துபாயில் வசிக்கும் நண்பர் நரேந்திரன்
விருந்துக்கு அழைத்திருந்தார்.ரசனை மிக்க அவர் தன் வீட்டையும் கலை வண்ணத்துடன்
அமைத்திருந்தார்.நிறைய புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தீவிர வாசிப்பாளர்.தன்
வீட்டில் மிகப்பெரிய நூலகம் ஒன்றை அற்புதமாக வடிவமைத்திருந்தார்.ஒவ்வொரு புத்தகமாக
பார்வையாலேயே அலசிக்கொண்டிருந்த போது Cathy Fyock என்னும்
எழுத்தாளரின் ‘The art of hiring the best and avoiding the rest’ என்னும்
புத்தகத்தின் தலைப்பு ஈர்த்தது.எடுத்துப் புரட்டினேன்.மனிதவள மேலாண்மையில் எவ்வளவு
மாற்றங்கள் வந்திருக்கிறது என்றும்,இது தான் மனிதவள மேலாண்மைக்கான நியதி என்று
நாம் நினைத்து வைத்திருப்பதெல்லாம் எங்ஙனம் பழங்கதையாகி விட்டது என்றும் மிக
அருமையாக விளக்கப்பட்டிருந்தது.மாற்றத்திற்கான தேடல் எவ்வளவு முக்கியம் என
எழுதப்பட்டிருந்த விதம்,அதன் சுருக்கம்,நுட்பம்,எளிமை,அழகு,ஆழம் ஒவ்வொன்றும்
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது.பிறகு அந்தப் புத்தகத்தை வாங்குவதற்காக
எங்கெங்கோ தேடியலைந்தேன்.யாராரிடமோ சொல்லி வைத்தேன்.எளிதில் கிடைத்து
விடவில்லை.கடைசியாக என் தோழி ஒருத்தி அந்தப் புத்தகத்தை வாங்கி அனுப்பினாள்.அந்தப்
புத்தகத்தில் உள்ள ‘Job hoppers could be show stoppers’ என்னும்
வரி சிந்திக்கத் தூண்டியது.ஒரே வேலையில் நீண்டகாலமாகப் பணிபுரிபவர்களை விடப்
பல்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு வேலைகளில் பணிபுரிந்திருப்பவர்களையே வேலைக்கு
எடுக்க நிறுவனங்கள் விரும்புகின்றன என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.யோசித்தால்
அது உண்மை தானே எனத் தோன்றியது.ஏனெனில் பலதரப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் போது
நம் உலகஞானம் விரிவடைகிறது.ஆனால் நாமோ இந்த வேலையும்,இந்தப் பணமும் இல்லையென்றால்
நம் வாழ்வு சூன்யமாகி விடும் என்று மீண்டும் மீண்டும் நம்ப
வைக்கப்படுகிறோம்.நம்முடைய கம்ஃபர்ட் ஸோன்கள் நமக்கான எல்லைகளை
உருவாக்குகின்றன.அந்த எல்லைகளை வாழ்வியல் அச்சங்கள் இரும்புச்சுவர்களாக மாற்றி
வலுப்படுத்துகின்றன.ஆனால் நாமாக நம்மைச் சுற்றிக் கட்டிக்கொண்ட இந்த
மாயக்கோட்டைகளை மாற்றத்தின் மூலம் கடக்கும் போது தான் உணரமுடியும்.
