண்டனையும்”,”ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்” மற்றும் பாஷோவின் ஜென் கவிதைகள் ஆகியவற்றைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் பேசியவையே அவை.நான் நெகிழ்ந்து போய் என் நன்றியினைத் தெரிவித்தேன்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் அவருக்குப் பிடித்தமான மிகச் சிறந்த பத்து நூல்களை - நான் வாசிப்பதற்காகப் பரிந்துரைக்குமாறு கேட்டேன்.அவரோ தன் கைப்பட எழுதியே கொடுத்து விட்டார்.அவற்றுள் பாதி நூல்களுக்கு மேல் அவர் எழுதி கொடுத்திருக்காவிட்டால் நான் வாசித்திருப்பேனா என்பது சந்தேகமே.இதிலிருந்து பல்வேறு வகையான நூல்களையும் வாசிக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.

ரஜினிக்கும் அவருக்குமான நட்பினைப் பற்றிக் கேட்ட போது,ரஜினியுடைய மிகச்சிறந்த ஐந்து நண்பர்களில் தானும் ஒருவர் என்பதைத் தெரிவித்தார்.ஒரு நாள் ரஜினியிடமிருந்து போன்:”உங்கள் அபார்ட்மெண்ட்டுக்குக் கீழே தான் இருக்கிறேன்,வாருங்கள் ஒரு ride போகலாம்” என்றாராம்.சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் இருப்பதாலேயே ரஜினியின் நட்பைப் பெற்றிருக்கிறார் என்பது தெரிந்தது.
அப்போது பள்ளி முடிந்து அவரது இளைய மகன் ஆகாஷ் வந்தான்.துறுதுறுவென்று  சூட்டிகையான பையனாக இருந்தான்.அவனையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.பின்னர் நான் கையோடு கொண்டு சென்றிருந்த அவரது நூலான “எனது இந்தியாவை ஆட்டோகிராஃப் க்காகக் கொடுத்தேன்.ஒரு குழந்தையை வாங்குவது போல் வாங்கினார்.தன் படைப்பின் மேல் ஒரு படைப்பாளி வைத்திருக்கும் ப்ரியத்தைக் கண்டு கொண்டேன்.ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டவுடன்,என் வீட்டிற்குக் கண்டிப்பாகக் குடும்பத்துடன்  வர வேண்டும் எனக் கூறி விடைபெற்றேன்.நிச்சயம் வருகிறேன் என சம்மதித்திருக்கிறார்.என்றாவது ஒரு நாள் வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். 

3.ஜெயமோகன்


ஒரே சந்திப்பில் ஒருவரை உங்களுக்கு எந்த அளவுக்குப் பிடித்துப் போகும்ஜெயமோகனுடனான என் முதல் சந்திப்பிலேயே எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது.ஜெயமோகனின் நூல்களை வாசிக்கும் வரை அவரைப் பற்றிய எனது “பிம்பம்” வேறாகத் தான் இருந்த்து.இணையத்தில் சிலர் எழுதிய விமர்சனங்களையும்,சில பத்திரிகைகளில் வந்த செய்திகளையும் வைத்து அவரை ஒரு முரண்பாட்டாளாராகவே எண்ணியிருந்தேன்.என் எழுத்தாள நண்பன் பா.முருகாந்தம்,ஜெயமோகனின் தீவிர விசிறி.அவன் கொடுத்த ஊக்கத்தால் ஜெயமோகனின் நூல்களை வாசிக்கத் துவங்கினேன். இதுவரை இரண்டு நூல்களை வாசித்துள்ளேன்.அவை : பேரழகுடன் விளங்கும் அடர்ந்த காட்டின் பின்னணியில்மெல்லிய கனவின் மொழியில்...முதல் காதலைச் சொன்ன “காடு” மற்றும் தென்தமிழகக் காடுகளின் இயற்கை வளம்,ரப்பர் என்ற பணப்பயிரால் சீரழிந்ததை விளக்கிய “ரப்பர்.கவித்துவமான விவரணைகளும்,துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடும்,நுட்பமான கதை சொல்லும் முறையுமே அவரது ஒவ்வொரு நூலையும் மிகச்சிறந்த இலக்கியப் படைப்பாக மாற்றுகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். www.jeyamohan.in இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்து வந்ததில் மகாபாரதத்தை “வெண்முரசு” என்னும் காவியமாக அனுதினமும் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதை அறிந்து கொண்டேன்.மொத்தம் 25000 பக்கங்கள் எழுத உத்தேசித்துள்ள ஜெயமோகன் இதுவரை 12000 பக்கங்கள் எழுதியுள்ளார்.அவை 12 புத்தகங்களாக வெளிவந்துள்ளன.தமிழ் நூல்களில் இது ஒரு  ‘மைல்கல்” என்றே சொல்லலாம்.இவ்வளவு ஞானமா என்று அதிசயிக்கும் அதே சமயத்தில் இவருக்கு நேரம் எப்படிக் கிடைக்கிறது என்பதும் ஆச்சரியமாயிருக்கிறது.
