Monday, 12 June 2017

மேலாண்மையின் மேன்மை

நான் M.B.A படித்திருக்கிறேன் என்கின்ற ஒரே காரணத்திற்காக இந்த கட்டுரையை எழுதத் துவங்கி விட்டேன் என்று எண்ண வேண்டாம்.மேலாண்மை (MANAGEMENT) என்பது வியாபாரத்திற்கான உத்திகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துச் செயல்படுவதல்ல.நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும், முன்னேற்றத்திற்கும் மேலாண்மையைப் பற்றிய அறிதல் இன்றியமையாதது.எல்லோரும் தான் படிக்கிறார்கள்,உழைக்கிறார்கள்.ஆனால் ஒரு சிலர் மட்டுமே வாழ்வில் உயர்நிலையைச் சென்றடைவதைப் பற்றி என்றாவது யோசித்ததுண்டா? அங்ஙனம் உச்சத்துக்குச் சென்றடைந்தவர்கள் மேலாண்மையின் மேன்மையைப் புரிந்தவர்களே ஆவர்.வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவதாகட்டும்,நேர்முகத் தேர்வுக்குச் செல்வதாகட்டும், திறம்படப் பணிபுரிவதிலாகட்டும்,வியாபரத்திலாகட்டும்,இல்லற வாழ்விலாகட்டும்,நட்பிலாகட்டும்,உறவினர்களிடமாகட்டும்,சக ஊழியர்களிடமாகட்டும்...இப்படி ஒவ்வொரு காரியத்திலும், ஒவ்வொருவரிடத்திலும் மேலாண்மையைப் பற்றிய தெளிவான அறிவுடன் அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப உத்திகளைப் பயன்படுத்தினால் வாழ்வில் நாம் எழுச்சியும்,ஏற்றமும் காண்பது மட்டுமின்றி மற்ற அனைவரிடத்திலுமிருந்து நாம் தனித்தன்மையோடு்ம் சாதனையாளராகவும் திகழமுடியும்.

மென்திறன்கள் (Soft skills):
நீங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் சரி அல்லது ஒரு சாதாரண நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் சரி மேலாண்மையின் முக்கிய கூறான மென்திறன்களைச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுத்தினால் தான் நல்ல பெயர் எடுத்து திறம்பட பணியாற்றி பணி உயர்வும் பெறமுடியும்.
எந்த ஒரு நிறுவனத் தலைவரானாலும் சரி...தன் ஊழியர்களிடம் எதிர்பார்ப்பவை ஐந்து மென்திறன்களாகும்.அவையான:

1.சிறந்த தொடர்புத் திறன்கள்(Excellent Communication Skills):


தொடர்புத் திறனைப் பற்றிப் பலபேர் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். மிகையான பேச்சின் மூலமே ஒருவரைக் கவர முடியும் என்று நினைக்கிறார்கள்.உண்மையில் மிகையான பேச்சு அடுத்தவரைச் சலிப்படையவே செய்யும்.தேவையான அளவு பேசுவதே சாலச் சிறந்தது.மேலாண்மை இதை "KISS" என்று சுவாரஸ்யப்படுத்துகிறது.அதாவது Keep it short and sweet.இயற்கை நமக்கு இரண்டு காதுகளையும்,ஒரே வாயையும் கொடுத்திருப்பது அதிகமாகக் கேட்கவும்,குறைவாகப் பேசவுமே.
பேராசிரியர்களும்,விற்பனைப் பிரதிநிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல, பேராசிரியர்கள் வகுப்பறையில் ஒரு facilitator (செயலாக்குநர்) ஆக மட்டுமே இருந்து மாணவர்களை பேச வைக்கும் கல்வி முறையே சிறந்தது.அதே போல் விற்பனைப் பிரதிநிதிகளும் கூட தங்கள் பொருள் அல்லது சேவை பற்றி மட்டுமே பேசி போரடிக்கமால் வாடிக்கையாளரைப் பேச வைப்பதன் மூலமே வெற்றியை ருசிக்க முடியும்.ஒருவர் பேசுவதைப் பொறுமையாகக் கூர்ந்து கவனிப்பதன் மூலமே அவரதுநன்மதிப்பைப் பெறமுடியும்,தொடர்புத் திறன் என்பது நன்றாகப் பேசுவது மட்டுமின்றி நாம் பேசுவது அடுத்தவருக்குப் புரியும்படி பேசுவதாகும்.இன்னும் இருக்கிறது.புரியும்படி பேசுவது மட்டுமின்றி அடுத்தவர் நம் கருத்தை ஒத்துக்கொள்ளும்படி நம் பேச்சு செம்மையாக இருக்க வேண்டும்.இன்னும் கூட இருக்கிறது.நம் கருத்தைக் ஒத்துக் கொள்வது மட்டுமின்றி கேட்பவர் அதைச் செயல்படுத்தியும் விட்டால் நாம் சிறந்த தொடர்புத் திறனாளர் என மார்தட்டிக் கொள்ளலாம்.

