Friday, 15 May 2020

வரம்!


                          
                          
                           "அன்பு
                           என்ற தலைப்பில்
                           மிகச்சிறிய
                           கவிதை கேட்டார்கள்...
                           அம்மா
                           என்றேன் உடனே!
                           கேட்டது அம்மாவாக இருந்தால்
                           இன்னும் சின்னதாய்ச்
                           சொல்லுவேன்
                           நீ...என்று ?"
                                                                         
20  ஆண்டுகளுக்கு முன்பு விகடன் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு வென்ற கவிதை இது. அம்மாவைப் பற்றி இப்படி எண்ணிலடங்கா கவிதைகளும், பாடல்களும் இருக்கின்றன, இருப்பினும் என்றென்றும் அம்மா நமக்கோர் புதுமை தான், விசித்திரம் தான்.மோசமான பெண் இருக்கலாம்...ஆனால் ஒரு மோசமான தாய் இருக்க மாட்டாள் என்று சொல்வார்கள்...ஆக உலகத்தின் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல் அம்மாவைக் குறிக்கும் சொல்.

நான் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.இந்தியாவைப் போல் தாய்மையைப் போற்றும் நாடு வேறெதுவும்  இல்லை. இந்தியாவில் ஓர் லட்சியப் பெண்  தாயே. அவள் தான் தன்னலமற்று துன்பங்களைச் சகித்துக் கொள்கிற, எந்தப் பாவத்தையும் மன்னிக்கிற மனோபாவம்  கொண்டவள்."மேலை நாடுகளில் பெண் ஒருவனால் மனைவியாகப் பார்க்கப்படுகிறாள். ஆனால் கிழக்கில் அவள் எப்போதும் தாயாகவே போற்றப்படுகிறாள். இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள் தன் முழு வாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்" என்றார்  சுவாமி விவேகானந்தர்.

நாம் எந்த மனிதரிடம் கேட்டாலும் இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த தாய் என் தாய் தான் எனக் கூறக் கேட்கலாம். நான் மட்டும் அதில் விதிவிலக்கா என்ன?என் ஆறாவது வயதிலேயே தந்தை இறந்து விட...புயலுக்கு நடுவே போராட்டம் நடத்தி ஒரு தந்தையுமானவராக இருந்து இரண்டு விதைகளை இந்தப் பூமியில் பாதுகாத்த விருட்சம் என் தாய்.எங்களுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர். வெறும் பத்தாவது வரை மட்டுமே படித்திருந்தாலும் தனது அர்ப்பணிப்பு, உறுதி, விவேகம், வலிமை, தன்னம்பிக்கை ஆகிய மேன்மையான குணங்களினால் எங்களை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு - அரும்பாடுபட்டு உயர்த்தியவள். அவரது 60-ம் பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடியது மட்டுமின்றி இந்தக் கவிதையையும் அவருக்கு வாசித்தளித்தேன்,

             "எம் வாழ்வு ஒளிமயமாக
               தன்னையே மெழுகுவர்த்தியாய் எரியவிட்டவளே !
               எம் வாழ்வு மணக்க
               தன்னைச் சந்தனமாய்க் கரைத்தவளே !
               எம் வாழ்வில் தென்றல் வீச 
               தன்  வாழ்வில் சூறாவளியை எதிர்கொண்டவளே!
               எம் வாழ்வு சிற்பமாய்  துலங்க
               தன்னையே செதுக்கிக் கொண்டவளே !
               எம் வாழ்வு ஏற்றம் பெற
               தன் வாழ்வையே தியாகம் செய்தவளே!
               மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது
               எம் மகளாய் வந்து பிறக்க வேண்டும்
               பட்ட கடனை வேறு எப்படித் தீர்ப்பதாம்?"


எதிர்பார்ப்பற்ற அன்பை அம்மாக்களைத் தவிர வேறு யாராலும் தர முடியாது.அம்மா என்பவள் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை.அம்மாவுக்குப் பசிக்காது,வலிக்காது,உணர்வுகள் கிடையாது என்றே நாம் நம்புகிறோம்.சிறுவயதில் அம்மா இல்லாத வீட்டில் நான் தூங்கியதே இல்லை.எவ்வளவு நேரம் ஆனாலும் அம்மாவுக்காகக் காத்திருந்து அவர் வந்த பிறகு தான் தூங்கப் போவேன்.அவர் இல்லாத வீட்டில் தூங்குவது கொடுங்காட்டில் தனித்திருப்பதைப் போல ஒரு பயத்தை உருவாக்கி விடும். புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீர் பல ஆண்டுகள் தேசாந்தரம் சென்று விட்டு ஒரு நாள் நள்ளிரவு வீடு திரும்புகிறார்.மகனைப் பார்த்ததும் அம்மா கேட்ட முதல் கேள்வி,”சாப்பிடுகிறாயா மகனே”? என்பது தான்.பஷீருக்குப் பிடித்தமான உணவுகள் பரிமாறப்பட்டவுடன்,”நான் இன்னைக்கு வருவது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.நீ வருவாய் என்று நான் தினமும் இப்படி சமைத்து வைத்துக் காத்திருக்கிறேன் என பதில் சொன்னார் அம்மா.இதைப் பதிவு செய்திருக்கிறார் பஷீர். நேரம் கழித்து வீடு திரும்பும் பிள்ளைக்காக தூக்கத்தைத் தொலைத்து விட்டு காத்திருக்கும் அம்மாக்கள் எல்லா வீடுகளிலும் இருக்கிறார்கள்.

