Monday, 16 January 2017

துபாய்!

உலகின் எத்தனையோ நாடுகளுக்கு நான் பயணம்  செய்திருந்தாலும்-இந்தியாவுக்கு அடுத்தபடியாக என் மனதிற்கு மிகவும் நெருக்கமான நாடென்றால் அது ஐக்கிய அரபு நாடுகளின் சிகரமாக விளங்கும் துபாய்.அரபு நாடுகள் எதற்குச் சென்றாலும் அதற்கு நம்மூர்க்காரர்கள் பலரும் சொல்வது,"துபாய்க்குப் போயிருக்கிறார்" என்பது தான்.துபாய் என்பது நம்மூரில் அவ்வளவு பிரபலம்.துபாயில் நான் வசித்த பதினைந்து வருட காலங்களில்,என் நண்பர்கள் என்னிடம் துபாயில் எங்கே? அபுதாபியா? பஹ்ரைனா? என கிண்டலடிப்பர்வடிவேலு நகைச்சுவையைப் போல.தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் UAE என்பது அபுதாபி,துபாய்,ஷார்ஜா,அஜ்மான்,உம்-அல்-குவைன்,ராஸ்-அல்-கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய  ஏழு எமிரேட்களை உள்ளடக்கியது.அபுதாபி தலைநகரமாக இருப்பனும் சுற்றுலா வருபவர்களைக் கவர்வதில் முதலிடம் துபாய்க்கே!

துபாய் பற்றிய சில தவறான கண்ணோட்டம்

1.துபாய் எண்ணெய் வளமுள்ள நாடு
உண்மை என்னவெனில் அபுதாபி மற்றும் UAE யின் வடப்பகுதி தான் எண்ணெய் வளமுள்ள பகுதியாகும்.UAE யின் எண்ணெய் வளத்தில் துபாயின் பங்கு என்பது மிகக் குறைவானதே.

2.எங்கெங்கு நோக்கினும் அரபு நாட்டினராகவே இருப்பர்
துபாயில் மூன்றுக்கு இரண்டு பேர் வெளிநாட்டினர்தான்.இந்த அதிசயத்தை உலகில் வேறு எந்த நாட்டிலாவது கேள்விப்பட முடியுமா?அதில்
பெரும்பாலானவர் இந்தியர்கள்.அதிலும் குறிப்பாக மலையாளிகள்.Dubai is a Multinational,Multicultural and Multilingual country.துபாயில் 203 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா?

3.குற்றங்களுக்குக் கொடூரமான தண்டனை
சவூதி அரேபியாவின் கடுமையான தண்டனைகளை துபாயின் தண்டனைகளுடன் சேர்த்துக் குழப்பிக் கொள்பவர் அநேகர்.சட்டம் சிறப்பாகச் செயல்படும் நாடுகளில் துபாயும் ஒன்று.அவ்வளவுதான்.