கல்லூரித் துணைமுதல்வராகப் பணிபுரியும் என்
பள்ளி நண்பன் அருண்குமாரைப் பற்றிச் சமீபத்தில் சிந்தித்துக்
கொண்டிருந்தேன்.பள்ளி,கல்லூரி மற்றும் வேலை எதற்காகவும் தஞ்சாவூரைத் தாண்டியதில்லை
அவன்.ஒரு நாளாவது வேறொரு ஊரில் தங்கியிருப்பானா என்னும் ஐயமே எனக்கு வந்து
விட்டது.நேரில் சந்தித்துக் கேட்ட போது அவன் சொன்ன பதில் என்னை வியக்க
வைத்தது.நான் எண்ணியது போலவே சில சதுரக் கிலோமீட்டரிலேயே தன் வாழ்வின்
பெரும்பகுதியைக் கடந்திருக்கிறான்.’காலை அஞ்சு மணிக்கே எழுந்துடுவேன்.ஏழு
மணிக்குள் காலைச் சாப்பாடு முடித்து எட்டு மணிக்கெல்லாம் கல்லூரியை அடைந்து
விடுவேன்.அப்புறம் சாய்ந்தரம் ஆறு மணி வரை இங்க அங்க திரும்ப
முடியாது.வகுப்பெடுப்பதை விட administrative work தான்
பெரும்பான்மையாக இருக்கும்.ஞாயித்துக்கிழமை ஒரு நாள் விடுமுறை.ஆனா ஒரு
வாரத்துக்கும் சேர்த்து ஒண்ணா தூங்க வேண்டியிருக்கும்.சிறிதும் தேடல் இல்லாத
வாழ்க்கை என்னோடது.’யாரிடமாவது சொல்லித் தீர்க்க வேண்டும் என முடிவெடுத்து
வைத்திருந்த்தைப் போலப் பேசத் துவங்கினான்.’ஒரு நாள் கூட வெளியூர் எங்கும் போய்
இருந்துட்டு வந்தது இல்லை.குடும்பத்தோடு ஊட்டி இல்ல கொடைக்கானல் போலாம்னு திட்டம்
போடுவேன்.ஆனா போக மாட்டேன்.அடுத்த வருஷம் போகலாம்னு மறுபடியும் திட்டம் போடுவேன்.போக
மாட்டேன்.இப்படியே போய்டுச்சுடா வாழ்க்கை’ என அடுக்கிக் கொண்டே போனான்.இப்போ
யோசிச்சுப் பார்த்தா இத்தனை வருஷமும் யாருக்காக,எதுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டோம்னு
தோணுது.மனசுக்குப் பிடிச்சது எதுவுமே செய்யாம,நமக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழாம
யாரோ ஒருவருடைய லாபத்துக்காக,இன்னொருத்தர் சந்தோஷத்துக்காக வாழும் வாழ்க்கை நரகம்’
எனக்கூறித் தலைகுனிந்தான்.சிறிது நேரம் இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை.நானே
பேச்சைத் துவங்கினேன்.’உன்னைப்பத்தி நீ ஏன் யோசிக்கவே இல்லை?’ எனக் கேட்டேன்.’வேலை
பார்த்துக்கிட்டே இருக்கிறேன்.இந்த வேலையை,வாழ்க்கையை மாத்திக்க பயம்.அதனாலேயே
என்னோட ஓய்வைப் பத்தியும் நினைக்கலை.வீட்ல உள்ளவங்க பத்தியும் நினைக்கக்கூட
நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.நான் ஏன் இவ்ளோ தூரம் என்னைச்
சித்ரவதைப்படுத்திக்கிட்டேன்னு நினைச்சிப் பாத்தா அவசியமே இல்லையோனு தோணுது.முன்பு
கோபப்பட்டு மாணவர்களைத் திட்டித் தீர்த்த விஷயமெல்லாம் இன்று நாமா அப்படியெல்லாம்
நடந்துக்கிட்டோம்னு என் மேலேயே வெறுப்பா இருக்கு.’சொல்லி விட்டு விரக்தியுடன்
சிரித்தான்.அந்தச் சிரிப்பில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.எல்லா
சிரிப்புகளும் எப்போதும் சிரிப்பாகவே இருப்பதில்லை.