இனிய நண்பரும் கவிஞருமான திரு.ரவிராஜ் அவர்கள் தாயைப் பற்றி எழுதிய அற்புதமான கவிதையை என் இதயச்சுவற்றில் ஒட்டிவைத்திருக்கிறேன்.



                     "வரங்களே தவமிருந்து
                     வாங்கிய வசந்தம்
                     அம்மா!
                     சுயநலமே
                     இல்லாச் சூரியன்
                     அம்மா!
                     சுழலும் பூமியின்
                     வீரியம் அம்மா!
                     ஊரடங்குச் சட்டத்தால்
                     முப்பது நாட்களைக்
                     கடத்தவே மூச்சு வாங்குகிறதே...
                     மூவாயிரம் வருடங்களாய்
                     வீடே உலகமாய்
                     வலம் வந்த அம்மாக்களை
                     நினைத்தால் மூச்சு நிற்கிறது"

அம்மாவைப் பற்றி எழுதும் போதே என் ஆருயிர் நண்பன் கரிகாலனின் நினைவு எழுவதைத்  தவிர்க்க முடியவில்லை. நன்றாகப் பாடக்கூடிய என் நண்பன் கரிகாலனின் அம்மா அவனுடைய சிறுவயதிலேயே இறந்து போனார்.அவன் ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் வரும்,”அம்மா நீ சுமந்த பிள்ளை” என்ற பாடலை உள்ளம் உருகப் பாடுவான்.குறிப்பாக,”மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே...வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்த வேண்டுமே” என்னும் வரிகளைப் பாடும் போது தன் தாயை நினைத்து அழுவான்.கூட இருக்கும் எங்கள் அனைவருக்கும் அழுகை வரும்.”அம்மாக்கள் மரிக்கும் போதே அவள் பெற்ற பிள்ளைகளும் மரித்துப் போகிறார்கள்!” என எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.

புத்தரின் வாழ்க்கையைப் போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவின் தாய்மையைப் பேசுவதில்லை. புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக்கொண்டிருக்குமா...? ஓடுகாலி என்றிருக்கும். சரி புத்தர் போனபின் தான் என்ன நடந்தது? ஒற்றைக் குழந்தை ராகுலனை வளர்க்க எவ்வளவு போராடியிருப்பாள் அந்தத் தாய்? புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடையினை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடினாள்.உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் உள்ள நிலையில் ஆண்வர்க்கத்தின் சூழ்ச்சிக்கு நடுவே... படாதபாடுபட்டுத் தன் குழந்தையைப் பேணினாள்.எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு  எல்லாத் துயரையும் அனுபவித்தபடி ஒரு தாயின் கடமையைச் சரிவரச் செய்தாள்   யசோதரா. எது கடினம்? சொல்லுங்கள்? துறவியாய் பற்றற்றிருப்பதா? தாயாய் வாழ்வதா?  

கொரோனா வைரஸ் என்னும் எதிரியை வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்த சமயத்தில் எல்லாப் பொதுப் போக்குவரத்து சாதனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் இடம் பெயர்ந்து வெளியூர்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குக் கால்நடையாக நடந்து  சென்றார்கள் , சைக்கிளில் சென்றார்கள், பட்டினியாய் நடந்தார்கள் எனப் பலரின் வாழ்வும் சோகமயமாகின. இந்நிலையில் நம் அண்டை மாநிலமான தெலுங்கானாவிலிருந்து வந்த செய்தி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தை  சேர்ந்தவர் ரஷியா பேகம். இவர் தெலுங்கானா மராட்டிய மாநில எல்லையில் உள்ள போதான் என்ற இடத்தில் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் இறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் நிஜாமுதீன் ஐதராபாத்தில் தங்கி இருந்து மருத்துவ படிப்பில் சேர்வதற்காக "நீட்" தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்நிலையில் உடல் நலம் இல்லாமல் போன தனது நண்பனின் தந்தைக்கு உதவுவதற்காக அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூருக்குச் சென்றார். அவர் அங்கு சென்றிருந்த போது தான் கொரோனா  வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பஸ், ரயில், கார்,ஆட்டோ என எல்லாப் பொது போக்குவரத்துக்கு சாதனங்களும் முடங்கிப் போய் விட்டன. அங்கு நிஜாமுதீன் சிக்கிக்கொண்டு ஊரடங்கு நேரத்தில் தாயுடனும், சகோதரியுடனும் இருப்பதற்காகச் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் போய் விட்டது. இந்த நிலையில் அவர் தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு  தான் நெல்லூரில் சிக்கியுள்ள பரிதாப நிலையை தெரிவித்தார்.ரஷியா  பேகம் வசிக்கிற ஊருக்கும் , நெல்லூருக்கும் இடையே 700 கி.மீ தொலைவு. மகனை மீட்டு வர வேண்டும் என்றால் இந்தத் தொலைவைக் கடந்தாக வேண்டும். என்ன செய்வது என யோசித்த அவர் தனது இரு சக்கர வாகனத்தை (ஸ்கூட்டி) எடுத்துக் கொண்டு நெல்லூர் சென்று  மகனை  மீட்டு அழைத்து வந்து விட முடிவு செய்தார். ஊரடங்கு நேரத்தில் அவ்வளவு தொலைவுக்குச் சென்று வர போலீஸ் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. அவர் போதான் பகுதி போலீஸ் உதவி கமிஷனர் ஜெய்பால் ரெட்டியை சந்தித்துத் தன் மகன் நெல்லூரில் தவிப்பதை எடுத்துச் சொல்லி அழைத்து வர அனுமதி பாஸ் பெற்றார். அதைத் தொடர்ந்து ஒரு நாள் காலையில் கிளம்பிய அவர் மறுநாள் மதியம் நெல்லூர் போய்ச்சேர்ந்தார். அங்கிருந்து மகன் நிஜாமுதீனை அழைத்துக்கொண்டு அதற்கடுத்த நாள் மாலை ஊருக்கு வந்து சேர்ந்தார்.போக வர மொத்தம்  1400 கி.மீ. இந்த நெடிய தொலைவை ஸ்கூட்டரிலேயே  கடக்கச் செய்திருப்பது அவரின் தாய்ப்பாசம். உலகில் தாயைத் தவிர வேறெந்த ஜீவனிடமும் இத்தகையதோர் அன்பினை நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?