துபாயின் வளர்ச்சி
எந்த இயற்கை வளமும்,கனிம வளமும் மற்ற இன்னபிற வளமும் இல்லாத நாடு எவ்வாறு இன்று உலகளவில் உயர்ந்து நிற்கிறது என்பது பற்றி சற்று விரிவாகக் காண்போம்.துபாயின் வளர்ச்சிக்கு உன்னதமானக் காரணமாக விளங்குவது அதன் தலைமை தான்.ஆம் சிங்கப்பூரின் Lee Kwan Yewக்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த தலைவர் - The Ruler of Dubai-His Highness Shiekh Mohammad.மிகச் சிறந்த தலைவர்.ஒரு நாடு முன்னேறுவதற்கு என்னென்ன காரியங்களையெல்லாம்  செய்ய இயலுமோ அவ்வளவையும் நிறைவுறச் செய்தவர்.லஞ்ச லாவண்யமற்ற,ஊழலற்ற , நேர்மையான,நேர்த்தியான நிர்வாகத்தைத் தந்து கொண்டிருப்பவர்.எவ்வாறு பாறை நிறைந்த பூமியை-சிங்கப்பூர் என்னும் சொர்க்க பூமியாக Lee Kwan Yew மாற்றிக் காட்டினாரோ,அவ்வாறே எந்த வளமும் இல்லாத ஓர் பாலைவனத்தைத் துபாய் எனும் சொர்க்கப்பூமியாக  மாற்றிக் காட்டினார்.மேலும் துபாய் ஒரு Geographical blessing கொண்ட நாடு.நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்த்தால் தெரியும்-நடுநாயகமாக துபாய் இருக்கும்.உலகின் 65% மக்கள் தொகையை ஐந்து மணி நேர  விமானப் பயணத்தில் அடைந்து விடலாம்.இன்னும் சிறப்பாகச் சொன்னால் அதிகாலையில் எழுந்து காலை உணவை முடித்துக் கிளம்பினால்,எந்த நாட்டில் கலந்தாய்வுக் கூட்டம்  இருந்தாலும் கலந்துகொண்டு இரவு உணவிற்குத் துபாய் திரும்பி விடலாம்.இதைத் திறம்பட பயன்படுத்திக்கொண்டு JAFZA,DAFZA போன்ற பல free-zone கள் உருவாக்கப்பட்டது. JAFZA(Jebel ali free zone authority)-கப்பல் வணிகத்திற்கும்,DAFZA(Dubai airport free zone authority)-விமான  வணிகத்திற்குமானதாகும். 
(Speciality of freezone : you can rent, lease hire, mortgage like how you do in your home country).
JAFZA உலகின் மிகப்பெரிய 11 வது கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறைமுகமாகவும்,மத்திய கிழக்கில் முதன்மையானதாகவும் விளங்குகிறது.மொத்தமாக UAE முழுமைக்கும் சேர்த்து 48 Free zones உண்டு.அவற்றுள் பெரும்பாலானவை இருப்பது துபாயில்.JAFZA,DAFZA தவிர்த்து சில உதாரணங்கள்.
Dubai Academic city - for universities
Dubai Motor city - for automobiles
Dubai Internet city -for IT Companies
Dubai Media city - for Media companies


விதிகளும்,ஒழுங்கும் 
Freezones தவிர்த்து மற்ற இடங்களில் வெளிநாட்டவர்கள் என்றால் வாடகைக்குத் தான் வீட்டைப் பெற முடியும்.வாடகைக்குத் தான் தொழில் நடத்தும் இடத்தைப் பெற முடியும்.ஒரு போதும் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது.அசையும் சொத்துக்களான வாகனங்கள் மட்டும் விலைக்கு வாங்க முடியும்.இதற்கு மட்டும் உரிமை உண்டு.எந்தத் தொழிலைத் தொடங்க வேண்டு்ம் என்றாலும் அரேபியர்கள் பெயருக்குத் தான் லைசன்ஸ் வழங்கப்படும்.சாதாரண தேநீர்க்கடைத் துவங்கி பெரிய தங்க நகைக்கடை வரை அனைத்திற்கும் அவர்கள் தான் சொந்தக்காரர்கள்.நாம் அவர்களிடத்தில் பங்குதாரர்களாகச் சேர்ந்து,நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டு லாபத்தில் ஒரு பங்கைத் தந்து விட வேண்டும்.
நம் வாகனங்கள் சாலையில் இடப்புறமாக ஓடுகின்றன அல்லவா?துபாயில் வலப்புறம்.Pedestrian crossing என்று சொல்லப்படுகின்ற-மனிதர்கள் ரோட்டைக் கடக்கும் பகுதியில் மனிதத் தலைகளைப் பார்த்தாலே கார்க்காரர்கள் பிரேக்கை அழுத்துகிறார்கள்.பாதசாரிகளுக்கு அப்படி ஒரு மதிப்பு.துபாயில் எவரும் ஹாரன் அடிப்பதே இல்லை.பின்னால் எவராவது ஹாரன் அடித்தால் முன்னால் ஓட்டுபவர் அதை மிகப் பெரிய அவமானமாகக் கருதுகிற அளவுக்கு நிலைமை இருக்கிறது.கார் லைசன்ஸ் எடுப்பது துபாயில் அவ்வளவு கடினம்.இது கிட்டத்தட்ட நம்மூரில் பிஎச்.டி வாங்குவதற்குச் சமம்.பத்துப் பதினைந்து முறை விண்ணப்பித்தும் ஓட்டச் சொல்லிச் சோதித்து மறுக்கப்பட்டவர்கள் பலர்.

