Thursday, 7 December 2017

நேர்காணல் : குடவாயில் பாலசுப்ரமணியன்

நூற்றுக்கும் மேற்பட்ட பழங்காலக் கல்வெட்டுகளையும்,பழங்கால நாணயங்கள்-செப்புத்தகடுகள்-சிலைகள் போன்ற பலவற்றைக் கண்டுபிடித்தவரும்,ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும்-ஐநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியவர் தொல்லியல் அறிஞர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்.'இராசராசன் விருது','கரிகாற்சோழன் விருது','வாழ்நாள் சாதனையாளர் விருது','குறள்நெறிச்செல்வர் விருது' எனப் பல விருதுகளைப் பெற்றவர்.ஐம்பது வருட கடின உழைப்புக்குச் சொந்தக்காரரான அவர் நம்  தமிழகத்திற்குக் கிடைத்த பேறு.அவரது நூல்களுள் என்னை மிகவும் ஈர்த்தவை:இராஜராஜேச்சரம்,தஞ்சாவூர்,தஞ்சை நாயக்கர் வரலாறு மற்றும் நந்திபுரம்.உலகப்புகழ் பெற்ற தஞ்சை அரண்மனை நூலகமான சரசுவதி மகால் நூலகத்தில் காப்பாட்சியராகவும்,நுண்படத்துறை வல்லுநராகவும் பின்னர் வெளியீட்டு மேலாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இரண்டு முறை அவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறேன்.எனினும் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழும் அவரைப் பேட்டியெடுத்தால் பல்வேறு அரிய தகவல்களை எல்லோரும் அறியும்படிச் செய்யலாமே என்ற எண்ணம் மனதில் உதித்தது.ஆகவே...ஓர் கார்த்திகை மாதத்துக் காலையில்...தஞ்சைத் தரணியில் வாழும் அப்பெருமகனை என் நண்பன் வெங்கியுடன் சென்று சந்தித்தேன்.தனக்கும்,தன் சாதனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் மிகவும் எளிமையாக இருந்தார்.புன்னகையுடன் எங்களை வரவேற்று உபசரித்தவர் நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விரிவாகவும்,தெளிவாகவும் பதிலளித்தார்.


1.தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
என் சிறுவயதில் குடவாயிலுக்கு அருகே பெருமங்கலம் என்ற கிராமத்தில் பெரிய கருவேல மரங்கள் நிறைந்த காடு ஒன்றுண்டு.அது என் தந்தையின் பொறுப்பில் இருந்தது.பெருமழைக்காலத்தில் தரை மண் அரிக்கப்பட்டு வாய்க்கால்களாகப் பெருக்கெடுத்து ஓடும்.அப்போது எங்களூருக்கு அருகிலுள்ள வடவேர் என்ற ஊரினைச் சார்ந்த ஒரு பழங்குடி இனத்தவர் அக்கருவேலங்காட்டிற்கு வந்து தரையில் இருந்து வெளிப்படும் செம்பு,வெள்ளி அரிதாகக் கிடைக்கும் தங்கக்காசுகள் ஆகியனவற்றைப் பொறுக்கி எடுத்து வந்து குடவாயில் கடை வீதியிலுள்ள பத்தர்களிடமும்,பழம்பொருட்கள் வாங்குவோரிடமும் விற்பர்.அதைக் கண்ட நானும் காசுகளைச் சேகரிக்கத் தொடஙகினேன்.எனக்கு சோழர்காலக்காசு,பாண்டியர்காலக்காசு மட்டுமின்றி சஙககாலக்காசும் கிடைத்தது.மேலும் சிவப்பு,வெள்ளை,கருப்பு நிறத்திலான பானை ஓடுகளும் கிடைத்தன.இப்படித் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறுவதற்கேற்ற சான்றுகள் கிடைத்தன.அக்காலகட்டத்தில் என் வீட்டிற்கு தினமணி நாளிதழ் வந்து கொண்டிருக்கும்.அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் 'தினமணி சுடர்' என்ற அநுபந்த பகுதி இருக்கும்.அப்போதெல்லாம் அந்த சுடர் பகுதியில் வரலாற்றுக் கட்டுரை,கலையியல் கட்டுரை,பயணக்கட்டுரை,அறிவியல் கட்டுரை எனப் பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் வெளிவரும்.அக்கட்டுரைகளை எல்லாம் நான் மிகவும் விரும்பிப் படிப்பேன்.குறிப்பாக வரலாறு,கலையியல்,திருக்கோயில்கள்,கல்வெட்டுகள் பற்றி வருகின்ற கட்டுரைகளைப் படிப்பதோடு என் வீட்டு நூலகத்திலும் சேகரிக்கத் தொடங்கினேன்.அது  போலவே எங்கள் ஊரில் உள்ள அரசு பொது நூலகத்திற்கு நல்ல மாத,வார இதழ்கள் வந்து கொண்டு இருந்தன.பள்ளி விடுமுறை நாட்களில் நூலகத்திற்குச் சென்று கலைமகள்,மஞ்சரி,கலைக்கதிர் போன்ற இதழ்களில் என்னை ஈர்க்கக்கூடிய கட்டுரைகளைப் படித்து நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகளும் எடுத்து வருவேன்.கீழத்தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு மூன்று கிலோமீட்டருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் உண்டு.சோழர் கால எச்சங்கள் இல்லாமல ஒரு குக்கிராமமும் கிடையாது.கும்பகோணத்தைச் சுற்றி அற்புதமான கோயில்கள் பல உண்டு.குறிப்பாக தாராசுரம் கோயில் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.ஆக நான் பிறந்து வளர்ந்த சூழ்நிலையும் என் ஆர்வத்திற்கு முக்கியக்காரணம்.இவை அனைத்தும் தான் என்னை ஒரு கல்வெட்டாய்வாளனாக,வரலாற்றுத் துறையில் சாதித்தவனாக,கலையியல் துறைக்கு சேவையாற்றுபவனாக மாற்றி இருக்கின்றது.

2.உங்களது ஆய்வில் சோழர்கள் வரலாற்றிற்கு சிறப்பிடம் அளிப்பது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
நான் பிறந்த மண்ணோ சங்ககாலச் சோழர்களின் கோ நகரமான குடவாயிற் கோட்டமே.நான் பருகி வளர்ந்த காவிரி நீரோ சோழன் வெட்டிய சூடாமணி ஆற்று நீராகும்.நான் சுவாசிக்கின்ற காற்றோ ராஜராஜனும்,ராஜேந்திர சோழனும் சுவாசித்து விடுத்த காற்றே.நான் வணங்கும் கோயில் சோழன் எடுப்பித்த பெருங்கோயிலே.இவற்றால் தான் என் ஆய்வுத்தளமாக  விளங்குவது சோழ மண்டலம்.


3.ராஜராஜன்,ராஜேந்திரன் இருவரைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்துள்ளீர்கள்.உங்களுக்கு இவ்விருவரில் மிகவும் பிடித்தவர் யார்?ஏன்?
இரண்டு கண்களில் வலது கண் சிறந்ததா? இடது கண் சிறந்ததா? என்றால் என்ன பதில் சொல்வது?தன் மகனைப் பேரரசனாக்கிய பெருமை ராஜராஜனுக்கு உண்டு.அதே சமயம் ராஜராஜனுக்குப் பின்புலமாக இருந்து அவரது அனைத்து சாதனைகளுக்கும்,வெற்றிகளுக்கும் காரணமாக இருந்தவர் ராஜேந்திரன்.ராஜராஜனின் மறைவிற்குப் பிறகு பதவியேற்ற ராஜேந்திரனின் அனைத்துப் பெருமைகளுக்கும் அவரது மூன்று மகன்களே காரணம்.அவர்கள் - ராஜாதிராஜன்,இரண்டாம் ராஜேந்திரன் மற்றும் வீர ராஜேந்திரன்.

4.கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நூலைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?நிறையக் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கல்கி படைக்கக் காரணம் என்னவாயிருக்கும்?
புதினங்களில் - சுவாரஸ்யத்திற்காகவே கதாபாத்திரங்கள் படைக்கப்படுகின்றன.ஆகவே அவற்றைப் புதினமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர வரலாறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.இருப்பினும் கல்கி அவர்கள் வரலாற்றுப் பயணம்  செய்து ஓரளவு வரலாறு சிதையாமல் எழுதியிருக்கிறார்.

5.சரித்திர நாவல்களில் வரும் பாதாளக்குகைகள்,சுரங்கப்பாதைகள் ஆகியவை உண்மை தானா?கல்வெட்டுகளில் இவற்றைப் பற்றிய செய்திகள்(ரகசியம் காரணமாக) இடம் பெற வாய்ப்பே இல்லை.ஆகவே இந்த கேள்வி...
பாதாளக்குகைகள்,சுரங்கப்பாதைகள் போன்றவை உண்டு.இவை எங்கிருக்கும் என்றால் அரண்மனையில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குத் தப்பிப் போவதற்கு அல்லது எதிரிகள் வரும் போது ஓர் ரகசிய அறையில் தங்கிக் கொண்டு வெளியில் வராமல் இருப்பதற்கு.இவை அரண்மனைக்குப் பக்கத்திலும்,அரண்மனைக்குப் பக்கத்திலுள்ள காவற்காடுகளிலும் இருக்கும்.ஆனால் தற்போது  ஆராய்ச்சியில் அவை கிடைக்கப் பெறவில்லை காரணம் அரண்மனைகளே இல்லை எனும் நிலை இருப்பது தான்.ஆனால் நாயக்கர் கால சுரங்கங்கள் தற்போதும் தஞ்சாவூரில் இருக்கிறது.சிதிலமடைந்த காரணத்தினால் அதில் சிறிது தூரமே செல்ல முடியும்.கோயில்களில் சுரங்க வழிகள் கிடையாது.நிலவறைகள் உண்டு.அங்கு கோயிலின் நகைகளையும்,மதிப்புமிக்க பொருட்களையும் வைத்திருப்பார்கள்.இத்தகைய நிலவறைகள் பல கோயில்களில் உண்டு.

6.ராஜராஜனுக்குப் பதினொரு மனைவிகள் எனப் படித்திருக்கிறேன். பட்டத்துக்கு உரியவராக ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
சோழர் மரபில் பட்டமகிஷி என்பவள் ஒரு தேவி தான்.ராஜராஜனுக்கு 'தந்திசக்திவிடங்கி' என்கிற 'லோகமாதேவி' தான் பட்டத்தரசி.ஆனால் அவருக்குக் குழந்தைகள் இல்லை,மற்றுமொரு மனைவியான திருபுவனமாதேவியின்(வானதி என்கிற வானவன்மாதேவி) மகன் தான் ராஜேந்திரன்.சோழர்களைப் பொறுத்தவரை எத்தனை மனைவிகள் இருப்பினும் எந்த மனைவிக்கு முதலில் குழந்தை பிறக்கின்றதோ அதுவே பட்டத்து வாரிசு.ஆகவே முதல் குழந்தையாகப் பிறந்த ராஜேந்திரன் வாரிசானான்.ராஜராஜனுக்குப் பதினொரு மனைவியர் இருந்திருந்தாலும் வரலாற்று ஆவணப்பதிவுகளின் மூலம் தெரிய வந்திருப்பது  ராஜேந்திரன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளான மாதேவடிகளும்,குந்தவையும.

7.கீழ்த்திசை நாடுகளில் தாங்கள் செய்த ஆய்வுகள் குறித்துக் கூறுங்களேன்?
காம்போஜம் என்னும் கம்போடிய நாட்டிலும்,இந்தோனேசியாவின் ஜாவா பகுதியிலுள்ள பெரம்பனான், பேராபுதூர் ஆகிய இடங்களிலும், பாலித்தீவிலும் நேரில் கள ஆய்வு செய்து கோயிற்கட்டடக்கலை,சிற்பக்கலை போன்றவற்றில் ஓர் ஆழமான ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தரவுகளைச் சேகரித்து வந்துள்ளேன்.2013 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இப்பணி என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும்.



