Thursday, 19 October 2017

பயணங்கள் முடிவதில்லை!


நம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் எவையெனத் திரும்பிப் பார்த்தால் அவற்றுள் பெரும்பான்மையானவையாகப் பயணங்களே திகழ்கின்றன.அதிலும் குறிப்பாகப் பால்யத்தில் பெற்றோருடன் சென்றவையும்,பருவத்தில் நண்பர்களுடன் சென்றவையும் மறக்க முடியாதவை.கடைசியாக நீங்கள் பயணம் சென்றது எப்போது?ஒரு நிமிடம்! பயணமும்,சுற்றுலாவும் ஒன்றல்ல.சுற்றுலா கேளிக்கைகாகச் செல்வது; பயணமோ பூமியின் அழகை,வடிவத்தை,அதன் அந்தரங்கத்தை மிக அருகில் நின்று உணர்ந்து ரசிப்பது.அநேகமாகப் பயணம் செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்த்தாலும் ரசிப்புத்தன்மையும்,கூர்ந்த நோக்கும் கொண்டவர்களால் மட்டுமே அதன் நோக்கத்தை அடைய முடியும்.பயணங்கள் - பரபரப்பான இயந்திர வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய நவீனயுக மனிதனை ரீசார்ஜ் செய்யும் கருவி.நம்மை நாமே புதுப்பித்துக் கொள்கிற மாமருந்து.இந்த விஞ்ஞான யுகத்தில் 24 மணி நேரம் கூடப் போதவில்லை எனக் கடிகார முட்களை விட வேகமாகச் சுழன்று கொண்டிருக்கும் மனிதனை செப்பனிட இயற்கை வழங்கிய கொடை.பயணத்தின் போது நாம் அடையும் அனுபவம் அலாதியானது.முதல் அனுபவமாக நாம் ரயிலோ,விமானமோ ஏறும் போது நம் அடையாளம் அற்றுப் போகிறது.’எத்தனையோ பயணிகளில் நானும் ஒருவன்’ என்ற நிலை வந்து விடுகிறது.புதிய வாழ்க்கையை,மாற்று இடத்தைப் பார்க்கும் போது மனசு மாற ஆரம்பிக்கிறது.
பயணங்களால் பல புதிய வணிகப்பாதைகள் தோன்றின.இது உலக மக்களிடையே ஒரு கலாசார,பண்பாட்டுத் தொடர்பை ஏற்படுத்தியது.இந்த மாற்றம் பயணங்களை ஊக்கப்படுத்தியது.பொங்கி வரும் கடல் அலைகளும்,மலைமுகடுகளின் ஊடே வந்து நம்மைத் தழுவிச் செல்லும் மேகக்கூட்டமும்,இதமான தென்றல் காற்றும் மனிதனின் கோபம்,கவலை,மனஅழுத்தம் ஆகியவற்றைப் போக்கும் வல்லமை கொண்டவை எனக் கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள்.பயணம் ஒருவரின் குணாதிசயத்தையே மாற்றி விடும் இயல்பு கொண்டது.உங்கள் குடும்பத்தோடு பயணம் செல்லும் போது ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா?எப்போதும் குறைவாகப் பேசும் உங்கள் மகன் உங்களுக்கு நெருக்கமாகியிருப்பான்.உங்களை விட்டு இரண்டடித் தள்ளியே இருக்கும் உங்கள் மகளும் நெருக்கமாகியிருப்பாள்.பயணம் மனதை விசாலமாக்குகிறது என்கிறார்கள் அறிஞர்கள்.