இந்த வருடம்(2017) கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் இலக்கியக் கூட்டத்தில் ஜெயமோகனும்,ஜோ டி குருஸும் பேசுகிறார்கள் என்றறிந்ததும் குறிப்பிட்ட தேதியில் அவர்கள் பேச்சைக் கேட்கவும் சந்திக்கவும் ஆவலுடன் சென்றேன்.ஜெயமோகனின் பிரத்யேக 
வழிகாட்டுதலின் பேரில் 233 ஆவது ஸ்டால் அவரது நூல்களுக்காகவே அமைத்திருந்தார்கள்.நான் சென்றபோது ஜெயமோகன்  ஒரு நாற்காலியில் அமர்ந்து அவரது வாசகர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்சரிஎல்லோரும் பேசிவிட்டுச் சென்றவுடன் நாம் பொறுமையாகப் பேசலாம் என்று காத்திருந்தேன்.அனைவரும் பேசிவிட்டுச் சென்றவுடன் ஜெயமோகனிடம் சென்று கைகுலுக்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் இருபது நிமிடங்களுக்கும் மேல் நீடித்த அந்த உரையாடலில் அவர் எப்பேர்ப்பட்ட genius என்பதை அறிந்து கொண்டேன்.விஷ்ணுபுரம் புத்தகம் வாங்கி அவர் Autograph பெற்றுக் கொண்டேன் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்தப் புத்தகம் கனவுலகத்தைப் பற்றியது எனக் கூறினார்ஜோ டி குருஸ் வரவில்லையா எனக் கேட்டதற்கு அவர் ஏதோ அவசர வேலை காரணமாக அதிராம்பட்டினம் சென்று விட்டதாகச் சொன்னார்பேச்சு அவருடைய website,பயணங்கள்எழுத்து என நீண்டது,பின்பு “The Hindu”ஸ்டாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றோம்.சாருமதி பாடிய பாடல்கள் செவிக்கு இனிமையாக அமைந்தது.