8.ஆதித்தகரிகாலன் திருமணம் செய்து கொண்டாரா?ஆமெனில் அவருக்கு வாரிசுகள் இருந்தனரா?
ஆதித்தகரிகாலனுக்கு திருமணம் நடந்ததாகவோ, வாரிசுகள் இருந்ததாகவோ எந்த வரலாற்றுச் சான்றுகளும் இல்லை.

9.ராஜராஜன் பட்டத்துக்கு வந்தது உத்தமசோழனின் மறைவிற்குப் பிறகா? அலலது அரசியல் உடன்பாடா?
ராஜராஜன் தான் பட்டத்திற்கு வர வேண்டும் என கண்டராதித்தரின் மனைவியும்,உத்தமசோழனின்(சேந்தன்அமுதன்) அன்னையுமான செம்பியன்மாதேவி விரும்பினார்.நாட்டின் அதிகாரிகளும்,மக்களும் அத்தகைய எண்ணமே கொண்டிருந்தனர்.ஆனால் 'நாம் தானே வாரிசு,நாம் தானே அரியணை ஏற வேண்டும்' என்று உத்தமசோழன் ஆசைப்படுவதை அறிந்து கொண்ட ராஜராஜன் அனைவரது விருப்பத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு உத்தமசோழனை அரியணை ஏற்றுகிறார்.பதினைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த உத்தமசோழன்,கெட்டிக்காரத்தனமும்,அனைத்துத் திறமைகளும் நிறைந்த ராஜராஜனே ஆள வேண்டும் எனபதைப் புரிந்து கொண்டு தன் அரசப்பதவியை ராஜராஜனுக்குக் கொடுத்தான்.

10.வந்தியத்தேவனுக்கும்,குந்தவைக்கும் புத்திரர்கள் உணடா?அவர்களுக்கும் ராஜராஜன் குடும்பத்துக்கும கொள்வினை,கொடுப்பினை இருந்ததா?
வந்தியத்தேவனுக்கும்,குந்தவைக்கும் நிச்சயம் குழந்தைகள் இருந்திருக்க வேண்டும்.அவர்கள் ராஜராஜன் குடும்பத்தோடு கொள்வினை,கொடுப்பினை வைத்திருந்திருப்பார்கள்.ஆனால் கல்வெட்டில் அது பற்றிய பதிவுகள் இல்லை.ஒருவேளை இருந்திருந்தால் கூட அவை இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை.

11.கருவூர்ச்சித்தரும்,ராஜராஜனும் சமகாலத்தவர் தானா?கருவூர்ச்சித்தரை குருவாக ராஜராஜன் கருதினான் என்பது நம்பத்தகுந்த செய்தி தானா?
கருவூர்ச்சித்தர் ராஜராஜனின் சமகாலத்தவரில்லை.மேலும் அவர் ராஜராஜனின் குருவும் கிடையாது.ராஜேந்திரனின் இறுதிக்காலத்தில் தான் அவரைப் பற்றிய பதிவுகள் வருகின்றன.ராஜராஜனின் குருவாக விளங்கியவர்கள் ஈசான சிவ பண்டிதர்,சர்வசிவ பண்டிதர் மற்றும் லகுலீச பண்டிதர்.கருவூர்த்தேவர் பல்வேறு சிவாலயங்களுக்கும் சென்று நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார்.சில கோயில்களில் 'என் மீது கருணை இல்லையா?' எனப் பாடும் அவரே திருவிடைமருதூர் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் பாடும் போது 'உன்னை உணர்கிறேன்' என இறைவனிடம் கூறுகிறார்.இவை அனைத்தையும் பன்னிருத்திருமறையில் தொகுத்திருக்கிறார்கள்.அவர் பிச்சையெடுத்து வாழும் சிவயோகியாகவே வாழ்ந்திருக்கிறார்.பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர அரசு காலத்தில் கருவூர்த்தேவரைச் சித்தராக்கி விட்டார்கள்.அது புராணமே தவிர வரலாறல்ல.

12.உங்கள் நூல்களைப் பற்றிச் சொல்லுங்கள்?நீங்கள் எழுதிய நூல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எது?
நான் இதுவரை 30 பெருநூல்களையும்,23 சிறுநூல்களையும்,ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.நான் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த நூலாக 'நந்திபுரம்' நூலைக் குறிப்பிடுவேன்.


பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் - நீலகண்ட சாஸ்திரி உட்பட - பழையாறை அருகில் இருப்பதே நந்திபுரம் என்று சொன்னார்கள்.பழையாறை அருகிலும் வேதாரண்யம் அருகிலும் நந்திபுரம் என்ற ஊர்கள் இருப்பினும், அரண்மனையும்,ஆயிரம் சிவலிங்கங்களோடு உள்ள நந்திபுரம் என்பது கண்டியூருக்குக் கிழக்கே உள்ளது தான் எனபதை மிகத்தெளிவாகக் கல்வெட்டுகளின் மூலம் கண்டுபிடித்து எழுதியிருக்கிறேன்.
முழுவதும் என் பொருளைக் கொண்டே - இரண்டு ஆண்டுகள் - திருவாரூர் தேர் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், ஓவியங்களையும் ஆய்வு செய்து நான் எழுதிய நூல் 'திருவாரூர் திருக்கோயில்' ஆகும்.கோயிற் கட்டடக்கலையைப் பற்றி 'தமிழக கோபுரக்கலை மரபு' என்ற நூலும்,சிறந்த வரலாற்று ஆசிரியரென எனக்குப் பெயர் ஈட்டிக் கொடுத்த 'தஞ்சை நாயக்கர் வரலாறு' என்ற நூலும்,அருளாளர்களின் வரலாற்றை சிற்பக்கலைத் துணை கொண்டு  எழுதிய 'தாராசுரம் திருக்கோயில்' என்ற நூலும், ஆகமம், சிற்பம், ஓவியம், நாட்டியக்கலை போன்ற நுண்கலைகளை உள்ளடக்கித் தஞ்சைப் பெரியகோயிலைப் பற்றி எழுதிய 'இராஜராஜேச்சரம்' என்ற நூலும்,ஒரு ஊரின் வரலாற்றை  கால அடிப்படையில் ஆதாரத்தோடு எழுதிய 'தஞ்சாவூர்' என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை.

13.நடந்து முடிந்து போய் விட்ட வரலாறைப் படிப்பது அவசியம் தானா?அவற்றைத் தெரிந்து கொள்வதால் ஏற்படும் பலன் என்ன?
வரலாறு என்பது நாம் பின்னோக்கிப் பயணிப்பதாகும்.ஒருவரது  புகழைப் பற்றி மட்டும் பெருமையாகச் சொல்லிக் கொள்வது வரலாறு கிடையாது. வரலாறு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறது.பல்வேறு காலங்களில் நடந்த நிகழ்வுகள், செயல்பாடுகள், மனிதாபிமானங்கள், தீர்வுகள் ஆகியவற்றை அனுபவங்களாக எடுத்துக் கொண்டு நம் வாழ்வை செம்மையாக வாழ்வதேயாகும்.

14.தமிழக மக்களுக்கும்,ஆய்வு மாணவர்களுக்கும் தாங்கள் கூற விரும்புவது?
தமிழ்நாட்டு மக்களுக்கு நான் கூற விரும்புவது:இங்குள்ள திருக்கோயில்களை சமயம் சார்ந்த ஒரு வழிபாட்டுத்தலம் என்று மட்டும் கருதாதீர்கள்.அவை ஒவ்வொரு தமிழனின் முகவரியே ஆகும்.அவை ஒவ்வொன்றும் பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்திருக்கின்றன.சமூக மேம்பாடுகள் அனைத்தும் கோயில் சார்ந்தே நடந்துள்ளன.தமிழனுடைய பாரம்பரியம்,கலாச்சாரம் அத்தனையும் திருக்கோயில்களில் தான் பொதிந்து திகழ்கின்றன.அவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழனின் தலையாய கடமையாகும். குறிப்பாக, கல்வெட்டுக்களிலும், ஓலைச்சுவடிகளிலும் காணப்பெறும் கிரந்தம் என்ற எழுத்து முறை தமிழன் கண்டுபிடித்துப் பயன்படுத்திய ஒரு  முறையேயாகும்.கிரந்தத்தில் உள்ள சமஸ்கிருத நூல்கள் எல்லாம் வடநாட்டவர் எழுதியவை என்று புறம் தள்ளாதீர்கள்.அவை அனைத்ததும் தமிழன் படைத்தவையே என்பதை நாம் அறிந்து போற்றுதல் வேண்டும்.தமிழன் எத்தனை மொழிகளைக் கற்றுக்கொள்ள இயலுமோ அது அவனது மேம்பாட்டிற்கு நிச்சயம் உதவும் என்பதே என் கருத்து.
இளைய தலைமுறைக்கு:அறிவியல் சார்ந்த துறைகளில் அளப்பரிய சாதனைகள் புரியும் இளைஞர்கள் நம் வரலாற்றையும் பாரம்பரிய பெருமைகளையும் அறிதல் வேண்டும்.அவை வெறும் வரலாறு மட்டுமன்று,அவர்களது அனுபவம் நமக்கு வழிகாட்டும் ஒரு தடமே என்பதை உணர்தல் வேண்டும்.குறிப்பாக அவர்களுக்கு பின் வரும் சந்ததியினருக்கு குறைந்தபட்சம் தமிழ்மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுத்தர வேண்டும்.இது எதிர்காலத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை.இதனைச் செய்யத் தவறினால் எதிர்கால வரலாறு நம்மைப் பழிக்கும்.























Saturday, 18 November 2017

பெண்வனம்!

சமீபத்தில் ஒரு நண்பரின் திருமண விழாவுக்குச் சென்றிருந்தேன்.அங்கு பாடிய சிறுமி ஒருத்தி தன் அற்புதமான கொஞ்சும் குரலில் வந்திருந்தவர்கள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டாள்.அன்றைய நாள் முழுவதும்...நமக்கொரு பெண்குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தி விட்டுப் போய் விட்டாள்.இயல்பான உறவில் பெண்ணே comfortable ஆக இருக்க ஆண் குழந்தைக்காகத் தவமிருக்கும் பெற்றோரை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.இயற்கையின் படைப்பில் உச்சம் பெண் தான்.ஆனால் பெண்ணைப் பெண்ணுக்குரிய இயல்பான குணங்களுடன் இருக்க விடுவதில்லையே...? ஏன்? ஒன்று பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் முழங்க வேண்டும் இல்லையென்றால் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு போன்ற குணாதிசயங்களுடன் திகழ வேண்டும் என்றே எண்ணுகிறோம்.


வாழ்க்கையில் நம்மோடு நெடுந்தூரம் பயணிக்கக்கூடியவர்களைச் சந்திக்கும் புள்ளிகள் எப்போதும் ஆச்சர்யம் நிறைந்தது. ஸ்ரீலங்காவிற்கு ஒரு கருத்தரங்கத்திற்காகச் சென்றிருந்தபோது அறிமுகமானவள் தேவி. கருத்தரங்கு செம்மையுற நடைபெறுவதற்கும், என் பேச்சு சிறப்புற அமைவதற்கும் மிகவும் உறுதுணையாக  இருந்தாள். நாளடைவில் என் வாழ்வில் தவிர்க்க முடியாத தோழியானாள்.

ஆழ்ந்து சிந்தித்து...தெளிவான உச்சரிப்பிலும்-மென்மையான குரலிலும்-வலிக்காத சொற்களிலும்-பேசும் அழகிலும் என்னை லயித்துப் போகச் செய்பவள் என் காதல் மனைவி.

என் பிறந்தநாளொன்றுக்கு பெங்களூரிலிருந்து விமானத்தில் பறந்து வந்து பிறந்தநாள் பரிசளித்து விட்டுச் சென்றாள் என் தோழி லதா.

என்னை விட என் தோழி ஜெயந்தி இரண்டு வாரம் மூத்தவள் எனத் தெரிந்தவுடன் “அக்கா” எனக் கிண்டலாகக் கூப்பிடத் துவங்கினேன். நாளடைவில் என் அக்காவாகவே மாறிப் போனாள்.