பயணத்தின் மீது விவரம் தெரியாத வயதிலிருந்தே எனக்கு நாட்டம் அதிகம்.”பெரியவனாக இருந்தால் எவ்வளவோ பயணங்கள் போகலாமே...இன்னும் சிறுவனாகவே இருக்கிறோமே” என மனது கிடந்துத் தவிக்கும்.”தெருவில் இறங்கக் கூடாது” என்ற அம்மாவின் எச்சரிக்கையையும் மீறி வெளியே சென்று பார்த்தால் தான் என்ன? என்கிற ஆர்வம் சிறுவயதிலிருந்தே துவங்கி விட்டது.நம் தெருவுக்கு அப்பால் உலகம் எப்படி இருக்கும் என்ற தேடலும்,புரியாமையும் மனதிற்குள் உழன்று கொண்டே இருந்தது.ஒரு முறை ஆசை எல்லை கடந்து விடவே என் நண்பனுடன் யாருக்கும் தெரியாமல் பக்கத்து கிராமத்துக்குச் சைக்கிளில் பயணமானேன்.ஆக திட்டமில்லாத என் பயணம் பால்யத்திலேயே துவங்கி விட்டது.மிகுந்த பரவசத்துடனும்,பயத்துடனும் நான் மேற்கொண்ட அப்பயணத்தின் நினைவு ஆற்றுக்குள் போடப்பட்ட கூழாங்கல் போல் என் மனதின் அடியாழத்தில் கிடக்கிறது.நான் வீடு வந்து சேர்வதற்குள் நான் சிறுபயணம் சென்ற செய்தி வீடு வந்து சேர்ந்து விட்டிருந்தது.அதற்காக என் தாத்தா கடிந்து கொண்டதும்  ஞாபகத்தில் உள்ளது.பள்ளியிலும்,கல்லூரியிலும்,புத்தகங்களிலும் நான் கற்றுக் கொண்டதை விடப் பயணங்களே வாழ்வு பற்றிய புரிதலை எனக்கு அதிகமாகக் கற்றுத் தந்திருக்கிறது.பயணத்தின் போது கண்ணில் அடங்காமல் காட்சிகள் கரைமீறித் ததும்பும் பேரானந்தத்தை அனுபவித்திருக்கிறேன்.பயணங்களை நினைவுகூரப் புகைப்படங்கள் அவசியமே.ஆனால் அதையே முழுநேரத் தொழிலாக வைத்திருக்க மாட்டேன்.காரணம் பயணத்தின் நோக்கம் சிதையக்கூடும் என்னும் அச்சம் தான்.அதே சமயம் இடையிடையே படங்கள் எடுத்துக் கொள்வதுடன் சில அரிய நிகழ்வுகளையும்,காட்சிகளையும் தவற விடவும் மாட்டேன்.இந்திய ரயில்வேத்துறையின் “மஹாராஜா எக்ஸ்பிரஸ்” பற்றி ஒரு கட்டுரை படித்தேன்.ஒரு அரண்மனையில் அரசர் அனுபவிக்கும் சொகுசுகளை ஓடும் ரயிலில் தருவதே அதன் தனித்துவம்.மொத்தம் 88 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய நகரும் சொர்க்கம் அது.மிக ரசனையான வடிவமைப்பு,வியக்க வைக்கும் இருக்கைகள்,தங்கத்தட்டில் உணவு பரிமாறப்படும் இந்திய மற்றும் சர்வதேச உணவகங்கள் என ரயிலில் ஒரு ராஜவாழ்க்கை.இந்த ரயிலில் எப்படியாவது பயணம் போய்விட வேண்டுமென்று நண்பர்களுடன் அவ்வப்போது உரையாடுவதுண்டு.தவிர நீண்ட கடற்பயணம் போகவேண்டுமென்பது என் நீண்ட நாள் கனவு.விரைவில் நிறைவேறுமென்று நம்புகிறேன்.
தமிழின் சிறந்த பயணக்கட்டுரைகள் எழுதியவர்களாக நான் கருதுபவர்கள் : ஏ.கே.செட்டியார்,மணியன்,இந்துமதி மற்றும் லேனா தமிழ்வாணன்.மிகவும் விரும்பிப் படித்த புத்தகம் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி.பதின்வயதில் தன் பயணத்தைத் துவங்கியவர் தேசம் முழுவதும் சுற்றியலைந்து தான் கற்றுக் கொண்டதையும்,பின்பற்றுவதையும்,நினைவில் வைத்திருந்ததையும் தொகுத்து எழுதியதே இப்புத்தகம்.சென்று வந்த இடங்களைப் பற்றிய பயணக்கட்டுரைகளாக எழுதாமல் அவ்விடங்களை அடைந்த போது நேர்ந்த சிலிர்ப்புகளை சிலாகித்து அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.”உலகம் என் வீட்டு வாசல்படியில் இருந்து தான் துவங்குகிறது.தெருக்கள்,கிராமங்கள்,நகரங்கள்,கடல்,மலை என்று உலகம் தன்னை எத்தனையோ கிளைகளாக விரித்துக் கொண்டு இருந்த போதிலும் எனது பயணத்தில் அவை கண்ணுக்குத் தெரியாத ஒரு சங்கிலியால் என் வீட்டோடு சேர்த்து பிணைக்கப்பட்டு இருப்பதாகவே உணர்கிறேன்” என்கிறார்.