என் கல்லூரித் தோழன் எட்வினின் சொந்த ஊர் நாகர்கோவில். ஒவ்வொரு முறையும் விடுமுறைக்காக அவன் ஊர் சென்று திரும்பும் போதெல்லாம் அவன் அம்மா 100 கடிதங்களுக்கும் மேல் அவனிடம் கொடுத்து விடுவார்கள். அதில் விசித்திரம் என்னவென்றால் ஒவ்வொரு கடிதமும் எட்வின் தன் அம்மாவுக்கு எழுதுவது போல் அவர்களே கைப்பட எழுதி (அட்ரஸுடன்) இருப்பது தான். எட்வினின் வேலை என்னவென்றால் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் தலா ஒரு கடிதம் போஸ்ட் செய்வது மட்டுமே. வாரம் தன் பிள்ளையிடமிருந்து இரண்டு கடிதங்களும் வர வேண்டும், அதே சமயத்தில் தன் மகன் அடிக்கடி கடிதம் எழுதி கஷ்டப்படக்கூடாது என்றும் படிக்கும் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றும் அந்தத் தாயுள்ளம் எண்ணியிருக்கிறது. என‌க்கு இந்தச் செயல் அதிசயமாயிருக்கும். தனக்கு வர வேண்டிய கடிதத்தைத் தானே எழுதிக் கொடுத்து விடுகிறார்களே என்று. பின்னர் எட்வின் மேற்படிப்பு முடித்து ஒரு நல்ல நிறுவனத்தில் பணியிலிருந்தான். நான் துபாயில் பணிபுரிந்து கொண்டிருந்த போது திடீரென்று இடிபோல் அந்தச் செய்தி என்னை வந்துத் தாக்கியது... எட்வின் மரணமடைந்து விட்டான் என்று. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அவன் இப்படி நாற்பது வயதிற்குள்ளாகவே இறந்து விட்டானே என்ற சோகம் தாங்க முடியாமல் இருந்தது. அதை விட அவன் மேல் அளவு கடந்த ப்ரியம் வைத்திருந்த அவன் தாயால் எப்படி இ‌ந்த சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியும்  என்றெண்ணி மிகவும் கலங்கினேன். எட்வின் இறந்த மூன்றே மாதத்தில் அவன் மரித்த சோகத்தைத் தாங்க முடியாமல் அவன் தாயும் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்கள். தனக்கு முன்னே தன் மகன் முந்திக் கொண்டதை எந்தத் தாயால் தாங்கிக் கொள்ள முடியும். தாயின் பேரன்பு மகத்தானது. இயற்கையின் படைப்பில் தன்னலத்தின் நிழல்கூடப் படாதது தாயின் படைப்பு ம‌ட்டு‌ம் தா‌ன்.

என் நண்பர்களில் பேராசிரியர் தங்கவேல் முக்கியமானவர்.அவரது தாயார் அண்மையில் காலமாகிவிட்டார்.தாயின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த தங்கவேலால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.ஒரு முறை நான் அவரை அலைபேசியில் அழைத்த போது மிகுந்த சோகத்திலிருந்தார்.அவரு‌க்கு நான் ஆறுதல் கூறும் விதமாகப் பேசினேன். இவ்வளவு காலம் அம்மாவுடன் வாழ்ந்திருந்தும் ஒரு புகைப்படம் கூட அவருடன் சேர்ந்து எடுத்து வைத்துக்கொள்ளவில்லையே என வேதனைப்பட்டார்.எப்போதோ ஒரு முறை அவர் வீட்டிற்கு நான் சென்றிருந்த போது நானும் தங்கவேலும் அவருடைய தாயாரோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்னிடத்தில் இருப்பது நினைவுக்கு வந்தது.உடனடியாக எங்கெங்கோ தேடி அந்தப் புகைப்படத்தைக் கண்டுபிடித்து அவருக்கு அனுப்பி வைத்தேன்.அதைப் பார்த்து விட்டு என்னை அழைத்த அவரால் பேச முடியவில்லை.கண்களில் நீர் திரள,தொண்டை அடைக்க...பேச நா எழவில்லை அவருக்கு.இறுதியாக நிதானத்துக்கு வந்த பிறகு நன்றிப்பெருக்கு பொங்க..."இதை விட ஒரு சிறந்த பரிசை இந்த உலகில் இனி வேறாரும் எனக்கு அளித்து விட முடியாது" என்றார்.