துளியும் சுயநலமின்றி...யார் என்ன உதவி கேட்டாலும் கனிவான உள்ளத்துடனும்,நெஞ்சார்ந்த அன்புடனும் செய்து...எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவள் கவிதா.

ஷார்ஜாவில் அறிமுகமான என் தோழி தீபா எப்போது என்னைச் சந்திக்க நேர்ந்தாலும் அவளே உணவு தயாரித்து எடுத்து வருவாள்.எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவ்வப்போது என்னை அழைத்து என் நலன் குறித்தறிந்தும்,பிரச்னைகளுக்கு ஆலோசனைகளும் கூறுவாள்.

நான் கட்டுரை எழுதும் போதெல்லாம் படித்து விட்டு விமர்சனம் செய்வார்கள்  என் அன்புத் தங்கைகள் அனைவரும்.

மகளில்லாத குறையை தீர்த்து வைப்பவர்கள் நான் பெறாத மகள்கள் ராஜி,அஞ்சு, ஐஸ்வர்யா மற்றும் கிருத்திகா.

இப்படி என் வாழ்வை இனிமையாக்கும்,கலர்ஃபுல் ஆக்கும்,ஒளியேற்றும் பெண்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.என்னைச் சுற்றியுள்ள,என்னைச் சார்ந்திருக்கிற பெண்களின் சின்னச்சின்ன ஆசைகளைப் பற்றி நான் அறிந்து வைத்திருக்கிறேனா?அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றித் தருவதில் என் பங்கு என்ன?நம் மீது unconditional love  வைத்து நமக்காக வாழ்கிற,உழைக்கிற,போராடுகிற பெண்களின் ஏக்கமான குரல்கள் ஏன் நம் காதுகளை எட்டினாலும் உள்ளங்களைத் தொடுவதில்லை?ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டிய விஷயம்.




           “சமையலறையில் என் கண்களைக் கட்டி விட்டாலும் 
              எந்தப் பொருளிலும் விரல் படாமல் 
              கேட்ட பொருளை கேட்ட மாத்திரத்தில் 
              எடுத்துத் தருவேன் என்று சவால் விடவும் செய்கிறாள் 
              அங்கிருந்து...
              அவளிடம் சொல்லிக் கொள்வதில்லை நான் 
              நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக 
              அங்கேயிருக்கிறாய் என்று”

என்னும் கவிஞர் ஜெயபாஸ்கரனின் கவிதை ஒன்றிருக்கிறது.உண்மை தான்.எத்தனையோ யுகங்களாக பெண் அடக்கி வைக்கப்பட்டுத்தான் இருந்திருக்கிறாள்.அடக்கி வைக்கப்பட்ட பெண் சடாரென வெளியேறும் போது கொஞ்சம் வேகமாக,கொஞ்சம் தூரமாகத் தான் போய் விழுவாள்.பெண் எந்த மதத்தையும் தோற்றுவிக்கவில்லை- எந்த இதிகாசங்களையும் படைக்கவில்லை - எந்தச் சட்டமும் இயற்றவில்லை - எந்தத் தத்துவத்தையும் எழுதவில்லை - எந்தக் காலத்திலும் இறைத்தூதராக மனிதர்களுக்குப் போதனை செய்யவில்லை.அனைத்தையும் செய்தது ஆண் வர்க்கம் தான். அதனால் தான் என்னவோ எந்த மதமும், சாத்திரமும், சட்டமும் பெண்ணுக்கு ஆதரவாய் இல்லை.

"ஆதாமின் எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவள் ஏவாள். அவளால் தான், விலக்கப்பட்ட கனியை ஆதாம் புசித்தான். ஆணை மயக்கி அவனுக்கு வீழ்ச்சியை வழங்கியதால் பெண் அசுத்தமடைந்தாள். பாவங்களுக்கும் பெண்ணே பிறப்பிடம். நரகத்துக்கு அவள் தான் நுழைவாயில்" என்றது கிறித்துவம்.

"ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன. அவை பெண்கள் மீது ஆண்களுக்குள்ள சில உரிமைகளைப் போன்றவை. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களை விட ஒரு படி உயர்வு உண்டு" என்கிறது இஸ்லாம்.

"பெண்ணுக்குக் காவல் இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் பிள்ளைகள்" எனப் பெண்ணின் சுதந்திரத்திற்குத் தடைபோடுகிறது மனுஸ்மிருதி.

ஆக,ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆணாதிக்கத்தின் கொடுமைகளுக்குப் பெண் ஆளாகியே வந்திருக்கிறாள்.அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன.கடந்த நூற்றாண்டில் இம்மண்ணில் தோன்றிய பெரியார் போன்ற சமூகச் சிந்தனையாளர்கள் பலர் பெண் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடினர்.அதன் பயனாய் இன்று பெண்கள் சம உரிமை பெற்று விளங்குகிறார்கள்.

சங்க காலத்தில் பெண்ணும் ஆணுக்கு நிகராக கல்வியறிவு பெற்று விளங்கினாள்.ஆனால் இடைக்காலத்தில் மதவாதிகள் மூடநம்பிக்கைகளைப் புகுத்தி பெண்கள் கல்வி பெற முடியாமல் செய்தனர்.பெண்கள் அஞ்சி,அடங்கி,ஒடுங்கி வாழும் நிலை ஏற்பட்டது.இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியா பல முனைகளிலும்  முன்னேற்றமடைந்து விட்டது.விரைவில் இந்திய தேசம் பெரிய வல்லரசாகிவிடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தேசத்தின் சரிபாதி மக்களாக பெண்களின் நிலை என்ன என்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய விஷயம். பெண்களின் சக்தி அளவிட முடியாதது.அதை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே பொருளாதாரத்தில் அவர்கள் தன்னிறைவு அடைந்து விடுவார்கள்.”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்” என்றார் மகாகவி பாரதி.இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் படித்துப் பட்டம் பெற்றதுடன் – சட்டசபைகளிலும்,நாடாளுமன்றங்களிலும் இடம்பெற்று நாடாளும் நிலைக்கு உயர்ந்துள்ளனர்.தொழில் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்வதோடு, தொழிற்சாலைகள் தொடங்கி அதில் பலருக்கு வேலை கொடுத்து வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள   பாங்கினைக்  காண முடிகிறது. கிராமப்புற மகளிர் கூட மகளிர் சுயஉதவிக்குழு மூலம்  கைத்தொழில்கள் செய்து மேன்மையுடன் வாழ்கின்றனர். விளையாட்டுத் துறையிலும் பெண்கள் சிறந்து விளங்கி நாட்டிற்கும்,வீட்டிற்கும் பெருமை சேர்க்கின்றனர்.


இவ்வாறு பெண் முன்னேற்றமானது பாராட்டுக்குரிய விஷயமாக இருப்பினும் பெண்ணியத்தைச் சில பெண்கள் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.பெண்ணியம் என்பது சமூக அமைப்பில் பெண்ணுக்குரிய உரிமைகள் ஒடுக்கப்படுவதை எடுத்துரைப்பது.பெண் பற்றிய புதிய கண்ணோட்டமும்,விழிப்புணர்வும் தான் பெண்ணியம்.இந்தப் புரிந்துணர்வு இல்லாதவர்கள் வீட்டை எதிர்ப்பது,திமிராக நடந்து கொள்வது,எதைக் கேட்டாலும் தெனாவட்டாகப் பதில் சொல்வது,முறைப்பிலேயே திரிவது என்பதையே பெண்ணியமாகக் கருதுகிறார்கள்.இன்னும் சிலரோ அடுத்தவர் கதையைப் பேசி character assassination ம் செய்கிறார்கள்.பெண்களைப் புனிதப்படுத்தி உயர்வான குணங்களை மட்டும் போற்றிப் பாராட்டித் தியாகச்சுடராக உருவகப்படுத்தும் நாம் இது போன்ற குணங்களையும் கொஞ்சம் உளவியல் ரீதியாக விவாதத்திற்கு உட்படுத்தினால் நல்லது.ஏனெனில் அப்படிப்பட்ட பெண்களையும் நாம் சந்திக்கத் தான் செய்கிறோம் – வாழ்க்கை முழுக்க இப்படி முரண்பாடானவர்களும் உடன் பயணிப்பார்கள் போல-என வருந்தத்தக்க அளவில்.”ஆணைப் புறக்கணித்து விட்டு ஒரு பெண்ணால் எந்தத் தீவில் போய் வாழ முடியும்.ஆணும்,பெண்ணும் இணையாமல் எந்த அற்புதங்களும் இங்கே சாத்தியம் இல்லை.” என்கிறார் எழுத்தாளர் ப்ரியா தம்பி தன்னுடைய “பேசாத பேச்செல்லாம்” நூலில்.ஒவ்வொரு பெண் மட்டுமல்ல ஆணும் படிக்க வேண்டிய அருமையான படைப்பு.ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் பெண்மனதைப் புரிந்து கொள்ள விரும்பும் எவரும் வாசிக்க வேண்டியது.
நம் சமூகத்தில் பெண்ணுக்கானத் தீர்வென்பது மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது மாதிரியான தீர்வுகள் தான்.என்னைப் பொறுத்தவரை பெண் என்பவள் எந்த நிலையிலும் தன்னுடைய சுயமரியாதையையும்,சுதந்திர உணர்வையும்,தனித்தன்மையையும்,Priorities ஐயும் விட்டுத்தரக் கூடாது.நம் முன்னோர்களின் திறமைகள்,ஆழ்ந்த சிந்தனைகள் அனைத்தும் DNA  மூலமாக நம்மை அடைகின்றன.அவர்களில் எத்தனையோ அறிவாளிகள்,சிந்தனாவாதிகள்,தத்துவவாதிகள் இருந்திருக்கிறார்கள்.நமக்குள் மகாசமுத்திரமே இருக்கிறது.இது இருபாலருக்கும் பொருந்தும்.ஆகவே எதிர்மறை விமர்சனம் செய்பவர்களை நட்பு வட்டத்திற்குள் வைத்திருக்கக்கூடாது.அவர்களால் உங்களை அறியாமல் ஒரு complex  உருவாகி விடும். .நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கனு பொய் சொன்னேன்என மொக்கை போடுபவர்களை எல்லாம் social network,real life எல்லாவற்றிலிருந்தும் block செய்து விடுவது உத்தமம்.