சரியாக 7 மணிக்கு இலக்கியக்கூட்டம் துவங்கியது.ஜோ டி குருஸூக்குப் பதிலாக  அழைக்கப்பட்டிருந்த கவிஞர் புவியரசு முதலில் பேசினார்ஜெயமோகனின் எழுத்துக்களைப் படிக்கும் போது அவர் தான் எழுதுகிறாராஅல்லது அவருக்குள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி எழுதுகிறதாஎனத் தான் வியப்பதாகக் கூறினார்.பின்னர் பேச வந்த ஜெயமோகன் ஒரு இலக்கியக்கூட்டம் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகப் பேசினார்“ஒரு எழுத்தாளரிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கக் கூடாது. ஒன்று,நீங்கள் எழுதியுள்ள நாவலின் மையக் கருத்தென்னவென்றுக் கேட்பதுஎழுத்தாளரின் நோக்கம் கருத்து சொல்வதல்ல.வாசித்தல் என்பது ஒரு பேரனுபவம்.ஒரு 200 பக்க நோட்டில் நான் அனைத்து இலக்கியங்களின் மையக்கருத்துக்களையும் எழுதி வெளியிட்டால் அதைப் படித்து விட்டு எல்லா இலக்கியங்களையும் வாசித்து விட்டதாக யாரேனும் கூறிக்கொள்ள முடியுமா?.இரண்டாவதாக,எப்படி நீங்க அப்படியே படம் பிடிச்சுக் காட்டுறீங்கஎனவும் ஒரு எழுத்தாளரிடம் கேட்கக்கூடாது.ஒரு புகைப்படக்காரர்  ஒரு காட்சியைப் படமெடுப்பதும்,வாசிப்பனுபவமும் ஒன்றா?இலக்கியமென்பது-“A ride into the unconscious” என்றார்விஷய ஞானம் செறிந்த அந்த இலக்கியப் பேச்சு முடிந்தவுடன் அவரைச் சந்தித்து என் சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன்.விஷ்ணுபுரம் படித்து விட்டு என் கருத்தைச் சொல்வதாகக் கூறினேன்.மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார்.
எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது.பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது நமக்கு ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக்கூடாது.....”
எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார் நாஞ்சில்நாடன்.இனி ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

                                                         4.பட்டுக்கோட்டை பிரபாகர்


என்னுடைய ‘Gene’ லயே வாசிக்கும் பழக்கம் உண்டு.பால்ய வயதில் அம்புலி மாமா,கோகுலம்,முத்து காமிக்ஸ் எனப் படிக்கத் துவங்கிய நான் வாசிப்பதற்கு இடைவெளி விட்டதேயில்லை.Fiction, Non-fiction எனத் தமிழிலும்ஆங்கிலத்திலுமாக என்னுடைய வாசிப்புத்தளம் பரந்து பட்டது.எத்தனையோ கதைகளையும், கவிதைகளையும், இலக்கியங்களையும், இதிகாசங்களையும், வரலாற்றுப் புனைவுகளையும்தன்னம்பிக்கை நூல்களையும்பயணக் கட்டுரைகளையும் வாசித்திருந்தாலும் கூட என்னைக் கனவுலகில் மிதக்க விட்டு உல்லாச வானில் சிறகடிக்க வைத்த எழுத்துக்குச் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை பிரபாகர்.காதலின் ஆழத்தையும்புனிதத்தையும்,இனிமையையும் வலியையும் அவர் எழுதும் விதமே அலாதியானதுஎண்பதுகளிலேயே-“தொட்டால் தொடரும்”,”நான் உன்னை சுவாசிக்கிறேன்”, “மிஸ் மஞ்சுளாவின் முடிவுரை”, “பாதையெல்லாம் பூக்களிட்டு”,”கனவுகள் இலவசம்”,கொலுசுச் சத்தம்” என அவரது பல்வேறு நாவல்களால் கவரப்பட்டு அப்போதே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்அவர் எழுதிய பதில் கடிதத்தை இன்று வரை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.எப்படியாவது என் அபிமான எழுத்தாளரைச் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய முப்பத்தைந்தாண்டுக் கனவு.