2.பழகும் தன்மை (Effective interpersonal relations):


சிலர் இருக்கிறார்கள்...நான் இப்படித்தான்...இதுதான் என் கேரக்டர்,பிடித்தவர் பழகுங்கள்,மற்றவர் தள்ளி இருங்கள் என்னும் மனநிலையுடன் இருப்பார்கள்.இவர்களால் ஒரு அளவுக்கு மேல் மற்றவர்களிடம் அன்பு பாராட்ட முடியாது.யாராலும் நெருங்க முடியாது என்று இருப்பவரை நம் நட்பு வட்டத்திற்குள் கொண்டு வருவதுதானே சாமர்த்தியம்,அதுதானே சவால்.அதுதானே மகிழ்ச்சி.நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன் திறமையுள்ளவர்களை விட அடுத்தவர்களிடம் இனிமையாகப் பேசிப் பழகும் தன்மை கொண்டவர்களே மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணமாக என் KHSS பள்ளித் தோழமைகள் அனைவரையும்,குடும்பத்தைப் பொறுத்தவரை என் அப்பா,தம்பி மற்றும் சித்தப்பா மூவரையும் குறிப்பிடுவேன்.இறுதியாக ஒன்று: உங்களுக்கு ஆயிரம் நண்பர்களா? மிகவும் குறைவு.ஒரே ஒரு எதிரியாமிகவும் அதிகம்.

3.துணிச்சலான,துல்லியமான முடிவெடுக்கும் ஆற்றல்:-
(Bold and Accurate decision Making)


வாழ்க்கை தொடர்ச்சியாக நமக்குப் பல்வேறு விதமான பிரச்னைகளை அள்ளி வழங்குவதுடன் அதற்கான முடிவுகளை எடுக்கும்படி ஒவ்வொரு கட்டத்திலும் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது.இந்த முடிவெடுத்தல் என்பது இன்று எந்த உடை அணியலாம் என்பதில் துவங்கி வாழ்வையே திசை திருப்பக்கூடிய முக்கியமான முடிவுகள் வரை அணிவகுக்கிறது. முடிவெடுத்தல் என்பது ஒரு கலை.பிரச்னையின் ஆணிவேரை சரியாகப் புரிந்திருந்தால் மட்டுமே சரியான முடிவெடுக்க முடியும்.படிப்பானாலும், வேலையானாலும், தொழிலானாலும்,திருமணமானாலும் நமக்கு Choice இருக்கிறது.அவற்றுள் நாம் சரியாக தேர்வு செய்கிறோமா என்பதே கேள்வி.முடிவெடுத்தலில் அதிமுக்கியமானது என்னவென்றால் முடிவெடுப்பதற்கு முன்னால் நாம் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் சிந்திக்கலாம்,சந்தேகம் கூட அடையலாம்.ஆனால் முடிவெடுத்த பின் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.அது எதுவானாலும் சரி.ஏனென்றால் நாம் தீர்க்கமாக யோசித்தே முடிவெடுத்திருக்கிறோம்.அதை விடுத்து நாம் எடுத்த முடிவு சரிதானா என்று குழம்பினால் அவ்வளவுதான்.