தாயுள்ளத்தின் மேன்மைக்கு இதிகாசங்களிலும் சான்றுகள் உண்டு. கௌரவர்களின் தாயான காந்தாரி தன் கணவனால் காண முடியாத உலகினைத் தானும் காணக்கூடாது என்ற எண்ணத்தில் தன் கண்களைப் பட்டுத்துணியால் மூடி மறைத்துக் கொண்ட கற்புக்கரசி. அந்தத் தாயுள்ளம் பாண்டவர்களால் கௌரவர்களுக்குத் துன்பம் நேர்ந்து விடுமோ எனக் கலங்கித் தவித்தது. அவள் பயந்தது போலவே அவருடைய நூறு பிள்ளைகளும் அழிந்து விட, இதற்கு மூலகாரணம் கண்ணனே எனப் புரிந்து கொண்டாள். கண்ணா, நான் ஒரு பத்தினி என்பது உண்மையானால் என் பிள்ளைகளின் மரணத்திற்குக் காரணமான நீ இன்றிலிருந்து முப்பத்தாறு ஆண்டுகள் முடிவுறும் போது உன் குலம் முழுவதும் அழிவதைக் காண்பாய்;உறவுகளின்றி அநாதையாய் நீ மரணத்தைச் சந்திப்பாய்.இது சத்தியம்! என்று சபித்தாள். அவளுடைய சாபம் அப்படியே நிறைவேறியதாக மகாபாரதம் கூறுகிறது.அவதாரப் புருஷனாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் அவனையும் சபிக்கும் ஆற்றல் வாய்ந்தது.

கொரோனா லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே... தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா? 1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைக் கூட தோண்டி எடுத்துத் தின்று தீர்த்த பின்னும் தீராத பஞ்சம், மூன்று வேளையும் முருங்கைக் கீரையை மட்டுமே அவித்துத் தின்று உயிர் பிழைத்துக் கிடக்கச் செய்தது. கண்முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய உயிருடன் யார் முதலில் சாகப் போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப்பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது. பஞ்சம் தந்த பாடங்கள் ஒருபுறமிருக்க அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.மதுரையில் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவர் குஞ்சரம் அம்மா. வடக்கு ஆவணி மூல வீதியில் இரண்டு பெரும் வீடுகள் அவருக்கு இருந்தது. தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி கணக்கின்றிச் சாவதைப் பார்த்து வேதனைப்பட்டு தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினார். ஊரெங்கும் செய்தி காட்டுத்தீயாய்ப் பரவ வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர். "இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா" என்று பெருந்தனக்காரர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் தேவையின் பயங்கரம் நினைத்துக்கூட பார்க்க முடியாதபடி இருந்தது. பதிமூன்று மாத‌ காலம் எரிந்த அடுப்பு எல்லாவற்றையும் எரித்தது. தன்னம்பிக்கையோடு அவர் தனது வாழ்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டார். இரண்டு வீடுகள் மட்டுமின்றி கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு, ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது. குஞ்சரம் அம்மாவோ ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள். ஊரெல்லாம் அவரைப்பற்றிப் பேச தாய்மையின் பூரிப்போடு மரணமெய்தினார் அவர். கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பில் எழுதி வைத்தார். நாடி நரம்புகளில் ஓடுவதெல்லம் அவரின் ரத்தமென மக்கள் கதறியழ மலர்ந்த முகத்தோடு விடைபெற்றார் அந்தத் தெய்வத்தாய்.

அன்னையரைப் போற்றும் நமது தேசத்தில் தான் தாய்மார்கள் சந்திக்கும் அவலங்களும் அதிகம். மாறி வரும் உலகில் பாலின பேதமின்றி வாழும் சூழல் இன்றைய தலைமுறை பெண்ணுக்குக் கிடைக்கிறது, பொதுவெளிகளில் பெண்களுக்கான இடம் விரிவடைந்துள்ளது என்பனவற்றையெல்லாம் முழுதும் ஒப்புக் கொள்ள முடியாத நிலையி்ல் தான் நாம் இருக்கிறோம். இன்றளவும் பொது இடங்களில் தாய்ப்பால் ஊட்டும் சூழல் பெண்களுக்கு மிகவும் அவஸ்தையானதாகவே இருக்கிறது. நர்ஸிங் ரூம் வசதிகள் ஏதுமின்றி எங்கே எப்படி அமர்வது, யாராவது பார்ப்பார்களா, ஏதாவது சொல்லி விடுவார்களா எனத் தவிக்கும் அவர்களின் வாதையை வார்த்தைகளில் சொல்ல முடியாது. முறையாகத் தாய்ப்பால் கொடுப்பதால் உலகளவில் இருபதாயிரம் தாய்மார்களும் சரியாகத் தாய்ப்பால் கிடைக்கப் பெறுவதால் உலகளவில் எட்டு லட்சம் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்கின்றன யூனிசெஃப் ஆய்வுகள். ஆனால் வெளியிடங்களில் பாலூட்டுவதில் உள்ள தயக்கம், பயம், பதற்றம் போன்றவை பாலூட்டும் காலத்தில் பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்குகிறது அல்லது வீட்டை விட்டு வெளியேறும் போது புட்டிப்பால் தாய்ப்பாலுக்கு மாற்றாகி விடுகிறது. இந்தியா போன்றதொரு வளரும் நாட்டில் அவசியம் தீர்வு காண வேண்டிய தாய்மார்களின் பிரச்னைகளில் இதுவும் ஒன்று.

உலகம் முழுவதும் 'அன்னையர் தினம்' என்று தற்போது கொண்டாடுகிறார்கள். ஆனால் நமது முன்னோர்கள் நம் நாட்டினையே 'தாய்நாடு' என்றும், மொழியை 'தாய்மொழி' என்றும், மாதா- பிதா- குரு-  தெய்வம் என்றும் பெருமைப்படுத்தி உள்ளனர். அன்னையின் சிறப்பைக் கூற அவளைக் கொண்டாட ஒரு நாள் போதாது. தாயை வேறெந்த மொழியில் விளக்கினாலும் வராத பொருள் தமிழில் விளக்கினால் வரும். தாய் தன்னுடைய குழ‌ந்தை‌க்கு உயிர் கொடுக்கிறாள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்க்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்து பின்பு இந்த உலகத்தில் உயிர்மெய்யாய் உலவ விடுகிறாள். இந்த உண்மையை உணர்த்தவே. உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் சேர்ந்து உருவானது அம்மா !

