வாழ்வில்
எத்தனையோ ருசிகள் இருப்பினும் வாசிப்பின் ருசிக்கு ஈடாக வேறொன்றை அறுதியிட்டுக் கூற
இயலுமா?
“குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச்
சொல் கேளாதவர்”
- என்றார் வள்ளுவர். அதே போல்
‘அது’ இனிது ‘இது’
இனிது என்று சொல்லித் திரிவோரெல்லாம் வாசிப்பின் அருமையை அறியாதாரே!
“நஞ்சு கொடுக்கப்படும் நேரம் வரை கிரேக்க நாட்டுக் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தான்
சாக்ரடீஸ்”.
“தூக்குக் கயிறை முத்தமிடும் வரை படித்துக் கொண்டிருந்தான் உமர் முக்தார்”.
“தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படும் வரை படித்துக்கொண்டிருந்தான் பகத்சிங்”
“படுக்கும் இடம் கூட படிப்பகத்துக்கு அருகாமையில் கேட்டார் அண்ணல் அம்பேத்கார்”
“படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடிப்பதற்காக தன்னுடைய அறுவை சிகிச்சையையே
அடுத்த நாள் மாற்றி வைக்கச் சொன்னார் பேரறிஞர் அண்ணா”
“பயணம் செய்யும் போதெல்லாம் படிப்பதையே தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருந்தார்
ஜவஹர்லால் நேரு”
ஆக வாசிப்பனுபவமானது
–
“It is not a chance but choice.
மனிதகுல வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு மகத்தானது.என் பால்யத்தில்
என்னைச் சுற்றியிருந்த-அப்பா,அம்மா,சித்தி,மாமா,தாத்தா என அத்தனை குடும்ப உறுப்பினர்களுமே தீவிர வாசிப்பில் ப்ரியமுள்ளவர்களாக இருந்தனர்.என் வாசிப்புப்
பழக்கத்திறகு Inspiration இவர்கள் அனைவருமே - குறிப்பாக எனது தந்தை உலக இலக்கியங்கள் துவங்கி கண்ணதாசன்
கவிதைகள் வரை ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கிக் குவித்திருந்தார்.யாரும்
என்னிடம் நூல்கள் வாசி என்று சொன்னதே இல்லை.ஆனால் எப்போதும் யாராவது ஒருவரேனும் புத்தகத்தைக் கையிலேந்தியபடி காட்சி
தருவதை அந்தச் சிறுவயதில்
கண்டிருக்கிறேன்.Actions speak louder than words.
காலங்கள்
உருண்டோட இன்றைய தலைமுறையினர் பெரும்பாலோர் வாசிப்புப் பழக்கமேயின்றி இருப்பது கவலையையும், வருத்தத்தையையும்,
அதிர்ச்சியையும் அளிக்கிறது.புத்தகங்களைக் கூட அனுமதிக்க இயலாதபடி என்ன
வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?
என்னளவில்
நான் தெளிவாகப் பதிவிட விரும்புவது ”உலகில் எல்லாவற்றிற்குமே ஓர் மாற்று உண்டு - புத்தக வாசிப்பைத் தவிர." டிவி
பார்க்கிறேன்,ப்ரவுஸ் செய்கிறேன் அதன் மூலம் அறிவு பெறுகிறேன் என்பவர்களெல்லாம் தங்களைத்
தாங்கள் ஏமாற்றிக் கொள்பவர்களே.வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இன்றையச் சூழலில் அதை ஊக்குவிப்பதை ஓர் காரியமாகவே எடுத்துச் செயல்படுத்த வேண்டியிருக்கிறது.
பிக்காஸோவின்
ஓவியத்தை விட
சச்சினின்
கிரிக்கெட்டை விட
பாரதியின்
ஒர் பாட்டு,ஜெயகாந்தனின்
ஓர் சிறுகதை,லெனினின் ஓர் வாக்கியம் நம்முடைய வாழக்கையையே புரட்டிப்
போட வல்லது. நமக்கு அதிகமான பூக்கள் வேண்டுமென்றால் அதிகமான விதைகளை
நட வேண்டும்.அங்ஙனமே நமக்கு அதிகமான அறிவு வேண்டுமென்றால் அதிகமான
புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்பதும் இயற்கை.
How will you
get the desired output without giving
the necessary input?
வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே நம் பிள்ளைகளுக்குப்
பழக்கப்படுத்த வேண்டும் இதை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு வகிக்க வேண்டியவர்கள் பெற்றோரும் ,ஆசிரியர்களுமே. குழந்தைகளின்
ஆர்வத்துக்கும்,திறமைக்கும் ஏற்றாற் போல் நூல்களை வாங்கிக் கொடுத்து வாசிப்புத் திறனை அவர்களுக்குள்
கிளர்ந்தெழச் செய்ய வேண்டும்.எதைப் படிக்கலாம் என்று என்னிடம்
கேட்பீர்களேயானால் என் பதில் எதையாவது படி என்பதுதான்.