சென்ற வாரம் கொல்லம் எக்ஸ்பிரஸில் காலை 5 மணிக்கு கோவையிலிருந்து ஈரோடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன்.நான் இருந்த Cabinல் யாருமேயில்லை.ஆஹா! அதிகாலைக் காற்று,ஜன்னலோர ரயில்,MP4ல் ராஜா பாட்டு என அடுத்த 2 மணி நேரத்தை ஆனந்தமாய் அனுபவிக்கலாம் என்றெண்ணியபடி அமர்ந்தேன்...அந்த ரயில் பயணமே நாசமாகப் போவது தெரியாமல்.சற்று நேரத்திற்கெல்லாம் திடீரென்று எங்கிருந்தோ 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்தாள்.வந்தவள் கீழே குனியவும் luggage எடுக்கிறாள் போலிருக்கிறது எனக் காலை நகர்த்திக் கொண்டேன்.அவளோ டக்கென்று என் காலில் விழுந்து வணங்கினாள்.அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன்.பார்த்தால் பிச்சை எடுப்பவள் போலவும் தெரியவில்லை.சிரித்தபடி சென்று விட்டாள்.பின்னர் சில விநாடிகளிலேயே மறுபடியும் வந்து காலில் விழுந்தாள்.இம்முறை கொஞ்சம் காசு கொடுத்தேன்.எந்தச் சலனமுமின்றி வாங்கிக் கொண்டு சென்றாள்.உடனே திரும்பவும் வந்து காலில் விழுந்தாள்.எனக்கு எரிச்சல் வந்தது.இது தொடர்கதையாகிக் கொண்டிருக்கவே நான் தூங்குவது போல் பாசாங்கு செய்தேன்.இருப்பினும் அவள் என் காலில் விழுவதை நிறுத்தவேயில்லை.என் எரிச்சல் கோபமாக மாறியது.ஒரு முறை காலில் விழ வரும் போது போதும் எனக் கடுப்புடன் சொன்னேன்.ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவள் மேலிருந்த கோபம் அனுதாபமாக மாறியது.மனப்பிறழ்வுடைய அந்தப் பெண் எதனால் அப்படி ஆனாள்?எந்தச் சூழ்நிலை அவளை அந்த நிலைக்கு உள்ளாக்கியது?ஏன் என் காலில் விழுந்து வணங்கிக் கொண்டேயிருக்கிறாள்? என்று சிந்திக்கத் துவங்கினேன்.அவளிடம்,நீ யாரும்மா? எந்த ஊர்? என்று கேட்டேன்.ஒன்றும் கூறாமல் சிரித்தாள்.நீ ஒழுங்கா வீடு போய்ச் சேரும்மா என்றேன்.போய் விட்டாள்.பின் வரவேயில்லை.ஒரு பெண்ணை நம் சமுதாயம் எந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்றெண்ணி வருந்தினேன்.இந்தப் பெண் மட்டுமா?இன்னும் இவள் போன்ற எத்தனையெத்தனையோ பெண்கள் சாலைகளில் திரிகிறார்கள்.வீடுகளிலும் கூட இருக்கிறார்கள்.ஒரு பெண் இந்த உலகிடம் என்ன எதிர்பார்க்கிறாள்?அவளுக்கு என்ன தான் தேவை? புரிஞ்சுக்கவே முடியலையே எனப் புலம்புபவர்களிடம் பகிர்தலும்,புரிதலும் தான் பெண்ணுக்குத் தேவை எனச் சொல்லத் தோன்றுகிறது.
பெண்ணுக்குரிய இளகிய மனது ஆணுக்கு ஏன் இல்லை?எந்தப் பெண்ணாவது காதலிக்க மறுத்த ஆணின் முகத்தில் ஆசிட் அடித்திருக்கிறாளா? பிறகெப்படி ஆணால் மட்டும் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்க முடிகிறது?முதல் காதலனையோ/காதலியையோ தான் மணமுடிக்க வேண்டுமெனில் இங்கு பெரும்பாலோருக்குத் திருமணமே ஆகியிருக்காது.என்றாலும் கூட நேசத்துக்குரியவர் எங்கிருப்பினும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுவது தானே அந்தக் காதலுக்கே அழகு.அதை விடுத்து எனக்குக் கிடைக்காதவர் வேறு எவருக்குமே கிடைக்கக்கூடாது எனக் கருதுவது மடமையல்லவா? தளபதி படத்தில் அரவிந்த்சாமியைக் கொல்லும் படி மம்மூட்டி ரஜினியிடம் சொல்வார்.ரஜினி தயங்கவே,”ஓஹோ உன் நேசத்துக்குரியவள் இப்போது அவன் மனைவி.அதனால் தானே மறுக்குற?” எனக் கேட்பார் மம்மூட்டி.என்ன ஒர் அருமையான காட்சி அது.ப்ரணயம் என்ற மலையாளப் படத்தில் ஜெயப்ரதா தன் முன்னாள் கணவர் அனுபம்கெரை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பார்.பின்னர் மோகன்லாலைத் திருமணம் செய்திருந்த ஜெயப்ரதாவுக்கு அனுபம்கெரை பார்த்த நொடியில் பழைய ப்ரியம் எட்டிப் பார்க்கும்.’என்னை விட்டுட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேல்ல’ எனக் காயப்படுத்தும்படி எதையும் அனுபம்கெர் கேட்க மாட்டார்.ஆச்சர்யம் என்னவென்றால் மோகன்லால் மீதும் நட்போடு இருப்பார்.அவர்கள் மூவருக்குமிடையே மலரும் அழகான அன்பு கவிதையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.


உறவுகளைக் கையாள்வதில் பெண்கள் திறமையானவர்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உறவுகளைக் கையாண்ட அனுபவம் பெண்களிடம் இருக்கிறது.இருப்பினும் நட்பைப் பொறுத்தவரை ஆணுக்குச் சாத்தியப்படுவது பெண்களுக்கு மட்டும் எந்த வயதிலும் ஏன் சாத்தியப்படுவதே இல்லை?ஆண் சொல்வதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியும் பெண்ணால் இன்னொரு பெண் சொல்வதை ஏன் ஏற்க முடியவில்லை?இந்த நவீன யுகத்தில் கூட பெண்ணின் ஆத்மார்த்த நட்பு என்பது வெகு சில தான்.ஆண் தனது நண்பனுடன் மணிக்கணக்கில் போன் பேச,நண்பன் டூர் ப்ளான் செய்தால் உடனே சேர்ந்து கொள்ள,நண்பனின் கல்யாணத்துக்கு ஓடி ஓடி உழைக்க,நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றால் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஒடிப் போய் உதவி செய்ய...என எவ்வளவோ முடிகிறது.ஆனால் பெண்ணுக்கு இதில் ஒன்றைச் செய்வதற்குக் கூட முடிவதில்லை.காரணம்...சூழ்நிலையா?நேரமின்மையா?உரிமை மறுக்கப்படுகிறதா? பரந்த பார்வையும்,சகப்பெண்களுக்கு அங்கீகாரம் வழங்குவதன் மூலமும் ஓர் பெண்ணாலும் நட்பைக் கொண்டாடவும்,தொடரவும் முடியும்.

வாழ்க்கை என்னை ரணப்படுத்தித் தோல்விகளைப் பரிசளிக்கும் போதெல்லாம் பெண்களே என்னைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். பெண்களாலேயே கவனப்படுகிறது வாழ்க்கை...பெண்களாலேயே அர்த்தப்படுகிறது உலகம்...உண்மையில் பெண்ணின் அன்பிற்கு முன்னால் எல்லாமும் தோற்றுப் போகிறது...எல்லாமும்...
.

Thursday, 19 October 2017

பயணங்கள் முடிவதில்லை!


நம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் எவையெனத் திரும்பிப் பார்த்தால் அவற்றுள் பெரும்பான்மையானவையாகப் பயணங்களே திகழ்கின்றன.அதிலும் குறிப்பாகப் பால்யத்தில் பெற்றோருடன் சென்றவையும்,பருவத்தில் நண்பர்களுடன் சென்றவையும் மறக்க முடியாதவை.கடைசியாக நீங்கள் பயணம் சென்றது எப்போது?ஒரு நிமிடம்! பயணமும்,சுற்றுலாவும் ஒன்றல்ல.சுற்றுலா கேளிக்கைகாகச் செல்வது; பயணமோ பூமியின் அழகை,வடிவத்தை,அதன் அந்தரங்கத்தை மிக அருகில் நின்று உணர்ந்து ரசிப்பது.அநேகமாகப் பயணம் செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்த்தாலும் ரசிப்புத்தன்மையும்,கூர்ந்த நோக்கும் கொண்டவர்களால் மட்டுமே அதன் நோக்கத்தை அடைய முடியும்.பயணங்கள் - பரபரப்பான இயந்திர வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய நவீனயுக மனிதனை ரீசார்ஜ் செய்யும் கருவி.நம்மை நாமே புதுப்பித்துக் கொள்கிற மாமருந்து.இந்த விஞ்ஞான யுகத்தில் 24 மணி நேரம் கூடப் போதவில்லை எனக் கடிகார முட்களை விட வேகமாகச் சுழன்று கொண்டிருக்கும் மனிதனை செப்பனிட இயற்கை வழங்கிய கொடை.பயணத்தின் போது நாம் அடையும் அனுபவம் அலாதியானது.முதல் அனுபவமாக நாம் ரயிலோ,விமானமோ ஏறும் போது நம் அடையாளம் அற்றுப் போகிறது.’எத்தனையோ பயணிகளில் நானும் ஒருவன்’ என்ற நிலை வந்து விடுகிறது.புதிய வாழ்க்கையை,மாற்று இடத்தைப் பார்க்கும் போது மனசு மாற ஆரம்பிக்கிறது.
பயணங்களால் பல புதிய வணிகப்பாதைகள் தோன்றின.இது உலக மக்களிடையே ஒரு கலாசார,பண்பாட்டுத் தொடர்பை ஏற்படுத்தியது.இந்த மாற்றம் பயணங்களை ஊக்கப்படுத்தியது.பொங்கி வரும் கடல் அலைகளும்,மலைமுகடுகளின் ஊடே வந்து நம்மைத் தழுவிச் செல்லும் மேகக்கூட்டமும்,இதமான தென்றல் காற்றும் மனிதனின் கோபம்,கவலை,மனஅழுத்தம் ஆகியவற்றைப் போக்கும் வல்லமை கொண்டவை எனக் கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள்.பயணம் ஒருவரின் குணாதிசயத்தையே மாற்றி விடும் இயல்பு கொண்டது.உங்கள் குடும்பத்தோடு பயணம் செல்லும் போது ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா?எப்போதும் குறைவாகப் பேசும் உங்கள் மகன் உங்களுக்கு நெருக்கமாகியிருப்பான்.உங்களை விட்டு இரண்டடித் தள்ளியே இருக்கும் உங்கள் மகளும் நெருக்கமாகியிருப்பாள்.பயணம் மனதை விசாலமாக்குகிறது என்கிறார்கள் அறிஞர்கள்.