வேலை வாய்ப்புகள்
எவராயிருப்பினும் துபாயில் வேலை வாங்குவதென்பது எளிது.சாதாரண தொழிலாளி முதல் மெத்தப் படித்தவர் வரை ஒரே விதமான விசா தான்.ஆனால் இதை விமர்சிப்பவர் கூட உண்டு.தகுதிக்கேற்ற வேலை வேண்டுமெனில் சற்றே போராட வேண்டியிருக்கும்,துபாயில் வேலை தேடி வருவோருக்கு என் ஆலோசனை என்னவெனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் எந்த consultant ஐயும் நம்பி பணம் தர வேண்டாம்.90% ஏமாற்றுப் பேர்வழிகள்.நீங்கள் 3 மாத visit visa வில் வந்து வேலைக்கு முயற்சிக்கலாம்,இப்போது சில Airline companiesகளே விசா வாங்கிக் கொடுக்கிறார்கள்.மற்றபடி Professional courses படித்தவர்கள் நிறுவனங்களின் நேரடித் தேர்வு மூலமாக இந்தியாவில் இருந்து கொண்டே வேலை வாய்ப்பைப் பெற்று வரலாம்.என் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் வகை செய்தது துபாய்.உலகின் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் துபாயில் இருப்பதால் வேலை வாய்ப்புகள் மிக அதிகம் என்பதோடு என்னைப் போன்ற  Educational Consultant ஆக இருப்பவர்களுக்கு Corporate Training வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.இதுவரை 40 பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு Training கொடுத்திருக்கிறேன்.2002 ஆம்  ஆண்டு வரை துபாயில் பல்கலைக்கழகங்களே கிடையாது.அதனால் மாணவர்கள் பள்ளி உயர்நிலைப் படிப்பு முடித்தவுடன் பல குடும்பங்கள் கனடா,ஆஸ்திரேலியா,நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து கொண்டிருந்தன.இதை மனதில் கொண்டு அடுத்த ஐந்தே ஆண்டுகளுக்குள் உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்கள் அனைத்தும் துபாய்க்கு வர வழிவகை செய்தார் Shiek Mohammad.இதற்காகவே Dubai Academic City என்ற ஓர் இடத்தை நிர்மாணித்தார்.இங்கு தான் அனைத்து பலகலைக்கழகங்களும் இருக்கிறது. இதன் பயனாக நான் Szabist, Manipal University, Madonna University, American Heritage University மற்றும் New York University (Abudhabi)  போன்ற பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தேன்.Free lancer ஆக இருந்ததால் கிட்டதட்ட 15 ஆண்டுகளில் Corporate, University, Institutes என்று மொத்தமாக 50 இடங்களுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறேன்.ஒரே சமயத்தில் 12 இடங்களில் பணிபுரிந்த காலம் கூட உண்டு. இவையெல்லாம் துபாய் எனக்குக் கொடுத்த வாய்ப்பு.


சிங்கப்பூர் Vs துபாய்
சிங்கப்பூருக்கும், துபாய்க்கும் அடிப்படையில் நிறைய ஒற்றுமை உண்டு.துபாயின் பெரும்பாலான திட்டங்கள் சிங்கப்பூரை அடியொற்றியவையே.உதாரணமாக ஏற்றுமதி-இறக்குமதி தொழில்,Free zones தொடங்கி Metro Project வரை நிறைய சொல்லலாம்.Comparatively எனக்குப் பிடித்தது துபாய் தான் காரணம் சிங்கப்பூரில் Workaholic ஆக இருந்தால் தான் தாக்குப் பிடிக்க முடியும்.மேலும் நேரம் காலம் பற்றிக் கவலையின்றி பணிபுரிய வேண்டும்.ஆனால் துபாய் அப்படியல்ல தேவையான அளவு விடுமுறைகளும்,தினமும் எட்டு மணி நேர வேலை  என ஒழுங்கான விதிகளும்  உண்டு.இருப்பினும் சிங்கப்பூர் ஸ்பெஷல்  என நான் கருதுபவை மூன்று.அவை 1.நேரம் தவறாமை,2.சுத்தம்,3.போக்குவரத்து விதிகள்.