வெள்ளியங்கிரி மலை
“தென்கயிலாயம்” என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறியதை வாழ்வில் மறக்கவே முடியாது.கிட்டத்தட்ட இமயமலையில் கால்வாசி உயரமுள்ள வெள்ளியங்கிரி மலையை முதல்முறையாக நானும்,பள்ளி நண்பன் முருகானந்தமும் ஏறினோம்.எந்தத் திட்டமிடலுமில்லாமல் சென்றதால் ஏழுமலையையும் ஏறமுடியாமல் நேரமின்மை காரணமாக ஐந்தாவது மலையுடனேயே திரும்ப வேண்டியதாயிற்று.இரண்டாவது  முறை சரியான திட்டமிடலுடன் நாங்கள் இருவரும் இன்னொரு நண்பன் வெங்கியுடனும் மற்றும் முருகானந்தத்தின் மூன்று நண்பர்களுமாக மொத்தம் ஆறு பேர் மலையேறினோம்.முதல் மலைப்பகுதியில் சுற்றிலும் அடர்ந்த காடு.வெயிலை மறைக்கும் இலைகள் கொண்ட வலுவான மரங்கள் இருமருங்கிலும் இருந்தாலும் காற்று வீசாத காரணத்தால் புழுக்கம் அதிகமாகவே இருந்தது.இரண்டாவது மலையில் மூங்கில்கள் அதிகம் காணப்படுகின்றன.வானரங்களும் இம்மலைப்பகுதியில் கொஞ்சம் அதிகம்.நம் கையில் கம்பு இருப்பதால் நம்மை அவை அவ்வளவாகத் தொந்தரவு செய்வதில்லை.இரண்டாவது மலையின் பாதித் தொலைவில் எங்கிருந்தோ வந்த நாய் எங்களுடன் சேர்ந்து கொண்டது.எங்களின் வழிகாட்டியாகவே மாறியது.மலையின் முடிவில் சுனை வரும் பாதையில் வழுக்குப்பாறை எனப்படும் பிரதேசத்தில் பாறையிலேயே படிகள் போன்ற அமைப்பை வெட்டி உருவாக்கியிருக்கின்றனர்.இரண்டாவது மலை முடிந்து மூன்றாவது மலை ஆரம்பித்தவுடன் சில்லென்ற காற்று தழுவிக்கொள்ள மயங்கிப் போனேன்.அதுவரை வந்த களைப்பு அனைத்தையும் துடைத்தெறிந்துச் செல்கிறது மேற்குத்தொடர்ச்சி மலைக்காற்று.மலையேற்றத்தை முழுவதுமாக ரசித்ததுடன் மட்டுமல்லாமல் லயித்தும் போனேன் – உடலாலும்,மனதாலும்.மூன்றாவது மலையேற்றம் முழுவதுமே மலைவனம் நம்மை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதை உணர முடிந்தது.இந்த மலைப்பிரதேசத்தில் செல்போன் எடுக்கவில்லை.தினசரி பேப்பர்கள் கிடையாது.சுற்றிலும் மலை மட்டுமே உள்ளது.பகலும்,இரவும் முழுமையாக வந்து போகின்றன.சில்வண்டுகளின் ஒலிகள்,பறவைகளின் ஒசை,எங்கோ வனவிலங்கின் இருப்புணர்த்தும் சத்தம்,இலைவழியூடுருவும் காற்றின் இசை,பச்சையின் மணம்,நீள்விரிந்து பரவும் வனத்தின் எழில் என்று இயற்கையின் பார்வை,நுகர்ச்சி,கேட்பது,உணர்வது என்று நம்மில் கலந்து நாம் அதில் கரைந்து மறைவது என்பது ஆஹா!