பயணத்தின் மீது விவரம் தெரியாத வயதிலிருந்தே எனக்கு நாட்டம் அதிகம்.”பெரியவனாக இருந்தால் எவ்வளவோ பயணங்கள் போகலாமே...இன்னும் சிறுவனாகவே இருக்கிறோமே” என மனது கிடந்துத் தவிக்கும்.”தெருவில் இறங்கக் கூடாது” என்ற அம்மாவின் எச்சரிக்கையையும் மீறி வெளியே சென்று பார்த்தால் தான் என்ன? என்கிற ஆர்வம் சிறுவயதிலிருந்தே துவங்கி விட்டது.நம் தெருவுக்கு அப்பால் உலகம் எப்படி இருக்கும் என்ற தேடலும்,புரியாமையும் மனதிற்குள் உழன்று கொண்டே இருந்தது.ஒரு முறை ஆசை எல்லை கடந்து விடவே என் நண்பனுடன் யாருக்கும் தெரியாமல் பக்கத்து கிராமத்துக்குச் சைக்கிளில் பயணமானேன்.ஆக திட்டமில்லாத என் பயணம் பால்யத்திலேயே துவங்கி விட்டது.மிகுந்த பரவசத்துடனும்,பயத்துடனும் நான் மேற்கொண்ட அப்பயணத்தின் நினைவு ஆற்றுக்குள் போடப்பட்ட கூழாங்கல் போல் என் மனதின் அடியாழத்தில் கிடக்கிறது.நான் வீடு வந்து சேர்வதற்குள் நான் சிறுபயணம் சென்ற செய்தி வீடு வந்து சேர்ந்து விட்டிருந்தது.அதற்காக என் தாத்தா கடிந்து கொண்டதும்  ஞாபகத்தில் உள்ளது.பள்ளியிலும்,கல்லூரியிலும்,புத்தகங்களிலும் நான் கற்றுக் கொண்டதை விடப் பயணங்களே வாழ்வு பற்றிய புரிதலை எனக்கு அதிகமாகக் கற்றுத் தந்திருக்கிறது.பயணத்தின் போது கண்ணில் அடங்காமல் காட்சிகள் கரைமீறித் ததும்பும் பேரானந்தத்தை அனுபவித்திருக்கிறேன்.பயணங்களை நினைவுகூரப் புகைப்படங்கள் அவசியமே.ஆனால் அதையே முழுநேரத் தொழிலாக வைத்திருக்க மாட்டேன்.காரணம் பயணத்தின் நோக்கம் சிதையக்கூடும் என்னும் அச்சம் தான்.அதே சமயம் இடையிடையே படங்கள் எடுத்துக் கொள்வதுடன் சில அரிய நிகழ்வுகளையும்,காட்சிகளையும் தவற விடவும் மாட்டேன்.இந்திய ரயில்வேத்துறையின் “மஹாராஜா எக்ஸ்பிரஸ்” பற்றி ஒரு கட்டுரை படித்தேன்.ஒரு அரண்மனையில் அரசர் அனுபவிக்கும் சொகுசுகளை ஓடும் ரயிலில் தருவதே அதன் தனித்துவம்.மொத்தம் 88 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய நகரும் சொர்க்கம் அது.மிக ரசனையான வடிவமைப்பு,வியக்க வைக்கும் இருக்கைகள்,தங்கத்தட்டில் உணவு பரிமாறப்படும் இந்திய மற்றும் சர்வதேச உணவகங்கள் என ரயிலில் ஒரு ராஜவாழ்க்கை.இந்த ரயிலில் எப்படியாவது பயணம் போய்விட வேண்டுமென்று நண்பர்களுடன் அவ்வப்போது உரையாடுவதுண்டு.தவிர நீண்ட கடற்பயணம் போகவேண்டுமென்பது என் நீண்ட நாள் கனவு.விரைவில் நிறைவேறுமென்று நம்புகிறேன்.
தமிழின் சிறந்த பயணக்கட்டுரைகள் எழுதியவர்களாக நான் கருதுபவர்கள் : ஏ.கே.செட்டியார்,மணியன்,இந்துமதி மற்றும் லேனா தமிழ்வாணன்.மிகவும் விரும்பிப் படித்த புத்தகம் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி.பதின்வயதில் தன் பயணத்தைத் துவங்கியவர் தேசம் முழுவதும் சுற்றியலைந்து தான் கற்றுக் கொண்டதையும்,பின்பற்றுவதையும்,நினைவில் வைத்திருந்ததையும் தொகுத்து எழுதியதே இப்புத்தகம்.சென்று வந்த இடங்களைப் பற்றிய பயணக்கட்டுரைகளாக எழுதாமல் அவ்விடங்களை அடைந்த போது நேர்ந்த சிலிர்ப்புகளை சிலாகித்து அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.”உலகம் என் வீட்டு வாசல்படியில் இருந்து தான் துவங்குகிறது.தெருக்கள்,கிராமங்கள்,நகரங்கள்,கடல்,மலை என்று உலகம் தன்னை எத்தனையோ கிளைகளாக விரித்துக் கொண்டு இருந்த போதிலும் எனது பயணத்தில் அவை கண்ணுக்குத் தெரியாத ஒரு சங்கிலியால் என் வீட்டோடு சேர்த்து பிணைக்கப்பட்டு இருப்பதாகவே உணர்கிறேன்” என்கிறார்.


வெள்ளியங்கிரி மலை
“தென்கயிலாயம்” என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறியதை வாழ்வில் மறக்கவே முடியாது.கிட்டத்தட்ட இமயமலையில் கால்வாசி உயரமுள்ள வெள்ளியங்கிரி மலையை முதல்முறையாக நானும்,பள்ளி நண்பன் முருகானந்தமும் ஏறினோம்.எந்தத் திட்டமிடலுமில்லாமல் சென்றதால் ஏழுமலையையும் ஏறமுடியாமல் நேரமின்மை காரணமாக ஐந்தாவது மலையுடனேயே திரும்ப வேண்டியதாயிற்று.இரண்டாவது  முறை சரியான திட்டமிடலுடன் நாங்கள் இருவரும் இன்னொரு நண்பன் வெங்கியுடனும் மற்றும் முருகானந்தத்தின் மூன்று நண்பர்களுமாக மொத்தம் ஆறு பேர் மலையேறினோம்.முதல் மலைப்பகுதியில் சுற்றிலும் அடர்ந்த காடு.வெயிலை மறைக்கும் இலைகள் கொண்ட வலுவான மரங்கள் இருமருங்கிலும் இருந்தாலும் காற்று வீசாத காரணத்தால் புழுக்கம் அதிகமாகவே இருந்தது.இரண்டாவது மலையில் மூங்கில்கள் அதிகம் காணப்படுகின்றன.வானரங்களும் இம்மலைப்பகுதியில் கொஞ்சம் அதிகம்.நம் கையில் கம்பு இருப்பதால் நம்மை அவை அவ்வளவாகத் தொந்தரவு செய்வதில்லை.இரண்டாவது மலையின் பாதித் தொலைவில் எங்கிருந்தோ வந்த நாய் எங்களுடன் சேர்ந்து கொண்டது.எங்களின் வழிகாட்டியாகவே மாறியது.மலையின் முடிவில் சுனை வரும் பாதையில் வழுக்குப்பாறை எனப்படும் பிரதேசத்தில் பாறையிலேயே படிகள் போன்ற அமைப்பை வெட்டி உருவாக்கியிருக்கின்றனர்.இரண்டாவது மலை முடிந்து மூன்றாவது மலை ஆரம்பித்தவுடன் சில்லென்ற காற்று தழுவிக்கொள்ள மயங்கிப் போனேன்.அதுவரை வந்த களைப்பு அனைத்தையும் துடைத்தெறிந்துச் செல்கிறது மேற்குத்தொடர்ச்சி மலைக்காற்று.மலையேற்றத்தை முழுவதுமாக ரசித்ததுடன் மட்டுமல்லாமல் லயித்தும் போனேன் – உடலாலும்,மனதாலும்.மூன்றாவது மலையேற்றம் முழுவதுமே மலைவனம் நம்மை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதை உணர முடிந்தது.இந்த மலைப்பிரதேசத்தில் செல்போன் எடுக்கவில்லை.தினசரி பேப்பர்கள் கிடையாது.சுற்றிலும் மலை மட்டுமே உள்ளது.பகலும்,இரவும் முழுமையாக வந்து போகின்றன.சில்வண்டுகளின் ஒலிகள்,பறவைகளின் ஒசை,எங்கோ வனவிலங்கின் இருப்புணர்த்தும் சத்தம்,இலைவழியூடுருவும் காற்றின் இசை,பச்சையின் மணம்,நீள்விரிந்து பரவும் வனத்தின் எழில் என்று இயற்கையின் பார்வை,நுகர்ச்சி,கேட்பது,உணர்வது என்று நம்மில் கலந்து நாம் அதில் கரைந்து மறைவது என்பது ஆஹா!


நான்காவது மலையில் விரைந்து செல்லும் மேகங்களும்,சற்றே சமதளப் புல்வெளியும்,செதுக்கினாற் போன்ற நடைபாதையும்கிளர்ச்சியுறச் செய்கின்றன.சடசடவென ஐந்து நிமிடம் பொழிந்த மழையைத் தொடர்ந்து அடர்ந்த மேகங்கள் நம்மைக் கடக்கும் போது மூன்றடி தூரத்தில் நின்ற நண்பர்களைப் பார்க்க முடியவில்லை.அடுத்த சில நிமிடங்களில் வீசியடித்த காற்று தடுமாற வைத்தது.ஒரு நாழிகைப் பொழுதில் இவ்வளவு மாற்றங்களா?இயற்கையின் மாயாஜாலமே தனி தான்.ஐந்து மற்றும் ஆறாவது மலைகள் கடப்பதற்கு இலகுவாக இருந்தது.செல்லும் வழியில் சிறுவாணி அணையையும்,அருவியையும் காணக் கண்கோடி வேண்டும்.ஏழாவது மலையானது முழுக்க முழுக்க பாறை மீதே ‘திகில்’ பயணம்.உச்சியை அடைந்த பின் ஏற்படும் உணர்வு இருக்கிறதே அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.ஏறுவதை விட இறங்குவது கூடுதல் சிரமமாக இருந்தாலும் வெள்ளியங்கிரிப் பயணம் கொடுக்கும் ஏகாந்தத்திற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம்.
நைனிடால்
நான் Bsc(Agri) படித்துக் கொண்டிருக்கும் போது கடைசி வருடம்,கடைசி செமஸ்டர் ‘All India Tour’ அழைத்துச் சென்றார்கள்.அது எங்களுக்கு ஒரு subjectம் கூட.என் வாழ்வில் இது வரை நான் மேற்கொண்ட பயணங்களிலேயே அது நீண்ட நாள் பயணம் மட்டுமல்ல,நீண்ட ரயில் பயணமும் கூட.ஒரு மாதப் பயணமானது சென்னை centralல் துவங்கியது.பயணங்களில் ரயில் பயணம் எப்போதுமே ஸ்பெஷல்.டெல்லி,ஆக்ரா,ஜெய்ப்பூர்,ஹைதராபாத் எனப் பல இடங்களுக்குச் சென்றாலும் நைனிடால் சென்றது இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது.நாங்கள் நைனிடால் சென்றடைந்த போது இரவு ஒன்பது மணி ஆகி விட்டது.குளிர் என்ற வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை அங்கு தான் உணர்ந்தேன்.நரம்புகளை ஊசியால் செருகுவது போன்று துளைத்தது.பயணத்தின் போது நான் கண்ட எத்தனையோ அற்புதமான இடங்கள்,அதிசயமான சிற்பங்கள்,அரண்மனைகள் யாவும் அந்த நிமிடத்தில் அர்த்தமற்றுப் போனது.ஏண்டா இந்தப் பயணம் வந்தோம் என்றெண்ணும் அளவுக்கு குளிர் வாட்டியெடுத்தது.ஒரே ஓட்டமாக ஒடி எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று கம்பளியைப் போர்த்திக் கொண்டு சுருண்டு விட்டேன்.குளிர் தன் அகன்ற கைகளால் எழுப்பி விட்டது போன்றதொரு பிரமை.எழுந்து உட்கார்ந்தேன்.பின் தூக்கமும் வரவில்லை.குளிர் எப்போதோ நான் மறந்து போன பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டதால் தூங்க நெடுநேரமானது.நைனிடாலின் விடிகாலை மிக ரம்மியம்.அந்தப் பனிக்காலம்  நேற்று வரை உலகின் மீது படிந்திருந்த கசடுகள் யாவையும் துடைத்து ஊரைச் சுத்தப்படுத்தியது போலிருந்தது.விடிகாலை ஆறுமணிக்கும் கூட வெளிச்சமேயில்லை.புகைமூட்டம் போல எங்கும் குளிர்காற்று.நான் அணிந்திருந்த கம்பளியாடைகளைத் தாண்டி குளிரால் நுரையீரல் நடுங்கத் துவங்கியது.இங்கிலாந்தின் சீதோஷ்ணம் போலவேயிருக்கும் நைனிடாலுக்கு வெள்ளைக்காரர்கள் இருநூறு வருடங்களுக்கு முன்பாகவே வந்து குடியேறி விட்டார்கள்.சரிவுகளில் உள்ள மரவீடுகளின் கூம்பு வடிவமுள்ள புகைபோக்கிகள் லண்டனை நினைவுபடுத்துகின்றன.மெதுவாக காலை விடிந்து இயக்கம் ஆரம்பித்திருந்தது.நானும் நண்பர்களும் சூடாகக் காபி குடித்து விட்டு மிகப்பெரிய நைனிடால் ஏரியைச் சுற்றி வலம் வந்தோம்.ஏரியைச் சுற்றிலும் படர்ந்திருந்த பனி மெதுவாக விலகிக் கொண்டிருந்தது.அன்றைய இரவு நெருப்பை உண்டாக்கிக் கொண்டு குளிர் காய்ந்தோம்.நெருப்பின் அருகில் அமர்ந்த போது தான் குளிரின் தாக்கத்தை உணர்ந்தேன்.கைகளை நெருப்பருகே காட்டிய போதும் கைகளில் உஷ்ணம் ஏறவேயில்லை.எத்தனையோ ‘மலைவாசஸ்தலங்’களுக்குச் சென்றிருந்தாலும் இந்தச் சொல்லுக்கான அர்த்தம் என்வரையில் நைனிடால் தான்.
குற்றாலம்
எப்போது குற்றாலத்தை நினைத்தாலும் அருவியின் சப்தமும்,ஈரவாடையும்,குரங்குகளும் நினைவில் எழத்தானே செய்கிறது.நீங்கள் குற்றாலம் போயிருப்பீர்கள்.மலையின் உச்சியில் உள்ள தேனருவி வரை சென்றிருக்கிறீர்களா?நான் போயிருக்கிறேன்.MBA படிக்கும் போது நாங்கள் பத்து நண்பர்கள் குற்றாலம் சென்றோம்.குற்றாலம் வெறும் ஊரென்று சொல்லி விட முடியாது.அது மழையின் தாழ்வாரம்;நீரின் கேளிக்கை அரங்கம்;அருவியின் திருவிழா.சாலைகள் எங்கும் தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்க,ஈரவீடுகள், ஈரமரங்கள், ஈரத்தில் நனைந்த பறவைகள், ஈரவிடுதிகள், ஈரம் படிந்த பழங்கள், ஈரத்தில் நனைந்த பேச்சு, ஈரத்தில் நனைந்த சிரிப்பு என ஊரே நீரின் பரவசத்தில் திளைத்து நிற்கிறது.91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி பின்பு கீழே பாயும் பேரருவியில் குளித்தோம்.குளித்த பின் பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும்,மூலிகைப்புதர்களும்,அரிய வனவிலங்குகளும்,பறவைகளும் நிறைந்த மலையில் இரண்டு கிலோமீட்டர் கடந்து செண்பகாதேவி அருவியை அடைந்தோம்.தேனருவியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் கொட்டும் செண்பகாதேவி அருவியில் அடுத்த குளியல்.ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு குணம் கொண்டது.அதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட அதனிடம் நம்மை ஒப்படைப்பது மட்டும் தான் அதில் நாம் ஒன்று கலப்பதற்கான ஒரே வழி! செண்பகாதேவி வரையிலும் தான் வழித்தடம் ஓரளவு நடக்கக்கூடிய நிலையில் இருந்தது.அங்கிருந்து தேனருவி செல்லும் இரண்டு கிலோமீட்டரும் ஆபத்தான பாதை.சமதளமில்லாத வழியில் பாறைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தான் ஏற முடியும்.சில இடங்களில் பாறைகளில் கீழே இறங்கி,ஆங்காங்கே வழியில் ஓடுகின்ற ஓடைகளைக் கடந்து,சிறுசிறு பாறைகளில் குதித்துத் தாவி அதற்குப் பிறகு மீண்டும் மேலே ஏறித்தான் சென்றோம்.சென்று கொண்டிருக்கும் போதே திடீரெனச் சாரல் அடித்தது.எங்கிருந்தெனத் தெரியவில்லை.பிறகு தான் சற்றுத் தொலைவில் - 150 அடி உயரத்தில் இருந்து நேராகத் தண்ணீர் விழுந்து அங்கிருந்து வீசும் தேனருவிச் சாரல் எனப் புரிந்தது.குற்றாலச் சாரலில் நனைவது சுகமென்றாலும் தேனருவிச் சாரலில் நனைவது something special.எவ்வளவோ காலத்துக்குப் பிறகு சமீபத்தில் குற்றாலம் சென்ற போது நிறைய மாற்றங்கள் வந்து விட்டுருப்பதைக் கண்டேன்.நம் கண்ணுக்கு தெரியாமலே உலகத்தில் உள்ள அனைத்தையும் காலம் நகர்த்திக் கொண்டேயிருக்கிறது.பாதைகள் - தூர்ந்து போவதும்,புதுப்பாதைகள் உருவாவதும்,மரங்கள்-இலையுதிர்ப்பதும்,காய்ப்பதும்,பறவைகள்-கூடு கட்டுவதும்,பறந்து போவதும்,மனிதன்-ஜனிப்பதும்,மரணிப்பதும் போன்றே நிகழ்கின்றன.