இப்புவியில் ஜனித்தவுடன் முதல் மனிதராய் நம்மை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்வது தாயாய் அமைந்தது நாம் பெற்ற வரம்.. ஆம்! தாய் இருப்பதால் தான் பூமியில் சொர்க்கம் படைக்கப்படவில்லை!







Wednesday, 6 May 2020

காலத்தின் வாசனை!



என்னுடைய குடும்ப வாட்ஸப் குரூப்பில்... 32  வருடங்களுக்கு முன்பு நான் அவனுக்கு எழுதிய ஒரு கடிதத்தை போஸ்ட் செய்திருந்தான் தம்பி செந்தில்.அதைப் பார்த்த என் தங்கை வாணி, ஏண்ணே! இவ்ளோ வேகமா காலம் ஓடிப்போச்சு என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தாள்.மேலும் எவற்றையெல்லாம் காலம் எங்களிடமிருந்து பறித்துக்கொண்டு விட்டது என்பதையும் ஒரு list அனுப்பியிருந்தாள்.

                           மாமரம்
                           செம்பருத்திச் செடி 
                           நெல்லி மரம்
                           ஐஸ் பாக்டரி
                           வாசன் தியேட்டர்
                           வருஷம் 16 திரைப்படம்
                           மருதாணி
                           கடைமாடி
                           நுங்கு
                           கேணியடி
                           மாரியப்பன் கடை பஜ்ஜி...

இப்படி ஒரு நீண்ட list. அதைப் பார்த்தவுடன் என் நினைவுகளும் என் வசத்திலில்லை. நினைவுப் பறவை கடந்த காலங்களில் சிறகடிக்கத் துவங்கி விட்டது. அந்தக் காலகட்டத்தில் என்னுடைய உணர்வுகள், எண்ணவோட்டங்கள், priorities எப்படியெல்லாம் இருந்தது என சிந்திக்கத் துவங்கினேன். நான் பிறந்த போது அவ்வளவு பெரிய தாத்தா வீட்டில் என்னைத் தூக்கி வளர்த்தவர்கள் ஓரிருவரல்ல... கொள்ளுத்தாத்தா, கொள்ளுப்பாட்டி, தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மாமா, மாமி, சித்தி, சித்தப்பா, வேலைக்காரர்கள் என அநேகம் பேருக்கு அதில் பங்குண்டு.அனைவருமே மிகச்சிறந்த கதைசொல்லிகளாக இருந்தார்கள். அவர்கள் அனைவரிடத்தும் கதை கேட்டு வளர்ந்த சிறுவன் நான். குறிப்பாக மகாபாரதப்போரில் ஒவ்வொரு நாளும் போரில் நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொரு இரவும் வீட்டுமுற்றத்தில் அமர்ந்து தாத்தாவிடம் கேட்டதை என் மனமென்னும் திரையில் அடிக்கடி ஓட விட்டுப் பார்த்துக் கொள்வேன்.இன்றைய குழந்தைகள் எத்தனைப் பேருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்? தீபாவளி என்றால் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். வீட்டிலுள்ள பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் எல்லோரையும் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று ராக்கெட், பாராசூட் எல்லாம் வெடித்து வாண(வான)வேடிக்கை நிகழ்த்துவார் தாத்தா. பாராசூட் கொல்லையில் எங்கு சென்று விழுகிறது என்று பார்த்து வைத்துக் கொள்வேன்.இரவு முழுவதும் அந்த பாராசூட் எங்கு சென்று விழுந்திருக்கும் என்ற பரவச சிந்தனையிலேயே தூங்கிப்போவேன்.மறுநாள் அதிகாலைக் குளிரில் எழுந்து பாராசூட் விழுந்த இடத்தைத் தேடிச் செல்வேன்.அது கிடைத்ததா இல்லையா என்பது எங்கோ ஞாபக அடுக்கில் சிக்கிக் கிடக்கிறது.இந்தக் கட்டுரை பனுவலாகும் முன் நினைவுக்கு வந்தால் சொல்லி விடுகிறேன்.வீடென்பது வெறும் கல் கட்டடம் அல்ல.அது ஒரு அடையாளம்.அது ஒரு மையம்.மாடி வீடெனினும் உள்முத்தத்தில் தூண்களுக்கு மேல் செம்மண் குழைத்துச் செய்த ஓடுகள் வேயப்பட்டு இடையிடையே பௌர்ணமி நிலவையும்,அலையும் வெணமேகங்களையும்,வானின் நீலத்தையும் ரசிக்கக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அழகான வீட்டில் தான் பால்யமும்,பள்ளிக்காலமும் பசுமையாய்,பாசமாய் கழிந்தது.கிழக்குப் பார்த்த வாசல் கொண்ட வீட்டின் திண்ணையில் படுத்தால் ஆடிக்காற்றை ஆசுவாசமாக அனுபவித்துத் துயிலலாம்.நித்திரையில் கூட அன்பைப் பயிலலாம்.பால்யம்,பாசம் பறிபோன பின்னாலும் நினைவில் மட்டும் எஞ்சியுள்ளது பால்ய வீடு.வீட்டை விடும் போது பாரம்பரியத்தை,நிலத்தை,நெறிகளை,நினைவுகளை எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம் போலும்.