நான்காவது மலையில் விரைந்து செல்லும் மேகங்களும்,சற்றே சமதளப் புல்வெளியும்,செதுக்கினாற் போன்ற நடைபாதையும்கிளர்ச்சியுறச் செய்கின்றன.சடசடவென ஐந்து நிமிடம் பொழிந்த மழையைத் தொடர்ந்து அடர்ந்த மேகங்கள் நம்மைக் கடக்கும் போது மூன்றடி தூரத்தில் நின்ற நண்பர்களைப் பார்க்க முடியவில்லை.அடுத்த சில நிமிடங்களில் வீசியடித்த காற்று தடுமாற வைத்தது.ஒரு நாழிகைப் பொழுதில் இவ்வளவு மாற்றங்களா?இயற்கையின் மாயாஜாலமே தனி தான்.ஐந்து மற்றும் ஆறாவது மலைகள் கடப்பதற்கு இலகுவாக இருந்தது.செல்லும் வழியில் சிறுவாணி அணையையும்,அருவியையும் காணக் கண்கோடி வேண்டும்.ஏழாவது மலையானது முழுக்க முழுக்க பாறை மீதே ‘திகில்’ பயணம்.உச்சியை அடைந்த பின் ஏற்படும் உணர்வு இருக்கிறதே அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.ஏறுவதை விட இறங்குவது கூடுதல் சிரமமாக இருந்தாலும் வெள்ளியங்கிரிப் பயணம் கொடுக்கும் ஏகாந்தத்திற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம்.
நைனிடால்
நான் Bsc(Agri) படித்துக் கொண்டிருக்கும் போது கடைசி வருடம்,கடைசி செமஸ்டர் ‘All India Tour’ அழைத்துச் சென்றார்கள்.அது எங்களுக்கு ஒரு subjectம் கூட.என் வாழ்வில் இது வரை நான் மேற்கொண்ட பயணங்களிலேயே அது நீண்ட நாள் பயணம் மட்டுமல்ல,நீண்ட ரயில் பயணமும் கூட.ஒரு மாதப் பயணமானது சென்னை centralல் துவங்கியது.பயணங்களில் ரயில் பயணம் எப்போதுமே ஸ்பெஷல்.டெல்லி,ஆக்ரா,ஜெய்ப்பூர்,ஹைதராபாத் எனப் பல இடங்களுக்குச் சென்றாலும் நைனிடால் சென்றது இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது.நாங்கள் நைனிடால் சென்றடைந்த போது இரவு ஒன்பது மணி ஆகி விட்டது.குளிர் என்ற வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை அங்கு தான் உணர்ந்தேன்.நரம்புகளை ஊசியால் செருகுவது போன்று துளைத்தது.பயணத்தின் போது நான் கண்ட எத்தனையோ அற்புதமான இடங்கள்,அதிசயமான சிற்பங்கள்,அரண்மனைகள் யாவும் அந்த நிமிடத்தில் அர்த்தமற்றுப் போனது.ஏண்டா இந்தப் பயணம் வந்தோம் என்றெண்ணும் அளவுக்கு குளிர் வாட்டியெடுத்தது.ஒரே ஓட்டமாக ஒடி எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று கம்பளியைப் போர்த்திக் கொண்டு சுருண்டு விட்டேன்.குளிர் தன் அகன்ற கைகளால் எழுப்பி விட்டது போன்றதொரு பிரமை.எழுந்து உட்கார்ந்தேன்.பின் தூக்கமும் வரவில்லை.குளிர் எப்போதோ நான் மறந்து போன பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டதால் தூங்க நெடுநேரமானது.நைனிடாலின் விடிகாலை மிக ரம்மியம்.அந்தப் பனிக்காலம்  நேற்று வரை உலகின் மீது படிந்திருந்த கசடுகள் யாவையும் துடைத்து ஊரைச் சுத்தப்படுத்தியது போலிருந்தது.விடிகாலை ஆறுமணிக்கும் கூட வெளிச்சமேயில்லை.புகைமூட்டம் போல எங்கும் குளிர்காற்று.நான் அணிந்திருந்த கம்பளியாடைகளைத் தாண்டி குளிரால் நுரையீரல் நடுங்கத் துவங்கியது.இங்கிலாந்தின் சீதோஷ்ணம் போலவேயிருக்கும் நைனிடாலுக்கு வெள்ளைக்காரர்கள் இருநூறு வருடங்களுக்கு முன்பாகவே வந்து குடியேறி விட்டார்கள்.சரிவுகளில் உள்ள மரவீடுகளின் கூம்பு வடிவமுள்ள புகைபோக்கிகள் லண்டனை நினைவுபடுத்துகின்றன.மெதுவாக காலை விடிந்து இயக்கம் ஆரம்பித்திருந்தது.நானும் நண்பர்களும் சூடாகக் காபி குடித்து விட்டு மிகப்பெரிய நைனிடால் ஏரியைச் சுற்றி வலம் வந்தோம்.ஏரியைச் சுற்றிலும் படர்ந்திருந்த பனி மெதுவாக விலகிக் கொண்டிருந்தது.அன்றைய இரவு நெருப்பை உண்டாக்கிக் கொண்டு குளிர் காய்ந்தோம்.நெருப்பின் அருகில் அமர்ந்த போது தான் குளிரின் தாக்கத்தை உணர்ந்தேன்.கைகளை நெருப்பருகே காட்டிய போதும் கைகளில் உஷ்ணம் ஏறவேயில்லை.எத்தனையோ ‘மலைவாசஸ்தலங்’களுக்குச் சென்றிருந்தாலும் இந்தச் சொல்லுக்கான அர்த்தம் என்வரையில் நைனிடால் தான்.