நடிகர்
கமல்ஹாசன் கூட ஒரு கூட்டத்தில் பேசும் போது
“படித்துத் தொலை” என ஆதங்கத்தோடு பேசியது என் நினைவுக்கு
வருகிறது.
2014 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில், "எதன் அடிப்படையில் ஓர் புத்தகத்தைப்
படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?" என்று நான் கேட்ட கேள்விக்கு,எழுத்தாளர் “ நாஞ்சில் நாடன்” பின்வருமாறு
பதிலளித்தார்.
“எந்த முன் முடிவும் இருக்கக் கூடாது, பிறர் சொல்லி ஓர்
எழுத்தாளன் மீது நமக்கு ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக் கூடாது.ஒரு துறையை விரும்பி வாசிக்கிறவர் அதைத் தொடர்ந்து மேலே போகலாம்.தேர்ந்த வாசகனுக்கு எடுத்த புத்தகத்தின் பத்து பக்கம் வாசித்தாலே தனக்கு உகந்ததா
இல்லையா என்பது தெரிந்துவிடும்.ஏற்கனவே வாசித்திருக்கும் நண்பர்களின்
கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்..."
இந்த ஆண்டு(2017) சென்னை புத்தகத் திருவிழாவில் 18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன என்னும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.எனக்கு நண்பர்களே இல்லை,ரொம்ப போர் அடிக்குது,தனிமை வாட்டுகிறது என்றெல்லாம் சொல்பவர்களைப் பார்த்தால் ஆச்சரியமாகவும்,வருத்தமாகவும் இருக்கிறது.ஏனெனில் புத்தக வாசிப்பின் ருசியை உணர்ந்தவர்களுக்கு மேற்சொன்ன உணர்வுகள் எதுவும் இருக்காது.வாசிப்பைப் போன்ற உன்னத அனுபவம் வேறெதுவும் இல்லை.மொபைலில் மூழ்கிக் கொண்டு,கொஞ்சமும் வாசிப்பு அனுபவமோ,தெரிந்து கொள்ளும் ஆர்வமோ இல்லாமல் கண்டமேனிககு ஆன்லைனில் கருத்துத் தெரிவித்துக் கொல்பவர்கள் பல்கிப் பெருகுகிறார்கள்.அவர்கள் வாசிப்பில் இறங்கினால்...பரபரப்பு அடங்கி,மனம் பக்குவப்பட்டு,அடக்கமாக கண்டபடி கருத்துச் சொல்வதில் இருந்து விடுபடுவார்கள்.
புத்தகங்களோடு
உள்ள உறவு மிக அந்தரங்கமானது.அது காரணம் சொல்லி புரிய வைக்க முடியாதது.மாறாக மனதால்
உணரப்படக் கூடியது.வாசிக்கும் வரை புத்தகம் சலனமற்றது.ஆனால் புத்தகத்திற்குள் பிரவேசித்த பிறகு அது பெரும் ஆரண்யம் என வளர்ந்து செல்லத்
துவங்குகிறது.
"மனிதர்கள் புத்தகங்களுடன் கொள்ளும் உறவு விளக்க முடியாதது.சிலருக்கு அது தோழமை.சிலருக்கு வழிகாட்டி.சிலருக்கு அது ஒரு சிகிச்சை.இன்னும் சிலருக்கு புத்தகங்கள் மட்டும் தான் உலகம்.புறஉலகை விட புத்தக உலகினுள் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகிறவர்கள்." என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
உடலுக்கு
ஆரோக்கியமாக உணவு எப்படி விளங்குகிறதோ அப்படி புத்தகங்கள் நம் மன ஆரோக்கியத்தை வளர்க்கக் கூடியவை.ஒவ்வொரு புத்தகமும் படிப்பவனைப் பண்படுத்துகிறது.சிறகு முளைக்க வைக்கிறது.ஒரே நேரத்தில் வெவ்வேறு காலங்களில் வாழ வழிவகுக்கிறது.வாழ்வின் மீது பெரும்பிடிப்பை ஏற்படுத்துகிறது.புத்தகங்கள் வெறும் காகிதங்கள் மட்டுமல்ல அவை நினைவுகள்.வாழ்ந்து விட்டுப் போனவர்களின் - வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்
வாய்ச் சரக்கு,வாயால் ஊதி அணைக்க முடியாத நிலா விளக்கு.எல்லாப் புத்தகங்களும் பேசக்கூடியவை.யாரோடு எப்போது எந்த மன நிலையில் என்பது
தான் சொல்லி விளக்க முடியாதது.It's a fantastic obsession.
கவிப்பேரரசு
வைரமுத்து அவர்கள் தன்னுடைய கவிதைத் தொகுப்பான ”இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல” என்னும் நூலில்...
- என்று குறிப்பிடுகிறார்.
உங்களுக்கு
அந்த வரம் வேண்டாமா அன்பர்களே?