ஏற்றுமதி-இறக்குமதி
உலகின் ஏற்றுமதி-இறக்குமதியில் கிட்டதட்ட 25% நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது துபாய்.ஏற்றுமதி-இறக்குமதி என்றவுடன் துபாயில் உற்பத்தி மிக அதிகமென்றும்  அதையொட்டி ஏற்றுமதியும் அதன் விளைவாக இறக்குமதியும் நடைபெறுகிறது என்றெண்ண வேண்டாம்.துபாயில் உற்பத்தி மிக மிகக் குறைவு.அது பொருள் உற்பத்தி செய்யும் ஒரு நாடே அல்ல.அங்கு என்ன நடைபெறுகிறது என்பதற்கு  ஒரு உதாரணம்: இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து free zonesல் store செய்து பின்னர் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வர்.இது Re-Export எனப்படும்.என்னுடைய Phd thesis கூட இதைப் பற்றியது தான் (Logistics and supply chain management).

துபாயில் அவசியம் பார்க்க வேண்டிய ஐந்து இடங்கள்
வானத்தைத்தொட போட்டி போடும் கட்டிடங்கள்,இரவில் அசரடிக்கும் விளக்கு அலங்காரங்கள்,கொட்டிக்கிடக்கும் ஷாப்பிங் ஐட்டங்கள்,விடிய விடிய வரவேற்கும் மெகா ஷாப்பிங் மால்கள் என துபாய் ஒரு சுற்றுலா சுரங்கம் தான்.துபாயைச் சுற்றிப் பார்க்க ஏற்ற காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை.ஒருமுறை துபாய் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மாணவ,மாணவிகளிடம் எவையெல்லாம் துபாயில் தனித்தன்மையோடு விளங்குகின்றன எனக் கேட்டேன், 10-12  சொல்வார்கள் என எதிர்பார்த்தேன், என்ன ஆச்சர்யம்! 30க்கும் மேல் துபாயின் தனித்தன்மைகளைச் சொன்னார்கள்.அவற்றிலிருந்து மிகச் சிறந்த ஐந்தினை மட்டும் இங்கே காணலாம்.

1.துபாய் மிராக்கிள் கார்டன்(Dubai Miracle Garden)
உலகின் மிகப்பெரிய பூந்தோட்டம் இதுவேயாகும்.உள்ளே நுழைந்தவுடன் பூமியில்தான் இருக்கிறோமா அல்லது சொர்க்கத்திற்கு வந்துவிட்டோமா என்று எண்ண  வாய்ப்புள்ளது.72000 சதுர மீட்டரில்,45000 மில்லியன் பூக்களுடன் இப்படியொரு அட்டகாசமான,வித்தியாசமான,விசித்திரமான வேலைப்பாடுகள் கொண்ட ஒர் பூந்தோட்டத்தை உங்கள் கனவில் கூட நீங்கள் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டீர்கள்.அப்படி ஓர் அழகு.மிஸ் செய்யாதீர்கள்.


2.புர்ஜ் கலிபா(Burj Khalifa)
2722 அடி உயரத்தில்,163 தளங்களுடன் அமைந்த உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா.125 வது தளம் வரை Elevator-ல் செல்ல அனுமதி உண்டு.அத்தகைய உயரத்தில் observation deck! At the top எனும் இடத்தில் இருந்து துபாயைப் பார்த்தால் அது ஓர் கண்கொள்ளாக் காட்சி.100 திர்ஹாம்ஸ் செலுத்தி முன்பே அவரகள் வெப்சைட்டில் புக் செய்து கொள்வது நல்லது.ஆங்கிலப் புது வருடப்பிறப்பின் போது உலகின் தி பெஸ்ட் Fireshow இதிலிருந்து தான் நடத்தப்படும்.உலகின் உயரமான கட்டடம் என்னும் சிறப்பு மட்டுமின்றி இன்னும் ஏராளமான சிறப்பியல்புகளைக் கொண்டது.அவற்றை எல்லாம் சொல்ல என்னுடைய  இந்தக் கட்டுரைப் பத்தாது.Wikipediaவில் படிக்கவும் அல்லது நேரில் விஜயம் செய்யவும்.
ி