குற்றாலம்
எப்போது குற்றாலத்தை நினைத்தாலும் அருவியின் சப்தமும்,ஈரவாடையும்,குரங்குகளும் நினைவில் எழத்தானே செய்கிறது.நீங்கள் குற்றாலம் போயிருப்பீர்கள்.மலையின் உச்சியில் உள்ள தேனருவி வரை சென்றிருக்கிறீர்களா?நான் போயிருக்கிறேன்.MBA படிக்கும் போது நாங்கள் பத்து நண்பர்கள் குற்றாலம் சென்றோம்.குற்றாலம் வெறும் ஊரென்று சொல்லி விட முடியாது.அது மழையின் தாழ்வாரம்;நீரின் கேளிக்கை அரங்கம்;அருவியின் திருவிழா.சாலைகள் எங்கும் தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்க,ஈரவீடுகள், ஈரமரங்கள், ஈரத்தில் நனைந்த பறவைகள், ஈரவிடுதிகள், ஈரம் படிந்த பழங்கள், ஈரத்தில் நனைந்த பேச்சு, ஈரத்தில் நனைந்த சிரிப்பு என ஊரே நீரின் பரவசத்தில் திளைத்து நிற்கிறது.91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி பின்பு கீழே பாயும் பேரருவியில் குளித்தோம்.குளித்த பின் பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும்,மூலிகைப்புதர்களும்,அரிய வனவிலங்குகளும்,பறவைகளும் நிறைந்த மலையில் இரண்டு கிலோமீட்டர் கடந்து செண்பகாதேவி அருவியை அடைந்தோம்.தேனருவியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் கொட்டும் செண்பகாதேவி அருவியில் அடுத்த குளியல்.ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு குணம் கொண்டது.அதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட அதனிடம் நம்மை ஒப்படைப்பது மட்டும் தான் அதில் நாம் ஒன்று கலப்பதற்கான ஒரே வழி! செண்பகாதேவி வரையிலும் தான் வழித்தடம் ஓரளவு நடக்கக்கூடிய நிலையில் இருந்தது.அங்கிருந்து தேனருவி செல்லும் இரண்டு கிலோமீட்டரும் ஆபத்தான பாதை.சமதளமில்லாத வழியில் பாறைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தான் ஏற முடியும்.சில இடங்களில் பாறைகளில் கீழே இறங்கி,ஆங்காங்கே வழியில் ஓடுகின்ற ஓடைகளைக் கடந்து,சிறுசிறு பாறைகளில் குதித்துத் தாவி அதற்குப் பிறகு மீண்டும் மேலே ஏறித்தான் சென்றோம்.சென்று கொண்டிருக்கும் போதே திடீரெனச் சாரல் அடித்தது.எங்கிருந்தெனத் தெரியவில்லை.பிறகு தான் சற்றுத் தொலைவில் - 150 அடி உயரத்தில் இருந்து நேராகத் தண்ணீர் விழுந்து அங்கிருந்து வீசும் தேனருவிச் சாரல் எனப் புரிந்தது.குற்றாலச் சாரலில் நனைவது சுகமென்றாலும் தேனருவிச் சாரலில் நனைவது something special.எவ்வளவோ காலத்துக்குப் பிறகு சமீபத்தில் குற்றாலம் சென்ற போது நிறைய மாற்றங்கள் வந்து விட்டுருப்பதைக் கண்டேன்.நம் கண்ணுக்கு தெரியாமலே உலகத்தில் உள்ள அனைத்தையும் காலம் நகர்த்திக் கொண்டேயிருக்கிறது.பாதைகள் - தூர்ந்து போவதும்,புதுப்பாதைகள் உருவாவதும்,மரங்கள்-இலையுதிர்ப்பதும்,காய்ப்பதும்,பறவைகள்-கூடு கட்டுவதும்,பறந்து போவதும்,மனிதன்-ஜனிப்பதும்,மரணிப்பதும் போன்றே நிகழ்கின்றன.