சிங்கப்பூர்
சிறுவயதில் என் தந்தை எங்கள் அனைவரையும் சென்னை–திருப்பதி அழைத்துச் சென்றது தான் என் முதல் விமானப் பயணம்.முதல் வெளிநாட்டுப் பயணம் சென்றது சிங்கப்பூர்.நடுஇரவில் Singapore Airlines ல் பயணம் துவங்கியது.விமானம் Takeoff ஆனதும் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு-இளையராஜாவின் பாடல்களைக் கேட்டபடியே பறந்து கொண்டிருந்தேன்.சிறிது நேரம் கழித்து ஜன்னலுக்கு வெளியே தெரியும் இருண்ட வானத்தைப் பார்த்தேன்.தொலைவில் ஒளிரும் விளக்குகளின் அடியில் ஏதோ ஒரு நகரம் உறங்கிக் கொண்டிருந்தது.நாளை இந்நேரம் சிங்கப்பூரில் இருக்கும் அந்தச் சந்தோஷத்தை விடவும் அதைப் பற்றி நினைத்துக் கொள்ளும் இந்த விநாடியின் சந்தோஷமே பெரியதாகத் தோன்றியது.நேபாள்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,தாய்லாந்து,ஓமன்,இலங்கை,ஈரான் போன்ற நாடுகளுக்கு நான் பயணித்திருந்தாலும் பயணம் போகிறவர்களின் சொர்க்கபூமி என்று சிங்கப்பூரைச் சொல்வேன்.ஏனெனில் பயணத்தைப் பல விஷயங்களையும் கற்றுத் தருகிற ஒரு தேடலாகவே நான் கருதுகிறேன்.சிங்கப்பூரில் மேற்கொள்ளும் பயணம் நமக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது.சுத்தம்,நேரம் தவறாமை,உழைப்பின் அருமை ஆகியவற்றின் அவசியத்தை சிஙகப்பூர் எனக்குக் கற்றுத் தந்தது.தமிழை ஒரு தேசிய மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில் தமிழுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டில் நாம் தருகிறோமா என்னும் சந்தேகம் எழுந்தது.பல்வேறு தமிழ்ச்சங்கங்களின் மூலம் தமிழை வளர்க்கிறார்கள்.தூய தமிழில் பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு அற்புதமான நூலகத்தை நிர்மாணித்திருக்கிறார்கள்.நான் அவற்றுள் பல நூலகத்துக்கும் சென்று படித்தேன்.அங்கு கிடைக்காத நூல்களே இல்லை எனலாம்.     சிங்கப்பூரின் புகழ் வாய்ந்த சென்டோசா தீவுக்குச் செல்லாமல் திரும்பி விட்டால் நீங்கள் சிங்கப்பூர்  சென்றதாக அர்த்தம் கொள்ள முடியாது.நண்பர்களுடன் நான் மேற்கொண்ட சென்டோசா தீவுப் பயணம் கேபிள் காரில் துவங்கியது.அவ்வளவு உயரத்தில் செய்த சிலிர்ப்பூட்டும் பயணத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்கும்.பறவைப் பார்வையில் சிங்கப்பூர் முழுவதையும் கண்டுகளித்ததுடன் நீந்தும் கப்பல்களை வானில் நீந்தியபடி ரசித்தேன்.தீவிலுள்ள மயிர்கூச்செரியும் “நீர் விளையாட்டுகள்” மிகவும் பிரசித்தி பெற்றவை.நல்ல நண்பர் குழாம் அமைந்ததால் ஒரு விளையாட்டையும் தவற விடவிடாமல் கொண்டாடி விட்டு அட்டகாசமான நினைவுகளுடன் கிளம்பினோம்.
எல்லாவற்றையும் விட சக மனிதநேயமே தேசத்தை மேம்படுத்தும் என நம்பும் சிங்கப்பூரின் Tagline: “Courtesy is our way of life”
இலங்கை
இலங்கையில் நடைபெற்ற ஒரு மேலாண்மைக் கருத்தரங்கில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினேன்.கருத்தரங்க ஏற்பாட்டாளர்களே கருத்தரங்கம் முடிந்தவுடன் ஒரு வாரம் இலங்கையைச் சுற்றிப்பார்க்கும் பயணம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.துபாயிலிருந்து இந்தியா செல்லும் போது பலமுறை இலங்கை வழியாகப் பயணித்ததுண்டு.அப்போது இலங்கையின் பசுமையை வானிலிருந்தே கண்டு வியந்திருக்கிறேன்.இந்த முறை நேரிலேயே கண்டு அசந்து போனேன்.கடலோரத்தில் சொகுசுப் பேருந்தில் மேற்கொண்ட பயணம் இன்றளவும் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டது.கொழும்புவில் ஆரம்பித்த எங்கள் பயணம் கண்டி,கதிர்காமம் என முக்கியமான பகுதிகளிலும்,கடலோர கிராமங்களின் வழியாகவும் நீண்டது.அதிவேகப் படகுச்சவாரிகள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாக,குதூகலமாக அமைந்தது.


சீதையை இராவணன் சிறை வைத்திருந்ததாகச் சொல்லப்படும் நுவாரா என்னும் இடத்துக்குச் சென்றோம்.காட்டு அருவியும்,அடர்ந்த மரங்களும்,பகலும்...இரவும் கேட்டுக்கொண்டே இருக்கும் பூச்சிகளின் சத்தமும்,கைதொடும் உயரத்தில் போகும் மேகங்களும் நவீன வாழ்வின் தடயங்கள் அத்தனையையும் அழித்து இயற்கையோடு கூடிய வாழ்வைச் சாத்தியமாக்கிக் கொண்டிருந்தன.அப்போது பறித்த பழங்கள்,தூய்மையான காற்று,நெருக்கடி துளியும் இல்லாத பரந்த வெளி,நிழல் விரிந்த மரஙகள்...அதியற்புதம்.இலங்கையில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று – பயணம் வருபவர்களுக்காக மிகவும் ரசனையுடன் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகள்.ஒரே மாதிரி இல்லாமல் சில நவீனத்துடனும்,சில பழமையுடனும்,சில மேற்கத்தியப்பாணியிலும்,சில மரங்களாலும்,சில கடலோரப்பகுதிகளிலும் அமைந்திருந்தது.விடுதிச் சுற்றுலாப்பயணம் வந்துள்ளோமோ என மயங்க வைத்தது.தமிழ்மொழியைக் கொண்டாடும் தமிழர்களைக் காணப் பெருமையாக இருந்தது.தமிழீழம் கோரும் இந்த எளிய மனிதர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு சிறிய ஆதரவான புன்னகையைத் தான்.அது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல,நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையின் ஒளிக்கீற்று.