துபாய் ‘கராமா’ இன்ஸ்டிட்யூட்டில்
பணிபுரியும் போது மாணவராக அறிமுகமானவர் அமெரிக்கர் மார்க்.என்னிடம் ‘Supply
chain management’ என்னும் certificate course படிக்க வந்தவர்.அமெரிக்காவில் பிரபலமான
ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.நாற்பது வயதான அவர்
ஒரு நாள் தன்னைப்பற்றியே சுயவிமர்சனம் செய்து பார்த்திருக்கிறார்.காலையில் எழுவது,வாசிப்பது,உடற்பயிற்சி
செய்வது,உண்பது,அலுவலகம் சென்று திரும்புவது,குடும்பத்தோடு கொஞ்ச நேரம்
பேசுவது,தூங்குவது என எல்லாமே ஓர் ஒழுங்குக்குள் இருப்பதைக்
கவனிக்கிறார்.இருபதாண்டுகளாக எல்லாமே ஒரே பாணியில் இயங்கிக் கொண்டிருக்கவே அந்த
ஒழுங்கு அவருக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கிறது.அவருடைய சமீபத்திய வேலைகளில்
புதிதாகப் படைப்புத்திறன் எதையும் சிந்திக்க முடியவில்லை என்பதைக்
கண்டுபிடித்திருக்கிறார்.கடந்த இருபதாண்டுகளில் புதிதாகக் கற்றுக்கொண்டது
என்ன?புதிதாகச் சேர்த்துக் கொண்ட நண்பர்கள் யார் யார்? தன்னுடைய வேலை நேரம் என்ன?
தன் படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிற விஷயங்கள் என்ன? வீட்டில் செலவழிக்கிற
நேரம்?சமூகத்துக்காகத் தான் செலவழிக்கிற நேரம்? என்பதையெல்லாம
கணக்கிடுகிறார்.இந்தச் சுயமதிப்பீடு அவரைத் தன் இருபதாண்டு கால வாழ்க்கையில்
முக்கியமான முடிவு ஒன்றை எடுக்க வைத்தது.’நம்ம வாழக்கைல இருபத்திரண்டு வருஷம்
பள்ளி,கல்லூரிக்குப் போறோம்.நிறைய கத்துக்கறோம்.அடுத்த முப்பது,நாப்பது வருஷம்
ஓடுறோம்...ஒடுறோம்...காசு,பணத்தைத் தேடி ஓடிக்கிட்டே இருக்கோம்.நடுவுல ஏன் நாம
ஓய்வு எடுத்துக்கறது இல்ல,ஏன் எதையுமே கத்துக்கறது இல்ல? கல்விங்கறது வாழ்க்கையின்
முதல் இருபது வயசுக்குள்ள தான் இருக்கணுமா?ஓய்வுன்றது கடைசி இருபது வயசுக்குள்ள
தான் எடுக்கணுமா?’ மார்க்கின் இந்தக் கேள்விகள் நம் எல்லோருக்குமானது தானே
என்றெண்ணினேன்.இந்த எண்ணம் மார்க்கிற்கு வந்த உடனேயே தன் வேலையை உதறிவிட்டுத்
துபாய் வந்து விட்டார்.கிட்டத்தட்ட உலகின் அனைத்துப் பன்னாட்டு
நிறுவனங்களும்,இருநூறு நாட்டைச் சேர்ந்தவர்களும்,பொழுதுபோக்கிற்கு சிறந்த
நாடாகவும் விளங்குவதால் துபாயைத் தேர்ந்தெடுத்தேன் எனக் கூறினார்.என் வகுப்பில்
ஏற்றுமதி-இறக்குமதியில் ஏற்பட்டுள்ள நவீனத்தையும்,அதன் நுணுக்கங்களையும் கற்றுத்
தேர்ந்தார்.பல்வேறு நாட்டினரிடமும் பேசிப் பழகினார்.நூலகத்துக்குச் சென்று
புத்தகம் படித்தார்.புர்ஜ்கலிஃபா,மிராக்கிள் கார்டன் எனப் பொழுது போக்கினார்.ஆறுமாத
காலத்தில் துபாயிலேயே வேலை கிடைத்து செட்டிலாகி விட்டார்.அவரது தற்போதைய
செயல்பாடுகளை வேலை பார்க்கிற நிறுவனத்தில் கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்று
கூறினார்.'என்னுள் மங்கிப் போயிருந்த கிரியேட்டிவ் ஆற்றல் ஒளிரத் தொடங்கி விட்டது' என்றார்.அதே இன்ஸ்டிட்யூட்டில் நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ‘கிரிஸ்
கெய்ன்ஸ்’ கூட ஒரு கோர்ஸ் படித்தார்.பன்னிரண்டு வருடங்கள் துபாய் ஃபிலிப் மோரிஸ்-ல் பணிபுரிந்தவர் என்
நண்பர் கமலநாதன்.கைநிறையச் சம்பளம் கொடுத்த கார்ப்பரேட் வேலையை உதறித் தள்ளிவிட்டு
இப்போது தஞ்சை மாவட்டத்திலுள்ள தன் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.இப்படி
விநோதமான சம்பவங்கள் என்னையும்,என்னைச் சுற்றியும் தான் நடக்கிறதா இல்லை
எல்லோருக்கும் நடந்து நான் மட்டும் தான் உடுக்கடித்து ஊருக்குச் சொல்கிறேனா என்று
தெரியவில்லை.ஆனால் அவை விநோதமானவைகள் அல்ல;தேடல் உள்ள மனிதர்கள் அப்படித்தான்
இருப்பார்கள் எனக்காலம் எனக்கு உணர்த்தியது.