சிங்கப்பூர்
சிறுவயதில் என் தந்தை எங்கள் அனைவரையும் சென்னை–திருப்பதி அழைத்துச் சென்றது தான் என் முதல் விமானப் பயணம்.முதல் வெளிநாட்டுப் பயணம் சென்றது சிங்கப்பூர்.நடுஇரவில் Singapore Airlines ல் பயணம் துவங்கியது.விமானம் Takeoff ஆனதும் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு-இளையராஜாவின் பாடல்களைக் கேட்டபடியே பறந்து கொண்டிருந்தேன்.சிறிது நேரம் கழித்து ஜன்னலுக்கு வெளியே தெரியும் இருண்ட வானத்தைப் பார்த்தேன்.தொலைவில் ஒளிரும் விளக்குகளின் அடியில் ஏதோ ஒரு நகரம் உறங்கிக் கொண்டிருந்தது.நாளை இந்நேரம் சிங்கப்பூரில் இருக்கும் அந்தச் சந்தோஷத்தை விடவும் அதைப் பற்றி நினைத்துக் கொள்ளும் இந்த விநாடியின் சந்தோஷமே பெரியதாகத் தோன்றியது.நேபாள்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,தாய்லாந்து,ஓமன்,இலங்கை,ஈரான் போன்ற நாடுகளுக்கு நான் பயணித்திருந்தாலும் பயணம் போகிறவர்களின் சொர்க்கபூமி என்று சிங்கப்பூரைச் சொல்வேன்.ஏனெனில் பயணத்தைப் பல விஷயங்களையும் கற்றுத் தருகிற ஒரு தேடலாகவே நான் கருதுகிறேன்.சிங்கப்பூரில் மேற்கொள்ளும் பயணம் நமக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது.சுத்தம்,நேரம் தவறாமை,உழைப்பின் அருமை ஆகியவற்றின் அவசியத்தை சிஙகப்பூர் எனக்குக் கற்றுத் தந்தது.தமிழை ஒரு தேசிய மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில் தமிழுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டில் நாம் தருகிறோமா என்னும் சந்தேகம் எழுந்தது.பல்வேறு தமிழ்ச்சங்கங்களின் மூலம் தமிழை வளர்க்கிறார்கள்.தூய தமிழில் பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு அற்புதமான நூலகத்தை நிர்மாணித்திருக்கிறார்கள்.நான் அவற்றுள் பல நூலகத்துக்கும் சென்று படித்தேன்.அங்கு கிடைக்காத நூல்களே இல்லை எனலாம்.     சிங்கப்பூரின் புகழ் வாய்ந்த சென்டோசா தீவுக்குச் செல்லாமல் திரும்பி விட்டால் நீங்கள் சிங்கப்பூர்  சென்றதாக அர்த்தம் கொள்ள முடியாது.நண்பர்களுடன் நான் மேற்கொண்ட சென்டோசா தீவுப் பயணம் கேபிள் காரில் துவங்கியது.அவ்வளவு உயரத்தில் செய்த சிலிர்ப்பூட்டும் பயணத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்கும்.பறவைப் பார்வையில் சிங்கப்பூர் முழுவதையும் கண்டுகளித்ததுடன் நீந்தும் கப்பல்களை வானில் நீந்தியபடி ரசித்தேன்.தீவிலுள்ள மயிர்கூச்செரியும் “நீர் விளையாட்டுகள்” மிகவும் பிரசித்தி பெற்றவை.நல்ல நண்பர் குழாம் அமைந்ததால் ஒரு விளையாட்டையும் தவற விடவிடாமல் கொண்டாடி விட்டு அட்டகாசமான நினைவுகளுடன் கிளம்பினோம்.