ஒரு முறை பால்ய சிநேகிதன் ஜாகிர் உசேனுடன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பக்கத்து கிராமத்துக்கு சைக்கிளில் சென்று விட்டேன். பசுமையான வயல் வரப்புகளையும், தென்னஞ்சோலைங்களையும் ரசித்தபடி நாங்கள் சைக்கிளில் உலா வந்த காட்சியை யாரோ பார்த்துவிட்டார்கள்.வீடு திரும்புவதற்குள் நாங்கள் ரகசியமாக சுற்றுப்பயணம் சென்ற செய்தி  வீடு வந்து சேர்ந்திருந்தது. நல்ல டோஸும் கிடைத்தது. பம்பரம், கோலிகுண்டு, கிட்டிபுல், கண்ணாமூச்சி, பட்டம், தாயம், கேரம்போர்டு, சீட்டுக்கட்டு என ஒரு விளையாட்டையும் விட்டு வைத்ததில்லை. பதின்வயது வரை இப்படிக் கழிந்த நாட்கள். ஆனால்... காலம் எவ்வளவு கொடூரமானது! எப்படி எல்லாம் நம்மைத் துரத்தி அடிக்கிறது!! கூட்டுக்குடும்பத்தைச் சிதைத்து...எங்கெங்கோ நம்மை இழுத்துப்போய்...துளியும் இரக்கமின்றி வீசி எறிந்து விட்டு...ஓடிக் கொண்டேயிருக்கிறது காலம் என்னும் சூறைக்காற்று...!


கூட்டுக்குடும்பம் சென்ற தலைமுறைக்கு நிகழ்வு, இந்தத் தலைமுறைக்கு கடந்து போன கனவு. எங்கேனும் ஒரு கூட்டுக்குடும்பத்தைப் பார்த்தால் நமக்கு ஆச்சரியமாகத் தானே இருக்கும்! அப்படி ஒரு ஆச்சர்யம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த 72 பேர் முதல்முறையாக ஒன்று கூடி கடந்த ஆண்டு தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கிறார்கள். சென்னை அயனாவரத்தைச்  சேர்ந்த சம்பத் - புஷ்பவள்ளி அம்மாள் தம்பதியிடம் தொடங்கியது தான் இந்த உறவுச் சங்கிலி. ஆனால் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. அவர்களின் 5 மகள்கள், 4 மகன்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன்,கொள்ளுப்பேத்திகள் என அனைவரும் சென்னை, பெங்களூரு, மும்பை, உட்பட பல்வேறு நகரங்களிலும், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளிலும் வசித்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளில் எந்த நிகழ்ச்சிகளிலுமே கூடியதில்லை என்கிற வருத்தம் அவர்களில் எல்லோருக்கும் இருந்தது. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே, ஏலகிரி மலையில் தீபாவளிக்கு முந்தைய நாளிலிருந்து மூன்று நாட்கள் தங்கி அன்பையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர். "கூட்டுக் குடும்பத்தின் அருமையை இந்தத் தலைமுறைப் பேரப்பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதற்காகத்தான் 'கெட்டுகெதர்'  வந்தோம். இதற்கு முன்பு நடைபெற்ற எந்தவொரு நிகழ்விலும் எங்களின் குடும்பம் இப்படி மொத்தமாகக் கலந்து கொண்டதில்லை. சில பேரப்பிள்ளைகளின் முகத்தையே இங்கு வந்து தான் பார்த்தோம். ரத்த சொந்தம் கடைசி வரை தொடர வேண்டும். அடிக்கடி சந்திக்க வேண்டும். இந்த உலகின் எந்த மூலையில் எங்க குடும்பத்தினர் இருந்தாலும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பின்பற்றியே வாழ்கிறோம். குடும்பத்தோடு ஏலகிரியிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து தீபாவளியைக் கொண்டாடினோம்.இயற்கையிலிருந்து வேறுபட்டுச் செயற்கையாக வாழ நாமொன்றும் இயந்திரமில்லை. அன்பு பாசத்துடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கூட்டுக்குடும்பத்தில் தான் இருக்கிறது. சந்தோஷத்துக்குக் குறைவே இல்லாமல் புத்துணர்ச்சியுடன் ஜாலியாக இருந்தோம்" என்கிறார்கள். இவர்களின் சந்தோஷக்கூச்சல் ஏலகிரி மலை முழுவதும் எதிரொலித்திருக்கிறது.

                                 