முடிவெடுத்தலின் போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை:
v  மிகவும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.

v  நமக்கு நேர்மாறாக கருத்து கூறுபவர்கள் சொல்லும் காரணங்களையும் செவி கொடுத்து கேட்பது நலம்.

v  உள்ளுணர்வு கூறுவதும் மிக முக்கியம்.

v நாம் எடுக்கும் முடிவை அமல்படுத்தப்போகும் குழுவினரின் திறமையும், குணமும் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

v நாம் எடுக்கும் முடிவினால் நேரப்போகும் அத்தனை பயன்களையும், தீமைகளையும் கவனத்தில் கொண்டு அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

4.நேர மேலாண்மை(Time Management):


நீங்கள்,நான்,ட்ரம்ப்,பில்கேட்ஸ்,பக்கத்து வீட்டுக்காரர் இத்தனைப் பேருக்கும் பொதுவான ஓர் எண் உள்ளது.அது 86400.ஒரு நாளுக்கு அத்தனை விநாடிகள்.இது எல்லோருக்கும் சமமானது தானே.24 மணி நேரத்தில் ஒரு மனிதர் நாட்டையே ஆள்கிறார்.இன்னொருவர் உலகெங்கிலும் கிளைகள் பரப்பியுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தையே நிர்வகிக்கிறார் என்றால் நாம் நேரமில்லை என்று கூறுவது வெறும் excuse  மட்டுமே என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? உங்கள் விடுமுறையில் ஒரே ஒரு நாள் வீட்டில் மின்சாரத்தை நிறுத்தி விடுங்கள்,கைப்பேசியையும்  கையில் எடுக்காதீர்கள்,நோ டிவி,நோ ஹோம் தியேட்டர்,நோ லேப்டாப்,நோ வாட்ஸ் அப்,நோ பேஸ்புக்,நோ எஸ்.எம்.எஸ். என்ன ஆகும்? நீங்கள் பல் நாட்களாக செய்யத் திட்டமிட்டிருந்த பல பணிகள் உங்கள் நினைவிற்கு வரும்.பக்கத்துத் தெருவில் இருக்கும் உங்கள் நெருங்கிய நண்பர் சந்திப்பு,வயதான அம்மாவுடன் சூடான ஒரு காஃபி,பிள்ளைகளுடன் அரட்டை,தோட்டத்தில் கொஞ்சம் வேலை,வியாபார மேம்பாட்டிற்கான புதிய திட்டங்களின் உருவாக்கம் என எல்லாமே சாத்தியப்படும்.இப்பொழுது தெரிகிறதா?நாம் நேரத்தை எப்படி எல்லாம் வீணாக்குகிறோம் என்று? நேரத்தின் மதிப்பு நபருக்கு நபர் வேறுபடும்,உதாரணமாக ஒரு  நிறுவனத்தின் மேலாளர் -மெயில் பார்ப்பது,பதில் அனுப்புவது,தமக்கு வந்த தபால்களைப் பிரித்துப் படிப்பது எனத் தங்களுக்கு கீழ்நிலையில் உள்ளோரின் வேலையைச் செய்வது முற்றிலும் தவறானது.They are not meant for that purpose.நேரத்தைத் தெளிவான திட்டமிடலுடன் செலவளிப்போர் எவரும் தோற்றதாகச் சரித்திரமில்லை.

5.தலைமைத்துவம்(Leadership):


கல்விச் சான்றிதழும்,அனுபவமும் இருப்பவர் எவராயினும் ஒரு நிறுவனத்தில் மேலாளராக முடியும்,ஆனால் தலைவராக வேண்டுமெனில் தொழிலாளிகள் இதயத்தில் இடம் பிடித்தால் மட்டுமே சாத்தியமாகும்.
தலைமைத்துவத்துக்குத் தேவையான எட்டு குணங்கள்:
ஆர்வம்:
எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்குத் தேவையான ஒன்றாகும்.தொடர்ச்சியான கற்றல், செயல்களைச் செய்தல் போன்ற பலவற்றுக்கு ஆர்வம் என்ற பண்பு தேவை.

புதுமை:
புதுமையாகச் செய்வதில் நாட்டம்,மாறுபட்டு சிந்திக்கும் திறன் ஆகியவை தலைமைத்துவத்துக்கு தேவையான குணங்களாகும்.

நற்குணம்
நற்பண்பு,நன்னடத்தை,ஒழுக்கம்,போன்ற பண்புகள் மிகவும் அவசியம்.