பூமிப்பந்து ஒன்றே.உணவு,உடை,மொழி,கலாச்சாரத்தை வைத்து எல்லைகளை வகுத்துக்கொண்டது மனிதர்கள் தான்.எல்லை  வேறுபாடு கடந்து அந்த மனிதனிடம் பிணைப்பை உண்டாக்குபவை பயணங்கள்.உலகநாடுகளுக்குப் பயணம் போவது மெச்சத்தகுந்ததெனினும் ஒரு முறையேனும் இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணம் போய்ப் பாருங்கள்.உங்கள் பார்வை மாறும்.வரலாறு புரியும்.ஒரு சிறு உயிரினம் கூடத் தன் இடத்தை விட்டு நகர்கிறது.நாம் தான் ஒரு இடத்தை விட்டு நகர்வதற்குத் தயங்குகிறோம்.வீட்டை விட்டுக் கிளம்பிய பின் பறவையாய் மாறுங்கள்.வீட்டை மறந்து விட்டு நம் ஆளுமையை மேம்படுத்தும் பயணத்தைக் கொண்டாடுங்கள்.
கவிஞர் பிரமிளின் கவிதை ஒன்று இருக்கிறது...
“சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று                     
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.”
என் விருப்பமும் அது தான்!
                                                         
 








Friday, 15 September 2017

மது எனும் திமிங்கலம்

2012 நவம்பர் மாதம் Facebookல் நண்பர்களின் Postஐ ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருந்த போது தான் திடீரென ஞாபகம் வந்தது...ஆஹா எதிர்வரும் டிசம்பர் மாதம் நண்பர் அமீருக்குப்(பெயர் மாற்றம் செய்திருக்கிறேன்) பிறந்த நாள் அல்லவா?-என்று.என்ன தேதியென்று மறந்து போனதால்...சரி அவரது FB பக்கத்துக்குச் சென்று பார்ப்போம் என விசிட் செய்த போது வாழ்வின் மிகப்பெரிய அதிர்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது.அமீரின் படத்தைப் Post செய்து கீழே RIP என்று யாரோ எழுதியிருந்தார்கள்.உடனே அவர் பேராசிரியராகப் பணிபுரியும்...மன்னிக்கவும்...பணிபுரிந்த கல்லூரியின் முதல்வருக்குப் போன் செய்து,”ஸார்,நான் துபாயிலிருந்து பேசுகிறேன்.அமீரின் நண்பர்.அவருக்கு என்னவாயிற்று?” என்று கேட்டேன்.”அவர் ஆகஸ்ட் மாதமே மஞ்சள்காமாலை நோயினால் இறந்து விட்டாரே” என்றார்.பின்னர் அமீரின் நெருக்கமான நண்பர்களைத் தேடிப்பிடித்து போன் செய்த போது தான் முழு விவரமும் தெரிய வந்தது.அமீருக்கு குடிப்பழக்கம் உண்டு.வாரத்திற்கு ஒன்றிரண்டு முறை குடிப்பார்.ஒரு நாள் அவருக்கு வயிறு தொடர்ந்து வலித்துக் கொண்டிருக்கவே மருத்துவரைச் சநதிக்கலாம் எனக் கிளம்பும் போது அவரது மனைவி வந்து மகள் பூப்படைந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லியிருக்கிறார்.அவ்வளவு தான்,அமீருக்கு வயிறு வலி மறந்தே போனது.சுற்றத்தாருக்கும்...நண்பர்களுக்கும் செய்தி சொல்வதிலும்,விழாவிற்கு ஏற்பாடு செய்வதிலும் பிஸியாகிப் போனார்.செய்தியறிந்து வந்த நண்பர்கள் party வேண்டும் என்று அவரிடம் கேட்டிருக்கின்றனர்.சந்தோஷ மிகுதியில் partyக்கு ஏற்பாடு செய்த அமீர் தன்னை மஞ்சள்காமாலை நோய் தாக்கியிருப்பதை அறியாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டுச் சுருண்டு விழுந்திருக்கிறார்.எங்கெங்கோ கொண்டு போய்-என்னென்னவோ வைத்தியம் செய்து பார்த்தும் பலனில்லாமல் இறந்து போய் விட்டார்.அவரை நம்பி அவரது வயதான தாயார்,பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருக்கும் மனைவி,ஒரு மகள்,இரண்டு வயதே நிரம்பிய ஒரு மகன் உள்ளனர்.அமீரை அடக்கம் செய்யத் தூக்கிய போது,”அப்பா,தூங்கிக்கிட்டிருக்காங்க,கீழே வைங்க”,எனத் தனது தந்தை இறந்து போனது கூடத் தெரியாமல் அவர் மகன் சொன்னதாகக் கேள்விப்பட்டதும்,என் கண்கள் குளமாகியது.மிகவும் கட்டுப்பாடு நிறைந்த அமீரின் இஸ்லாமியக் குடும்பம் இப்போது எங்கிருக்கிறது என அவருடன் கடைசியாகச் சேர்ந்து குடித்த ஒருவருக்கும் தெரியவில்லை.பிறகு யாராரிடமோ விசாரித்த போது எங்கோ நாகூர் பக்கம் செட்டிலாகி விட்டனர் என்பது மட்டும் தெரிந்தது.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம்,”திரையுலகில் உங்களின் நெருங்கிய நண்பர்கள் யார்?” என நிருபர் கேட்ட போது,”உயிரைக் கொடுக்கக்கூடிய அல்லது உயிரை எடுக்கக்கூடிய நண்பர்கள் எவரும் எனக்குத் திரையுலகில் கிடையாது.ஏனெனில் எனக்குக் குடிப்பழக்கம் கிடையாது.” என்று கூறினார்.
எப்படிப்பட்ட ஒரு பதில் பாருங்கள்! குடிநோயாளிகள் தங்களின் உயிர் நண்பர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அனைவரும் – குடிக்காக மட்டுமே – தானாகச் சேர்ந்த கூட்டம் என அறிவார்களா?தங்களின் மரணத்துக்குப் பிறகு அந்தக் கூட்டம் தங்கள் குடும்பம் எந்த நிலையில் உள்ளது எனத் தெரிந்து கொள்ளக்கூட விருப்பமில்லாமல் ஓடிப்போகும் எனப் புரிந்து கொள்வார்களா?அமீர் மட்டுமல்ல,என்னுடைய அற்புதமான நண்பர்களும்,நல்லெண்ணம் கொண்ட உறவினர்களும் கூட குடிப்பழக்கத்துக்கு இரையாகியிருக்கின்றனர்.குறிப்பாக என் உயிர்தோழன் கதிரவன் (இவன் பெயரும் வேறு) குடிநோயினால் மரணமடைந்ததை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.இனியும் முடியாது.பள்ளிப்பருவத்திலிருந்தே என்னுடன் போட்டி போட்டுப் படிப்பான்.பல திறமைகளை உள்ளடக்கியவன்.நன்றாகப் பேசுவான்.மிக இனிமையாகப் பாடுவான்.நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாகக் குடிக்க ஆரம்பித்து நாளடைவில் முழுநேரக் குடிநோயாளியானான்.நான் எவ்வளவோ அன்பாகவும்,கனிவாகவும்,கண்டிப்பாகவும் எடுத்துச் சொல்லியும் அவன் செவி சாய்க்கவில்லை. Deaddiction centre க்கு அழைத்துச் சென்றும் பயனில்லை.ஊரில் தெரிந்தவர் ஒருவர் விடாமல் கடன் வாங்கிக் குடித்து-சாலையோரங்களில் மயங்கிக் கிடந்து-மானமிழந்து-ஓர் நாள் தன் இளம் மனைவியையும்,பெண் குழந்தையையும் தவிக்க விட்டுப் போன கொடுமையை என்னவென்று சொல்வது?



குடிநோயாளிகளின் குடும்பம் எனும் நரகம்
’கள்ளுண்பவர் நஞ்சுண்பவரே’’ என்கிறார் திருவள்ளுவர்.இதற்காகக் ‘கள்ளுண்ணாமை’ என்ற தனி அதிகாரமே எழுதியிருக்கிறார்.மதுவின் கொடுமையை விளக்காத இலக்கியம் இல்லை.ஆனால் பழம்பெருமை பேசிக் கொண்டு முச்சந்தியில் கிடக்கும் குடிமகன்களைக் கடந்து போகிறோம்.எல்லா குடிகாரர்களுக்குமே ஒரு அசட்டு எண்ணம் இருக்கிறது.குடியும் போதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.தான் ஒருவன் குடிப்பதால் குடும்பம் சிதைந்து போய் விடாது என எண்ணுபவர்களை போதையானது மயக்கி வீழ்த்துகிறது.

அது குடும்பத்தின் –
·         மகிழ்ச்சியைச் சூறையாடுகிறது
·         நிம்மதிக்கு உலை வைக்கிறது
·         மனைவியைத் தனிமரமாக்குகிறது
·         குழந்தைகளை அநாதையாக்குகிறது

   குடிநோயாளிகளின் குடும்பத்தினர் படும் துன்பங்கள் சொல்லி மாளாதது.அவர்கள் வீட்டுப் பெண்கள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் நரகவாழ்க்கை மரணத்தை விடவும் கொடூரமானது.அதனால் தான் சாராயக்கடைகளை மூடச்சொல்லும் போராட்டங்களில் பெண்களே அதிகளவில் பங்கேற்கின்றனர்.பெரும்பான்மையான அன்றாடக் கூலித் தொழிலாளிகள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் சாராயக்கடையில் கொடுத்து விட்டு வெறுங்கையோடு வீடு வந்து மனைவியைக் கேவலமான வார்த்தைகளால் ஏசியும்,அடித்து நொறுக்கவும் செய்கிறார்கள்.குடியால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிக அதிகம்.விதவையான அவர்கள் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் பரிதாபத்திற்குரிய நிலைக்கு ஆளாகின்றனர்.எப்படியாவது என் புள்ளையைக் குடிக்காதவனாக வளர்த்து விட வேண்டும் என்பது தான் இக்குடும்பப் பெண்களுக்கு மிகப்பெரிய லட்சியமாக இருக்கிறது.என் பால்ய சிநேகிதன் ஒருவனின் மனைவி அவனுடைய குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார்.ஒன்றும் முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப் போய் அவரும் குடிக்கத் தொடங்கினார்.ஆக,குடி குடும்பப் பழக்கமாகிப் போனது.இருவருமே குடிக்கு அடிமையானதால் அவர்களது மாத பட்ஜெட்டில் சாராயமும் இடம் பிடிக்கத் தொடங்கி விட்டது.
 “குடி குடியைக் கெடுக்கும்” என்னும் தன்னுடைய புத்தகத்தில் குடியினால் – சமூக,குடும்ப,தனிப்பட்ட வாழ்வில் ஏற்படக்கூடிய சிக்கல்களை,பிரச்னைகளை,கொடுமைகளை விரிவாக அலசியிருக்கிறார் எழுத்தாளர் பாரதி தம்பி.குடிகாரக் கணவர்களின் வன்முறைகள் எல்லை மீறும் போது மனைவிகளின் மனங்களில் குறுவாள் ஒன்று எட்டிப் பார்க்கிறது.செயல்படுத்தப்படும் இடங்களில் அதற்குக் “கொலை” எனப் பெயர்.செயல்படுத்தப்படாத இடங்களில் அதற்குக் குடும்பம் எனப் பெயர்” என்கிறார்.