பட்டுக்கோட்டை பிரபாகரின் முகநூல் நண்பர்களில் நானும் ஒருவன்.அவர் எழுத்தைப் போலவே முகநூலில் அவரது பதிவுகளும் மிகவும் ரசனைக்குரியதாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கும்.சமீபத்தில் குமுதத்தில் உதவி ஆசிரியராக பணிபுரியும் என் நண்பர் கவிஞர் ரவிராஜ் அவருக்கு அனுப்பிய வீடியோ ஒன்றினை ஷேர் செய்து கமெண்ட் பண்ணியிருந்தார்.அப்போது தான் ரவிராஜுக்குப் பட்டுக்கோட்டை பிரபாகரிடம்  நல்ல பரிச்சயம் உண்டு என்பதை அறிந்து கொண்டு- தஞ்சை சென்ற போது- எனது நண்பரைச் சந்தித்தேன்.என் விருப்பத்தைப் புரிந்து கொண்ட ரவிராஜ் உடனே பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் போன் செய்து “உங்களின் ரசிகர் என்னுடைய நெருங்கிய நண்பர்.அவருடன் பேச முடியுமா?” என்று அவரிடம் அனுமதி பெற்று போனை என்னிடம் கொடுத்தார்.சந்தோஷ மிகுதியில் சற்றே தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டு,1983 ஆம் ஆண்டு முதல் நான் அவருடைய கதைகளைத் தொடர்ந்து படிப்பதையும்,அவரது எழுத்துக்குத் தீவிர விசிறி என்பதையும் தெரிவித்தேன்.மிக்க ஆனந்தம் அடைந்தவராய்,’உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்றார்.நான் என்னைப் பற்றிச் சொல்லி விட்டு அவரைச் சந்திக்க விரும்புவதாய்க் கூறினேன்.அவசியம் நீங்கள் சென்னை வரும் போது சந்திக்கலாம் என்றார்.வரும் போது ஒரு நாள் முன்பே போன் செய்து விட்டு வாருங்கள் என்றார்.”கண்டிப்பாக சார்” என்று என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்.பின்னர் வீடு வந்த நான்,14.5.1988 அன்று அவர் எனக்கு எழுதிய கடிதத்தை மொபைல் கேமராவில் photo எடுத்து whatsapp செய்தேன்.”Very nice happy” என்று ‘ஸ்மைலி’,’தம்ஸ் அப்’ உட்பட நான்கு எமோஜிகளுடன் பதில் அனுப்பினார்.

ஒரு மாதத்துக்குப் பிறகு சென்னை செல்லும் வேலை வரவே உடனே பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் போன் செய்தேன்.வெல்கம் எனக்கூறி விலாசம் கொடுத்தார்.குறிப்பிட்ட நாளில் சென்னை சென்று விட்டாலும்,குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் அலுவலகம் செல்வதற்குச் சற்றுத் தாமதமாகி விட்டது.அவரைச் சந்திக்க முடியாமல் போய் விடுமோ என்கிற பதட்டம் என்னைத் தொற்றிக் கொண்டது.இருப்பினும் எனக்காகப் பொறுமையாகக் காத்திருந்தார்.நான் அவரது அலுவலக அறையைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தவுடன் சிரித்த முகத்துடன் கைகுலுக்கி வரவேற்றார்.அநேகமாக நீண்ட நெடுங்காலமாக வாசகனாக-ரசிகனாக இருந்து பட்டுக்கோட்டை பிரபாகரை சந்தித்தவன் நானாக மட்டுமே இருக்க வாய்ப்புண்டு.ஒரு மணி நேரம் நீடித்த எங்களின் அளவளாவல்கள்-என்னால் என்றுமே மறக்க முடியாத அற்புதக்கணங்கள்.என்னுடன் அவர் பேசியதெல்லாம் நெருக்கமான நண்பரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்கள்.எந்தப் பத்திரிக்கைப் பேட்டியிலும்,தொலைக்காட்சிப் பேட்டியிலும் கூட இவ்வளவு வெளிப்படையாக அவர் பேசி படித்திருக்கவோ,கேட்டிருக்கவோ மாட்டீர்கள்.