3.புர்ஜ்-அல்-அரப்( Burj- al- arab)
Al என்பது  the என்ற பொருள்படும்,அதனால் எல்லா இடங்களும் அல் தாங்கித் தான் வரும். இதன் சிறப்பு என்னவென்றால் கடலில் அமைந்திருப்பது தான்.உலகின் ஒரே ஏழு நட்சத்திர ஹோட்டல் இதுதான் எனவும் சிலர் இதனைக் கூறுவர்.கடல் நீரை உறிஞ்சி எடுத்த பின்னர்,பல நாடுகளிலிருந்து Scuba divers வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் கடலில் கல் பதித்து இந்த ஹோட்டல் எழுப்பப்பட்டுள்ளது.புர்ஜ் கலிஃபாவிற்கு முன் இது தான் துபாயின் முதல் ஐகான்.இது கட்டிய கதை பற்றி டாகுமெண்ட்ரி யூடியூபில் பிரபலம்.அற்புதமான வடிவமைப்பும்,கருத்தைக் கவரும் வண்ணமும் இன்னும் பல்வேறு வசதிகளையும் கொண்ட இந்த ஹோட்டலுக்கு ஒரு முறையேனும் விசிட் செய்யுங்கள்.


4.பாலைவன சவாரி(Desert Safari)
துபாயில் முக்கியமான Tourist attractionல் ஒன்றுதான் இந்தப் பாலைவன சவாரி.பாலைவனத்தில் அந்தி நேரத்தில் Thrill ride போவதென்பது மிகவும் உற்சாகம் தரும் விஷயம்.கூடவே சாப்பாடு,பெல்லி டான்ஸ்,முஸ்தபா டான்ஸ் என ஜோர் தான்.பாலைவனக் குன்றுகளில் car ஏறி சறுக்கிக் கொண்டே இறங்கும் போது கிடைக்கும் அனுபவத்திற்காகவே நீங்கள் ஒரு முறை துபாய் வரலாம்.


5.துபாய் மால்( Dubai Mall)
ஷாப்பிங் ப்ரியர்களின் பேரடைஸ் துபாய் மால்.உலகின் ஐந்தாவது பெரிய மால்,ஆசியாவின் முதல் பெரிசு எனப் பல சிறப்புகள்.ஒரு மாலுக்குள் இத்தனை விஷயங்களா என்று உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.உலகின் மிகப்பெரிய Aquarium,Underwater zoo    மற்றும் Ice rink ஆகிய அனைத்தையும் ஒரே மாலுக்குள் உங்களால் கற்பனையேனும் செய்து பார்க்க முடிகிறதா?வாழ்வின் அனைத்து நெருக்கடிகளையும் மறந்து ஒரு நாளை முழுமையாகச் செலவிட ஏற்ற இடம் துபாய் மால்.


என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
உலகிலேயே இந்தியாவில் தான் அனைத்து இயற்கை வளங்களும் உள்ளது.வேறெந்த நாட்டிலும் இத்தகைய வளம் கிடையாது, நம்மிடம் பாலைவனமும் உண்டு,உலகிலேயே குளிர்ச்சியான இடமும் உண்டு.அனைத்து சீதோஷ்ண நிலைகளும்,விளைப்பொருட்களும் உண்டு.ஆயினும் ஊழல் நிறைந்த தலைவர்களால் நம் நாடு முன்னேறத் தடுமாறுகிறது. ஒரு முறை shiek Mohammad இடம் ஒரு நிருபர் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்: "துபாயை எல்லா விஷயத்திலும் advance ஆகவே கொண்டு செல்கிறீர்களே ஏன்?" என் மக்கள் பல்வேறு சந்தோஷங்களையும் அனுபவிக்க பல்லாண்டு ஏன் காத்திருக்க வேண்டும்,அவர்கள் அதை அனுபவிக்க இப்போதே வழி வகை செய்கிறேன் எனக் கூறினார்.நம் நாட்டு தலைவர்களையும் எண்ணிப் பார்த்தேன். ஒரு நீண்ட பெருமூச்சு தான் வெளிப்பட்டது.
இயற்கை வளங்களையும்,தொழில் நுட்பத்தையும் தவிர்த்து விட்டு உலகளவில் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணம் என்னவென்று நோக்கினால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தான்.துபாயின் முன்னேற்றத்திற்கும் இதுவே காரணம்.
மீண்டும் வெளிநாட்டில் வேலை செய்யும் சூழ்நிலை எனக்கு வாய்க்குமானால் அப்போதும்  என்னுடைய சாய்ஸ் துபாய் தான்.