மரணத்தூதுவன் மதுவின் கேடுகளும்,கொடுமைகளும்
பண்டைத் தமிழர் வாழ்ந்த நிலங்கள் ஐந்திணைகளாக அவர் தம் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பகுக்கப்பட்டன.இன்றோ அவை ஐந்தையும் ஒன்றிணைத்து மதுவும்,மது சார்ந்த இடமும் தமிழகம் எனலாம்.இந்தியாவில் 75% ஆண்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் மது அருந்துகின்றனர்.குடிப்பவர்களில் வகைகள் உண்டு என்கிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.”எப்போதாவது அல்லது அவ்வப்போது பருகுவதை ஒரு ரசானுபவமாகச் செய்கிறவர்கள்.இரண்டாவது,தினமும் குடிக்கும் குடிகாரர்கள்.மூன்றாவது,குடிவெறியர்கள் அல்லது குடிநோயாளிகள்.பொதுமக்கள் பார்வையில் பட்டு அவர்களைக் கவலையும்,கோபமும்,வெறுப்பும்,அருவருப்பும்அடையச் செய்பவர்கள் இவர்கள்.குடிவெறிக்கும்,குடிநோய்க்கும் ஆளானவர்களை வைத்தியம் செய்து சீராக்கும் முயற்சியில் சமூகம் ஈடுபட வேண்டும்.தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடுபவர்களின் சிந்தனையை ஆட்கொண்டிருப்பவர்கள் இந்த மூன்றாவது வகையினர் தான்” என்பது அவரது கருத்தாகும்.என்னைப் பொறுத்தவரை மது குடிப்பது முதலில் சாதாரண பழக்கமாகத் தான் ஆரம்பிக்கும்.சில மாதங்களில் மூளையில் மது ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள் காரணமாக சாதாரண போதையைத் தருவதற்குக் கூட அதிக அளவில் குடிக்க நேரிடுகிறது.இதன் விளைவாகவே கொஞ்சமாகவே மது அருந்தும் குடிநோயாளிகள் சில வருடங்களில் மிதமிஞ்சிக் குடித்து மனநோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள்.
குடியின் கேடுகளுக்கு உதாரணங்களைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.தமிழ்நாட்டின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் குடிநோயாளிகள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.மேலும் மதுவின் கொடுமைகள் இவை தான் என விவரிக்க முடியாதபடி வரம்பைக் கடந்து விட்டன.குறிப்பாக சிறுவர்கள் பள்ளிச்சீருடையுடன் டாஸ்மாக் கடை வாசல்களில் பாட்டிலும் கையுமாக நிற்கின்றனர்.போதை தலைக்கேறி மயங்கி விழுந்து அவர்கள் புலம்பும் காட்சிகள் சகித்துக் கொள்ள முடியாதவை.ஒரு கல்வியாளராக நான் மிகவும் வருந்துவது இவ்வாறு மாணவர்கள் குடிப்பதைப் பற்றித்தான்.’வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி’ மாணவர்கள் மது குடிப்பதற்காக பள்ளி முடிந்ததும் தாங்கள் அமர்ந்து படித்த பெஞ்சை பல துண்டுகளாக உடைத்து எடுத்துச் சென்று மரக்கடையில் எடைக்குப் போட்டு மது வாங்கிக் குடித்தனர் என்பதைப் படித்து மிக்க வேதனையடைந்தேன்.இப்படிக் குடித்து விட்டு வரும் மாணவர்கள் மாணவிகளைச் சீண்டுகின்றனர்.ஆபாசமான சொற்களால் கமெண்ட் அடிக்கின்றனர்.ஆசிரியைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.தன் தலைமுறையையே அடுத்த படிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஓர் இளைஞன் போதையின் பள்ளத்தாக்கில் வீழ்ந்து மடிகிறான்.
பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கப்படும் மிகக் கொடிய விஷம் தான் மது.அகால மரணம்,கொலை,திருடு,விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன.ஞாபக சக்தியும்...சிந்தனை ஆற்றலும் சிதைந்து,புத்தியும்...நிதானமும் குலைந்து,மன ஒழுங்கையும்...அடக்கத்தையும் சீரழித்து விடுகிறது மதுபானம்.மதுவால் கல்லீரல்,கணையம்,இரைப்பை,இரத்தக்குழாய்கள்,சிறுநீரகம்,நரம்பு மண்டலம் இவற்றிற்கு பெரும்கேடு விளைவதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து போகிறது.மூளை,நுரையீரல்,எலும்பில் காசநோய் வரலாம்.உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும்.தசைகள் தளர்ச்சியடையும்.உடல்உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படும்.புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.மதுவுடன் சேர்த்துச் சாப்பிடும் உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.வயிறு தொடர்பான பிரச்னைகள் அதிகம் வரும்.வயிறு வீக்கம்,வலி, வயிற்றுப்புண் வரும்.மூளை வளர்ச்சி பாதிப்பதுடன் ரத்தக்கசிவும் ஏற்படும்.மனச்சிதைவு நோய் வரும்.குழப்பமான மனநிலை இருக்கும்.வார்த்தைகள் தெளிவின்றி பிறழும்.அனைத்துக்கும் மேலாக குடிவெறி குடிப்பவர்களின் உயிர்களை மட்டுமின்றி அவர்களின் நல்லியல்புகளையும் தூக்கித் தூர வீசுகிறது.குடிப்பதற்காக எதையும் செய்யலாம் என்னும் மனநிலையை குடிகாரர்களிடம் உருவாக்குகிறது.ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்:நீங்கள் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும்,குடிநோயாளியாக இருந்தால் அவ்வளவும் விழலுக்கு இறைத்த நீரே!


டாஸ்மாக்கும்,அரசியலும்
சமீபத்தில் என் WhatsApp க்கு வந்த ஒரு குட்டிக்கதை என்னைக் கலங்க வைத்தது.டாஸ்மாக்கில் ஒரு சிறுவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது ஒரு குடிகாரன் அவனை அழைத்து,’நீயெல்லாம் இங்க வராத,நீயும் என்னைப் போல பெரிய குடிகாரன் ஆயிடுவ’ என்று சொன்னான்.அதற்கு அச்சிறுவன்,’நீயும் இனிமே இங்க குடிக்க வராத,நாளைக்கு உன் பையனும் என்னைப் போல் அப்பாவ இழந்து இங்க வேலைக்கு வந்தாலும் வருவான்’ என்றான்
இன்றைய ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் மதுபோதை தாராளமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எனும் நிறுவனத்தைத் துவங்கி சேவை(!) செய்து வருகிறது.டாஸ்மாக் வருகையினால் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் “பெருமைகள்” ஏராளம்.எல்லா வயதினரும் குடிக்கக் கற்றுக் கொண்டனர்.குடிப்பவர் எண்ணிக்கையிலும்,குடிக்கும் அளவிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழகம்.குடித்துச் சாகிறவர்களின் எண்ணிக்கையும் இங்கு தான் அதிகம்.இந்தியாவிலேயே தற்கொலைகளில் இரண்டாம் இடம்.இளவயது மரணங்களில் முதல் இடம்.கணவனை இழந்த 30 வயதுக்குட்பட்ட பெண்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு.எந்த வீடும் எந்தத் தருணத்திலும் இழவு வீடாக மாறக்கூடிய அவலமான சூழல் நிலவுகிறது.சாலை விபத்துகளில் முதலிடம் வகிப்பதோடு அப்பாவிகளும் உயிர்சேதம் அடைகின்றனர்.இதனால் தேசிய-மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுபானக்கடைகளை இழுத்து மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவை மூடப்பட்டன.இந்தத் தீர்ப்பினால் சாலையோரங்களிலிருந்த கடைகள் அகற்றப்பட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு செல்லத் துவங்கின.இதனால் குடிப்பழக்கமுள்ள கணவன் மேலும் சபலம் அடைவானே,இருட்டிய பிறகு வெளியே போய் வருவதே சவாலாகி விடுமே எனப் பெண்கள் வெகுண்டெழுந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்துத் தெருவில் இறங்கிப் போராடத் துவங்கினர்.’எங்கள் ஊருக்கு மதுக்கடை வேண்டாம்’ என்று கிராம சபைகளின் மூலம் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.தங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் திறக்கப்படும் மதுக்கடைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது,மது பாட்டில்களைத் தெருவில் போட்டு உடைத்துப் போராட்டம் நடத்துவது என மதுவுக்கு எதிரான போர்க்களமாக தமிழகத்தை மாற்றினார்கள் பெண்கள்.இதைக் கண்ட நமது அரசு செய்த காரியம் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.தேசிய-மாநில நெடுஞ்சாலையை மாநகராட்சி/பேரூராட்சி/நகராட்சி சாலைகளாக அவசரமாக மாற்றி விட்டது.இதனால் எங்கெல்லாம் மதுக்கடைகளை மூடினார்களோ அங்கேயே கடைகளைத் திறப்பதற்குரிய தடைகள் நீங்கவே உடனடியாகக் கடைகள் திறக்கப்பட்டன.ஏதோ மக்களால் மது குடிக்காமல் வாழவே முடியாது என்பது போல் இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர்.சென்னையை மழை,வெள்ளம் மூழ்கடித்த போது நம் அரசு காட்டிய முனைப்பு நாம் அறியாததா?ஆக,மக்கள் நலனுக்காகவா இவர்கள் இவ்வளவையும் செய்கிறார்கள்?இல்லை தங்கள் நலனுக்காகத் தான் என்பதை பாமரனும் அறிவான்.ஆம்! டாஸ்மாக்கிற்கு சரக்கு சப்ளை செய்யும் தொழிற்சாலைகளில் முக்கியமானவை-தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டு கட்சிகளைப் பின்புலமாகக் கொண்டவை.காந்தி ‘மது ஒழிப்பு’ அறிவிப்பை வெளியிட்ட போது பெரியார் தன் தோட்டத்திலிருந்த 1000 தென்னை மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தினார்.பெரியாரைப் பின்பற்றி அண்ணா தன் ஆட்சியில் மதுவிலக்கை அமல்படுத்தினார்.ஆனால் பெரியார்,அண்ணாவைப் பின்பற்றும் திராவிடக் கட்சிகள் மது விற்பனை செய்வதோடு அதை தயாரிக்கும் ஆலைகளையும் நடத்துகின்றன.இது தான் பெரியாரையும்,அண்ணாவையும் இவர்கள் மதிக்கும் லட்சணம்.நாட்டிலேயே தமிழகத்தில் தான்  மாநில அரசே மது விற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது.கல்வியையும்,மருத்துவத்தையும் தனியார் மயமாக்கி விட்டு சாராயத்தை விற்க டாஸ்மாக் என்ற அரசு நிறுவனம் இயங்குவது வெட்கக்கேடு.மதுவிலக்குத் துறையால் டாஸ்மாக் நிறுவனம் நிர்வகிக்கப்படுவதை எண்ணி அழுவதா,சிரிப்பதா எனத் தெரியவில்லை.மேலும் மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது.தமிழ்நாட்டில் 6000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 11 மதுபான ஆலைகள் சாராயம் சப்ளை செய்கின்றன.இங்கு உற்பத்தி செய்யப்படும் சாராயத்தின் தரம் அறிய முறையான அமைப்பு இல்லை.முன்னெப்போதும் இல்லாத வகையில் டாஸ்மாக்கை அடித்துத் துரத்துவதில் வெடித்தது நம் பெண்களின் வீரம்.அவர்களைப் பாதுகாக்க வேண்டிய நம் அரசோ டாஸ்மாக்கை அகற்றுவதை விடுத்து எதிர்த்துப் போராடும் பெண்களைத் துரத்துகிறது.தமிழக மக்களின் நலனை விட டாஸ்மாக்கே முக்கியம் என்று ஓர் அரசு கருதுமானால் அது மக்களுக்கான அரசா?

குடியின் பிடியிலிருந்து மீள...
”மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்” என்றார் வள்ளலார்.ஆனால் இப்போதோ “மதுவான பேய் பிடியாது இருக்க வேண்டும்” என்று திருத்தி எழுத வேண்டியிருக்கிறது.உடல்வலியைப் போக்க, நண்பர்களின் வற்புறுத்ததுலுக்காக,கவலையை மறக்க எனக் குடிப்பதற்குப் பல்வேறு சாக்குப்போக்கு சொல்பவர்கள் நாளடைவில் குடியின் பிடியிலிருந்து மீள மடியாமல் திண்டாடுகிறார்கள்.
எப்படி மீள்வது?
  • குடியை நிறுத்தப் போவதை உங்கள் குடும்பத்தினரிடமும்,நண்பர்களிடமும் தெரிவியுங்கள்.இதன் மூலம் உங்கள் வெற்றியை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
  •  குடிப்பதைத் தூண்டும் சூழ்நிலைகளிலும்,மனநிலைகளிலும் கவனமாக இருத்தல்.
  •  குடிப்பழக்கம் உள்ள நண்பர்களை அறவே தவிர்த்து குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.
  • சீரான உடற்பயிற்சி,ஆரோக்கியமான உணவு,நல்ல தூக்கம் அவசியம்
  •  இன்றைக்கு ஒரு நாள் மட்டும் தானே என்று சலனப்பட்டால் இறுதியில் பழைய நிலைமைக்குச் செல்ல நேரிடும.
  • மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நலம்.

“வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான சந்தோஷங்களை இழந்துள்ளோம் என்பதை இப்போது தான் உணர்கிறோம்” என்பது தான் குடிபோதையிலிருந்து மீண்டவர்களில் பெரும்பாலோர் சொல்லும் கருத்து.காலம் கடந்த பின் வருந்துவதை விட,விழிப்புடன் போதையை எதிர்த்துச் செயல்பட்டால் தனிநபருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும்,வீட்டுக்கும் நல்வாழ்வு தான். 

தற்போது ‘நீலத்திமிங்கல சவால்’ என்ற ஆபத்தான இணையத்தள விளையாட்டில் இருந்து நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.அவ்வாறே போர்க்கால நடவடிக்கையின் மூலம் மது எனும் ‘செந்நிறத் திமிங்கலத்தின்’ பிடியிலிருந்து நம் சந்ததியினரைக் காப்பாற்றுவோம்.