‘மார்க்’கின் நட்பிற்குப் பிறகு என்
சிந்தனை ஓட்டம் இவ்வாறாகச் சென்றது.நம் தேசத்தில் ஏன் ஓய்வே இல்லாமல் ரிடையராகும்
வரை உழைக்கிறோம்?ஐரோப்பா,அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ‘தற்காலிக ஓய்வு’
எடுத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு.’Mid career sabbatical’ எனப்படும்
இத்தகைய ஓய்வு எடுக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்
கொண்டிருக்கிறது.பெரும்பாலும் நாம் இந்தியாவில் பார்க்கும் வெளிநாட்டுக்காரர்கள்
இப்படி ஓய்வெடுக்க வந்தவர்கள் தான்.ஓய்வெடுப்பதற்கு அறுபது அல்லது எழுபது வயதாகும்
வரை அவர்கள் காத்திருப்பதில்லை.வேலை காலத்திலேயே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
ஓராண்டு ஓய்வு என்கிற கணக்கில் மேற்கொள்கிறார்கள்.சிலர் ஆறு மாதம் வேலை,ஆறு மாதம்
ஓய்வு என்று வாழ்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.இந்த ஓய்வு காலத்தில் உடல்நலத்தைப்
பேணிக்காப்பது,புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது எனப் பல காரியங்களில்
ஈடுபடுகிறார்கள்.இவையனைத்தும் தங்களுக்குத் தாங்களே புத்துயிர் அளித்துக் கொள்ளும்
செயல் மட்டுமின்றி பிற்பாடு அவர்களுடைய வேலை சார்ந்த முன்னேற்றத்திற்கும் பெரிதும்
உதவுவதாகவே இருக்கிறது.ஓய்வு தான் நம்மைப் பற்றி நாமே சிந்திக்கும்
வாய்ப்பளிக்கிறது.நம் உடலையும்,மனதையும் கவனித்து பிரச்னைகள் இருந்தால் சீர்
செய்யவும் ஏதுவாகிறது.தன் உடலையும், மனதையும் நன்றாகக் கவனித்துக் கொள்பவர்களால்
தான் தன்னோடு இருக்கிறவர்களையும் ஒழுங்காக கவனித்துக் கொள்ள முடியும்.மேலும் அவர்களால்
தான் சமூகத்தின் போக்கையும் கவனிக்க முடியும்.இல்லையெனில் டாஸ்மாக்,கூடங்குளம்
அணுமின் திட்டம்,நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் என எதைத் திணித்தாலும் அதை
எதிர்ப்பே இல்லாமல் ஏற்றுக்கொண்டு அதைப் பற்றிக் கவலையேபடாமல் மந்தைஆடுகளைப் போல
புற்களை மேய்ந்து கொண்டிருப்போம்.இன்று நாம் ஓவர்டைம் பார்த்து ஓய்வுநாளைக் கூட
விட்டு விடாமல் உழைத்துப் பணம் சேர்க்கிறவர்களாக மாறி இருக்கிறோம்.கிடைக்கும்
சொற்ப நேரத்தைக் கூட தொலைக்காட்சியிலும்,ஃபேஸ்புக்கிலும்,ட்விட்டரிலும்,வாட்ஸ்
அப்பிலும் செலவிட்டு யாரோ கண்ணுக்குத் தெரியாத நிறுவனங்களுக்காக சம்பளம் பெறாத
கூலிகளாக உழைக்கிறோம்.கண்விழித்த மறுநொடி செல்போனை நோக்கித்தானே நம் கை நீள்கிறது?