துணிவு
எந்தச்  செயலைச் செய்து முடிக்கவும் தைரியம் மிக முக்கியமானது. இடையில் ஏதாவது தடைகள் ஏற்பட்டாலும்  எடுத்துக் கொண்ட செயலை செய்து முடிக்க துணிவு என்ற பண்பு தேவைப்படுகிறது.

நம்பிக்கையும்,பிடிமானமும்:
நமது குறிக்கோள்,செயல்கள் போன்ற பலவற்றிலும் நம்பிக்கையும், பிடிமானமும் வேண்டும்.

வசீகரித்தல்:
பிறரை வசீகரிக்கும் ஆற்றல் என்பது முக அழகை சார்ந்ததல்ல.அது பேச்சின் மூலமாகவும் இருக்கலாம்,நடவடிக்கைகளின் மூலமாகவும் இருக்கலாம்,நற்குணங்களின் மூலமாகவும் இருக்கலாம்.

ஆற்றல்:
நிர்வாக ஆற்றல்,செயலாற்றல்,பேச்சாற்றல், போன்ற பல ஆற்றல்கள் தலைமைப்பண்பிலுள்ளோருக்கு அத்தியாவசியம்.

இயல்பறிவு
பொதுபுத்தி,புத்திசாலித்தனம்,இயல்பறிவு,அறிவுக்கூர்மை ஆகியன லைவருக்கு இருக்க வேண்டியது கட்டாயம்.

புத்தகங்கள்:


தமிழில் வெளிவந்திருக்கும் பெரும்பான்மையான மேலாண்மைப் புத்தகங்கள் ஆங்கில மேலாண்மைப் புத்தகங்களின் அடியொற்றியவையே.துரதிர்ஷ்டவசமாக தரமான மேலாண்மைப் புத்தகங்கள் தமிழில் காணக்கிடைக்கவில்லை.ஆகையால் ஆங்கிலத்தில் என்னை மிகவும் கவர்ந்த பத்து மேலாண்மைப் புத்தகங்கள் உங்கள் பார்வைக்கு:

ØHow to win friends and influence people? - Dale Carnegie
ØThe Magic of Thinking big - David Schwartz
ØRich Dad Poor Dad - Robert T.Kiyosaki
ØThe Secret - Rhonda Byrne
ØEat that frog - Brian Tracy
ØHow to get whatever you want? -  Kop Meyer
ØThe forty eight laws of Power - Robert Greene
ØTough times never last but tough people do - Robert.H.Schuller
ØThe tipping point - Malcolm Gladwell

மேற்கூறிய புத்தகங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டதாகும். அவற்றை ஆழ்ந்து படிப்பதன் மூலம் பத்து விதமான மேலாண்மை உத்திகளின் ஞானம் பெறலாம். அவை முறையே- பழகும் தன்மை, உயர்வாகச் சிந்திப்பதன் பயன்,நிதி நிர்வாகம்,நேர்மறைச் சிந்தனை, வாழ்வின் ரகசியம்,நேர நிர்வாகம்,வேண்டியது எதுவானாலும் அதை அடைவது எப்படி?,எந்த சூழ்நிலையையும் சமாளித்தல், உறுதியான மனதைக் கொள்ளல் மற்றும் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்தல்.

மேலாண்மைத் திறன்கள்:
சிறந்த மேலாண்மைத் திறன்களாக நான் கருதுபவை ஏழு. “I” என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும்.அவைகளைப் பற்றி ஓர் பார்வை.

1.INSIGHT(நுண்ணறிவு)
எந்த விஷயத்தையும் ஆழ்ந்தறிந்து உண்மையான காரணத்தைப் புரிந்து கொள்ளுதலே நுண்ணறிவாகும்.உதாரணமாக,கணவனின் கவனிப்பைப் பெற மனைவி தனக்கு தலை வலிக்கிறது என்று கூறினால் அதனைப் புரிந்து கொண்டு கணவன் தர வேண்டியது பூக்களே…..”அனாசின்மாத்திரை அல்ல.