எல்லாவற்றையும் விட சக மனிதநேயமே தேசத்தை மேம்படுத்தும் என நம்பும் சிங்கப்பூரின் Tagline: “Courtesy is our way of life”
இலங்கை
இலங்கையில் நடைபெற்ற ஒரு மேலாண்மைக் கருத்தரங்கில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினேன்.கருத்தரங்க ஏற்பாட்டாளர்களே கருத்தரங்கம் முடிந்தவுடன் ஒரு வாரம் இலங்கையைச் சுற்றிப்பார்க்கும் பயணம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.துபாயிலிருந்து இந்தியா செல்லும் போது பலமுறை இலங்கை வழியாகப் பயணித்ததுண்டு.அப்போது இலங்கையின் பசுமையை வானிலிருந்தே கண்டு வியந்திருக்கிறேன்.இந்த முறை நேரிலேயே கண்டு அசந்து போனேன்.கடலோரத்தில் சொகுசுப் பேருந்தில் மேற்கொண்ட பயணம் இன்றளவும் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டது.கொழும்புவில் ஆரம்பித்த எங்கள் பயணம் கண்டி,கதிர்காமம் என முக்கியமான பகுதிகளிலும்,கடலோர கிராமங்களின் வழியாகவும் நீண்டது.அதிவேகப் படகுச்சவாரிகள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாக,குதூகலமாக அமைந்தது.


சீதையை இராவணன் சிறை வைத்திருந்ததாகச் சொல்லப்படும் நுவாரா என்னும் இடத்துக்குச் சென்றோம்.காட்டு அருவியும்,அடர்ந்த மரங்களும்,பகலும்...இரவும் கேட்டுக்கொண்டே இருக்கும் பூச்சிகளின் சத்தமும்,கைதொடும் உயரத்தில் போகும் மேகங்களும் நவீன வாழ்வின் தடயங்கள் அத்தனையையும் அழித்து இயற்கையோடு கூடிய வாழ்வைச் சாத்தியமாக்கிக் கொண்டிருந்தன.அப்போது பறித்த பழங்கள்,தூய்மையான காற்று,நெருக்கடி துளியும் இல்லாத பரந்த வெளி,நிழல் விரிந்த மரஙகள்...அதியற்புதம்.இலங்கையில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று – பயணம் வருபவர்களுக்காக மிகவும் ரசனையுடன் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகள்.ஒரே மாதிரி இல்லாமல் சில நவீனத்துடனும்,சில பழமையுடனும்,சில மேற்கத்தியப்பாணியிலும்,சில மரங்களாலும்,சில கடலோரப்பகுதிகளிலும் அமைந்திருந்தது.விடுதிச் சுற்றுலாப்பயணம் வந்துள்ளோமோ என மயங்க வைத்தது.தமிழ்மொழியைக் கொண்டாடும் தமிழர்களைக் காணப் பெருமையாக இருந்தது.தமிழீழம் கோரும் இந்த எளிய மனிதர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு சிறிய ஆதரவான புன்னகையைத் தான்.அது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல,நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையின் ஒளிக்கீற்று.



பூமிப்பந்து ஒன்றே.உணவு,உடை,மொழி,கலாச்சாரத்தை வைத்து எல்லைகளை வகுத்துக்கொண்டது மனிதர்கள் தான்.எல்லை  வேறுபாடு கடந்து அந்த மனிதனிடம் பிணைப்பை உண்டாக்குபவை பயணங்கள்.உலகநாடுகளுக்குப் பயணம் போவது மெச்சத்தகுந்ததெனினும் ஒரு முறையேனும் இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணம் போய்ப் பாருங்கள்.உங்கள் பார்வை மாறும்.வரலாறு புரியும்.ஒரு சிறு உயிரினம் கூடத் தன் இடத்தை விட்டு நகர்கிறது.நாம் தான் ஒரு இடத்தை விட்டு நகர்வதற்குத் தயங்குகிறோம்.வீட்டை விட்டுக் கிளம்பிய பின் பறவையாய் மாறுங்கள்.வீட்டை மறந்து விட்டு நம் ஆளுமையை மேம்படுத்தும் பயணத்தைக் கொண்டாடுங்கள்.
கவிஞர் பிரமிளின் கவிதை ஒன்று இருக்கிறது...
“சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று                     
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.”
என் விருப்பமும் அது தான்!