என் சிந்திப்பின் பயனாகப்...பதினைந்து வருட உழைப்பிற்குப் பிறகு ஒரு நீண்ட ஓய்வு
எடுத்துக் கொண்டேன்.இந்த ஓய்வில் என் நாற்பது வருட பழைய பள்ளி,கல்லூரி நண்பர்களைச்
சந்தித்தேன்; நிறையப் பயணம் செய்தேன்; கட்டுரைகள் எழுதினேன்;உடல்நலத்தைப்
பேணினேன்;ஃபிக்ஷன் - நான்ஃபிக்ஷன் – அறிவியல் – இலக்கியம் – மேலாண்மை எனப் பல
புதிய புத்தகங்களைப் படித்தேன்;SLET தேர்வெழுதி வெற்றி பெற்றேன்;ஆய்வில் கவனம்
செலுத்தி முனைவர் பட்டம் பெற்றேன்.இதோ அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகி விட்டேன்.
என் இருபது வருட கேரியரில்(துபாய்
உட்பட)பெருநிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் என எழுபது இடங்களுக்கும் மேல்
பணிபுரிந்திருக்கிறேன்.நாற்பது பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப்
பயிற்சியும்,இருபத்தாறு கல்லூரிகளுக்குப் பல்வேறு தலைப்புகளில் வொர்க் ஷாப்பும்
நடத்தியிருக்கிறேன்.’Do not be the jack of all trades and
master of none’ என்பது என்னளவில் காலாவதியான ஓர் கூற்று.அதாவது ஒரே
துறையில் மட்டுமே கவனம் செலுத்தி நம் அறிவை வளர்த்துக் கொள்வதென்பது இன்றைய நவீன உலகிற்குப்
போதுமானதல்ல.குறைந்தது மூன்று துறைகளிலாவது நம் ஆற்றலை மேம்படுத்திக் கொண்டால்
தான் மாறி வரும் காலச்சூழ்நிலைக்கேற்ப நம்மைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.இதை
நான் என் மாணவர்களுக்குப் போதிக்கவே செய்கிறேன்.நான் பள்ளி வாழ்க்கையை
முடித்தவுடன் ஆசிரியர்களின் அறிவுரைக்கேற்ப Bsc(Agri) சேர்ந்தேன்.1989ல்
சேர்ந்த போது வேளாண்மைத்துறைக்கு இருந்த வேலைவாய்ப்பு 1992லேயே குறைந்து
போய்...பட்டம் பெற்ற வேளாண்மை மாணவர்கள் அரசிடம் வேலை கேட்டு நடத்தும் போராட்டமும்
துவங்கி விட்டது.தவறாக இந்தத் துறையை தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று கூட
எண்ணினேன்.இருப்பினும் மனதைத் தேற்றிக்கொண்டு Bsc(Agri) முடித்தவுடன்
PGDBF(Post graduate diploma course in Bio-fertilizers)என்னும்
இயற்கை உரங்களைப் பற்றிய ஒரு வருட டிப்ளமோ கோர்ஸ் சேர்ந்து வெற்றிகரமாக distinctionல் முடித்தேன்.இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிற அறிவு இப்போது
தான் துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.அதனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு
அதைப்பற்றிப் படித்தது எனக்குப் பயனளிக்கவில்லை.எதிலுமே ரொம்பவும் முன்னோடியாக (proactive) இருக்கக்கூடாது என்னும் உணமையை இந்தப் படிப்பின் மூலம் தெரிந்து
கொண்டேன்.மனம் தளராமல் MBA சேர்ந்தேன்.MBA இறுதி செமஸ்டர் project BHEL-ல்(பாரத மிகுமின்
நிலையம்) செய்தேன்.என்னுடைய company guide திரு.ரவிசங்கர் lIM-ல் படித்தவர்.நற்குணம் படைத்தவர்.BHEL-ல் வேலைக்காக
நேர்முகத்தேர்விற்கு எனக்கு ஏறபாடு செய்தார்.MBA முடித்தவுடனேயே
மத்திய அரசு வேலை கிடைக்கப் போகிறதா...என்கின்ற மகிழ்ச்சியுடன் சென்ற நான்