2.INITIATIVE (முயற்சி)
மனிதன் தனது முயற்சியால் மண்ணில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளான்.அந்த வெற்றிகளின் வழிக்காட்டலில் மனித சமுதாயம் நல்வாழ்க்கை வாழ்கிறது.தமிழில் தோன்றிய அறநூல்கள் யாவும் முயற்சியின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளன.திருக்குறள்முயற்சி  திருவினை ஆக்கும்என்று தெரிவித்துள்ளது.ஆத்திச்சூடி "ஊக்கமது கைவிடேல்" என்று கூறியுள்ளது.எந்தச் செயலையும் இறுதிவரை முயன்று செய்யவேண்டும்.ஏனெனில் முடியாது என்று நாம் முடிவு செய்த செயல் கூட நல்ல முறையில் நம்மால்  செய்யப்படக் கூடும்.

3.INSPIRATION(உத்வேகம்)
“Action speak louder than words” என்னும் பொன்மொழிக்கேற்ப பேசிக் கொண்டே இருப்பதை விடக் காரியமாற்றுதலே அடுத்தவரைத் தன்பால் ஈர்க்கும் சக்தியாகும்.என் நண்பர் Prof.சாரதி வகுப்பெடுக்கும் முறையை கவனித்து உத்வேகம் பெற்றுத் தான் நான் கல்வித்துறையையே தேர்ந்தெடுத்தேன்.

4.INVOLVEMENT(ஈடுபாடு)
எந்தக் காரியமானாலும் அதில் நம்முடைய நூறு சதவிகித அர்ப்பணிப்பைக் கொடுத்தால் வெற்றி நிச்சயம்.தந்தை பெரியார்,நாராயணமூர்த்தி,இளையராஜா,சச்சின் என எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களது ரகசியம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அவர்களது ஈடுபாடுதான் காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

5.IMPROVISATION.(மேம்பாடு)
நாம் எந்த வேலையில் இருந்தாலும்,என்ன தொழில் செய்து கொண்டிருந்தாலும் நம்மை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால்,புதுப்பித்துக் கொள்ளாவிட்டால் தேக்கநிலை ஏற்பட்டுத் தொல்வி அடைய நேரிடும்.கற்றது கடுகளவு என்பதை உணர்ந்து நாம் எப்பொழுதும் கற்றுக் கொள்பவராகவும் அறிவைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பவராகவும் விளங்க வேண்டும்.நம் துறை சார்ந்த நூல்களைப் படித்தல் மற்றும் பயிற்சி மையங்களின் மூலம் நம்மைக் கூர்தீட்டிக் கொள்ளுதல் அவசியம்.

6.INDIVIDUALITY(தனித்துவம்)
உலகின் மக்கள் தொகை எட்டு பில்லியனைத் தாண்டினாலும், உங்களைப் போன்றே இன்னொருவரை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.இயற்கையின் படைப்பில் தனித்தன்மையோடு விளங்குபவர் நீங்கள்.ஒருவரைப் பார்த்து உத்வேகம் கொள்ளலாம்.ஆனால் எவரையும் முன்மாதிரியாகக் கொள்ளத் தேவையில்லை.உங்களது முன்மாதிரி நீங்கள் ஒருவரே.SWOT ஆய்வின் மூலம் உங்களின் பலம்,பலவீனம்,வாய்ப்பு,அச்சுறுத்தல் ஆகியவற்றை அறிந்து கொண்டு எந்தச் செயலில் இறங்கினாலும் வெற்றி நிச்சயம்.

7.IMPLEMENTATION(செயல்படுத்துதல்)
சீனாவில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாக்மா படிப்பதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியும் இடம் கிடைக்கவில்லை.முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு (KFC உட்பட) வேலைக்காக விண்ணப்பம் அளித்தும் வேலை கிடைக்கவில்லை.ஆனால் அவர் தன் செயல்படுத்துதலை மட்டும் நிறுத்தவேயில்லை.இறுதியாக 1995ல் இணையப்புரட்சி ஆரம்பித்த காலத்தில் "அலிபாபா" என்னும் இணையவர்த்தகத்தைத் துவங்கி இன்று சீனாவில் மிகப்பெரிய பணக்காரராக விளங்குகிறார். ஆக…. அறிவையும், ஆற்றலையும் சேகரித்து வைக்கும் கலைக்களஞ்சியமாக நாம் இல்லாமல் அவற்றைச் செயல்படுத்துவதே மேலாண்மையின் முக்கிய நோக்கமாகும்.