அவராலும் முடிந்திருக்குமா என்பதும் சந்தேகமே.அரசியல், சினிமா, மதம் உட்பட பல்வேறு விஷயங்களிலும் தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பின்பு பேச்சு அவரது புத்தகங்கள் பற்றித் திரும்பியது.தான் எழுதிய நான்கு புத்தகங்களையும்,அவர் மாமனார் வழக்கறிஞர் திரு.ஆர்.முத்துநாராயணன் எழுதிய புத்தகமொன்றையும் எனக்குப் பரிசளித்தார்.உங்கள் Masterpiece நாவல்  ‘தொட்டால் தொடரும்’ என நான் கூறியதற்கு அப்படி என்றால் என் சிறந்த படைப்பினை நான் எழுதி முடித்து விட்டேன் என்றல்லவா ஆகி விடும் என்றார்.நேர்த்தி என்னும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் பட்டுக்கோட்டை பிரபாகர் என்னை மிகவும் மதித்து அன்புடனும்,பண்புடனும் நடத்தியதன் மூலம் தன் ரசிகரை எவ்வளவு தூரம் மதிக்கக்கூடியவர் என்பதை அறிந்து கொண்டேன்.அவர் மேல் நான் வைத்திருந்த மதிப்பு பன்மடங்காகியது.அவருக்குப் பொன்னாடைப் போர்த்தி பிரியாவிடை பெற்றுக் கிளம்பினேன்.திரும்பும் வழியில்-‘இதுவரை நிழலுக்காக(எழுத்துக்கு) மட்டுமே உங்களின் ரசிகனாக இருந்த நான் இன்று முதல் நிஜத்திற்கும் ரசிகனாகி விட்டேன்’ என்று செய்தி அனுப்பினேன்.’மிகவும் நன்றி’ என்று மறுமொழி செய்தார் நல்மனம் கொண்ட அந்த மகத்தான மனிதர்.

                                                                      5.ராஜேஷ்குமார்


நான் முதன்முதலில் வாசித்த நாவல் ராஜேஷ்குமார் எழுதிய "ஓடும் வரை ஓடு".அதை நான் வாசித்த அனுபவமே அலாதியானது.அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அம்மாவும், தம்பியும் 'ஷாப்பிங்' சென்றிருந்தார்கள்.இரவு 8 மணி அளவில் நான் மட்டும் வீட்டில் தனிமையில் அமர்ந்து "ஓடும் வரை ஓடு" நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன்.மர்மங்கள் நிறைந்த திகிலான நாவலது.பாதி நாவல் வாசித்துக் கொண்டிருக்கும் போதே பயம் பிடித்துக் கொண்டது.நாவலை மூடி வைத்து விட்டு அம்மாவும், தம்பியும் வந்திறங்கக்கூடிய பேருந்து நிறுத்தத்திற்கு ஓடும் வரை ஓடு என ஓட்டம் பிடித்தேன்.அவர்கள் வந்திறங்கியதும் அவர்களுடன் சேர்ந்து வீடு வந்தேன்.ஆக, என் முதல் நாவல் வாசிப்பு ராஜேஷ்குமாருடன் இங்ஙனம் துவங்கியது.இருப்பினும் அந்த வயதிற்கே உரிய க்ரைம் நாவல் படிக்கும் பித்து தலைக்கேறியது.க்ரைம் நாவல் எழுதுவதில் 'கிங்' ஆக விளங்கும் அவருடைய நாவல்களைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.அப்போது பாக்கெட் நாவல்களின் பொற்காலம்.க்ரைம் நாவல், பாக்கெட் நாவல், சத்யா, சுஜாதா எனப் பல பாக்கெட் நாவல்களில் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதினார்.நானும் ஒன்றைத் கூடத் தவற விடுவதில்லை.ராஜேஷ்குமார் தனது தனித்துவமான கதை சொல்லும் முறைக்காகப் பெரும் வாசகப்பரப்பைக் கொண்டவர்.அவரது எழுத்து நடை எவரையும் ஒரு காந்தம் போல தனக்குள் இழுத்துக் கொள்ளும் வலிமை கொண்டது.