80, 90 களில் ஸ்டுடியோ என்றால் கடைக்கு வெளியே பெரிய பெரிய சைஸில் போட்டோக்களை மாட்டி வைப்பார்கள். 'எங்கள் ஊரிலும் மெர்க்குரி ஸ்டுடியோ' என்னும் பெயரில் புகழ்பெற்ற ஸ்டுடியோ ஒன்றிருந்தது.  அங்கு  மரச்சட்டத்தை அடித்து கண்ணாடிப்போட்டு பிரேம் பண்ணித்தரும் ஆட்கள் ஸ்டுடியோவுக்கு வெளியிலேயே காத்திருப்பார்கள். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சில ஸ்டுடியோக்களில் அந்த மாதிரி ஆசாரிகளை வேலைக்கு அமர்த்திக்கொள்வதும் உண்டு. ஒவ்வொரு ஸ்டுடியோக்களின் முன்பும் அண்ணாதுரை, காமராஜர், எ‌ம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்று பழைய அரசியல், சினிமா ஸ்டார்களின் படங்களாகக் கடை முழுக்க நிறைந்திருக்கும். அதைத் தாண்டி அழகழகான குழந்தைகளின் படங்களும் நிறையவே இருக்கும். 90களின் பிற்பகுதி வரை ஒரு போட்டோவை கண்ணில் பார்ப்பதென்றால் அரிதினும் அரிதான விஷயம். ஸ்டுடியோவில் உட்கார வைத்து வெப்பத்தை உமிழும் சோடியம் லைட்டுகளை போட்டு, நம் தலையை அப்படி இப்படியுமாக அசைத்து, அவர்கள் நம்மை ஒரு போட்டோ எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். இவ்வளவுக்கும் 'ப்ளாக் அண்ட் ஒயிட்' படம் தான். கலர் படமாக இருந்தால் பூந்தொட்டி பக்கத்திலோ, திரைச்சீலைகளில் வரையப்பட்ட பங்களாக்கள் பக்கத்திலோ அல்லது புலி, சிங்கம் பக்கத்திலோ நின்று சரியான வெளிச்சத்தில் ஒரு படம் எடுப்பதற்க்குள் நம்மை ஒருவழிப்படுத்தி விடுவார்கள். நாம் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக டம்மி பீஸில் புல்லட், டாக்ஸி எல்லாம் கூட ஸ்டுடியோவிற்குள் நிற்கும்.அன்றைய ஒரு போட்டோ என்பது இவ்வளவு அனுபவங்களை உள்ளடக்கியது. தேர்வெழுதி மதிப்பெண் வரும் வரை  இனம் புரியாத ஒரு கலக்கத்தில் இருப்போம் இல்லையா? அதே போல் போட்டோ நம் கைக்கு வரும் வரை நமது ஆவல் உள்ளே கிடந்து மனதைக் கலக்கிக் கொண்டிருக்கும். அன்றைக்கு இத்தனை சங்கடங்களுக்குப் பிறகு கிடைக்கும் பொருளில் ஒரு சந்தோஷம் மறைந்து கொண்டிருந்தது. இன்று எல்லாமே வெளிப்படையாகி விட்டன. அதனால் தானோ என்னவோ எல்லாப் பொருட்களின் மேலுள்ள கவர்ச்சியும் அதன் தன்மையை வெகு விரைவில் இழந்து விடுகின்றன. வாழ்வின் மகத்துவமே அன்றைய பொழுதுகளின் ஆர்ப்பாட்டத்தில் தான் ஒளிந்திருந்து.
                                         

1980 ன் பொழுதுகளை நாவல்களின் பொற்காலம் என்றே கூறலாம். வாசிப்பதின் என் ஆர்வம் இரும்புக்கை மாயாவி, ரிப்கிர்பி, ஜேம்ஸ் பாண்ட் போன்ற காமிக்ஸ் புத்தகங்களில் தொடங்கி சிறுவர்களுக்கான அம்புலிமாமா, கோகுலம், ரத்னபாலா என்ற புத்தகங்களின் வழியே தொடர்ந்தது. புத்தகங்கள் மனதைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்த காலமது. ஊருக்கு வரும்போதெல்லாம் மாத நாவல்களை கைநிறைய வாங்கி வருவார் தாத்தா.அவற்றையெல்லாம் பொக்கிஷமென இப்போதும் சேமித்து வைத்திருக்கிறேன்.மனம் சோர்வடையும் போதெல்லாம், இலக்கின்றிப் பயணிக்கத் துடிக்கும் போதெல்லாம், தேடல் கொண்டு தஞ்சமடையும் போதெல்லாம் நம்மை ஏளனம் செய்து பரிகசிக்காமல்,தன்னிடமிருக்கும் அனைத்தையும் பருகக் கொடுக்கும் பெருந்தன்மை புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. அப்போதைய கால கட்டங்களில் குமுதம் குழுமத்தின் மாலைமதி என்கிற மாதமிருமுறை நாவல், தினத்தந்தியின் ராணி குழுமத்தின் ராணிமுத்து மற்றும் குங்குமம் குழுமத்தின் குங்குமச் சிமிழ் என்ற மாதாந்திர நாவல்களும் கோலோச்சின. பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், சுபா, தேவிபாலா, புஷ்பாதங்கதுரை, ராஜேந்திரகுமார், லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, அனுராதா ரமணன் போன்ற பல்வேறு நாவலாசிரியர்களின் காதல் கதைகள், க்ரைம் கதைகள், குடும்பக் கதைகள், நகைச்சுவை கதைகள், சரித்திரக் கதைகள் என்று ஒரு நாவல் விடாமல் தேடித்தேடி வாசித்து... நாவல் மோகம் கொண்டு திரிந்த நேரமது. அசோகன் என்ற நாவல் பதிப்பாளர் "பாக்கெட் நாவல்" என்ற பெயரில் கையடக்க சைஸில் ஒரு மாத இதழைக் கொண்டு வந்தார்.பின்னர் ஒவ்வொரு பிரபல நாவலாசிரியருக்கும் தனித்தனி இதழொன்று தொடங்கி அந்த வரிசையில் பட்டுக்கோட்டை பிரபாகருக்கென 'எ நாவல் டைம்' என்றும், ராஜேஷ்குமாருக்கென்று க்ரைம் நாவல் என்றும் நடத்தினார். அதன்பின் உல்லாச ஊஞ்சலென்று ஒரு மாத நாவல் வெளிவந்தது. ஒரு மாதம் பட்டுக்கோட்டை பிரபாகரும் ஒரு மாதம் சுபா வும் மாறி மாறி எழுதிக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் எண்ணிலடங்கா மாத‌ நாவல்கள் வரத்துவங்கின. ஒவ்வொரு மாத‌ நாவலும் ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளிவரும். அந்தந்த நாட்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதே ஒரு சுகானுபவம். அடுத்த இதழில் நாவல் பெய‌ர் யா‌ர் எழுதுகிறார்கள் என்ற அறிவிப்பும் இருக்கும். இன்றைய firstlook ன் முன்னோடி. மேற்கண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் முன்னோடியாக ஒரு எழுத்து சூப்பர்ஸ்டாராக நமக்கு அறிமுகமானவர் தான் சுஜாதா. அவருடைய 'கரையெல்லாம் செண்பகப்பூ' நாவலை சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் வாசித்த கணம், பட்டுக்கோட்டை பிரபாகரின் 'பாதையெல்லாம் பூக்களிட்டு' நாவலை வாசித்துக் காதலின் மேன்மையை உணர்ந்த தருணம், ராஜேஷ்குமாரின் 'ஓடும் வரை ஓடு' நாவலை வாசித்து விட்டு இரண்டு நாட்கள் பயத்திலேயே திரிந்த சமயம்... இன்றும் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.சுஜாதாவின் கணேஷ்-வசந்த், பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத்-சுசீலா, ராஜேஷ்குமாரின் விவேக்-ரூபலா, சுபாவின் நரேன்-வைஜெயந்தி போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் நம்முடனேயே வாழ்கிறார்கள் என்னும் உணர்வை ஏற்படுத்தின அவ‌ர்த‌ம் எழுத்துக்கள்.தற்கால இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் திளைத்தாலும் அவர்களுக்குக் கிடைக்காத பொழுதுகள் நமக்கு வாய்த்தது. ஏன் தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டனவோ என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

