Wednesday, 15 March 2017

வீழ்வேனென்று நினைத்தாயோ?

1994 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தஞ்சையிலிருந்து சிதம்பரம் பயணிப்பதற்காகத் தஞ்சை ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். சிதம்பரம் செல்லும் வரை வாசிப்பதற்கு ஏதேனும்  புத்தகம் வாங்கலாமென்று  அங்கேயே இருக்கும் புத்தகக்கடைக்குச் சென்று பார்வையாலேயே அனைத்து நூல்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தேன்.அதுவரை ஒரு பாடலாசிரியராக மட்டுமே நான் அறிந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்இதுவரை நான்புத்தகம் என் கண்ணில் பட்டது.அது அவருடைய சுயசரிதை.உலகத்திலேயே 28 வயதில் சுயசரிதை எழுதியவர் அவர் ஒருவராகத் தான் இருப்பார் என நினைக்கிறேன்.சரி,இந்தப் புத்தகம் படிக்கலாமென்று வாங்கினேன்.ஒரு அற்புதமான புத்தகத்தை வாங்கிக் கொண்டிருக்கிறேன் என அப்போது எனக்குத் தெரியவில்லை.ரயில் வரவும் ஏறி அமர்ந்து புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திருப்பினேன்.இந்தியாவிலேயே - ஏழு முறை தேசிய விருது வென்ற ஒரே பாடலாசிரியரான அவர் தான் முன்னேறுவதற்குப் பட்ட ரணங்களை எனக்குள்ளும் கடத்தினார்.

என்னைத் தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த தென்றல் அல்ல
நுரையீரல்களைக் கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும் கந்தகக் காற்று
இருந்தும் சுடச்சுடவே சுவாசித்து வந்தேன்

என் தலைக்கு மேல் பருந்துகள் எப்போதும்
பறந்து கொண்டிருந்ததால்-நான்
செத்து விடவில்லை என்பதை
நித்தம் நித்தம் நிரூபிக்க வேண்டியதாயிற்று

என் நிர்வாணத்தை ஒரு கையால்
மறைத்துக் கொண்டு என் அடுத்த கையால்
ஆடை நெய்து அணிந்து கொண்டேன்.”

இந்த விதை தன் மேல் கிடந்த
பாறைகளை முட்டி முட்டியே
முளைத்து விட்டது

இந்தப் புத்தகம் தமிழ் மேல் தீராக் காதலை ஏற்படுத்தியது மட்டுமின்றி வாழ்வில் எந்தப் பிரச்னையைச் சந்தித்தாலும் கலங்காமல் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும், என்னுள் விதைத்தது.கவிஞனே! நீ இருக்கும் திசை நோக்கித் தெரிவிக்கிறேன் - எனது கோடி நன்றியினை.


என்னளவுக்குப் பிரச்னைகளை எவரேனும் சந்தித்திருப்பார்களா எனும் சந்தேகம் எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு.தைரியத்துடன் எதிர்கொள்வதாலேயே என்னால் அனைத்தையும் சமாளிக்க முடிகிறது என்பதை அவையடக்கத்துடனும்,சற்றே கர்வத்துடனும் தெரிவித்துக் கொள்வதுடன்என் அனுபவங்கள் மூலம் நான் கற்றுக் கொண்டதைதன்னம்பிக்கையுடன் முன்னேற பத்து வழிகள்என்னும் தலைப்பில் தருகிறேன்.

தன்னம்பிக்கையுடன் முன்னேற பத்து வழிகள்:

1.யாரோடும் உன்னை ஒப்பிடாதே எனக் கூறுவோர் உண்டு.மிகத் தவறு. நம் துறையில் நம்மை விட உயர்வில் இருக்கும் ஒருவருடன் நம்மை ஒப்பிட வேண்டும்.அப்போதுதான் அவர் செய்யும் எதை நாம் செய்யத் தவறுகிறோம் என்பது தெரிய வரும்.நமக்கும் அவருக்குமான இடைவெளியை இட்டு நிரப்ப வழி பிறக்கும்.இதை ஆங்கிலத்தில் “Bench Marking” என்பர்.

2.எந்த மனிதனின் வாழ்வை உற்று நோக்கினாலும் வெற்றியை விடத் தோல்வியையே அதிகம் ருசித்திருப்பான்.ஆகவே தோல்வியென்பது உன்னை எரிக்க வரும் நெருப்புப் பந்தல்ல….நீ தூக்கிப் போட்டு விளையாட வேண்டிய கூடைப்பந்து.அதற்கு முக்கியத் தேவை துணிச்சல்.

3.நம்மை அவமானப்படுத்தியவர்களையும்,துரோகம் இழைத்தவர்களையும் பழி வாங்கியே தீர வேண்டும்.எப்படி? அவர்கள் முன் வாழ்ந்து காட்டி.


4.அவநம்பிக்கையாளனையும், எதிர்மறைச் சிந்தனையாளனையும் ஒரு போதும் நண்பனாக்கிக் கொள்ளாதே.உன் அறிவும் அஸ்தமமாகி விடும்.