க்ரைம் நாவலில் 'கோயம்புத்தூரிலிருந்து ட்ரங்க்கால்' என் ஒவ்வொரு மாதமும் வாசகர்களுக்குக் கடிதமெழுதுவார்.மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.அப்போது அவர் வீடு, அறை, எழுதும் முறை இவையெல்லாம் காட்சிகளாக என் மனதில் விரியும்.'எங்கோ கோவை எனும் மாநகரில் வசிக்கிறார்;அவரையெல்லாம் பார்க்க முடியுமா?' என எண்ணுவேன்.ஆனால் நானும் கோவைவாசியாவேன் என்றும், அதுவும் அவர் வீடருகிலேயே என் வீடும் அமையும் என நான் கனவிலேனும் நினைத்ததில்லை.நம் அருகில் தான் ராஜேஷ்குமார் வசிக்கிறார் என அறிய வந்த போது அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என முடிவு செய்தேன்.ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை.அவர் வீடு வழியாகச் செல்லும் போது வாசலில் நின்று கொண்டிருந்தால் பேசுவோம் என்றெண்ணினேன்.ஆனால் ஒருமுறை கூடக் காணமுடியவில்லை.யதேச்சையாக ஒருமுறை வடவள்ளி 'ஆனந்தாஸ்' உணவகத்தில் பார்த்தேன்.குடும்பத்துடன் வந்திருந்தார்.அவருடைய குடும்ப நேரத்தில் கல்லெறிய வேண்டாம் என்று என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

 பின்பொரு நாள்... இனியும் தாமதிக்க வேண்டாம் என முடிவெடுத்து நேராக அவர் வீட்டிற்குச் சென்று விட்டேன்.என் துரதிர்ஷ்டம் அவர் வீட்டிலில்லை.அவருடைய மைத்துனர் தான் இருந்தார்.சென்னையில் தன் மகன் வீட்டிற்குச் சென்றிருப்பதாகவும் வருவதற்குச் சில நாளாகும் என்றும் கூறினார்.அவரிடம் நயமாகப் பேசி ராஜேஷ்குமாரின் அலைபேசி எண்ணை வாங்கினேன்.வீட்டிற்குச் சென்றவுடனேயே ராஜேஷ்குமாரை அலைபேசி எண்ணில் அழைத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.எப்படி என் அலைபேசி எண் கிடைத்தது எனக் கேட்டார்.அவருடைய மைத்துனரிடம் வாங்கியதாகக் கூறியதும், அவரிடம் என் எண்ணை வாங்குவது சுலபமில்லையே... எப்படி வாங்கினீர்கள் எனக் கேட்டார்.எனக்கு ஏதோ பெரிய சாதனை செய்த சந்தோஷம்.சற்று சிரமப்பட்டுத்தான் சார் வாங்கினேன் எனக் கூறி அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தேன்.சிறுவயதிலிருந்தே அவர் நாவல்களை நான் வாசிப்பதைத் தெரிந்து கொண்டவர்... கண்டிப்பாகத் தான் கோவை வந்ததும் சந்திப்போம் எனக் கூறினார்.கொரோனா காலமாக இருந்ததால் சந்திப்புத் தேதியை இரண்டு முறை மாற்றினார்.கடைசியாக March 31,2021 அன்று தொடர்பு கொண்ட போது நாளை சாய்ந்தரம் 6 மணிக்கு வாருங்கள் என்றார்.மறுநாள் சரியான நேரத்திற்குச் சென்ற என்னை அன்புடன் வரவேற்று அமரச் செய்தார்.அவருடைய மனைவி தேநீர் கொடுத்து உபசரித்தார்கள்.சார் இன்று April 1.ஆகையால் நேற்று நீங்கள் என்னை நாளை வாருங்கள் என்றழைத்ததும் சந்தேகப்பட்டேன் என்று நான் சிரித்தவாறு கூறியதும் அவரும் அச்சிரிப்பில் கலந்து கொண்டார்.நீண்டநாள் என்னைக் காக்க வைத்ததற்கு மன்னிப்புக் கோரினார்.அவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் அவருடைய தன்னடக்கத்தால் கவரப்பட்டேன்.கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் நீடித்த எங்கள் கலந்துரையாடலில் எத்தனையோ விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.1968ல் சிறுகதைகள் எழுதத் துவங்கியதில் இருந்து...1980ல் மாலைமதியில்   முதல் நாவல் எழுதியதையும்...அதே ஆண்டு கல்கண்டு வார இதழில் 'ஏழாவது டெஸ்ட் ட்யூப்' தொடர் எழுதியதையும்...அவரது சில படைப்புகள் 'ப்ளாப்ட்' பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது வரை பேசினார்.குற்றம், அறிவியல்,துப்பறிவு,புனைவு பாணியிலான 1500க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி உலகிலேயே அதிக நாவல்கள் எழுதியவர் என்ற பெருமைக்குரியவர் ராஜேஷ்குமார்.அதற்கான என் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொண்டது மட்டுமின்றி இந்த சாதனை ஏன் கின்னஸில் இடம்பெறவில்லை என வினவினேன்."தமிழ் உலகளாவிய மொழியல்ல.ஒரு மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான மொழி.ஆகவே கின்னஸில் உங்கள் பெயர் இடம்பெற வழியில்லை" என கின்னஸ் அங்கத்தினர்கள் தெரிவித்ததாகச் சொன்னார்.இருப்பினும் தனது இந்த சாதனையைத் தெரிந்து கொண்ட அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் தனக்குக் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்ததைச் சிலாகித்துக் கூறினார்.35 வருடங்களுக்கும் மேலாக நான் சேமித்து வைத்திருக்கும் அவருடைய சில நாவல்களைக் காட்டினேன்.ஒரு படைப்பாளியாக அவர் கண்களில் மின்னிய மகிழ்ச்சியைக் கண்டேன்.

க்ரைம் த்ரில்லர்களையே ஏன் அதிகம் எழுதுகிறீர்கள் என்ற என் கேள்விக்கு,"நமது புராண, இலக்கியங்களில் மண்ணாசைக்கு மகாபாரதம், பெண்ணாசைக்கு இராமாயணம் இருக்கிறது.இவ்வளவு ஏன்? சிலப்பதிகாரம் கூட 50% க்ரைம் சப்ஜெக்ட் தான்.இவைகளில் இல்லாத க்ரைமா?சாகாவரம் பெற்றிருக்கும் காவியங்களே க்ரைமை அடிப்படையாய் வைத்து புனையப்பட்டிருக்கும் போது நான் மட்டும் எழுதினால் அது தவறா?" என்றார்.சமீபத்தில் இயக்குனர் பாக்யராஜ் தன்னைச் சந்திக்க வந்ததைப் பற்றிச் சொன்னார்.'திரைக்கதை மன்னனும் - க்ரைம் கதை மன்னனும் சந்திப்பு' எனப் பத்திரிகைகளில் செய்தி வந்ததைக் குறிப்பிட்டார்.பின்னர் அவர் உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்களான விவேக்-ரூபலா பற்றிப் பேச்சு வந்தது.தற்போது நகைச்சுவைக்காகப் புதிதாக விஷ்ணு என்னும் கதாபாத்திரத்தையும் சேர்த்திருப்பதாகக் கூறினார்.எம் கல்லூரிக்கு வந்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிட வேண்டினேன்.'மாணவர்களுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.அவசியம் வருகிறேன்' என்றார்.நேரம் அதிகமாகிவிட்டபடியால் அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன்.சிறிதும் சலிப்பின்றி ஒரு நீண்டகால உற்ற நண்பரைச் சந்தித்தது போல் மிக உற்சாகமான மனநிலையுடன் ராஜேஷ்குமார் அவர்கள் உரையாடியது மிகுந்த மனநிறைவைத் தந்தது.