நேர்முகத்தேர்வின் முதல் கேள்வியிலேயே தோற்றுப்போனேன்.ஹிந்தி தெரியுமா? என்பதே
அந்த முதல் கேள்வி.இந்தியா முழுவதுமே BHEL-க்குக் கிளைகள்
இருப்பதால் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டுமென்பது கட்டாய விதி.அளவில்லாத ஆனந்தத்தில்
நீ வாழக்கூடாது என்று விதி சொல்லி விட்ட பின் என்ன செய்ய முடியும்?என்னை நானே
தேற்றிக்கொண்டு ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தேன்.வேலை
பிடிக்காமல் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் சில காலம்
பணிபுரிந்தேன்.அதுவும் ஒத்து வரவில்லை.பின்னர் வெளிநாடு செல்லும் எண்ணத்தில்
கம்ப்யூட்டர் கோர்ஸ் (ERP) படித்தேன்.சிங்கப்பூரில் இரண்டு
ஆண்டுகள் கணிணித்துறையில் பணிபுரிந்து அந்த வேலையிலும் மனம் ஒட்டாமல் துபாய்
சென்றேன்.அங்கு தான் இறுதியாக என் மனதிற்குப் பிடித்த Supply chain
management துறையைத் தேர்ந்தெடுத்து நீண்டகாலம் வேலை
செய்தேன்.ஆக...கண்டதையும் படித்ததால் பண்டிதன் ஆனேனோ என்னவோ தெரியாது.ஆனால்
இப்படிப் பலவற்றையும் படித்து,பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்ததால் நான் அடைந்த
பலன்கள் இரண்டு.எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலும்,எதையும் எளிதில்
கற்கும் திறனும்.இன்னும் என் தேடலை நான் நிறுத்திய பாடில்லை.
சமீபத்தில் ‘அருவி’
படம் பார்த்தேன்.நமக்கென்று வாழாமல் சமூகத்திற்காக நாமே ஒரு கொடுமையான அட்டவணையை
வகுத்துக்கொண்டு வாழும் அவலத்தை கதாநாயகி வெளுத்து வாங்கும் ஐந்து நிமிட காட்சி
அசத்தலாக இருந்தது.நம்மைச் சுற்றியுள்ள வாழ்வு கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.நாமோ
எதிர்காலத்தின் சாலையில் பரபரப்பாக முன்னேறிக்
கொண்டிருக்கிறோம்.தேடல்...பரபரப்பும்,நெருக்கடியுமான வாழ்விலிருந்து நம் மென்உணர்வுகளை மீட்டெடுத்து வாழ்வை அர்த்தப்படுத்துகிறது.ஒவ்வொரு மனிதனும் தனக்கான
தனித்திறனும்,ருசியும், வேட்கையும்,போராட்டமும் கொண்டவன். ஒவ்வொருவரிடமும்
கற்றுக்கொள்ள ஏதோ இருக்கிறது.தேடலே மனிதர்களைப் படிக்கக் கற்றுத் தருகிறது.எல்லோருடைய
தேடல்களும் ஒன்று போல இருப்பதில்லை.அது நாளைய விருட்சத்திற்கான இன்றைய
விதை.செக்குமாட்டுத்தனத்தைத் தவிர்த்துச் சிந்தையிலும்,செயலிலும் மாற்றத்தை
உருவாக்குகிறது.
“தேடல் உள்ள
உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் அதைத் தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே”
இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் அதைத் தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே”
என்னும் கவிப்பேரரசு
வைரமுத்துவின் வைரவரிகள் காதில் ரீங்காரமிடுகிறது.தேடல் என்பது ஒரு புதையல்
சுரங்கம்.எப்போது என்ன கிடைக்கும் என்று சொல்லவே முடியாது.ஆனால் அது தரும் பரவசம்
ஈடு இணையற்றது.அந்தப் பரவச உணர்வை அனுபவித்து ரசனையுடன் வாழக் கற்போம்.ஏனெனில்
வாழ்வது ஒரு முறை!