மேலாண்மை வகைகள்:
மேலாண்மையில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் முக்கியமானவையாக ஐந்தினைக் குறிப்பிடலாம்.அவற்றைப் பற்றிக்  காண்போம்.

1.சந்தைப்படுத்தல் மேலாண்மை(Marketing Management)
மிகவும் முக்கியமானத் துறையான சந்தைப்படுத்தலானது ஒரு நிறுவனத்திற்குத் தேவையான வாடிக்கையாளரை உருவாக்குவதே ஆகும்.
அதற்கான வழிகள்:
§  வாடிக்கையாளரின் தேவையை அறிதல்.
§  அதற்கேற்ப பொருளையும்,சேவையையும் வடிவமைத்தல்.
§  தொடர்புச் சாதனங்கள் மூலம் வாடிக்கையாளருக்குத் தேவையான இடத்தில்,நேரத்தில் கிடைக்குமாறு செய்தல்.
§  வாடிக்கையாளரின் வாங்கும் திறன் மற்றும் வியாபாரப் போட்டி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விலையை நிர்ணயித்தல்
§  தேவையான சேவையின் மூலம் வாடிக்கையாளரின் சந்தோஷத்தை உறுதி செய்தல்.

2.மனிதவள மேலாண்மை(Human Resource Management)


மனிதவளத்தை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனமே முன்னேற்றம் காணும்.

தேவையான நடவடிக்கைகள்:

Ø  நிறுவனத்திற்கு எவ்வளவு ஊழியர்கள் தேவை என்பதைக் கண்டறிதல்
Ø  ஆட்சேர்ப்பு’, ’தேர்வு’ மற்றும் வாய்ப்பளிப்புஆகிய காரியங்களைச் செய்தல்.
Ø  ஊழியர்களை மதிப்பீடு செய்து தேவையான கட்டுப்பாடுகளை விதித்தல்.
Ø  ஊழியர்களை ஊக்குவித்து சரியான ஊதியம் வழங்குதல்.

3.நிதி மேலாண்மை(Finance Management)
ஒரு நிறுவனத்திற்குத்  தேவையான அத்தியாவசிய இரத்த ஓட்டமேநிதிதான்.அதனைச் சரியாக நிர்வகிப்பதன் மூலமே நிறுவனம் ஏற்றம் பெறும்.
செயல்பாடுகள்:
v  நிறுவனத்திற்குத் தேவையான நிதியை மதிப்பிட்டறிதல்
v  திரட்டப்பட்ட நிதியைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துதல்.
v  நிதி நிர்வாகத்தின் திட்டமிடலும்,கட்டுப்பாடும் லாபத்தைக் குறிவைத்தே செய்யப்படுவதாகும்.
v நிறுவனத்தின் மதிப்பை அதிகபட்சமாக உயர்த்துவதே நிதி நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாகும்.

4.விநியோக சங்கிலி மேலாண்மை(Supply Chain Management)
மூலப்பொருளைக் கொள்முதல் செய்வதில் துவங்கி பொருளாக வடிவமைத்து,கடைசிப் பயனாளிக்குக் கொண்டு சேர்ப்பது வரையிலுள்ள அனைத்தும் விநியோக சங்கிலி மேலாண்மை ஆகும்.
விநியோக சங்கிலி மேலாண்மையானது தேவையையும்-வழங்கலையும் நிர்வகித்தல்,மூலப்பொருட்களைப் பெறுதல்,உற்பத்தி,கிடங்கு மேலாண்மை,சரக்கு மேலாண்மை,ஒழுங்கு மேலாண்மை மற்றும் விநியோக மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.

5.தயாரிப்பு மேலாண்மை(Production Management)
தயாரிப்பு மேலாண்மையானது நிலம்,தொழிலாளர்,மற்றும் மூலதனம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பொருளை உற்பத்தி செய்வதாகும்.அதன் குறிக்கோளென்பது-மனிதகுலத்திற்குத் தேவையான பொருள் மற்றும் சேவையை சரியான அளவில்,அதற்கான இடத்தில்,தேவையான நேரத்தில்,நியாயமான விலையில் வழங்குவதாகும்.


மேலாண்மையில் வெற்றியென்பது-உலக மாறுதலுக்கேற்ப வேகமாக விஷயங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப மாறிக் கொள்வதாகும்.