5.மனதளவில் சிங்கமாய் இருஆனால் நரியின் தந்திரத்தை மறந்து விடாதே...ஏனெனில் நம்மைச் சுற்றி மனிதன் என்னும் போர்வையில் உலவிக் கொண்டிருக்கின்றன - பல மிருகங்கள்.

6.கவனத்தில்கொள்:
அச்சம்-முயற்சியின் அடைப்புக்குறி.
தயக்கம்-தரித்திரத்தின் நிழல்.

7.நீ சரியான பாதையிலிருந்தாலும் தோல்வியைச் சந்திப்பாய்-அங்கேயே தங்கி விட நேர்ந்தால்.ஓரிடத்தில் எப்போதும் தங்கி விடுபவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் சரிந்து விடுவார்கள்.பறந்து திரிகிறவர்கள், பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள்.

8.நிறைய நூல்கள்படி.Keep on updating yourself. There is no substitute.

9.வெற்றி பெற முதலீட்டை விடஎன்னாலும் முடியும்என்கிற தன்னம்பிக்கை மிக்க மனம் மிகவும் அவசியம்.

10.வாழ்வில் முன்னேற ௐர் இலக்கு வேண்டும்.அந்த இலக்கை அடைய தெளிவான திட்டங்கள் வேண்டும்.எத்தகைய சோதனைகள் வந்தாலும் பரவாயில்லை; எப்போதும் உயர்ந்த இலக்குகளையே குறி வையுங்கள்.கண்டிப்பாக ஓர் நாள் வானம் வசப்படும்.

சவாலும்,எதிர்ப்பும்:
“You can’t discover new Islands unless you have the courage to lose sight of the shore”
ஒரு புதிய தீவைக் கணடுபிடிக்கக் ‘கொலம்பஸ்’ போல கப்பலில் ஒரு சாகசப் பயணம் துவக்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.ஒரு கட்டத்தில் கரை நம் கண்களுக்குத் தெரியாமல் போய் சுற்றிலும் நீராகக் காட்சியளிக்கும் தானே!அதற்குப் பயந்தால் புது உலகைக் காண முடியுமா?வாழ்வதே கூட அதே போல் ஓர் சவால்தான்.ஒப்புக்கொள்கிறீர்களா?மனித குலம் அடர்ந்த காடுகளில் தன் வாழ்வைத் தொடங்கியது.ஒவ்வொரு மணித்துளியும் கொடிய விலங்குகள்,பயங்கரமான விஷப்பூச்சிகள்,பாம்புகள் ஆகியவற்றுடன் போராடியல்லவா மனிதன் ஜெயித்துக் காட்டினான்.மழை,இடி,வெள்ளம் வேறு நம்மைப் பாடாய்ப்படுத்துகிறது.நாம் வாழ்வதே இவற்றையெல்லாம் முறியடித்துத்தான்.பிரச்னையைக் கண்டு பதறி ஓடும் கோழைத்தனத்தை விட போராடும் துணிவும்,தெளிவுமே நம்மை உயிர் வாழ வைக்கிறது.கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது – கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.அவ்வாறே வாழ்வின் எந்தப் பிரச்னையும் நம்மை பாதிக்கவே முடியாது – நாம் அனுமதித்தால் தவிர.வாழ்விலிருந்து விலகி ஓடும் மனிதர்களை விட எதிர்த்து நின்று போராடும் மனிதர்கள் தான் உன்னதமான இடம் பெறுகிறார்கள்.


“Ships are safe at harbor but they are not meant for that purpose”
ஒரு கப்பல் கடலுக்குள் போவதில் எவ்வளவு கஷ்டங்கள் காத்திருக்கின்றன. புயலும்,சூறாவளியும் அடிக்கலாம்,பாறையில் மோதிடைட்டானிக் மாதிரி உடைந்து போகலாம்,திமிங்கிலங்கள்,சுறாமீன்களிடம் சிக்கிக் கவிழ நேரிடலாம் இப்படி எண்ணற்ற ஆபத்துகள் கடலில் காத்திருக்கின்றன.கம்பீரமாகக் கரையில் நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டால் அழிவில்லை தானே,ஆனால் அதற்காகவா கப்பல் கட்டப்பட்டது?கடலின் ஆபத்துக்களை எதிர்க்கொண்டு பயணிப்பது தானே அதன் வேலை.அதே போல்  தடைகளை விலக்கி ஜெயிக்கத்தான் நாம் மனிதப்பிறவி எடுத்துள்ளோம்.எதிர்ப்பற்ற வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள்.சாதகமான விஷயங்கள் நம்மைச் சரி செய்வதை விட பாதகமான விஷயங்களே நம்மை உறுதி செய்து பாதுகாக்கின்றன.ஆகவே எதிர்ப்பைக் கொண்டாடுங்கள்.அதனுடன் வாழப் பழகுங்கள்.