உலகம் முழுவதும் சுற்றி விதவிதமான உணவு சாப்பிட்டாலும் அம்மாவின் கையால் சாப்பிடுவதென்பது தனி உணர்வு தான்.அது போலவே பிறரது இசையை எவ்வளவு கேட்டாலும் நம் உதடுகள் முணுமுணுப்பது என்னவோ 80 களின் இளையராஜா பாடல்களை மட்டுமே. எந்த ஒரு பாடலாக இருந்தாலும் அது நம் நினைவுகளை மீட்டுக் கொடுத்து விட்டே தான் செல்லும். ஆயிரம் படங்களுக்கு மேலாகவும் - ஐயாயிரம் பாடல்களுக்கு மேலாகவும் இசையமைத்திருந்தாலும் கூட ஒரு இசை சாயல் போல மற்றொன்று இருக்காதென்பது எவ்வளவு பெ‌ரிய விஷயம். தமிழகத்தில் பெரும்பாலோர் இளையராஜாவின் பாடல்களுடன் தான் உறங்கச் செல்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.சோகம், காதல், பரவசம், பரிவு, இரக்கம் என்று பல மெல்லிய உணர்வுகளை தன் இசையால் எழுப்பக் கூடியவர்.அவரது இசையைக் கேட்கும் போதெல்லாம் மனதின் ஆறுதலாய் காற்று தலையை வருடிச் செல்லும்.நீண்ட அமைதி ஒன்று நம் மனதில் சிம்மாசனமிட்டு அமரும்.எத்தனை எத்தனை பாடல்கள் கால வனத்தின் அழியாத கானமாக ஆயிரமாயிரம் பூக்களை அள்ளித் தெளித்து மனசெங்கும் மணக்கச் செய்கிறது.தூரப்பயணம் என்றால் ராஜாவின் பாடல் அந்தப் பயணத்தையே அதியற்புதமாக்கி விடுகிறது.குளிருக்கு இதமாய் சுருண்டு கிடக்கும் அதிகாலைப் போர்வை நொடிகளில்,மேகங்கள் விலக்கி நிலா மெதுவாய்த் தலைதூக்கும் ரம்மியமான அந்திமாலை நேரங்களில்,காதலின் ஆழம் தேடும் இரவுப்பொழுதுகளில் என ங்கும்,எதிலும் வியாபித்திருக்கிறார் அவர்.அது தான் இளையராஜா என்ற ஆளுமை இசையால் செய்திடும் மந்திரஜாலம்.அதுவும் சமீபத்தில் மறைந்த - 'பாடும் நிலா பாலு' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவர் வழங்கிய பாடல்களெல்லாம் நம் காதுகளையும், இதயத்தையும் ஒரு சேர ஈர்த்து மெய்மறக்கச் செய்யும் அற்புதமான அனுபவம்.இதோ ஒரு ராஜாவின் பாடலைக் கேட்கத் துவங்குகிறேன். உலகம் பேரழகாகிறது.

அது ஒரு காலம்...
கிராமமிருந்தது
வயலிருந்தது
மழையிருந்தது
குளம் கேணி கிணறு இருந்தது
கிணறு கேணியில் தண்ணி இருந்தது
மழை பெய்து வெள்ளம் நிரம்பியிருந்தது
தண்ணியில குதிச்சு விளையாடின காலம் இருந்தது
தாத்தா வீடிருந்தது
அன்பு செலுத்த நல்மனிதர்கள் இருந்தனர்
செல்போன் இல்லை
லாண்ட்லைன் இல்லை
இன்டர்நெட் இல்லை
டாஸ்மாக் இல்லை
கச்சடா கண்ராவி இல்லை
ஆனால்...
சொந்தபந்தம் சூழ, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர நண்பர்களிருந்த வசந்த காலம்...இப்போது ஆளுக்கொரு திக்கில்.சிலபேர் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை.இருக்கிறவர்கள் மட்டும் சொல்லிக் கொள்ள வே‌ண்டியது தான்...

நான் இருக்கிறேன்...

நானும் இருக்கிறேன்...