வித்தகக்கவிஞர் பா.விஜய் என் இனிய நண்பர். குடும்பத்துடன் துபாய் வந்தபோது தங்குவதற்கும்,சுற்றிப் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்தேன்.துபாய் Hello 89.5 FM ல் இருந்து அழைப்பு வரவே அங்கு சென்றோம்.கேள்வி நேரம் தொடங்கியது. எங்கள் நட்பு பற்றி வானொலியில் பா.விஜய் பேசியது என் பேறு.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் RJ ஹரி, பா.விஜய் அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்டார்.அவற்றுள் ஒன்று : நீங்கள் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களும் சரியாகப் போகவில்லையே உங்களுக்கு வருத்தமில்லையா என வினவினார். Autograph திரைப்படத்தில் தன்னம்பிக்கைப் பாடலை எழுதிய நானா கலங்குவேன்? என் முயற்சியையும்,பயிற்சியையும் அதிகரிக்கவே செய்வேன் என்று கூறினார்.சிலிர்த்துப் போனேன்.ஆம்! தோல்வி என்பது நம்மைத் தூங்க வைக்கப் பாடும் தாலாட்டு அல்ல.நாம் நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம்.இருவரும் காரில் திரும்பும் போது பா.விஜய் அவர்களுக்கு தேசிய விருது வென்று கொடுத்த- ஒரே பாடலின் மூலம் அவரை உச்சாணிக் கொம்பில் ஏற்றிய - இன்றளவும் பல பள்ளிகளிலும் பாடப்படுகிற - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமேபாடலை ஒலிபரப்பினார்கள்.

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே மனமே நீ மாறி விடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

என்னும் வரிகள் என்னை மட்டுமல்ல….. தமிழகத்தையே நிமிரச் செய்தவை அல்லவா?



வெற்றியின் ரகசியம்:
“The Secret” என்கிற ஆங்கிலப் புத்தகத்தைக் கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள். ”Law of Attraction” பற்றி அட்டகாசமாக விளக்கியிருப்பார்கள்.எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால்நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்என்னும் பகவத் கீதையின் சாராம்சம் தான்.இதை மனதில் நிறுத்தி Positive ஆன எண்ணங்களையே வளர்த்துக் கொள்ள வேண்டும்.நம் நண்பர்களும் அவ்வாறே இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் நம் வாழ்வில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள். உற்சாகமான, புத்துணர்ச்சியான மனநிலையுடன் இருக்கும் நண்பர்களுடன் இருக்கும் போது நாமும் அவ்வாறே செயல்படுவோம்.

-எவ்வளவோ துயரங்களைச் சந்தித்திருந்தாலும் என் நண்பர் - கவிஞர் ரவிராஜ் ர் Optimistic மனிதர். அவருடன் பேசும் போது அவருடைய உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

-எதிர்மறைச் சிந்தனைத் துளியும் இல்லாமல் அட்டகாசமாகப் பேசக்கூடியவர் ஆருயிர் நண்பர் பேராசிரியர் Dr.சாரதி.

-எப்போது பிரச்னையை எதிர்கொள்ள நேரிட்டாலும் ஒரு கை பாத்துருவோம்டாஎன்பான் பள்ளித் தோழன் கரிகாலன்.

-பேசும் நேரமெல்லாம் மனம் விட்டு சிரித்துக்கொண்டே பேச வைப்பதில் வல்லவன் கல்லூரித் தோழன் மணி.

இவ்வாறு தன்னம்பிக்கை மிக்க நண்பர்களே என்னைச் சுற்றி இருக்க வேண்டும் என்பதில் சற்றுக் கவனமாக இருக்கிறேன்.



பிறர் வாடப் பலசெயல்கள் செய்து-நரைகூடிக்
 கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
 பல வேடிக்கை மனிதரைப் போல-நான்
 வீழ்வேனென்று நினைத்தாயோ
                               -ரௌத்திரமாகிறார் பாரதியார்.

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே
                               -சொல்கிறார் விவேகானந்தர்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? எத்தகைய            விமர்சனத்தையும் தூக்கி எறி
                               -கூறுகிறார் கண்ணதாசன்.
சுடும் வரை நெருப்பு,
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மனிதன்,
நீ மனிதன்
                               -என்கிறார் வைரமுத்து.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்
எப்போதுமே மண்டியிடுவது இல்லை
                               -அறிவுறுத்துகிறார் டாக்டர் அப்துல்கலாம்.


நேர்மையாக உழைத்து முன்னேறியவர்களின் வார்த்தைகள். சரியாக இல்லாமல் போய் விடுமா என்ன? நண்பர்களே விடியலுக்கு முன் இருள் சற்று அதிகமாகத் தான் இருக்கும்…. ஆகவே உங்களை நிலைகுலையச் செய்யும் துன்பங்கள் வந்தாலும் நம்பிக்கை தளரவிடாதீர்கள்.இன்று வரும் துன்பங்களைக் கண்டு ஓடினால் நாளை வரும் இன்பங்களை யார் வரவேற்பது?